Wednesday, 30 May 2012

போகப் போகத் தெரியும. - 12


  அவளுடைய செல்போன் மூன்று மாதத்திற்குப் பிறகு நான் இன்னும்  உயிருடன்தான் இருக்கிறேன்  என்பதை சங்கீத மொழியில் சிணுங்கிக் காட்டியது.
   அன்று சின்னதம்பி அவளை ஆசிரமத்தில் விட்டுவிட்டுப் போனதுடன் சரி. அவனோ இல்லை அதற்கு முன்தினம் டெலிபோனில் பேசிய சக்திவேலோ இதுவரை அவளைத் தொடர்;பு கொள்ளவில்லை.
   ஆனால் இந்த மூன்று மாதத்திற்குப் பிறகு இன்று அதுவும் கடைசிப்பரிட்சையை முடித்து இன்றுடன் பள்ளி வாழ்க்கை முற்றுபெற்றது என்ற எண்ணத்தில் இலேசாக சந்தோச வானிலே பறந்த மீனாவின் இதயத்தில் கைபோன் சிணுங்கவும் மேலும் மகிழ்ந்தாள்.
   யாராக இருக்கும் என்று நினைக்கும் பொழுதே.... சின்னதம்பி அவள் மனக்கண்முன் வந்து சிரித்தான்.
   அதை அழிக்கமுயன்று தோற்று போன மீனா... போனின் பட்டனை அழுத்திக் காதுகொடுத்தாள்.
   'அலோ......"
   'அலோ மீனா நான் சக்திவேல் பேசுறேன்."
   மீனாவின் முகத்தில் இலேசான வாட்டம்! ஆனாலும் மனத்தில் சந்தோசம் வரத்தான் செய்தது.
   'நீங்களா....? சக்திவேல் எப்படி இரக்கிறீங்க? எக்ஸாம் எல்லாம் எப்படி எழுதியிருக்கிறீங்க.....?"
   'ம் நல்லா எழுதியிருக்கேன். உனக்கெப்படி....?"
   'ப்ஸ்ட் கிளாசுல பாஸ் பண்ணிடுவேன்."
   'அப்படியா நல்லது மீனா.... இந்த வருஷம் நம்ம ஊருல தேர்திருவிழாம்மா..... அதுல நீ அவசியம் கலந்துக்கணும். இந்த லீவு முழுசும் நீ நம்ம ஊருலத்தான் இருக்கணும். அதனால வேலை எதுவும் தேடாத. என்ன......?"
   'சரிங்க. ஆனா எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்குது. முடிஞ்சதும் வந்துடறேன். ஆமா இப்போ நீங்க எங்க இருக்கிறீங்க?"
   'ஏன்.....? நம்ம ஊருலத்தான்."
   'ஏன் சக்திவேல் தமிழ்நாட்டுல நெறைய காலேஜிங்க இருக்கும் போது எதுக்குப் பெங்களூர் போயப்; படிக்கணும்?"
   ரொம்பநாளாகக் கேட்க வேண்டும் என நினைத்த கேள்வி!
   'நம்ம ஊருல படிச்சா வேறமொழிய சகஜமா பேசி கத்துக்க முடியாது. நான் அங்க படிச்சதால இப்போ சரளமா கன்னடமும் பேசுவேன்." என்றார்.
   'அப்போ காசு பணம் இருந்தா.... எந்த ஆசையையும் நெறவேத்திக்கலாம் இல்லையா......?"
   குரலில் சற்று கவலையின் சாரல்!!!
   'ஏன்....? ஒனக்கு ஏதாவது ஆசையா இருக்குதா....? இருந்தா சொல்லு. உன்னை அமெரிக்காவுக்கு வேண்டுமானாலும் அணுப்பிப் படிக்கவைக்கிறேன்;" என்றார்.
   அமெரிக்காவிற்குப் போயப்; படித்தால் மட்டும் என்ன? அடுத்தவர் எழுதிவைத்ததைத் தானே படிக்கப் போறோம்? அதை இங்கேயே படித்தால் ஏறாதா.....? நம் முன்னோர்கள் முட்டாள்களில்லையே......!
   ஆழமாக உழாமல் அகலமாக உழுதால் செடி பயிர் மட்டுமா நஷ்டமடைகிறது......? பயிரிட்டவனும் தானே நஷ்டமடைகிறான்? பணம் பாதாளம் வரை பாயலாம் தான். ஆனால் படிப்பையோ அறிவையோ வாங்கிவிட முடியாதே......
   'என்ன மீனா மௌனமாயிட்ட? ஆனா மீனா..... நான் உன்னை அமெரிக்காவுக்கு அனுப்பினா...... நம்ம ஊர் காரங்க என்னைத் திட்டியே தீத்துடுவாங்க. அந்த அளவுக்கு நீ அவங்களோட மனசுல பதிஞ்சிபோயிட்ட!" என்றார்.
   'ஏன்.....? உங்க மனசுல நான் பதிவாகலையா......?"
   கேட்டுவிட்டு நாக்கைக் கடித்து கொண்டாள்.
   எதிர்முனையில் சற்று நேரம் மௌனமே பதிலாகக் கிடைத்தது. மீனாவும் பேசாமல் இருந்தாள். மனம் யோசித்தது.
   ஏதாவது தவறாகக் கேட்டுவிட்டோமோ......? ஏற்கனவே கண்மணிக்கும் சக்திவேலுவுக்கும் தான் கல்யாணம் ஆகும் என்று ஊர்காரர்கள் பேசிக் கொண்டதை அறிவழகி அவளிடம் சொல்லி இருக்கிறாள் தான்!
   இருந்தாலும் அவள் மனத்தின் ஓரத்தில் மிக இலேசான ஆசை!!!! அவன் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை அறிய அவளுக்கு ஆவலாக இருந்தது.
   சின்னதம்பி வேறு தன்னைச் சிங்கத்தைச் சுற்றிவரும் ஈ என்று சொல்லி அவமானப் படுத்தி இருக்கிறான். அதுவே ஒரு சமயம் உண்மையோ என்று கூட அவள் பலமுறை யோசித்ததுண்டு. சக்திவேலின் மீது அவள் காட்டுகிற அக்கரைக்கு அவனிடமிருந்து எந்தப் பதிலும் எதிர்பார்பபும் இல்லாமல் இருப்பது அவளைச் சங்கடத்தில் ஆழ்த்தி விட்டிருந்தது.
   அதனால் தான் அவனை அப்படிக் கேட்டாள்.
   ஆனால் அவள் கேட்ட அதே கேள்வியை அவன் அவளிடம் திருப்பிக் கேட்க அதற்குப் பதில் சொல்ல முடியாமல் திணருவோம் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை!
                      
   தொலைபேசியில் மீனாவிடம் பேசிய சக்திவேல்  உன்னை வெளிநாட்டுக்கு அனுப்பினால் ஊர்க்காரர்கள் என்னைத் திட்டியே தீத்துடுவாங்க. அந்த அளவுக்கு நீ அவங்க மனசுல பதிஞ்சிப் போயிருக்கிற ; என்று சொன்னவுடன்
   'ஏன் உங்க மனசுல நான் இல்லையா.....?" என்று மீனா கேட்டுவிட்டுச் சிறிது நேரம் ஆகியும் அவன் பதில் சொல்லாமல் இருந்தது மீனாவைச் சிந்திக்க வைத்திருந்தது.
   அவனைச் சங்கடத்தில் ஆழ்த்தி விட்டோமோ என்ற பயம் வந்தது. அதனால் அவளே பேச்சைத் தொடர்ந்தாள்.
   'சக்திவேல்.... உங்களுக்கு முப்பது வயசுக்கு மேல ஆவுதுன்னு நம்ம கணேசன் சார் சொன்னார். ஏன் நீங்க இன்னும் கல்யாணம் செஞ்சுக்கல?"
   பேச்சை மாற்றிப் பேசினாலும் விசயம் ஒன்றாகவே இருக்கும் படியாகத்தான் இருந்தது.
   'என் ஜாதகத்துல எனக்கு இன்னும் மூனுவருஷம் கழிச்சித்தான் கல்யாணம் செய்யணுமாம். அதுவும் நெருங்கின சொந்தத்துல தான் பொண்ணு அமையுமாம். என்னோட அம்மாவுக்கு ஜாதகம் ஜோசியம் மேல அதிக நம்பிக்கை. ஆனா எனக்கு அதெல்லாம் நம்பிக்கை கெடையாது. ஆனா..... எனக்கு என்னோட அம்மா சொன்னதுதான் வேதவாக்கு. அவங்கள மீறி நான் இதுவரையில எதையும் செஞ்சதில்ல. எப்போ கல்யாணம் நடக்கணுமோ அப்போ நடக்கட்டும்." என்றார்.
   இப்பொழுது மீனா மௌனம் சாதித்தாள். தன் தாயின் மீது கொண்ட பாசத்தால் தனக்கென்று ஆசைகள் எதுவும் இல்லாமல் வாழும் மனிதனை நாம் மனத்தால் தொந்தரவு செய்திருக்கிறோமே..... என்று மனம் உறுத்தியது!
   'என்ன மீனா பேச்சையே காணோம்.....?"
   'என்னை மன்னிச்சிடுங்க சக்திவேல்! உங்க நெலமைத் தெரியாம நான் அன்னைக்கி உங்கள விரும்புவதாகச் சொன்னது எவ்வளவு பெரிய தப்பு. என்னோட முட்டாள் தனத்தை நெனச்சி நானே வெட்கப்படுறேன் சக்திவேல்....." என்றாள். அவள் குரல் உடைந்திருந்தது.
   'அப்படின்னா உன் மனசுல நான் இல்லையா......?"
   அவன் சட்டென்று அதிர்ச்சியாக அவள் கேட்ட அதே கேள்வியை இப்பொழுது அவளிடம் கேட்டான்.
   அவளால் இதற்கு உடனே பதில் சொல்லத் தெரியவில்லை. சற்று யோசித்தாள்.
   'இருக்கிறீங்க சக்திவேல். நீங்க என்னோட மனசுல தெய்வத்துக்கு நிகரான இடத்துல இருக்கிறீங்க."
   உள்ளத்தால் உயர்ந்தவர்கள் தெய்வத்திற்கு நிகர் தானே....... ஆனால் அவனோ....
   ' வேணாம் மீனா...... என்னைத் தெய்வமாக்கிடாத. தெய்வத்திடம் பக்திதான் வரும். எனக்கு உன்னுடைய அன்புதான் வேணும். அதுவும் நிரந்தரமா என்கிட்ட மட்டும் இருக்கவேணும் மீனா......"
   அவன் பேச்சை நிறுத்தியதும் டெலிபோன் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. மீனா ஏமாற்றமாகப் பட்டனை அழுத்தி மீண்டும் மீண்டும் ;அலோ.....அலோ..... ;என்று கூப்பிட்டுப் பார்த்தாள். தொடர்பு துண்டிக்கப்பட்ட கைபோன் ஊமையின் வாயாக இருந்தது.
   அவளுக்குக் கோபம்! பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே இணைப்புத் துண்டிக்கப்பட்டது சக்திவேலுவுடைய வேலையா.....? அல்லது இணைப்பு கோளாரா.....? சற்று நேரம் யோசித்தவள் பதில் தெரியாமல் அசைபோடும் மாட்டின் நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
   ஒன்றுமட்டும் அவளுக்கு நன்றாகப் புரிந்தது. சக்திவேலுவை விரும்புவதற்குத் தனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பது மனத்தை அழுத்தியது. ஆனால் சக்திவேலுவின் பேச்சும் அவளைக் குழப்பியது.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   வெள்ளை நிறத்தில் கண்ணாடிக் கற்களும் வெள்ளை முத்துக்களும் பதித்த ஷராரா உடையும் கழுத்தை ஒட்டின முத்துமாலையும் காதுகளில் முத்து பதித்த கம்மலும் மீனாவின் அழகுக்கு மேலும் அழகைச் சேர்த்தது.
   அதிலும் அவளுடைய குட்டையான சுருட்டை முடியைச் சுருள் சீப்புக் கொண்டு சுருள்சுருளாகச் செய்யப்பட்ட தலையலங்காரம் பார்ப்பவர்களை ஏதோ பழையகாலப் படங்களில் வரும் இராஜக்குமாரிகளைத் தான் ஞாபகப்படுத்தும்.
   சலசலப்பாக ஓடும் தண்ணீரில் தரையில் புரளும் பாவாடை துணியை இலேசகத் தூக்கிவிட்டுக்; கொண்டு புல்லின் மேல் அவள் அமர்ந்திருந்த அழகு ஆண்கள் என்றில்லை பதினெட்டு வயது இன்று தான் முடிந்திருக்கும் கண்மணியையும் வியக்கவைத்தது.
   அவளுக்கு வியப்பு மட்டுமல்ல! மீனாவின் அழகு அவளை பொறாமை கொள்ளக்கூடச் செய்தது. ஆனால் அவள் பொறாமை படவேண்டிய அவசியம் இல்லை தான்! மீனா வெள்ளை அன்னம் என்றால்..... இவள் அழகில் மயிலுக்கு ஒப்பாக இருந்தாள்.
   இருந்தாலும் மனிதனின் மனம் தன்னிடம் இருக்கும் நல்லவைகளைக் கூட அடுத்தவர்களின் ஆலோசனையை வைத்துத் தானே எடை போடுகிறது.
   மீனா கண்மணி தன்னையே உற்றுப் பார்ப்பதைக் கவனித்துவிட்டு அவளிடம் பேச்சு கொடுத்தாள்.
   'என்ன கண்மணி..... என்னையே.... உத்துப்பாக்கிற...?"
   'மீனா.... நீ இந்த டிரெஸ்ல ஒரு இளவரசி மாதிரி இருக்கிற."
   மீனா சிரித்தாள்.
   'கண்மணி..... நான்வேணா அழகுல இளவரசி மாதிரி இருக்கலாம். ஆனா நீPP...... உண்மையிலேயே இந்த ஊருக்கே இளவரசியாச்சே....." என்றாள்.

   மீனா இந்த மூன்று நாட்களில் கண்மணிக்கு அந்த ஊரில் இருக்கும் செல்வாக்கை  நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாள். பணத்தில் மட்டுமல்ல குணத்திலும் கண்மணி உயர்ந்தவள் தான். இல்லை என்றால் வெறும் பள்ளியில் நடந்த கலைநிகழ்ச்சியில் சந்தித்துப் பழகிய மீனா.... ;நானும் உன் ஊருக்குவந்து ரெண்டு மூனு நாள் உன்கூட தங்கிக்கிறேனே.... ; என்று கேட்டதும் அவளைத் தன்னுடன் அழைத்துவந்து இந்த முன்று நாட்களும் அவள் கவனித்த கவனிப்புக்கு எந்த கைமாறும் செய்ய முடியாது.
   அதிலும் கண்மணிக்கு இன்று பிறந்த நாள். தன்னுடைய உடையைப் போலவே மீனாவிற்கும் வாங்கிக் கொடுத்து இன்று அணிந்து கொள்ள வைத்துவிட்டாள். அவளும் அதே மாதிரியான உடையில்! ஆனால் அவளை அலங்கரித்ததோ.... தங்கங்கள்! அவள் பட்டு நிலத்தில் வளரும் பவளக்கொடி!
   அதனால் தான் மீனா கண்மணியைப் பார்த்து அப்படிச் சொன்னாள். ஆனால் கண்மணியின் முகமோ வாடிவிட்டது.
   'ப்ச்சி..... ஊருக்கு இளவரசியா இருந்து என்ன பயன்? இளவரசி மாதிரி சுயவரம் வச்சா புடிச்சவனுக்கு மாலை போடவக்கிறாங்க? ஊருக்குத் தலைவனா இருந்தா ஊர் நல்லதுக்காக நம்முடைய சந்தோசங்களை மண்தோண்டி பொதைக்க வேண்டியதாகவும் தானே இருக்குது.....?" குரலில் கவலையாகச் சொன்னாள்.
   மீனா அவளை யோசனையுடன் கூர்ந்து பார்த்தாள். கண்மணியின் கண்மணிகள் கலங்கி இருந்தன. இவள் என்ன சொல்ல வருகிறாள்.....? இவளுக்கும் சக்திவேலுவுக்கும் தானே திருமணம் பேசி இருந்ததாக அம்மா சொன்னாங்க.....? சக்திவேலைக் கட்டிக்க இவளுக்குக் கசக்குதா.....?
   கண்மணியும் மீனாவும் தோழிகள்தான். என்றாலும் மீனா கண்மணியிடம் அவளின் திருமணத்தைப் பற்றி இதுவரை பேசியதில்லை.
காரணம் அது அநாகரீகமானதா....? அல்லது சக்திவேல் தனக்குக் கிடைக்கவில்லை என்ற பொறாமையா.....? என்று அவள் யோசித்ததில்லை. அவள் இந்த ஊருக்கு வந்த காரணமே வேறு!!
   ஆனால்..... கண்மணி இப்பொழுது சொன்ன வார்த்தைகள் அவளை யோசிக்கவைத்தது. அப்படியானால் இவளுக்குச் சக்திவேலுவைக் கல்யாணம் செய்து கொள்ள ஆசையில்லையா......?
   கேட்டுவிடலாமா......?  கேட்டால் உனக்கு எப்படி சக்திவேலுவைத் தெரியும்? என்று கேட்கலாம். மீனா தன்னுடைய ஊர் ஆத்தூர் என்று இதுவரை சொன்னதில்லை. சொல்ல வேண்டிய அவசியமும் இதுவரை ஏற்பட்டதில்லை. என்ன செய்யலாம்.....? ஆனால் ஏதாவது செய்யவேண்டும்.....!
   'கண்மணி.... நீ எந்தச் சந்தோசத்தை மண்ணுதோண்டி புதச்சே...... எங்கிட்ட சொல்லு. நான் தோண்டி எடுத்து உனக்குத் தந்திடுறேன்." என்றாள்.
   'உன்னால முடியாது மீனா. அது மக்கிபோயிடுச்சி. நீ வேணும்ன்னா வேற வெதையத் தூவி வேற சந்தோசத்தை வளரசெய்யலாம்....."
   மீனா புரியாமல் அவள் முகத்தைப் பார்த்தாள்.
   'என்ன மீனா.... புரியலையா....? நானே சரியா சொல்லுறேன். எனக்கு ஒரு அத்தை மகன். ஒரு மாமன் மகன். ரெண்டு பேருமே வசதியானவங்க. எனக்கு மாமன் மகனைத்தான் புடிச்சியிருந்துச்சி.  ஆனால் இங்க என்னோட விருப்பத்துக்கெல்லாம் எடமில்லை. ஏன்னா ரெண்டு பேருமே அவங்கஅவங்க ஊருக்கு தலைவர்க மாதிரி! யாராவது விட்டுக் கொடுத்தா தான் உண்டு. இல்லைன்னா ஊருல கலவரம் தான் வரும். பணக்காரங்க சண்டை போட்டா ஏழைங்களுக்குத் தானே இழப்பு வரும்? அத புரிஞ்சிக்கினு என் மாமன் மகன் அத்தைமகனுக்கே என்னை விட்டுக் கொடுத்திட்டார். எனக்கும் என்னோட அத்தை மகனுக்கும் நிச்சயத்தார்த்தம் முடிஞ்சிடுச்சி. நான் படிப்பை முடிச்சப் பிறகு தான் கல்யாணம்ன்னு முடிவா சொல்லிட்டேன்." என்றாள்.
   'ஏன்...... உன்னோட மாமா மகனை உன்னால மறக்க முடியலையா....?" மீனா ஆதங்கமாகக் கேட்டாள். கல்யாணம் கட்டாயமாக்கப்படும் பொழுது அது வாழ்க்கை முழுவதும் தண்டனையாகி விடுகிறதே! மனம் விரும்பாமல் ஏற்றுக் கொள்ளும் சந்தோசம் வெறும் நடிப்புத்தான்!
   'சீச்சீ.... அவர் எப்போ என்னை எல்லார் முன்னாடியும் வேண்டாம்ன்னு சொன்னாரோ..... அப்பவே நான் அவர மறந்துட்டேன். ஆனா மீனா.... பெண்களுக்கு முதல்ல தோனுற காதல் நிறைவேறலைன்னா அது காலம் பூரா நினைவு சின்னமாகத்தான் மனசுல அழிக்க முடியாத அளவுக்குப் பதிஞ்சிப் போயிடும். என்னோடக் காதலும் அப்படித்தான். ஆனா புடிச்சது கெடைக்கலன்னா கெடச்சதை புடிச்சிக்கணும் இல்லையா.....? அதத்தான் நானும் எவ்வளவோ முயற்சி பண்ணுறேன். ஆனா முடியலை மீனா.... அவரப் பாத்தாலே எனக்கு பயமா இருக்குது. அவருக்கு அன்பா பாத்து பேசக்கூடத் தெரியலை..... என்ன செய்யலாம்..... நீயே ஒரு வழி சொல்லு......"

   மீனா கண்மணியின் புத்திசாலித்தனமான பேச்சைக் கேட்டு மெய் மறந்து இருந்தாள். பழைய காதல் நினைவுச்சின்னம் என்றது எவ்வளவு உண்மையான வெளிப்பாடு. தன் மனத்திலும் முகம் பார்க்காத அந்தச் சக்திவேல் என்ற பெயர் வெறும் நினைவுச்சின்னம் தானா.....?
   பரவாயில்லை. பழைய நினைவுகள் வாழ்க்கையின் பாடங்கள். அதிலும் தோல்வியால் ஏற்பட்ட நினைவுகள் இனித் தோல்வி ஏற்படாமல் இருக்கக் கற்பிக்கப் பட்ட முன்னேற்றப் பாதைகள். அதில் இருக்கும் கவலை என்ற தடைகல்லைத் தூக்கி எறிந்து விட்டால்.... அதுவே வெற்றிக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு!
   கண்மணியின் கேள்வி மனத்தில் எழுந்தது. ஒருவன் அன்பை வெளிக்காட்ட என்ன செய்ய வேண்டும்? ஒரே வழி.... மனம் திறந்து பேசவேண்டும்! பேசக் கூச்சப்படுபவர்களிடம்......?
   உடனே மனம் சக்திவேலுவை நினைத்தது. பெண்களின் முகம் பார்க்கவே கூச்சப்படுபவர்! அவர் எப்படி இவளிடம் மனம் திறந்து பேசுவார்......? வேண்டுமானால் இவளே அவரிடம் போய் பேசிப் பழகலாம். சம்மதிப்பாளா......?
   படித்த பெண்களுக்கும் வெட்கம் வரத்தானே செய்கிறது!
   அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே கண்மணியின் வீட்டு வேலையாள் அங்கே வந்து 'பாப்பா..... உன்ன பாக்க சத்திவேலு ஐயா வந்திருக்காருமா....." என்றார்.
   அவர் சொன்னது தான் தாமதம். கண்மணியின் முகத்தில் வந்த சந்தோசத்தை அளவிட்டுச் சொல்லவே முடியாது. 'வாடி போகலாம்....." சொல்லிக் கோண்டே வீட்டைவிட்டு ஓடினாள்.
   அவள் ஓடின வேகத்தைப் பார்த்த மீனாவிற்கு ஆச்சர்யம்! இவ்வளவு ஆசையுடன் இருப்பவளைச் சக்திவேலால் புரிந்து கொள்ள முடியவில்லையா......? எழுந்து மண்ணைத் தட்டிவிட்டு நடந்தாள்;;. அவளுக்கும் சந்தோசம். தானும் முதல்முறையாக சக்திவேலுவை நேராகப் பார்க்கப் போகிறேமே என்ற எண்ணம்!
   கற்பனையில் எண்ணங்களை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சிறகடித்துப் பறக்கச்செய்யலாம்...... ஆனால் நடைமுறையில் நடப்பது எதுவும் கற்பனையில் பறந்த பறவையாக இருப்பதில்லையே......!!

                        (தொடரும்)

Sunday, 20 May 2012

போகப் போகத் தெரியும் - 11

  
   ஜீன்சு பேண்ட். அதன் மேல் இறுக்கமான பனியன். பனியனின் மேல் மெல்லியத் துணியால் ஆன காலர் வைத்தச் சட்டை. பட்டன் போடாமல் திறந்து விட்டு கொண்டு... மீனா பேஷன் ஷொ பெண் போல நடந்து வந்து கொண்டிருந்தாள்.
   அவளைப் பார்த்த ஆண்களின் கண்களுக்குத் திருப்தியையும் பெண்களுக்கு அவளைப் போல் நாமில்லையே.... என்ற அதிருப்தியையும் கொடுத்தது.
   தன் குட்டையான சுருட்டை முடியைப் பின்னாமல் விரித்திருந்தது அவளுடைய அழகை மேலும் உயர்த்திக் காட்டியது.
   மேலைநாட்டு உடை தான் என்றாலும் நம்மூர் பெண்கள் அதை அணியும் பொழுது சில சமயங்களில் அந்த ஆடைக்கே அழகு கூடிவிடுவதும் உண்டு.
   பள்ளியை விட்டு வெளியே வந்தவளை அங்கே இருந்த அனைத்து ஜோடிக் கண்களும் அவளை விழுங்கி விடுவது போல் பார்த்தன. அதில் ஒரு ஜோடிக்குரிய கண்கள் சின்னதம்பியுடையது. அந்தக் கண்களில் ஆர்வமட்டுமல்லாமல் அதிசயமும் கலந்து இருந்தது.
   தன் மோட்டார் வண்டியை நிறுத்தி அதன் மீது கம்பீரமாகச் சாய்ந்து கொண்டிருந்தவனை இளம் பெண்கள் ஓரக்கண்களால் பார்த்தாலும்..... அவனுடையப் பார்வை மீனாவின் மீது பதிந்து இருந்தது. ஆனால் இவள் அவனைப் பார்க்கவில்லை. அவள் எப்போழுதும் போலவே தன் தோல்பையை மார்புக்குக் குறுக்காக மாட்டிக் கொண்டு கையில் இருந்த புத்தகத்தைத் தூக்கிப் போட்டு பிடித்து கொண்டே நடந்தாள்.
   'மீனா" சின்னதம்பி கூப்பிட்டான்.
   நின்று திரும்பியவள் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்!
   'என்ன..... நீங்களா......? காலேஜ் தொடங்கிடுச்சே.....! போவலையா? ரொம்ப நல்லாயிருக்குது." என்றாள் குரலில் சற்று ஏளனமாக.
   'தொடங்கட்டுமே...... கொஞ்ச நாள் கழிச்சிப் போனாலும் என்னால பாடத்தைப் புரிஞ்சிக்க முடியும். அந்த தன்நம்பிக்கை எனக்கு நெறைய இருக்கு." என்றான்.
   தன்னை நன்றாக அறிந்து கொண்டவனே தன்னம்பிக்கை உள்ளவன். அவன் மற்றவர்களையும் அல்லவா புரிந்து கொள்கிறான்!
   'ஓ.... அப்பச்சரி. ஆமா... இங்க  எங்க.....?"
   'உன்னைப் பாக்கத்தான்."
   முகம் பூவாக மலர்ந்தது. 'என்ன பாக்கவா.... ரொம்ப சந்தோஷங்க. என்னைப் பாக்க யாரும் வந்ததேயில்ல. ரொம்ப தாங்ஸ். என்ன விசயம்?"
  'சக்திவேல் இந்த செல்போனையும் இந்தத் தாளையும் உங்கிட்ட குடுக்கச் சொன்னார்."
   'எதுக்கு....?" யோசனையுடன் வாங்கி கொண்டாள்.
   'நம்ம ஊருல இந்த வருஷம் தேர் திருவிழாவ நல்லா சிறப்பா கொண்டாடலாம்ன்னு இருக்கோம். இந்த நேரத்துல ஊரைவிட்டு வெளியே போய்ப் படிக்கிற எல்லார் கூடவும் பேசணுமின்னா இது உதவியா இருக்கும். அந்த பேப்பர்ல நம்ம ஊர் எல்லாருடைய போன் நம்பரும் இருக்குது." என்றான்.
   காகிதத்தைப் பிரித்து பார்த்தாள். அதில் சக்திவேல்  சின்னதம்பி கணேசன் ஆறு நண்பர்கள் இன்னும் இரண்டு பெயர்களுடன் டெலிபோன் எண்களும் வரிசையாக எழுதியிருந்தது.
   'ஏதாவது அவசியம்ன்னா மட்டும் நீயா போன் செஞ்சிப் பேசு. மத்தபடி அவரே ஒனக்குப் பண்ணுவார்."
   'நான் இன்னைக்கே அவர்கிட்ட கொஞ்சம் பேசணும். ஒரு முக்கியமான விசயத்தை அவர்கிட்ட சொல்லணும். என்ன செய்யலாம்?"
   'மீனா.... எந்த விசயமா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு. நான் நாளைக்கி பெங்களுர் கௌம்பிடுவேன். நானே அவர்கிட்ட சொல்லிடுறேன்."
   'இல்லைங்க. நானே அவர்கிட்ட நேரா சொல்லணும். ரொம்ப ரகசியமான விசயம். அன்னைக்கி நகைக்கெடைச்ச அன்னைக்கே சொல்லி இருக்கணும். ஆனா அவரை எப்படி காண்டெக்ட் பண்ணுறதுன்னுத் தெரியாம தவிச்சிக்கினு இருந்தேன். சரியன நேரத்துல தெய்வமே நேருல வந்த மாதிரி நீங்க வந்திருக்கீங்க." என்றாள்.
   சின்னதம்பி சற்று நேரம் யோசித்தான்.
   'சரி. நான் கௌம்புறேன். அவர்கிட்ட சொல்லி டெலிபோன் பண்ணச் சொல்லுறேன். அனேகமாக இன்னைக்கு போன் பண்ணுவாரு." சொல்லி கொண்டே வண்டியைக் கிளப்பினான்.
   சற்று தூரம் போனவன் அரை வட்டமடித்துத் திரும்பி அவளிடம் வந்து நிறுத்தினான். மீனா என்ன என்பது போல் அவனைப் பார்த்தாள்.
   'மீனா..... இந்த டிரஷ்சுல நீ ரொம்ப அழகா இருக்கிற!"
   அவன் அவளை அழுத்தமான காதல் கலந்த பார்வையுடன் சொன்னதும் மீனாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
   தன்னையுமறியாமல் தலைகுனிந்தாள்.
                          


   மீனாவுடைய உடையைப் பற்றிப் சின்னதம்பி பெருமையாகப் பேசினாலும் அவன் கண்களில் தெரிந்த காதல் போதை அவளை வெட்கத்தால் தலை குனிய வைத்தது.
   அவளின மனத்தில் மகிழ்ச்சி கொப்பளித்தது.  இது சற்று நேரம் தான். உடனே தன் மனத்தை மாற்றிக் கொண்டாள்.
   'உங்களுக்குப் பாவாடை சட்டைப் போட்டாலே பிடிக்காது. ஜீன்ஸ் பேண்டும் டீ ஷர்ட்டுமாப் புடிக்கும்? ஆச்சர்யமா இருக்குது....." என்றாள்.
   'உன்னை மாதிரி தேவதைங்க பாவாடை சட்டையில் இருக்கிறத விட ஜீன்ஸ் பேண்டுல ரொம்ப அழகாத் தெரியிறாங்க. அதுக்கேத்த ஒடம்பும் ஒனக்கு இருக்குது. மீனா.... சாதாரணமா ஒரு பொண்ணு போடுற டிரெஸ் அவள் பெண்ணுன்னு காட்ட கொஞ்சம் இறுக்கமாகவும் அவளுடைய பெண்மையை வெளிப்படுத்த கொஞ்சம் தளர்வாகவும் போடணும். நீ அன்னைக்கி போட்டிருந்த சட்டை உன்னோட பெண்மையை ரொம்ப வெளிப்படுத்துச்சி. அதனாலத்தான் நான் அப்படி சொன்னேன். நீயும் அன்னையிலேர்ந்து தாவணித்தான் கட்டுறே. அழகு போட்டிருக்கிற உடையில இல்ல. அதைப் போட்டிருக்கிற விதத்துலத்தான் இருக்குது. புடைவையைக் கூட கவர்ச்சியா உடுத்தலாம்..... சரி மீனா நான் கௌம்புறேன்......" போய்விட்டான்.
   மீனாவும் அங்கிருந்து கிளம்பினாலும் மனம் அவனையும் அவன் சொன்ன வார்த்தைகளையும் சுற்றியே வந்தது. அவன் சொன்னது போல் அவள் அன்றிலிருந்து வீட்டிலே பாவாடை சட்டைப் போட்டு கொண்டாலும் வெளியில் வரும்பொழுது தாவணியில் தான். ஆனால் அவள் இதை நினைக்கவில்லை.
   அவன் எந்த அளவில் தன்னைப் பார்வையால் அளந்து இருக்கிறான் என்பதை நினைத்து வெட்கப்பட்டாள்.

   அவள் நாகரீக உடையில் நடமாடும் நங்கை தான். அதற்குக் காரணம் உண்மையில் அவளின் வறுமை தான்! சிறுவயதிலிருந்தே மாமா பையன்களுக்குச் சிறியதாகிப் போன துணிகளைப் போட்டே வளர்ந்தாள். அதனால் அவளுக்குப் பெரிய பெண்ணாகிவிட்ட பிறகும் பேண்ட் பிடித்திருந்தது. ஆனால் 'நீ இந்த ஊரில் இந்த மாதிரியெல்லாம் உடை உடுத்தக் கூடாது" என்று அறிவழகி சொல்லிவிட்டதால் ஊருக்குள் வரும்பொழுது பாவாடை சட்டைத்தான்!
   அதன்பிறகு சின்னதம்பி அவளைப்பார்த்துக் கேலியாகச் சிரித்ததும் அவளுக்குத் தாவணி அவசியமாகப் பட்டது.
   பார்வைகளே பல விசயங்களைச் சொல்லிவிடுமே......!
   அன்று அவன் மேல் கோபம் தான்! ஆனால் இன்று இப்படி பேசிவிட்டுப் போனது.... நமது நன்மைக்குத்தானே என்று நினைக்கவும் அவள் உள்ளூர மகிழ்ந்தாள்.
   அழகு போட்டிருக்கிற உடையில் இல்லை. அதைப் போட்டிருக்கிற விதத்துலத்தான் இருக்கிறது என்று அவன் சொன்னது அவனது கண்ணியமான மனத்தை எடுத்துக் காட்டியது.
   ஆபாசமாகப் பார்க்கும் பேசும் ஆண்களைவிட கண்ணியமாகவும் நாகரீகமாகவும் நடந்து கொள்ளும் ஆண்களைத்தான் பெண்களுக்கு அதிகமாகப் பிடிக்கும். அந்த வகையில் அவளுக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டதில் ஆச்சர்யமில்லை. ஆனால் இது தான் காதலா.......?


   அன்று இரவு கைபோன் செல்லமாகச் சிணுங்க எடுத்துப் பேசினாள்.
   'அலோ......"
   'மீனா... நான் சக்திவேல் பேசுறேன்"
   அவன் குரலைக் கேட்டதும் அவள் முகம் மத்தாப்பூவாகப் பூத்தது.
   'நீங்களா... எப்படி இருக்கீங்க?"
   'ம்;..... ரொம்ப நல்லா இருக்கேன்மா.... சொல்லுமா என்ன முக்கியமான விசயம்? " அவர் நேரடியாக விசயத்தைத் துவங்கினார்.
   'சக்திவேல்.... உங்களால என்னை நேருல வந்து ஆசிரமத்துல சந்திக்க முடியுமா.....? கோயில் நகைகளைப் பத்தின விசயம் ஒன்னு சொல்லணும்....."
   மறுமுனை சற்று அமைதியில் கரைந்தது. இவளும் பேசாமல் இருந்தாள்.
   'என்ன விசயம்? போன்னுலேயே சொல்லலாமே.....?"
   'இல்லைங்க. இது ரகசியம் நேராகத்தான் சொல்லமுடியும்."
   'அப்போ ஒன்னு செய்யலாம். நா இப்போ நேரா வர முடியாது. தம்பி இருப்பான். நாளைக்கி அவனை நேரா வந்து உன்ன பாக்கச் சொல்லுறேன். எந்த மாதிரியான ரகசியமா இருந்தாலும் நீ தயங்காம அவன்கிட்ட சொல்லலாம். இங்கே நான் தான் அவன். அவன் தான் நான். நீ பயப்படாம சொல்லு என்ன....?"
   மீனாவிற்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. இதற்காகவாவது அவரை நேராடியாகப் பார்க்கலாம் என்று நினைத்திருந்தாள். அவளுக்கு இலேசான கோபம் கூட வந்தது.
   'எல்லாவிசயமும் அவரே செய்யிறார். நீங்க ஏன் எதிலுமே நேரிடையாக செய்யிறது கெடையாது......?"
   கேள்வியிலும் சற்று கோபம் கலந்திருந்தது.
   'செய்வேன் மீனா.... இன்னும் மூனு மாசம் தான். படிப்பு முடிஞ்சதும் நம்முடைய ஊர்தானே நமக்கு வாழ்வு! அதன் பிறகு நான்தானே எல்லாத்தையும் நேரடியாக செய்யணும்? அதுவரைக்கும் என்னோட எண்ணங்கள்ல தடை வராம இருக்கத்தான் தற்காலியமா நான் உன்னைவிட்டு விலகியிருக்கிறேன்.' என்றார்.
   மீனா அவன் பேசியதை உன்னிப்பாகக் கேட்டாள். புரிந்தது போல் இருந்தாலும் புரியவில்லை. பேசாமல் இருந்தாள்.
   'மீனா...."
   'ம்....."
   'நம்ம ஊர் நல்லதுக்காக நீ ரொம்ப அக்கரை காட்டுறது மிகவும் பாராட்ட கூடிய விசயம்மா.... ரொம்ப நன்றி. தேவைப்படும் போது நானே உன்னைக் கூப்பிடுறேன். நாளைக்கி சின்னதம்பி கிட்ட விசயத்தை சொல்லிடு. என்கிட்ட இருக்கிற எல்லா உரிமையையும் நீ அவன்கிட்டக் காட்டலாம். பிறகு பேசுறேன். என்ன.....?"
   தொடர்பு துண்டிக்கப் பட்டது. மீனா குழப்பமான மனத்துடன் போனை நிறுத்தினாள்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   உறங்கப் போகும் ஆதவன் தன் களைப்பு நீங்க மஞ்சள் குளித்து விட்டு ஊரையே மஞ்சள் நிறமாக்கி விட்டிருந்தான். ஆண் மஞ்சள் குளித்தால் அவமானம் எனநினைத்து மேகத் துண்டுகளில் துடைத்துவிட்டு போய்விட்டானோ........!
   ஊர் பெரியகுளம் கூட மஞ்சள் கரைத்த தண்ணீர் போல் இருந்தது. குலக்கரையில் சின்னதம்பி அமர்ந்து கொண்டு பாவாடையை முட்டிவரை தூக்கிப் பிடித்து கொண்டு தந்தம் போன்ற கால்களைத் தண்ணீரில் நனைத்து விளையாடிக்கொண்டிருந்த மீனாவை அன்புடனும் ஆசையுடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.
   விளையாடி முடித்துப் பாவாடையைத் தொங்கவிட்டுத் தாவணியைச் சரி செய்து கொண்டே அவன் எதிரில் வந்து மீனா பூவாகச் சிரித்தாள்.
   பெண்களின் சிரிப்புத்தான் எத்தனை வகை? எத்தனையான அர்த்தங்கள்? யார் தான் அதற்குச் சரியான அர்த்தம் கண்டுபிடித்து சொல்லிவிட முடியும்? அர்த்தம் கண்டுபிடிக்கவும் முடியுமா......? அதுவும் மீனாவின் இந்தப் புன்சிரிப்பு........ எதைச் சொல்கிறது......? அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அவனும் இலேசாகச் சிரித்து வைத்தான்.
   'உட்கார் மீனா....." அவன் சொல்ல அவன் அமர்ந்திருந்த படிக்குக் கீழ் படியில் அவன் காலுக்கு மிக அருகாமையில் அமர்ந்தாள்.
   'சொல்லு மீனா என்ன விசயம்.....?"
   அவள் சுற்றிலும் பார்த்தாள். குளக்கரையில் யாரும் இல்லை. இரண்டு பெண்கள் பூசை பொருட்களுடன் கோவிலுக்குள் போய்க் கொண்டிருந்தார்கள். யாருமில்லை என்று தெரிந்ததும் பேச்சைத் துவங்கினாள்.
   'அன்னைக்கி.... நகைப் பெட்டியைத் தொறந்ததும் நான் அந்த காகிதங்களைத்தான் பொருமையாப் புரட்டிப் படிச்சேன். அதுல நகையைப் பாதுகாக்கிறது எப்படின்னு விளக்கமா படிச்சிப் புரிஞ்சிக்கினேன். நல்ல வேலையா அந்த பக்க எழுத்தெல்லாம் அலைஞ்சிடாம இருந்துச்சி. அந்த விசயம் யாருக்கும் தெரிய வேணாம்ன்னுத்தான் அப்போ சொல்லல. அதுக்கேத்தமாதிரி அந்த தாளுங்களும் தூள் தூளாயிடுச்சி." என்றாள்.
   'சரி எப்படின்னு சொல்லு?"
   மீனாசுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சொன்னாள்.
   'நம்முடைய அம்மன்சிலைக்கு பக்கத்துல இருக்கற கல் மேடைக்கு கீழ இருக்கிற கல்லை நகர்த்தினா அங்க ஒரு பொய்யிடம் இருக்குதாம்......"
   'பொய்யிடமா.....? அப்படியின்னா.....?"
   'பொய்யிடம்ன்னா அங்க ஒரு பள்ளம் இருக்கும். அதை யாருமே அவ்வளவு சீக்கிறத்துல கண்டுப்பிடிக்க முடியாது. அந்த பள்ளத்துல இப்போ கெடைச்ச மாதிரியே போலி நகைங்க இருக்குதாம். இந்த உண்மையான தங்க நகைங்கள பொய்யிடத்துல வச்சிட்டு போலிநகைங்களை அந்த பொட்டியில வச்சி பாதுகாக்கணுமாம்." கிசுகிசுப்பாகச் சொன்னாள்.
   அவன் சற்று யோசித்தவன் சிரித்தான்.
   'பாதுகாக்கத்தான் இந்த நகைங்களா......?" என்றான்.
   'நீங்க கேக்குறது எனக்குப்புரியுது. இப்போ ஒரு கப்பலை எடுத்துக்கோங்க. அது துறைமுகத்துல இருந்தா பாதுகாப்பாத்தான் இருக்கும். ஆனா கப்பல் பாதுகாக்க மட்டும் செய்யிறதில்லையே...... இருந்தாலும் சாதாரண நேரங்கள்ல பாதுகாக்க இது ஒரு வழி. இதுவே சரியான வழியாவும் தெரியுது.
   இந்த விசயத்தை நான் இதோட மறந்துடறேன். நீங்க நம்ம அர்ச்சகர்கிட்ட சொல்லிக் காரியத்தை முடிச்சிடுங்க. நல்ல நாள்கிழமையில பொட்டிய கொண்டாந்து கல்மேடையில வச்சிட்டுப் பொய்யிடத்துல இருக்கிற நகைகள அம்மனுக்குச்த் சாத்தி திரும்பவும் கழற்றும் போது அந்த நகைகளைப் பொய்யிடத்துலேயே வச்சிட்டு பெட்டியைப் பாதுகாப்பா வக்கச்சொல்லுங்க." என்றாள்.
   சின்னதம்பி தலையாட்டினான். அவள் எழுந்து கிளம்ப தயாரானதும் அவனும் எழுந்து கொண்டான்.
   'மீனா......" மெதுவாக கூப்பிட்டான்.
   தாவணியில் ஒட்டியிருந்த மண்ணைத்தட்டியவள் அவனை நிமிர்ந்து கேள்வியாகப் பார்த்தாள்.
   'மீனா.... உனக்கு உண்மையிலேயே என் மேல எந்த ஒரு ஈடுபாடும் இல்லைய......? கேட்டான்.
   அவனையே சற்று நேரம் பார்த்தாள். பிறகு 'இல்லை" என்று தலையை மட்டும் ஆட்டினாள். வார்த்தையால் சொல்ல முடியவில்லை.
   அவளுடைய எண்ணங்கள் சக்திவேல் நேற்றுச் சொன்னதை எண்ணிப்பார்த்தது. அதன் அர்த்தம் அவளுக்கு விலங்கவில்லை. இவனிடம் கேட்கலாமா......? நினைத்தவள் அவனிடமே கேட்டாள்.
   'ஆமா.... நேத்துச் சக்திவேல் பேசும் போது ; என் எண்ணங்களில் தடை வராம இருக்கத்தான் தற்காலியமா விலகியிருக்கேன்னு சொன்னார். அதுக்கு அர்த்தம் என்ன.....? அவருக்குகூட தடைவருமா என்ன....?"
   அவன் இவளையே சற்று நேரம் பார்த்தான். அவள் அவனது கேள்விக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்ற அர்த்தத்தில் தலையாட்டியது அவனை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருந்தது. ஆனால் அவள் அதைச் சற்றும் இலட்சியம் செய்யாமல் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கவும் அவனுக்குக் கோபம் அதிகமாகியிருக்க வேண்டும்.
   'ம்..... சில சமயங்களில் சிங்கம் கூட ஈக்களிடமிருந்து தன்னை  காப்பாத்திகொள்ள வேண்டியிருக்கிறதே......." என்றான் அவளை ஏளனமாகப் பார்த்தபடி!
   அவன் சொன்னவிதமும் பார்த்த பார்வையும் தன்னைத்தான் ஈ என்று அர்ப்பமானதாக சொன்னான் என்பது புரிந்தது. அந்த சொல் கொண்டு கிழித்த வலி கண்களைக் கலக்கியது. அதை அவனும் கவனித்தான்.
   'மீனா ஆறுதல் கிடைக்கிற இடத்துல அழுதால்தான் நம் கண்ணீருக்குக் கூட மதிப்பிருக்கும். அன்பை நேசிக்கிறவங்களிடம் உன் அன்பைக் காட்டு. அப்போதுத்தான் உன் உண்மையான அன்பிற்கும் மதிப்பிருக்கும்."
   'அப்போ.... சக்திவேலிடம் என்மேல மதிப்பிருக்காதுன்னு சொல்லுறீங்களா.....?"
   'உன்னோட அன்புக்கு வேணா மதிப்பிருக்கும். ஆனா அது காதல் கிடையாது.  அவர் மனசுல நீ பத்தோடு பதினொன்னு தான். ஆனால் என் மனசுல நீ அப்படியில்ல. அதுல முழுக்க முழுக்க நீ மட்டும் தான் இருக்கிற. இதை நீ எப்பத்தான் புரிஞ்சிக்கப் போறே......?"
   அவன் குரலில் கனிவும் காதலும் ததும்பியது. நிமிர்ந்து அவன் கண்களை நோக்கினாள். அதில் ஏக்கம் காதல் மட்டுமில்லை உன்னையே வென்றுவிட்டேனடி என்ற வெற்றி போதையும் ஓர் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது. மனத்தை திடப்படுத்தினாள்.
   'இதோ பாருங்க. சக்திவேல் என்னை விரும்பலேன்னாலும் பரவாயில்லை. எனக்குன்னு ஒரு மனசு இருக்குது. அதுல நீங்க கொஞ்சம் கூட இல்லை." என்றாள் அழுத்தமாக.
   அவளின் பொய்பேசும் விழிகளைச் சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் திரும்பித் தன் மோட்டார் வண்டியை நோக்கி நடந்தான். மீனா அவனை யோசனையுடன் பின் தொடர்ந்தாள்.  அவன் தன்னை அலட்சியப் படுத்துகிறானோ என்று தோன்றியது.
   இது தானே பேதை மனம்! முன்னே போனால் இடிக்கும். பின்னே வந்தால் தடுக்கும். ஆக எப்படியாவது போய்த்தான் ஆகவேண்டும்.
   அவன் கிளப்பின வண்டியில் ஏறி அமர்ந்தாள். அவள் அமர்ந்ததும் வண்டி கிளம்பியது. அவனின் கோபம் வண்டியின் வேகத்தில் தெரிந்தது.

                         (தொடரும்)   

Wednesday, 9 May 2012

போகப் போகத் தெரியும் - 10

                                            

   ஆத்தூர் ஏரியைச் சுத்தப்படுத்திக்  கொண்டிருந்த பொழுது சின்னதம்பி கடப்பாரையால் மண்ணைக் குத்த....... 'க்ணீங்....." என்ற ஓசை கேட்டது. அங்கே வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் அந்த ஓசை வந்த திசையைத் திரும்பிப் பார்த்தார்கள். சின்னதம்பி திரும்பவும் யோசனையுடன் அந்த இடத்தை மீண்டும் குத்த.... மீண்டும் அதே ஓசை!!!!
   சின்னதம்பி சொல்ல நான்கு ஆண்கள் தோண்டி எடுத்த பொழுது அது ஒரு பழுப்பேறிய செம்மண் நிற n;வங்கலப் பெட்டி! இரண்டடி நீளம். ஒருஅடி அகலம். ஓரடி உயரம் கொண்டது.
   அனைவருமே வேலையை விட்டுவிட்டு பெட்டியை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்;. பெட்டியின் நாக்கில் பெரியப் பூட்டு! இழுத்து  பார்த்தார்கள்;. திறக்கவில்லை.
   சின்னதம்பி சொன்னான்.
   'இந்தப் பொட்டிய பிறகுப் பாத்துக் கொள்ளலாம்...... தூக்கிக் கொண்டு போய் மரத்தடியில வச்சிட்டு வேலையைப் பாருங்க."  என்று.
   உடனே அவன் கட்டளை நிறைவேறியது.
   ;ஒரு சிங்கத்தின் தலைமையில் ஆடுகளைக் கொண்டப் படை ஆட்டின் தலைமையிலான சிங்கங்களின் படையைத் தோற்கடிக்கும் ; என்பது அரேபியப் பழமொழி.
   இங்கே ஒரு தலைமை சிங்கம் ஒவ்வொரு ஆட்டையும் சிங்கமாக்கிக் கொண்டிருந்தது.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


  ஏரியைச் செப்பனிட்ட வேலையனைத்தும் முடிந்து விட்டது. கசகசப்பான மாலைப் பொழுது. ஒவ்வொருவரும் குளித்து உடைமாற்றிக் கொண்டு கோவில் மரத்தடியில் வந்து குழுமியிருந்தனர்!
   ஒவ்வொருவரும் உற்சாகமாக இருந்தார்கள். இத்தனை நாட்களாகச் செய்த வேலையின் பளு முகத்தில் தெரியவில்லை. வேலை என்று நினைத்துச் செய்தால் அது உடல் வலியைக் கொடுக்கும். நமக்குத் தேவை என்பதற்காகச் செய்யப்படும் வேலை மன வலிமையை அல்லவா கொடுக்கும்?
   வேலைக்கு நடுவில் கிடைத்த பெட்டி! அதை அப்பொழுதே மறந்து விட்டு வேலையைத் தொடர்ந்தார்கள்.
   எப்பொழுதுமே ஒரு வேலையைச் சரியாகவும்.... முடிவு இது தான் எனக் குறித்தும் ஆரம்பித்து விட்டால் அந்த வேலை முடியும் வரை தொடர்ந்து கொண்டே போகத்தான் வேண்டும். இங்கே முடிவு தான் வெற்றியைக் கொடுக்குமே தவிர நடுவில் நடக்கும் தடைகள் இல்லை.
   அப்போதைய தடையும் இந்தப் பெட்டித்தான். இப்போதைய வெற்றியும் இந்தப் பெட்டித்தான்.

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²
   எப்பொழுதுமே மூடப்பட்டிருக்கும் பொருளுக்குத்தான் மதிப்பு அதிகம்! ஆனால் அதனுள்ளே உண்மையிலேயே மதிப்பு அதிகமானப் பொருள் இருந்தால்....
   பொருளின் தரத்திற்கு மட்டும் மதிப்பைக் கொடுத்து விட முடியாது. அதை அறிய ஆவலாய்க் காத்து கொண்டிருக்கும் மனித மனமும் மதிப்பு வாய்ந்தது தான்! உண்மையையும் ஏமாற்றத்தையும் ஏற்றுக் கொள்கிறதே!
   அதன் பூட்டை பலவித சாவிகள் கம்பிகளை நுழைத்துத் திறக்க முயற்சித்தும் முடியவில்லை. கடைசியில் சின்னதம்பி தான் பூட்டை உடைக்கச் சொன்னான்.
   ஏற்கனவே துருப்பிடித்திருந்த பூட்டு! அதைக் குறுக்கு வழியில் கொடுமை படுத்தித் திறக்க அதிக நேரம் பிடிக்கவில்லை. பூட்டைத் திறந்ததும் பெட்டியைத் திறக்க முயன்றனர். ஆனால் அதன் மூடியும் பெட்டியின் அடிப்பாகமும் நன்றாக அழுத்திக் கொண்டு திறக்கச் சிரமமாக இருக்க பிறகு மெல்லியக் கூர்மையானக் கத்தியின் உதவியால் கீறித் திறந்தார்கள்!
   அதனுள்.....! பட்டுத்துணியில் சுற்றி வைக்கப்பட்டத் தங்க நகைகள்!!! அதனுடன் ஒரு புத்தகம்.
   எந்தக் காலத்தில் மறைக்கப்பட்டப் பெட்டியோ......?
   அந்தப்பட்டு துணியைத் தொட்டவுடன் மொடமொடப்பாக உதிர்ந்தது. துணித்தான் இப்படி என்றால்.... கையால் எழுதியிருந்த அந்த காகிதச்சுவடி.......
   அதைவிட இது மோசம் என்பது போல் எரிந்து போனக் காகிதத்தைத் தொட்டால் எப்படி நொறுங்கிப் போகுமோ.... அப்படி நொறுங்கியது. நடுவில் சில வாக்கியங்கள்..... எழுத்துக்கள்.... தெளிவில்லாமல்.....
   சின்னதம்பி அதை மிகமிகப் பொறுமையாக எடுத்து மெதுவாகத் தரையில் வைத்துவிட்டான். எங்கே பிரித்தால் அதில் தெரியும் ஒரு சில வாக்கியங்களையும் படிக்க முடியாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில்.
   சாஸ்திரிகள் அந்த இதழ்களை மிக மெதுவாக திருப்பினார். ஆனால் அவை கைப்பட்டதும் நொறுங்கியது.
   'தம்பீ.... இந்தக் காகிதத்தால நமக்கு எந்த உபயோகமும் இருக்காதுன்னு நினைக்கிறேன்பா....." என்றார்.
   முடியாததை முயற்சித்துத் தோல்வியடையாமல் இருப்பதும் சில நேரங்களில் நல்லதே.
   'சரி உபயோகப் படாததுக்காக நம்முடைய நேரத்தை வீணாக்க வேண்டாம். மேற்கொண்டு என்ன செய்யலாம்?" சின்னதம்பி கேட்டான்.
   அதற்குள் பெட்டியில் இருந்த நகைகளை அங்கிருந்த சிமெண்டு தரையின் மீது பரப்பி வைத்திருந்தனர். சாஸ்த்திரி நகைகளை நோட்டமிட்டார். எல்லாம் மங்கிப் போன மஞ்சள் நிறத்தில் பளப்பளப்பான கற்கள் பதித்தத் தங்க நகைகள்!
   'தம்பீ.... இந்க நகைகளப் பாத்தால் நம்ம அகிலாண்டேசுவரி அம்மனுக்கு இப்பொழுது சாத்தியிருக்கும் கவரிங் நகைகள மாதிரியே இருக்குது. அதுவும் ஒரே அச்சாக இருக்கிறது. அம்மனுடைய தங்க நகைகள களவாட அதேமாதிறி நகைங்க செஞ்சி மாத்தி இருக்க வேணும்ன்னு நெனைக்கிறேன்." என்றார்.
   'இருக்கலாம் சாஸ்த்திரிகளே..... என்னோட தாத்தாவோட தாத்தா தணிகாசலம் அவர்கள் இந்த ஊர் அம்மனுக்கு தங்கத்தாலேயே நகைங்க செஞ்சி சாத்தினதாகவும்... அது ஒரு நாள் பொட்டியோட களவுப் போயிடுச்சின்னும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பொட்டி திருட்டுப் போனப்பிறகு அம்மன் தேர் ஊர்வலம் நின்னு போயிடுச்சின்னு என் தாத்தா சொல்லி இருக்கார். அனேகமா இந்த நகைங்கத்தான் அன்னைக்கு காணாப் போன நகைங்களாகக் கூட இருக்கலாம்." என்றான் சின்னதம்பி.
   'ஆமாம்பா.........தம்பி சொல்லுறது உண்மத்தான். நான் சின்னப்புள்ளையா இருந்தப்போ நடந்த நிகழ்ச்சின்னும் இதப்பத்தி அப்போ பேசாத ஆளே இல்லன்னு என் அப்பாரு எங்கிட்ட சொல்லியிருக்காரு....."
   கணேசனின் தாத்தா சொன்னார். அந்த ஊரில் வயது முதிர்ந்த மனிதர் இவர் தான்!
   இதையெல்லாம் காதில் வாங்காதவளாக மீனா அந்தக் காகிதங்களை மிகமிக மெதுவாகப் புரட்டிப்பார்த்து விட்டு எழுந்து வந்தாள். யோசனையுடன் சின்னதம்பி அவளைப் பார்த்தான்!
   'ஐயா.... இந்தப் பொட்டியோட அடியில இருக்கற தகட்டை பேத்து எடுக்கிறீங்களா....?"
   ஒருவர் முகத்தை ஒருவராகப் பார்த்து கொண்டார்கள். பிறகு சின்னதம்பி யோசனையுடன் தலையாட்ட மாதவனும் சரவணனும் அந்தப் பெட்டியின் அடியில் ஒட்டியிருந்தத் தகட்டை ஒரு கத்தியின் உதவியுடன் பெயர்த்து எடுத்தார்கள்.
   அது செப்பினால் ஆனத் தகட்டில் தமிழ் எழுத்துக்களைக் கீறி எழுதப்பட்டிருந்தது. சின்னதம்பி எடுத்துச் சத்தமாகப் படித்தான்.
   'இந்தப் பெட்டியிலிருக்கும் நகைகள் அனைத்தும் ஆத்துர் கோவில் அகிலான்டேசுவரிக்குச் சொந்தமானது. இதைப் பாதுகாக்கும் முறைகள் இதனுடன் இருக்கும் காகிதச் சுவடியில் குறிக்கப் பட்டுள்ளது. இதை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை கிடையாது. இவை அனைத்தும் என் சொந்த உழைப்பில் செய்து இவ்வூர் அம்மனுக்கு நான் செலுத்தினக் காணிக்கை.
                          இங்ஙனம்
                     ஸ்ரீ தணிகாசலம் செட்டியார்.
 
   அவன் படித்து முடித்ததும் திரும்பி அந்த காகிதச் சுவடியைத் தேடினான். அது காகிதத் துகள்களால் ஆனச் சின்ன குப்பை மேடு போலிருந்தது. மீனாவைத் தேடினான். அவள் அங்கிருந்தச் சின்னக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
   அவன் சற்று ஏமாற்றமாகச் சாஸ்த்திரியை நோக்கினான்.
   'சரி விடு தம்பி. போனது போகட்டும். நாம வேற வழியில இந்த நகைகளைப் பாதுகாப்பா வைக்கலாம். மொதல்ல கெடச்சது என்னன்னு எழுதி வைக்கலாம். பிறகு இதுக்கெல்லம் மெருகேத்தி அம்மன் மேலேயே போட்டுவச்சிடலாம். பாதுகாப்புக்கு இப்போ இருக்கிற மணிக்கதவுக்கு பின்னால ஒரு கடினமான கம்பிக்கதவு செஞ்சி போட்டிடலாம். முக்கியமா இந்த நகைகளைப் பத்தின விசயம் வெளியே தெரியாம பாத்துக்கணும். என்ன நான் சொல்லுறது சரியா....?" என்று கேட்டார்.
   அங்கிருந்தவர்கள் தலையை ஆட்டினார்கள். ஆனால் மீனா திடிரெனச்சிரித்தாள். சத்தமாகச் சிரித்தாள். எல்லோரும் அவளை விநோதமாகப் பார்த்தார்கள்! காரணமில்லாமல் இல்லை. அவள் எப்பொழுதுமே கலகலப்பாகச் சிரித்துப் பேசுபவள் தான். அந்தச் சிரிப்பில் செப்புக்காசுகள் கொட்டிச் சிதறினால் ஏற்படும் ஓசை நயம் இருக்கும். அந்த இனிமையானச் சிரிப்பொலியைத் திரும்பவும் கேட்க வேண்டும் என்பது போல் ஆசை வரும்.
   ஆனால் இன்று.....?
   அவள் சிரிப்பொலியில் அரக்கத்தனம் இருந்தது. அந்தச் சிரிப்போசை எங்கேயோ தூரத்தில் மோதித் திரும்பவும் வந்து கேட்பவர்களின் காது பறையைத் தாக்கியது. மேலும் மேலும் சிரித்து கொண்டே இருந்தாள்!!!
   சின்னதம்பி அவளருகில் வந்து 'மீனா" என்று கூப்பிட்டும் அவள் சிரித்துக் கொண்டே இருந்தாள்.
   'மீனா... எதுக்கு இப்படி பேய்மாதிரி சிரிக்கிற?" அவளின் இரு தோள்களையும் தன் கைகளால் இறுக்கிப் பிடித்து குலுக்கினான். அவள் சிரிப்புச் சட்டென்று அடங்கியது.
   'மீனா...... கேக்கிறேன் இல்ல....? சொல்லு. எதுக்காக இப்படி சிரிச்சே.....?"
   மீனா அவன் கையை விலக்கினாள்.
   'நம்ம ஊரு அகிலாண்மேசுவரியை நெனச்சேன். சிரிப்பு வந்தது." இலேசாகச் சிரித்து கொண்டே சொன்னாள்.
   'நீ இப்படி சிரிக்கிற அளவுக்கு நம்ம ஊர் அம்மனுக்கு என்ன வந்தது?"
   'இவ்ளோ நாளா சுதந்திரமா இருந்த அகிலாண்டேசுவரி இனிமே சிறையிலிருக்கப் போறாளே.... அத நெனச்சித்தான் சிரிச்சேன்."
   'என்ன சொல்லுற நீ? புரியும் படியாச் சொல்லு....."
   'அம்மனுக்கு களவு போன நகைகள சாத்தி நகைய பாதுகாக்கிறேன்னு அவள கம்பிப் கதவு செஞ்சிப் பூட்டி வைக்கப் போறேன்னுச் சொன்னிங்களே......! அப்படின்னா அவளைச் சிறையில அடைக்கப் போறிங்கன்னுத் தானே அர்த்தம்! பாவம் அவள்! இனிமேல தங்கத்துக்காக இரும்புக் கூட்டில் அடைபடப் போகும் தங்கக் கிளி!" என்றாள்.
   அவள் சொன்னதைக் கேட்டு அவன் மற்ற அனைவரையும் பார்த்தான்.
   'சரி. அப்போ என்ன செய்யலாம்? நீயே ஒரு வழி சொல்லேன்." கணேசன் மீனாவைப் பார்த்து கேட்டான்.
   'தங்கத்துக்காக அம்மனைச் சிறையில அடைக்க வேண்டாம். வேணும்மின்னா அந்த நகைகள அதே பொட்டியில வச்சி வேற எடத்துல பாதுகாப்பா வையுங்க. ஏதாவது விஷேச நாளுல அம்மனுக்கு தங்க நகைகளப் போடுங்க." என்றாள். குரல் சற்று அழுத்தமாகவும் பார்வைச் சற்று கோபத்துடனும் இருந்தது.
   சின்னதம்பி மீனாவைப் பார்த்தான். அந்தப் பார்வைச் சிந்தனையில் ஊடுருவும் பார்வை!
   அன்று ஏரியைத் தூர்வாரத் தூண்டியது இந்த மீனா தான். அப்பொழுதே தேர் புதுப்பிக்கப் படுவதைப் பற்றி பேச்செடுத்த பொழுது... முதலில் தூர்வாருங்கள் பிறகு நம்மூர் அம்மன் வழிக்காட்டுவாள்.... என்று சொன்னதும் இந்த மீனாதான். பெட்டிக் கிடைத்ததும் அவளெதிரில் தான். பெட்டியினுல் தகடு இருப்பதைச் சொன்னதும் இவள் தான். இப்பொழுது இப்பெட்டியைப் பாதுகாக்க வழி சொல்வதும் இவள் தான். அப்படியானால் யார் இவள்? இந்தப் பெட்டிக்கும் இந்த ஊருக்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம்? ஏன் இப்படி திடிரென்று ஒரு மாதிரியாகப் பேசுகிறாள்.....?
   அவன் இப்படி யோசித்துக் கொண்டே மீனாவை வைத்தக்கண் வாங்காமல் பார்க்க.... மீனா அவன் முகத்திற்கு முன் தன் கைகளை ஆட்டினாள்.
   'என்ன இந்த உலகத்துலத் தான் இருக்கிங்களா....? இல்ல.... தங்கத்தப் பாத்ததும் புத்தித் தடுமாறிடுச்சா.....?"
   சிரித்து கொண்டே கேட்டாள். இப்பொழுது அவள் குரல் எப்பொழுதும் போல் மென்மையாக இருந்தது.
   'என்னொட புத்தி தடுமாறுற அளவுக்கு என்னோட சிந்தனைய தூண்டிவிட்டவ நீ.... என் சிந்தனை மனிதனுடைய பார்வையிலேயே இருக்குது. ஆனா... உன் பார்வை தெய்வத்தன்மையோட இருக்குதே.... அதான் யோசனை."
   'பொறுங்க..... பொறுங்க.... பொதுவா சிந்தனையில அன்பும் உண்மையையும் கலந்து எதைப்பாத்தாலும் அந்தப் பார்வையில தெய்வம் குடிக் கொண்டிருக்கும். என்னோட பார்வையில அன்பும் உண்மையும் இருந்ததால என்னோட வார்த்தையும் கொஞ்சம் உண்மையை அழுத்தமா வெளிப்படுத்துச்சி. இத வச்சி என்ன தெய்வமா ஆக்கிடாதீங்க. அதோட என்னைய யாரும் அன்பா பாக்கமாட்டாங்க. பக்தியோடப் பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. இந்த மீனாவுக்குத் தேவையானது வெறும் அன்பு மட்டும் தான். அந்த அன்பை நீங்க காணிக்கையா தந்தாலும் ஏத்துக்குவேன்..... அன்பளிப்பா தந்தாலும் ஏத்துக்குவேன்...... என்ன சரியா.......?"
   அவள் சிரித்துக் கொண்டே சொல்லி விட்டுத் தன் வீட்டை நோக்கி நடந்தாள்.
   ஊர் மக்கள் அனைவரும் அவள் போவதையே பார்த்து கொண்டு நின்றிருந்தார்கள்!
   தெய்வங்கள் நேரில் வந்து காட்சி கொடுப்பது இல்லை. உண்மையும் அன்பும் ஒருங்கே இருப்பவர்கள் அனைவருமே நடமாடும் தெய்வங்கள் தான்!
                               (தொடரும்)

Tuesday, 1 May 2012

போகப் போகத் தெரியும் - 9



   எந்த ஒரு காரியத்திற்கும் ஒரு தொடக்கம் வேண்டும். பிரயாணத்திற்கு முதல் அடி எடுத்து வைக்க வேண்டும் என்பது போல. ஆனால் அந்த முதல் அடிதான் மனத்தில் சவாலாக அமைந்துவிடும்.
   மீனா சவாலாகத் துவங்கிவிட்டாள். ஊர் தேரைப்புதுப்பிக்கத் தேவைப்படும் பணத்தை ஊர்க்காரர்களிடம் வசூலிக்கலாம் என்று கணேசன் சொன்னதற்குத் தேவையில்லை என்றும் காரணம் கேட்ட சின்னதம்பிக்குத்  தேவைப்படாது என்றும் பதிலளித்தாள்;.
   சின்னதம்பி அவளைச் சற்று யோசனையுடன் உற்றுப் பார்த்தான். அவள் முகம் சிவந்து வியர்த்துப் போய் இருந்தது. இவள் என்ன சொல்ல வருகிறாள்.....? ஒரு சமயம் பயப்படுகிறாளா.....?
   'மீனா நீ ஏதாவது சொல்ல வேண்டுமானால் உன் கருத்தைத் தைரியமாகச் சொல்லலாம். நம்முடைய ஊர் நலனுக்காகக் கூட்டப்படும் கூட்டம். ஓருத்தர் சொல்லும் கருத்தை மற்றவர்களும் கலந்து பேசிக் சரியானதுத்தான்னா முடிவாகப் போகிறது. இல்லைன்னா அவங்களோட மனம் நோகாம நிகாரிக்கப் படப் போவுது. நீ யோசிக்காதே. தைரியமா சொல்லு." என்றான்.
   மீனா அவனை நிமிர்ந்து பார்த்தாள். 'நான் சொல்ல வருவது கொஞ்சம் கஷ்டமான வேலை. அதான் முடியுமான்னு யோசிக்கிறேன்....."
   'மீனா... எல்லா விசயமும் பாக்க கஷ்ட்டமாத்தான்  தெரியும். காரணம் அந்த வேலை ரொம்பக் கஷ்டமா இருக்கும்ன்னு நெனச்சே சில காரியங்களைத் துணிஞ்சி செய்யாமலேயே விட்டுடுறோம். நாம் முயற்சி செஞ்சி துணிஞ்சி செய்யாததாலத்தான் அந்தக் காரியம் கஷ்டம் போலவே தெரியுது. அது என்னன்னு சொல்லு. சரியானதுன்னா மேற்கொண்டு பேசலாம்." என்றான்.
   மீனாவிற்கு அவனுடைய வார்த்தைகள் சற்று தைரியத்தை ஊட்டியது. அவள் தன் கருத்தைச் சொல்லத் துவங்கினாள்.
   'நம்ம ஊருல ஒரு சின்ன ஏரி இருக்குது இல்லையா...? அது ரொம்ப வருஷமா துர்ர் வாராம எதுக்கும் உதவாம இருக்குது. அதை நாமெல்லாம் சேர்ந்து துர்ர் வாரணும். அப்படி சுத்தப்படுத்தினா போன நாலு வருஷமா பெய்யாத மழை இந்த வருஷம் அதிகமா பெய்ய வாய்ப்பு இருக்குதுன்னு வானிலை ஆராட்சியாளர்கள் பேட்டிக் குடுத்து இருக்காங்க. இப்போ தூர் வாரினா நிச்சயம் இந்த வருஷம் ஏரி நிறையும். நமக்கு நல்ல பலன் கெடைக்கும்." என்றாள்.
   மீனா சொன்னதை அனைவரும் கூர்ந்து கவனித்தார்கள். அவள் சொன்ன விசயம் சரியானதுதான். ஆனால் இது முடியிறக்காரியமா.....? எல்லோர் மனத்திலும் இந்தக் கேள்வி எழுந்தது. ஆனால் யாரும் கேள்வியைக் கேட்கவில்லை.
   'மீனா உன்னுடைய எண்ணம் எங்களுக்குப் புரியுது. நாங்களும் நம்மூர் ஏரிய தூர்வார அரசாங்கத்துக் கிட்ட மனு போட்டுக்கினுத் தான் இருக்கிறோம். ஆனால் அரசாங்கம் எந்த உதவியையும் செய்யலையே...." கணேசன் சொன்னான்.
   'இதெதுக்கு நாம அரசாங்கத்தோட உதவியைக் கேக்கணும்? நம்ம ஊர் இது. நம்முடைய ஏரி. இதைச் சுத்தப்படுத்தினா நாமத்தான் அதிகமா பயனடைவோம். ஏன் அதை நாமே செய்யக்கூடா?. நமக்கு நம்முடைய சக்தி தெரியும். அதுல உழைப்பு ஊரிப்போய் இருக்குது. ஒருவன் கைத்தட்டினால் கொஞ்சம் சத்தம் வரும். ஊரே சேர்ந்து கை தட்டினா நாடே நம்மைத் திரும்பிப் பார்க்கும்;. அடுத்தவர் கல்ல நிக்க நாம ஒன்னும் ஊனமாயில்லையே......"
   அவள் வார்த்தைகளில் அனல் பறந்தது.
   அங்கே அமைதி நிலவியது. அனைவருமே இந்த விசயத்தைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். மீனா அவர்கள் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரட்டும் என்று அமர்ந்திருந்தாள்.
   சின்னதம்பி அமைதியைக் கலைத்தான்.
   'மீனா சொன்னதிலும் நியாயம் இருக்குத் தான். அரசாங்கம் உதவி செய்யலைன்னா என்ன....? நாமே ஏன் இதை செய்திருக்கக் கூடாது? இதுக்குப் பணம் பொருளை விட உழைப்புத் தான் தேவை. நம்ம ஊர் ஏரி ரொம்ப சின்னது தான். எப்பவோ தூர் வாரி இருக்கலாம். இந்த வகையில நாம யோசிச்சதே இல்லை. இதுக்காக நாம மீனாவுக்கு நன்றி சொல்லணும்." என்றான் மீனாவை நன்றியுடன் பார்த்தபடி.
   மீனா எழுந்து நின்றாள்.
   'இதுக்காக நன்றி சொல்லவேண்டிய அவசியமில்லை. எப்போதுமே நேர்பார்வையில பாக்கிறவங்க பக்கவாட்டில் என்ன நடக்கிறதுன்னு பாக்கத் தவறிடுறாங்க. ஒரு சமயம் சக்திவேல் படிக்கிறதுக்காக பெங்களுர் போவலைன்னா எப்பவோ அவர் இதை இந்தக் கோணத்துல யோசிச்சிப் பாத்திருப்பார்." என்றாள் அவனை அலட்சியமாகப் பார்த்தபடி.
   அங்கே இருந்த அனைவரும் மீனாவைப் புன்னகையுடன் நோக்கினார்கள். சின்னதம்பி நிலைமையைச் சமாளித்தான்.
   'அந்த வானிலை ஆராட்சியாளர்கள் சொன்னது உண்மையாகக் கூட ஆகலாம். அதனால நாம எல்லாரும் சேர்ந்து ஏரிய தூர் வாரணும். அதுவும் கூடிய சீக்கிரமாக இருக்க வேண்டும். வேலைக்குப் போறவங்க படிக்கிறவங்க பொண்ணுங்கன்னு எல்லாருமே சேந்து ஒழைக்கணும். இதுக்கு நீங்க எல்லாரும் ஒத்தொழைப்புக் குடுப்பீங்களா....?"
   சத்தமாகக் கேட்டான். எல்லாரும் 'சரி" என்று தலையாட்டிக் கொண்டே சொன்னார்கள்!
   'மீனா இது இருக்கட்டும். எதுக்காக தேரை புதுப்பிக்க ஊருல தண்டல் பண்ணலாம்ன்னு சொன்னதுக்கு ;தேவையில்லை ; ;தேவைப்படாது ;ன்னு எதுக்காக சொன்னே....?"
   கணேசன் கேட்டான். அவன் சட்டம் படிப்பவன் இல்லையா...
   'ஏரிய மொதல்ல தூர் வாரலாம். நம்மூர் அகிலாண்டேசுவரி அதுக்கு வழி சொல்வாள்;" என்றாள். அவள் பார்வையில் வினோதமான அழுத்தம் பளிச்சிட்டது.
   அதன் பிறகு அவள் பேசவில்லை. மற்றவர்கள் கோரிக்கைகளை எப்படி நிறைவேற்றுவது என்று அலசிக் கொண்டிருந்தார்கள்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   எழுச்சிக்கு முன் ஆர்வமாக எழுச்சியில் இதமாக உச்சத்தில் எரிச்சலாக இருப்பவனைக் கூடப் பெண்கள் இலட்சியம் செய்யாமல் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
   மீனா ஏரிக்கரையில் இருந்த மரத்திற்குக் கீழ் நின்று கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். கண்கள் அங்கே வேலை செய்து கொண்டு இருந்தவர்களைப் பார்த்து கொண்டிருந்தது.
   ஒவ்வொருவருடைய கால்களும் அவர்கள் இருக்கும் இடத்தில் ஊன்றி இருக்க வேண்டும். ஆனால் கண்கள் மற்ற அனைத்தையும் ஆராய வேண்டும்! அப்படித் தான் அவள் கண்களும் ஆராய முற்பட்டது. ஆனால் சிந்தனை வேறு இடத்தில் இருந்ததால் அவளுடையப் பார்வையில் விழுந்த காட்சிகள் மனத்தில் பதிவாகவில்லை.
   ஏரியைத் தூர்வாரிச் சுத்தப்படுத்தியாயிற்று. சின்னதம்பி ஏரியைத் தூர் வார மூன்று இயந்திரங்களை வாடகைக்கு எடுத்திருந்ததால் வேலை எதிர் பார்த்ததை விட சீக்கிரத்தில் முடிந்திருந்தது. ஏரியின் பக்கவாட்டுச் சுவர் பழுதாகி இருந்ததால் அதனையும் செப்பனிட்டு முடித்தாயிற்று.
   என்னத்தான் ஓர் இயந்திரம் பல பேர்கள் செய்யும் வேலையைச் செய்தாலும் ஓர் அசாதரணமான இடத்தில் ஒரு மனிதன் செய்யும் வேலையை எந்த ஒர் இயந்திரத்தாலும் செய்ய முடியாது! ஆமாம். அப்படித்தான் ஏரியின் ஒரு மூலையில் மரங்கள் சூழ்ந்திருந்தப் பகுதியில் அதனுடைய வேலையை அதனால் செய்ய முடியவில்லை. அந்த மூலையில் சேர்ந்து சரிந்திருந்த மண்ணைத் தான் இன்று வாரிக் கொண்டிருந்தார்கள்.
   ஆண்கள் மண்ணை வாரி வாரிக் கொடுக்க பெண்கள் அதைக் கொண்டு போய் ஏரிக்கரைக்கு முட்டுக் கொடுப்பது போல் கொட்டிக் கொண்டிருந்தார்கள். சில ஆண்கள் கடப்பாரையால் மண்ணைக் குத்திப் பிளந்து தோண்டி மிருதுவாக்கிக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஊர் மக்கள் அனைவருமே ஒன்று கூடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
   அனேகமாகச் இன்று சூரியன் கண்ணை மூடுவதற்குள் வேலை முடிந்துவிடும்!
   சின்னதம்பி மண்ணை அள்ளிப் போட்டு கொண்டே சிந்தனையுடன் இருந்த மீனாவைப் பார்த்தான். பிறகு அவன் பார்வை கடப்பாரையால் மண்ணைக் குத்தித் தோண்டி கொண்டிருந்த சேகரின் மேல் பதிந்தது. அவன் உடனே புரிந்து கொண்டான்.
   அதை வைதேகி கவனித்து விட்டாள்;! தெம்மாங்குப் பாடுவதில் அந்த ஊரில் அவளுக்கு நிகர் அவளே! குரல் வெங்களம் போல் ஒலிக்கும். ஆனால் படிக்காதவள். எந்தக் காரணத்தைக் கொண்டும் பாடுவாள். இதைப்பார்த்ததும் பாடாமல் விடுவாளா.....?
   கணீரென்ற குரலில் துவங்கினாள்.
  
ஆத்தூரு ஏரியிருக்க
ஏரிநிறைய தூர் இருக்க
தூரை வாரிக்கொண்டே மச்சன்
தூது சொல்லக் கூப்பிடுறானே.....
   அவள் இப்படித் தொடங்கியதும் மற்றப் பெண்கள் ஆர்வத்துடன் ராகம் பாடினார்கள்.
தானே தனே தந்தானேனே
தானே தானே தானே தந்தானேனே
தானே தனே தந்தானேனே தனே
தானே தனே தந்தானனே.....

ஆலம் மரமிருக்க
அதனருகில் மான் இருக்க
மானைப் பாத்துக் கொண்டே மச்சான்
மண்ணை அள்ளிப் போடுறானே.....

தானே தனே தந்தானேனே
தானே தானே தானே தந்தானேனே
தானே தனே தந்தானேனே தனே
தானே தனே தந்தானனே.....   

மஞ்சள் முகம் இருக்க
மருதாணி சிவந்திருக்க
மாலையிட மனம் கொண்டே மச்சான்
மீனாச்சிய பாக்குறானே......

தானே தனே தந்தானேனே
தானே தானே தானே தந்தானேனே
தானே தனே தந்தானேனே தனே
தானே தனே தந்தானனே.....   

கூட குலமிருக்க
கூட்டு சேர்ந்து நாமுழைக்க
கூடி நல்லா பேசிடுவோம்
கொஞ்சும் கிளி உனக்குத் தானே....

தானே தனே தந்தானேனே
தானே தானே தானே தந்தானேனே
தானே தனே தந்தானேனே தனே
தானே தனே தந்தானனே.....   


   சின்னதம்பி பாட்டைக் கேட்டு இலேசாகச் சிரித்துக் கொண்டான். ஆனால் மீனா....? அவள் மனம் இங்கே இல்லை. இதே வேறு நாளாக இருந்திருந்தால்..... வைதேகி பாடியதற்கு.....

சக்தீ வேலு எனக்கிருக்க
சாதி சனமும் சேர்ந்திருக்க
சம்மதிச்ச மனசுடனே மீனா
சங்கமமாக ஆயிடுவாளே.....
  
   என்று எதிர் பாட்டு பாடியிருப்பாள். ஆனால் இப்பொழுது அவள் வைதேகி பாடியதையே கேட்கவில்லையே......! பிறகு எப்படி எதிர் பாட்டு பாடுவாள்?
   காலையில் அவள் வேலைக்குக் கிளம்பம் பொழுதே சேகர் வந்தான்.
   'மீனா.... இன்னைக்கி நீ வேலைக்குப் போவவேணாம். நாம ஏரிய தூர் வாரின நிகழ்ச்சிய பேட்டிக்கான பத்திரிக்கையிலிருந்து நிருபர்கள் பத்துமணிக்கு வர்ரோம்ன்னு சொல்லி டெலிபோன் செஞ்சாங்க. அதனால அவுங்க வரும்போது நீயும் இருக்கணும்." என்றான்.
   மீனாவிற்கும் ஆசையாகத்தான் இருந்தது. தன் வேலைக்கு விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டு ஊர் வேலையை அவர்களுடன் செய்தாள். இன்றுடன் விடுப்பு முடிந்து விட்டது. ஏற்கனவே முன் அறிவிப்பு கொடுக்காமலேயே விடுப்பு எடுத்து விட்டதால் இன்று அவசியம் வேலைக்குப் போயே ஆக வேண்டும். அல்லது நேராகச் சென்று நிலைமையை எடுத்து சொல்லிவிட்டாவது வர வேண்டும். அதுதான் சரியானது என்று எண்ணினாள்.
   அவள் படிப்பதற்காக உதவி செய்து வந்த தொழில்! மற்றும் நல்ல உள்ளம் கொண்ட டாக்டர். இவர்களை அலட்சியப் படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் 'பத்து மணிக்கெல்லாம் வந்து விடுறேன்." என்று அவனிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.
   அதே போல் ஒன்பதரை மணிக்கெல்லாம் டாக்டரிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு மருத்துவமனையை விட்டுக் கிளம்பிவிட்டாள்.
   ஆனால்.....!
   பேரூந்துக்காகக் காத்திருந்து வந்த வண்டியில் ஏறினாள். நிறையக் கூட்டம்! உள்ளே கூடச் சரியாக நுழைய முடியவில்லை. கண்டெக்டர் விசில் கொடுக்க வண்டிக் கிளம்பிவிட்டது. ஓர் ஐம்பது மீட்டர் தான் சென்றிருக்கும். ஒருவன் தடத்தடவென ஓடிவந்து வண்டியில் ஏறினான்.
   அவன் ஏறிய வேகம்..... வண்டி சற்று அதிக வேகமெடுக்க ஆரம்பித்து இருந்ததால்...... சட்டென்று அவன் கால் தடுக்கித் தரையோடுத் தேய்ந்தான். ஒரு கை பேரூந்தைப் பிடித்திருந்தது. அப்பொழுது படியிலேயே நின்றிருந்த மீனா சட்டென்று அவன் கையை அழுத்திப் பிடித்துத் தூக்கினாள். அவள் இழுத்த வேகமும் அதே சமயத்தில் அவன் வண்டியில் ஏற முயற்சித்த வேகமும் ஒரே நேரத்தில் நடந்ததால்..... அவள் இழுத்த வேகத்தில் அவன் தலை வண்டியின் விளிம்பில் அழுத்தமாக இடித்து விட்டது. தலையிலிருந்து இரத்தம் கொட்டியது.
   ஆனால் மீனா அவன் கையைப் பிடித்திருக்காமல் விட்டிருந்தால் ஓடும் வண்டியின் சக்கரத்தில் சிக்கி நசுங்கி இரத்தமும் சதையும் கலந்த சேறாகியிருப்பான்.
   இதெல்லாம் ஒருசில வினாடிகளுக்குள் நடந்து முடிந்திருந்தது. அவன் தலையில் வழிந்த இரத்தத்தைப் பார்த்து கத்தியவர்களின் குரலைக் கேட்டதும் ஓட்டுநர் வண்டியை நிறுத்தினார்.
   அவன் தலை மீனாவின் மீது மோதியதால் அவள் தாவணியில் இரத்தக்கரை படிந்து விட்டது. அடிப்பட்டவன் கொஞ்சம் கொஞ்சமாகச் சுயநினைவை இழந்து கொண்டிருந்தான்.
   வண்டி அருகில் இருந்த மீனா வேலை செய்யும் மருத்துவமனையில் நின்றது. மருத்துவமனை ஊழியர்கள் வந்து அவனைக் தூக்கிச் செல்ல மீனாவும் அங்கேயே இறங்கிக் கொண்டான். பிறகு அவளே அவனுடன் இருந்து உதவி செய்தாள்.
   அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களுக்குத் தன்னுடைய அவசியமான சந்தோசங்கள் கூட அனாவசியமாகப் படும்.
   அவனுக்குத் தலையில் தையல் போட்டு கட்டுப் போடப் பட்டது. அவள் அங்கேயே தன் தாவணியைக் கசக்கிப் பிழிந்து மீண்டும் கட்டிக் கொண்டாள்.
   அவன் பதினொரு மணியளவில் கண்விழித்தான் அ;வன்  கொடுத்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு நிலைமையைச் சொன்னாள். அடுத்த அரைமணி நேரத்தில் அவனைச் சேர்ந்தவர்கள் அங்கே வந்து விட்டார்கள்!
   ஏழு ஆண்கள்! அதன் தலைவனாக மீனா முதல் நாள் சந்தித்தாளே.... ஒரு மனித மிருகம்....... அவன் தான்!!!
   அன்று அவனது காம வெறிக்குப் பயந்து ஓடியதை இன்று நினைத்தாலும் உடம்பு ஆடியது.
   வந்தவன் கட்டிலில் படுத்திருந்தசனைப் பார்த்தானோ இல்லையோ.... இவளைப் பார்த்ததும் ஆச்சர்யத்துடன் முறைத்தான். அவனுடைய பார்வைக்கு அஞ்சியவளாக நகரப் போனவளைச் சட்டென்று கையைப் பிடித்துக் கொண்டான்.
   'டேய்.... லட்சுமணா... ஒனக்கு அடிபட்டதுக்கு இவள் தான் காரணமா சொல்லு.....? சொல்லுடா.... " கட்டுடன் படுத்திருந்தவனைப் பார்த்துக் கோபமாகக் கேட்டான்.
   இவன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.
   'ஐயையோ.... இவயில்ல..... இவ என்னைய காப்பாத்தினவ." என்றான் அவசரமாக.
   'யாரு....? இவளா.....? ஆடு பக! குட்டி ஒறவு கொண்டாட வருதா....?"
   தாடியைச் சொரிந்து கொண்டே ஏளனமாகக் கேட்டான்;.
   'தோப்பாரு.... நா ஆடுமில்ல. ஒனக்கு பகையுமில்ல. ஒதவி செய்ய வந்ததால நா ஒனக்கு ஒறவாயிட முடியாது. கையை உடு. நா சக்திவேலுவுக்கு வேண்டியப் பொண்ணு" என்றாள்.
   எங்கே யார் பெயரைச் சொன்னால் காரியம் நடக்கும் என்று நினைத்தவளாக. ஆனால் அவள் நினைப்புத் தவறானது. அவன் முன்; போல இவள் கையை விட வில்லை. மாறாகச் சிரித்தான் குரூரமாக!
   'ஏய்.... ஒனக்கும் சக்திவேலுக்கும் என்ன ஒறவுன்னு எனக்கு தெரியும்டீ.... அனாத நாயே..... அன்னைக்கி சத்திவேலுப் பேரச் சொல்லித்தான எங்கிட்டருந்து தப்பிச்ச? இன்னிக்கி நீயாவே மாட்டிக்கினப் பாத்தியா....? இந்த வேந்தன் எந்த மானையும் உட்டுவச்சதில்ல. என்னோட வேட்டைக்கி இன்னிக்கி நீ தான் பலி......." பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான்.
   அதற்குள் கட்டுடன் படுத்திருந்தவன் இறங்கி வந்து அவன் கையைத் தட்டி விட்டான்.
   'என்ன நீ..... நா அடுத்தவன் கிட்ட அடிவாங்கினு ஓடியாந்து இப்டி அடிபட்டு கெடக்குறன். நீ என்னையப் பாக்காம மான் வேட்டைக்கிப் போறியா.....? உடு அவளை. இந்தம்மாப் பொண்ணு.... நீ போ." என்றான் குரலில் சற்று அழுத்தமாக.
   அவன் அப்படிச் சொன்னதும் இவன் அவள் கையை விட்டதுதான் தாமதம்...... மீனா சட்டென்று அந்த இடத்தைவிட்டு ஓடி வந்து விட்டாள். இப்பொழுதும் அதை நினைத்துக் கொண்டு தான் குழம்பிப்போய் இருந்தாள். அதனால் தான் அவளுக்கு மற்றவர்கள் செய்து கொண்டிருந்த வேலையில் மனம் லாயிக்கவில்லை.
   'மீனா...." சேகர் கூப்பிட்டான். 'ஏன் என்னவோ மாதிரி இருக்கிற? " கேட்டான்.
   'ஒன்னுமில்ல." பொய்யாகச் சொன்னாள். நிஜத்தைச் சொன்னால் ;வேலைக்குப் போற இடத்துல பிரச்சனைங்க வரும்தான். நீ இனிமேல் வேலைக்கு போக வேண்டாம்; ; என்று கட்டளைப் போட்டாலும் போடுவான். அன்புடன் பழகினால் நம்மீது இருக்கும் அக்கரையில் சற்று உரிமையும் ஏற்படுத்திக் கொண்டு விட முடியுமே......
   'நீ ஒன்னுமில்லன்னாலும்...... ஏதோ ஒன்று இருக்குதுன்னு தான் அர்த்தம். சொல்லு என்ன ஆச்சி? காலையில பத்துமணிக்கெல்லாம் வந்துடுறேன்னு சொல்லிட்டு போனே..... ஆனா இப்போத்தான் வந்தே.... வந்ததுலேர்ந்து ஒரே சோகமாவேற இருக்கிற. என்னதான் நடந்துச்சி?"
   'ஒன்னுமில்ல சேகர்" சிரிப்பைக் கட்டாயமாக வரவழைத்துக் கொண்டு சொன்னாள்.
   'அப்போ வா.... வந்து நீயும் மண்ணு அள்ளு...." அவன் கூப்பிட பின்னால் சென்றாள்.
   வேலையில் மூழ்கியதும் மனம் இலேசாகியது. நடந்து போன கசப்பான நிகழ்ச்சியை நினைத்தே...... தற்போதைய இன்பத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தது அவளுக்கே புரிந்தது.
   'க்ணீங்"
   காது சவ்வுக் கிழிவது போன்ற ஓர் ஒலி!!!
   அனைவரும் ஓசை வந்த திசையை நோக்கினார்கள். சேகர் போட்டுவிட்டுச் சென்ற கடப்பாரையால் சின்னதம்பி மண்ணை ஓங்கிக் குத்த அங்கிருந்து வந்தது தான் இந்த ஓசை!!!!!!

                            (தொடரும்)

Friday, 20 April 2012

போகப் போகத் தெரியும் - 8


                                              

   அன்று ஞாயற்றுக்கிழமை. இந்த வாரம் மீனாவிற்கு ஓய்வு. அவள் விடுமுறை நாட்களில் அந்த ஊர் சிறுப்பிள்ளைகளோடு ஏதாவது விளையாடுவது வழக்கம். ஆனால் இன்று இளைஞர்கள் பன்னிரண்டு பேராகச் சேர்ந்து அணிக்கு ஆறு ஆறுபேராகப் பிரிந்து கபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
   ஆனால் அதில் அதிசயமாகச் சின்னதம்பி விளையாடவில்லை. அவர்களின் விளையாட்டை ஊர் மக்களுடன் அவனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மீனாவும் விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் சின்னதம்பியுடைய கைபோன் கதறவும்..... அதில் பேசிக் கொண்டே தன் வண்டியைக் கிளப்பிக் கொண்டு போனான்.
   அவன் போனதும் விளையாட்டை மும்முரமாகக் கவனித்தாள். ஒருவர் ஒரு அணியில் தோல்வியுற்றால் இன்னொரு அணியில் ஒருவர் தோற்றதும் இந்த அணியில் தோற்றவர் திரும்பவும் விளையாட வந்து விடுகிறார். இப்படி விளையாட்டு நீண்டு கொண்டே போனது.
   மீனா சேகர் இருந்த அணிக்குச் சென்றாள். சேகரிடம் 'சேகர் உன் குருப்புலயிருந்து ரெண்டு பேரை எடுத்திட்டு என்னை சேத்துக்கோ. நான் நிச்சயம் ஜெயிச்சிக் காட்டுறேன். என்றாள்.
   சேகர் சிரித்தான். 'என்ன மீனா வெளையாடுறீயா....? இங்க ஒவ்வொருத்தனும் நல்லா கடோர்கஜன் மாதிரி இருக்கானுங்க. நீ அவங்களுக்கு ஒரு தூசு மாதிரி." என்றான்.
   'நீ என்னை சேத்துப் பாரு. அப்புறம் எப்படி ஜெயிச்சிக் காட்டுறேன்னு ஒனக்கே தெரியும்." என்றாள் சவாலாக.
   ஒவ்வொருத்தருடைய சொந்த எண்ணத்தை வைத்துத் தான் வெற்றி எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று அளக்க முடியும். இங்கே மீனா தன்னை நன்றாக அளந்து வைத்திருந்தாள்.
   சேகர் யோசனையுடன் 'சரி" என்று சொல்ல அவன் அணியிலிருந்து இரண்டு பேர் விலகினார்கள். மீனா சேகர் அணியில் சேர்ந்தாள். எதிரணியில் இவளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். மீனா இப்பொழுது போக வேண்டிய முறை!
   அவள் நடுக்கோட்டின் அருகில் வந்து நின்று கொண்டாள். குரலைக் கணைத்துவிட்டுச் சொன்னாள்.
   'இதோ பாருங்க. இந்த ஊருல யாருக்கு சக்திவேலோட பொண்டாட்டிக் கையைப் புடிச்சி இழுக்கிற தைரியம் இருக்குது. அவங்களை நானும் பாக்குறேன்....." என்று சொல்லிவிட்டுக் கபடி கபடி என்று சொல்லிக் கொண்டே முன்னே நடந்தாள்.
   அங்கே அந்த அணியில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் கூடி இருந்தவர்களும் இவள் சொன்னதைக் கேட்டு வாயடைத்துப் போய் நின்றிருந்தார்கள்.


   புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிக் காண்பதில்லை. வெற்றிப்பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை...... என்ற கண்ணதாசனின் வார்த்தைகளைப் பொய்யாக்க முயற்சித்தாள் மீனா. முடியுமா....?
   மீனா சேகர் அணியில் சேர்ந்துவிட்டு ‘இந்த ஊரில் சக்திவேல் பொண்டாட்டிக் கையைப் பிடிச்சி இழுக்கிற தைரியம் யாருக்கு இருக்குது பாக்கலாம்’ என்று சொல்லிவிட்டு விளையாடத் துவங்கினாள்.
   முதல் சுற்றில் இரண்டு பேரைத் தொட்டுவிட்டு ஓடி வந்தாள். இரண்டாவது சுற்றிலும் அவளே போய் இன்னும் இரண்டு பேரைத் தோற்கடித்தாள். எதிரணியில் உள்ளவர்கள் அவளைப் பிடித்து இழுக்கவில்லை என்றாலும் அவள் கை தங்கள் மீது படாதவாறு நகர்ந்து ஓடினார்கள்.
   இன்னும் எதிரணியில் இரண்டு பேர் தான்!
   பலமானவர்களைக் கூடப் புத்திசாலித் தனத்தால் தோற்கடித்து விடலாம். ஆனால் அந்த பலமானவர்களின் பின்னால் ஒரு புத்திசாலி இருந்தால்.....
   மூன்றாவது சுற்றில் மீனா போவதற்கு முயற்சிப்பதற்குள் அந்த இருவரையும் விலக்கிவிட்டு ஒருவனாக வந்து நின்றான் சின்னதம்பி!!!
   மீனாவிற்கு அதிர்ச்சி! இவன் இருந்தால் ஏதாவது பிரட்சனைப் பண்ணுவான் என்று நினைத்தே..... அவன் வெளியே போய் விட்டான் என்று நன்கு தெரிந்து கொண்ட பிறகு தான் விளையாட முன் வந்தாள்! ஆனால்..... இவன் எப்படி இங்கே....?
   அவன் வந்ததும் கூட்டம் கை தட்டியது. அவளுக்கு என்னவோ போல் இருந்தது. போகலாமா....? வேண்டாமா....? ஆனால் போகாமல் இருக்க முடியாது.
   ‘ஏன் இவனும் இந்த ஊர்க்காரன் தானே? இவனுக்கு மட்டும் சக்திவேல் மீது மரியாதை இருக்காதா...?”
   பேசாமல் போய்விட்டு அவனைத் தொடாமலேயே வந்து விடலாம் என்ற எண்ணத்தில் கபடி கபடி என்று சொல்லிக் கொண்டே எதிரணியில் நுழைந்தாள். அவள் உள்ளே நுழைந்தது தான் தாமதம். அவன் சட்டென்று தாவி அவள் கையைப் பிடித்துக் கொண்டான்!
   அவள் தன் கையை அவனிடமிருந்து விடுவிக்க எவ்வளவோ முயற்சித்தாள். நடுக்கோட்டை எப்படியாவது தொட்டுவிட வேண்டும்.... ம்..... எந்த முயற்சியும் பலிக்கவில்லை. அவன் அவள் கையைப் பிடித்தது தான். அவனிடம் எந்த ஓர் அசைவுமில்லை. கை இரும்புப் பிடியாகப் பிடித்திருந்தது.
   அவளுக்கு ஓர் அளவுக்கு மேல் மூச்சுப் பிடிக்க முடியவில்லை. அவன் முன் தோற்று நின்றாள்! அதன் பிறகு தான் அவன் அவள் கையை விட்டான். அவன் பிடித்திருந்த கை மணிக்கட்டு சிவந்து வலித்தது. கையை உதறிக்கொண்டாள். அவன் எதுவும் பேசாமலேயே அவளைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். மீனாவிற்கு ஆத்திரமாக வந்தது.
   'ஏன்... உனக்கு மட்டும் சக்திவேல் மேல மறியாதை இல்லையா....?" கோபமாக அவனை முறைத்தபடி கேட்டாள்.
   'ஏனில்ல? நிறைய இருக்குது. ஆனால் அவரை மதிக்காதவங்களை நானும் மதிக்க மாட்டேன்." பொறுமையாகப் பதில் சொன்னான்.
   'நான் எப்போ அவரை மதிக்காம இருந்தேன்.....? "
   'சக்திவேலைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டு அன்னைக்கி நீ என்னைக் கட்டிப்புடிக்கல...? அவருக்கு நீ துரோகம் செய்யல.....?"
   அவன் அப்படிச் சொன்னதும் கூட்டத்திலிருந்தவர்கள் இவளை விசமமாகப் பார்த்தார்கள். சேகர் 'ஓ......" என்று ஆச்சர்யக் குரல் எழுப்பினான். மீனாவிற்கு முகமெல்லாம் சிவந்து போய் விட்டது. கோபத்தில்! என்ன மனுஷன் இவன்.....?
   'அது....அது.... பாம்பைப் பாத்ததால பயந்து.... அப்படி....."
   வார்த்தைகள் கோர்வையாக வரவில்லை. பயமா....? வெட்கமா....?
   'நீ பாம்பைப் பாத்து பயந்து அந்தக் கல்லுன்னு நெனச்சி என்னைக் கட்டிப்புடிச்சே... இன்னைக்கி என்னோட பிரண்சை தோக்கடிக்க வந்த எதிரின்னு நெனச்சி நான் உன் கையைப் புடிச்சி இழுத்தேன். அவ்வளவுத் தான்."
   அவன் சிரித்து கொண்டே சொன்னான். மீனா அவனை முறைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். கணேசனின் தாத்தா மீனாவைப் பார்த்து கேட்டார்.
   'ஏன் மீனா.... பாம்பை பாத்துத்தான் தம்பியக் கட்டிப்புடிச்சியா....? இதே நான் அங்க இருந்திருந்தா என்னை கட்டிப்புடிச்சி இருப்பியா....?"
   பல் இல்லாத கிழவருக்கு இன்னும் குசும்பு புத்தி போகவில்லை. அங்கே எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.
   'இந்த மீனா வீரனைத்தான் கட்டிப்புடிப்பா. உன்ன மாதிரி வெலவெலத்தவனை இல்ல."
   கோபத்தில் என்ன பேசுகின்றோம் என்று கூட யோசிக்காமல் மனத்தில் தோன்றியதை வார்த்தையால் கொட்டிவிட்டு நடந்தாள். பிறகு பலமுறை யோசித்தாள். எப்படி அப்படியானதொரு வார்த்தை வந்தது என்று.....
   ;இது தவறு இல்லையே..... ஒரு வீரனைத்தானே வீரன் என்று சொன்னோம். ஆனால் கட்டிப்பிடிப்பேன்னு சொல்லியிருக்கக்கூடாது...... ; மனத்தைத் தேற்றமுடியாமல் தவித்தாள்.
  
    ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

  
   இன்னும் சரியாக இருட்டவில்லை. பூமி பொன்வண்ண உடையைக் கலைந்து சாம்பல் நிற உடையை அணிந்து கொண்டாள்.
   ஆத்தூர்ப் பள்ளிக்கூட வகுப்பறை ஒன்றில் விளக்கு எறிந்து கொண்டிருந்தது. அப்படி இருந்தால் அவ்வூர் இளைஞர்கள் அங்கே தான் இருப்பார்கள் என்பதை மீனா முன்பே அறிந்திருந்தாள்.
   வகுப்பறையில் நுழைந்தாள். அங்கே அந்த ஆறு பேருடன் சின்னதம்பியும் இருந்தான். இவள் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
   'உங்கக் குருப்புல என்னையும் ஒரு சினேகிதியா சேத்துக்குவிங்களா....?" கேட்டுவிட்டுச் சினேகிதமாகச் சிரித்தாள்.
   'ஏன் ஒனக்குத்தான் ஊருல நெறைய சின்னப்பசங்க...... ஸ்கூல்ல நெறைய பாய்ஸ்ன்னு இருக்கிறாங்களே......" சின்னதம்பி தான் சொன்னான்.
   'அவங்கல்லாம் படிக்கவும் வெளையாடவும் மட்டும் தான். நான் இந்த ஊருலேயே இருக்கப்போறவ. இந்த ஊரு முன்னேத்தத்துக்கு நானும் உங்கக்கூடச் சேர்ந்து ஒதவுணும். அதனால தான் உங்க கூட என்னையும் ஒருத்தியா ஏத்துக்கோங்க." கெஞ்சலாகக் கேட்டாள். 
   சின்னதம்பி தலையாட்ட சேகர் 'சரி மீனா" என்றான். மீனா முகமலர்ந்தாள்.
   'என்னைப் பத்தி உங்க எல்லாருக்கும் தெரியும். அதே மாதிரி உங்க ஆறு பேரையும் எனக்கு ஓரளவு தெரியும். நீங்கல்லாம் காலேஜில வேறவேற கோர்ஸ் படிக்கிற ஸ்டூடண்டு. இதே ஊருல பொறந்து வளந்தவங்க. சக்திவேல் கூடச் சேர்ந்து ஊர் முன்னேத்தத்துக்கு ஒழைக்கிறவங்க. போதுமா.....?" கேட்டாள்.
   'ம்..... எங்கள பத்தி நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்கிறே.... ஆச்சர்யமா இருக்குது." சேகர் சொன்னான்.
   'இதுல ஆச்சர்யப் பட என்ன இருக்குது. உங்க ஆறு பேரையும் இந்த ஊரே பேசுதே... ஆனா.... இவரைப்பத்தித்தான் யாருமே எதுவுமே சொல்ல மாட்டேங்கிறாங்க....." சின்னதம்பியைப் பார்த்து சொன்னாள்.
   'என்ன தெரிஞ்சிக்கணும் ஒனக்கு....?"
   அவன் கோபமாகக் கேட்கவும் 'ஒன்னும் வேண்டாம்" என்று அவனிடம் முறைப்பாகச் சொல்லிவிட்டுச் சேகரிடம் திரும்பினாள்.
   'சேகர் இனிமே நாம எல்லோரும் ப்ரெண்ஸ். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. நல்ல நட்பு என்பது பாத்துப் பேசிப் பழகிய பின் வருவது மட்டும் கிடையாது. பாத்தவுடனே மனசால நல்ல அபிப்பிராயம் வந்தாலும் அதுவும் நல்ல நட்புத்தானே..... உங்கள நான் ப்ரெண்ஸா அடஞ்சதுல ரொம்ப சந்தோசம்." சொல்லிக் கொண்டே ஒவ்வொருவர் கையையும் பிடித்துக் குலுக்கினாள்.
   சின்னதம்பியிடம் வந்து புன்னகையுடன் கையை நீட்டினாள். அவன் இவளிடம் கையைக் கொடுப்பது போல் கொண்டு வந்து சட்டென்று  இழுத்து கொண்டான். மீனா முறைத்தாள். அதில் ஏமாற்றமும் கலந்திருந்தது.
   'மீனா.... உங்கூட எனக்கு ப்ரெண்ஷிப் வச்சிக்கப் பிடிக்கல. நீ ரொம்பக் கெட்டப்பொண்ணு. உன்கூட ப்ரெண்ஷிப் வச்சிக்கினா என்னோட அம்மா என்னை திட்டுவாங்க." முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்னான்.
   'என்ன... கெட்ட பொண்ணா....? எதை வச்சிச் சொல்லுற......?"
   'ம்..... இவ்வளவு பெரிய பொண்ணாயிருந்தாலும் பாவாடைச் சட்டைப் போடுறியே... அதுக்குத்தான்."
   அவன் அப்படிச் சொன்னதும் கோபமாக அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள்;;.
   'பாவாடை சட்டை போட்டா கெட்ட பொண்ணு கெடையாது. அதைக்கூடப் போடலைன்னாத்தான் கெட்ட பெண்" என்று.
   அவள் மிக மெதுவாகவும் அதே சமயம் சற்று அழுத்தமாகவும் சொன்னதும் அவன் தன்னை மறந்து சிரித்தான்.
   மீனா திரும்பி தன் நண்பர்களைப் பார்த்தாள்;.
   'தோ பாருங்க. நான் உங்க எல்லாருக்கும் ப்ரெண்டு. ஆனா இவருக்கு இல்ல. உங்கக் கூட ஏதாவது பேசணுமின்னா இவர் இல்லாத சமயமா வந்து பேசுறேன்."
   சின்னதம்பி சிரித்துக் கொண்டே அவ்விடத்தைவிட்டு வெளியேறினான். அவன் போனதும் சேகரிடம் 'சேகர் நம்ம ஊருல நாளைக்குக் கூட்டம் கூடப்போவுது இல்லையா....? அது எத்தனை மணிக்கி....?" கேட்டாள்.
   'சாய்ந்தரம் ஆறுமணிக்க மேல. ஏன்.....?"
   'அந்தக் கூட்டத்துக்குச் சக்திவேல் வருவாரா....?"
   'அவர் வரலைன்னாலும் நம்ம சின்னத்தம்பி அண்ணன் நிச்சயமா அவருக்குப் பதிலா வருவாரு."
   'நான் அந்தக் கூட்டத்துல கலந்துக்கணும். எனக்கு ஒரு உதவி செய்வியா....?"
   'என்ன?"
   'எனக்கு வேலை ஆறு மணிக்குத் தான் முடியும். அப்பறம் பஸ் புடிச்சி வர ஏழுக்கு மேல ஆயிடும். நீயாவது வேற யாராவது என்ன அழைச்சிக்கினுப் போவ வருவீங்களா....?"
   'சரி நானே வர்றேன். ஆனா மீனா... நீ எதுக்கு வேலைக்கு போவணும்? நீ வேலைக்கிப் போறது எங்க யாருக்குமே புடிக்கலை தெரியுமா...."
   'என்ன சேகர் பேசுற.....? நான் வேலைக்கு போவலன்னா என்னோட தேவைங்கள யார் வாங்கித் தருவாங்க....? உங்கள மாதிரி அப்பா அம்மா சொத்துன்னு இருக்கிறவளா நான்....? நான் ஒரு அனாத. எனக்கு நானேதான் ஒதவி செஞ்சிக்கணும்."
   'மீனா.... இனிமே நீ அனாதைன்னு சொல்லக்கூடாது. உன்னுடைய ப்ரெண்ஸ் நாங்க ஆறு பேருமே உன்னோட ஒறவுத்தான். அதனால இனிமே நீ அனாதைன்னு சொல்லவே கூடாது." என்றான் கனிவானக் குரலில்.
   'சரி சேகர்" கண்கள் கலங்கத் தலையாட்டினாள்.
   'மீனா இனிமே நீ வேலைக்குப் போவக்கூடாது. உனக்கு வேண்டியதை எல்லாத்தையும் நாங்க செய்யிறோம்." மாதவன் சொன்னான்.
   'ரொம்பத் தேங்ஸ் மாதவா.... ஆனா வேணாம்.... நீங்க ஒதவி செய்யிறத நிறுத்திட்டா நம்ம நட்பே கெட்டுப் போயிடும். நான் எப்போதும் போல வேலைக்குப் போறேன். இதை நான் வேலையா நெனச்சி செய்யல. முடியாதவங்களுக்கு நான் உதவி செய்யிறேன்னுத் தான் நெனைக்கிறேன். அதுல கொஞ்சம் வருமானமும் வருது. என்னோட கால்ல நிக்கிறதால நான் தைரியமா இருக்கேன். என்னை இப்படியே விட்டுடுங்க ப்ளீஸ்." என்றாள்.
   அவள் முடிவில் முடிவாக இருந்தாள்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   மீனாவும் சேகரும் அந்தக் கூட்டத்துக்கு வந்து சேர்ந்த பொழுது மணி ஏழடிக்க சில நிமிடங்கள்! மீனா இந்நேரம் எல்லாம் பேசி முடிவெடுத்து இருப்பார்கள் என்றே நினைத்தாள்.
   தான் காலம் தவறி வந்ததால் மௌனமாகவே அமர்ந்திருந்தாள். காலம் தவறி வருபவர்களும் ஒரு வகையில் குற்றவாளிகள் தான்!
   இருந்தாலும் அவள் மனம் உருத்தியது.  அவள் சொல்ல வந்த விசயம் நடக்காமல் போய்விடுமோ என்று! எப்பொழுதுமே...ஒரு காரியத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டால் அந்தக் காரியம் பிறகு கடினமாகிவிடும். ஆனால் ஒரு கடினமான காரியத்தைத் தள்ளிப் போட்டால்.....அது நிச்சயம் முடியாத காரியமாகிவிடும்..... என்ன செய்யலாம்;;;......? என்ற குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள்.
   ஆனால் அவளை அதிகம் குழப்பவிடவில்லை அங்கே தலைமை வரிசையில் அமர்ந்திருந்த சின்னதம்பி.
   முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்த கூட்டத்தில் சின்னதம்பி டாக்டர் கணேசன் இன்னும் ஊர்ப் பெரியவர்கள் இரண்டு பேர் தலைமையிடத்தில் அமர்ந்திருந்தார்கள். அங்கிருந்த சின்னதம்பி தான் சொன்னான
   'மீனா.... இந்த வருஷம் சக்திவேல் தர்ர பணத்தை வச்சி  ரொம்ப வருஷமா ஓடாத நம்ம ஊர் தேரைப் புதுப்பிச்சி ஓட்டலாம்ன்னு முடிவெடுத்து இருக்கிறோம். இதுல உன் கருத்து எதாவது இருந்த நீ சொல்லலாம்......"
   'இந்த முடிவுல எனக்கு உடன்பாடு இல்லைங்க."
   அழுத்தமாகச் சொன்ன மீனாவை எல்லோரும் பார்த்தார்கள்.
   'காரணம்....?"
   'போன வருஷம் தவிர  அதுக்கு முன் போன நாலு வருஷமும் சக்திவேல் கொடுத்த பணத்தைக் கோயிலுக்காகவே செலவழிச்சி இருக்கீங்க. இப்படியெல்லாம் செலவழுச்சி ஆடித் திருவிழாவ நல்லா சிறப்பா கொண்டாடி இருக்கிறீங்க. அதுல வந்த வருமானத்தை வச்சே கோயிலோட தேவைகளப் பூர்த்திக் செஞ்சிடலாம். கடவுள் நம்மையெல்லாம் காப்பவர் தான். ஆனா கடவுளுக்காகவே நம்முடைய தேவைங்க எல்லாத்தையும் நிகாரிச்சிட்டா.... நம்முடைய தேவைகளுக்குக் காணாத கடவுளிடம் கையேந்த வேண்டியது தான்."
   கூட்டம் சிந்தனையுடன் அவளைப் பார்த்தது.
   'நமக்கு இப்போ என்ன தேவையின்னு எதிர் பார்க்கிறே.....?" கணேசன் கேட்டான்.
   'ஒரு ஆம்புலன்ஸ்!"
   'ஆம்புலன்ஸா......?"
   'ஆமாம். நம்ம ஊருல ஒரு பெரிய டாக்கர் இருக்கார். அவர் நம்ம ஊர் மக்களோட வியாதியப் பாத்து மருந்துக்குடுத்துக் கவனிக்கிறார். ஆனா ஏதாவது அவசரமான பெரிய பிரச்சனைகளுக்கு நாம பக்கத்துல இருக்கிற பெரிய ஊர்களுக்குத் தான் போவவேண்டி இருக்குது. அன்னைக்குப் பாருங்க. மாடு முட்டின மாடசாமி. அதுக்கு முன்னால மாரடைப்பு வந்து செத்துப்போன வீராசாமி.  மாலதியோட பிரசவ வேதனை. அதுக்கு முன்னாடி கெணத்துல விழுந்த கொழந்தயை காப்பாத்த முடியாத வேதனை....
   இப்படிப் பெரிய பிரச்சனைகளும் இருக்குது. இப்படியான அவசரத் தேவைக்கு நமக்கு அவசியமா ஒரு வண்டி தேவை. அது முழுக்க முழுக்க மருத்துவத்துக்கு மட்டும் உதவுற வண்டியா இருக்கணும். ஆம்புலன்ஸ்ன்னா அதிக செலவு. அதனால நோயாளி படுத்துக்கினே போற மாதிரி நல்ல ஓட்டத்துல இருக்கிற வேன் போதும். இது தான் இப்போது நம்முடையத் தேவை." சொல்லிவிட்டு அமர்ந்தாள்.
   'இந்த கோரிக்கையை நான் ஆமோதிக்கிறேன்." டாக்டர் மகேந்திரன் கையை உயர்த்திச் சொன்னார்.
   'சரி. வேற யார்யாரெல்லாம் இந்தக் கோரிக்கையை ஆதரிக்கிறீங்க.....?" சின்னதம்பி கேட்டான்.
   கூட்டத்தில் இருந்த அனைவருமே கையை உயர்த்தினார்கள்.
   சின்னதம்பி அனைவரையும் பார்த்தான். சரியான தலைவர்கள் இல்லை எனறால் மனிதர்கள் தானாகவே சிந்திக்க மாட்டார்களா.....? அல்லது சிந்திப்பது தலைவனின் வேலை. அதைச் செயல் படுத்துவதே தங்களுடைய கடமை என்று நினைத்து விடுவார்களா....?
   மீனாவைப் பார்த்தான். அவள் வேறு ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தாள். சின்னதம்பி கூட்டத்தைப் பார்த்து சொன்னான்.
   'சரி. இந்த வருஷம் இந்தக் கோரிக்கையையும் நிறைவேத்திடலாம். கோயில் தேர் புதுப்பிக்க வேண்டிய செலவை கோயில் நிர்வாகமே ஏத்துக்கொள்ளட்டும். என்ன சாஸ்த்திரி சொல்லுறீங்க....?"
   சாஸ்த்திரி எழுந்து நின்றார். கோவில் பொறுப்பு முழுவதும் அவரிடம் தான் இருந்தது.
   'நல்லது தம்பி. ஆனா... இருக்கும் தொகை தேரைப் புதுப்பிக்க போதுமானதாக இருக்குமான்னுத் தான் தெரியல." என்றார்.
   'முதல்ல இருக்கிறதைக்கொண்டு தொடங்குங்க. மேற்கொண்டு தேவைப்பட்டால் ஊருல கலேக்ஷன் பண்ணிக்கலாம்." கணேசன் சொன்னான்.
   'தேவையில்லை."
   குரல் வந்த திசையை நோக்கி எல்லோரும் பார்த்தார்கள். அப்படி அழுத்தமாகச் சொன்னது மீனா தான்!
   அவளின் முகம் சிந்தனையால் சிவந்து போய் இருந்தது. ஏதோ ஆழமான யோசனைக்கு நடுவில் வந்து விழுந்திருக்க வேண்டும் அந்த வார்த்தை!
   'ஏன் தேவையில்லை......?" சின்னதம்பி கேட்டான்.
   'தேவைப்படாது." கண்களை விரித்துக் குரலை அழுத்திச் சொன்னாள் மீனா.
                          

                              (தொடரும்)

  

Thursday, 12 April 2012

போகப் போகத் தெரியும் 7


தொடரகதை பாகம் - 7

     பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் என்பார்கள். ஆனால் பயம் வந்துவிட்டால்......!
    பாம்பிற்குப் பயந்து என்ன செய்வது என்று அறியாமல் அருகில் இருந்த அவனைக் கட்டிப்பிடித்தாள் மீனா....! ஆனால் அவனோ.... ‘சக்திவேலைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டு.... என்னை இப்படி கட்டிப்புடிச்சியே.... இது உனக்கே அசிங்கமா இல்லையா’  என்று கேட்டான்.
    உண்மையில் அவளுடைய செயல் அவளுக்கே வெட்கமாகவும் அசிங்கமாகவும் இருந்தாலும் அதை முகம் வெளியே காட்டிக் கொள்ள மறுத்தது.
    'தோ.. பாருங்க நான் ஒன்னும் உங்கள ஆசையா கட்டிப்புடிக்கல. பாம்புக்குப் பயந்துத்தான் அப்படி நடந்துக்கினேன். அதுவும் அதோ தெரியுதே....கொடிமரம்! அதே மாதிரியான கல்லுன்னு நெனச்சித் தான் கட்டிப்புடிச்சேன்." சற்றுக் கோபமான குரலாகச் சொன்னள்.
    'ஓ.....கோயில் கொடிமரம்ன்னு நெனச்சியா....?" அவன் அவளைப் பார்த்து ஏளனமாகச் சொல்லிச் சிரித்தான்.
    'ஏன்.... அதுக்கென்ன...?"
    'இல்ல.... எங்க ஊரு பொண்ணுங்க கொடிமரத்தைக் கட்டிப் புடிச்சி விளையாடினா..... அவளுக்குக் கல்யாண ஆச வந்துடுச்சின்னு சொல்லுவாங்க." அவன் மேலும் சிரித்தான்.
    'ஏன்..... இந்த ஊருல பொண்ணுங்க கட்டிப் புடிக்க ஆம்பளைங்களே இல்லியா....?"
    அவள் சொன்னதைக் கேட்டதும் அவன் சட்டென்று சிரிப்பதை நிறுத்திவிட்டு முறைத்தான். மீனா அவனை அலட்சியமாகப் பார்த்தாள்.
    'இன்னைக்கு நீ நடந்துக்கின மொறைக்கு நானும் என்னோட ஆம்பளத்தன்மைய காட்டியிருக்க வேணும். உன் திமிரு அடங்கியிருக்கும். என்ன செய்யிறது? இந்த ஊரு ஆம்பளைங்க எல்லாருமே பொண்ணுங்கள மதிச்சி நடக்கிறதால ஒரு சில நேரத்துல இப்படி அவமானப் படுறதும் நேருது." கோபமாகப் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான்.
    மீனா அவன் வார்த்தைக்குப் பதில் பேசாமல் நின்றிருந்தாள். அவனே சற்றுப் பொறுத்துச் சொன்னான்.
    'மீனா நீ வேணுமின்னா என்னோட உடம்ப அந்தக் கல்லுக்குச் சமமா நெனச்சியிருக்கலாம். ஆனா நா கல்லு கெடையாது. உணர்ச்சி உள்ள மனுஷன். உன்னையும் நான் ஜடப்போருலா நெனைக்கல. சக்திவேல் சொன்னது போல ;மாறுவது தானே மனம்; ;உன் மனசு மாறுச்சின்னா அதுல இருக்கிற மொதோ ஆண் நானாத்தான் இருக்க முடியும். என்னை நீ மறக்கவே முடியாது."
    சொல்லிவிட்டு வண்டியை வேகமாகக் கிளப்பிக் கொண்டு போனான். மீனா அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனம் சஞ்சலம் அடையும் பொழுது அதை அடக்கி ஆள்பவனை ஞானின்னு சொல்லலாம். ஆனால் அதையேச் சவாலாகக் கூறுபவனை... என்ன என்று சொல்வது?
    இருந்தாலும் அவன்மீது மதிப்புச் சற்று அதிகமாகியது. எந்த ஒரு மனிதனும் பெரிய பெரிய காரியங்கள் செய்து மதிப்பைப் பெற்றுவிடுவது இல்லை. ரொம்ப சிறிய காரியத்தை மிகச் சரியாக நல்ல முறையில் செய்து விட்டாலே மிகச் சிறந்த மதிப்பைப் பெற்றுவிடுகிறார்கள்.
    மீனா இப்பொழுது அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள்.
    அவளால் அந்த இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. கண்களை மூடினால் அவன் தான் வந்து நின்று சிரித்தான். அவன் பேசிய வார்த்தைகள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.
    மீனா யோசித்தாள்! தனது பருவ வயது தன்னுடைய லட்சியங்களை அடிமை படுத்திவிடுமோ...... என்ற பயம் மனத்தில் ஒட்டிக் கொண்டது.
    மனத்தில் பயம் என்று வந்தாலே ஏதோ தவறு நடந்திருக்கிறது  அதற்குக் காரணம் தான்தான் என்ற எண்ணம் பயத்தை மேலும் பயமுறுத்தியது.
    இனி இங்கிருக்க வேண்டாம். விடுமுறையில் ஒரு வாரமாவது உன் அம்மாவுடன் சந்தோசமாக இருந்து விட்டு வேலைக்கு வந்தால் போதும் என்று டாக்டர் பார்த்தசாரதி சொல்லி இருந்தார் தான். ஆனால் அது முடியாது. உடனே கிளம்பி விட வேண்டும்.
    முடிவெடுத்ததும் மறுநாள் காலையிலேயே கிளம்பத் தயாரானாள்.


           0      0      0      0      0      0      0


    அன்று காலையிலேயே ஊர் ஒரே பரபரப்பாக இருந்தது. இரண்டு மாட்டு வண்டியில் மாலை பழங்கள் பாக்கு வெற்றிலை என்று சக்திவேல் வீட்டு வாசலில் நின்றிருந்தது. மீனா இதைப் பார்த்ததும் மனம் உருத்தத் தன் தாயிடம் கேட்டாள்.
    'சக்திவேலோட மொறப் பொண்ணு கண்மணி. பக்கத்து ஊருத்தான். அவ பெரிய மனுஷியாயி அஞ்சி வருஷமாகுதாம். இன்னைக்குத்தான் அவ அப்பா சடங்கு வச்சிருக்காரு. அந்த சடங்குக்குப் போவத்தான் எல்லாப் பொருளும் வந்திருக்குது." என்றாள் அறிவழகி.
    'ஏம்மா.... சக்திவேல் அந்தப் பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிக்குவாரா......?"
    அவள் குரலில் இலேசான கவலையின் சாயல் தெரிந்தது.
    'அப்படித்தான் ஊருல எல்லாரும் பேசிக்கிறாங்க. இந்தச் சடங்கு அனேகமா நிச்சயத்தார்தத்துல தான் முடியும்ன்னு நெனைக்கிறேன். சக்திவேலுவுக்கும் இன்னும் மூனு நாலு மாசத்துல படிப்பு முடியுதாம். அதான் இப்பவே இந்த ஏற்பாடுன்னு நெனைக்கிறேன்."
    புடவையை அலசிக் கொண்டே சொன்னாள். மீனா கலங்கின விழிகளை மறைத்தபடி வேலைக்குக் கிளம்பினாள்.

      0      0      0      0      0      0
   

    'சிஸ்டர்.... அந்த மாடு முட்டினவருக்கு வலி என்னன்னு கெட்டு குறிச்சிட்டுக் கிளம்புங்க."என்றார் டாக்டர்.
    'எஸ் டாக்டர்".
    என்று சொல்லிவிட்டு கையில் வலிப் பட்டையை வைத்து கொண்டு வெள்ளையில் நீல பார்டர் போட்ட நூல்சேலையில் தேவதையாக வந்த மீனாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் சேகர். அவனை அங்கே பார்த்ததும் அவளுக்கும் ஆச்சர்யம்!
    'சேகர்.... நீயா....? நீ.... நீங்க எங்க இங்க....?"
    அவனுடன் இன்னும் மூன்று பேர்!
    'யாருக்கு என்னவாச்சி.....? " யோசனையுடன் கேட்டாள்.
    'நம்ம ஊரு பால்காரர் இல்ல.... பாலமுருகன். அவரோட புள்ளைய மாடு முட்டிடுச்சி. அதான் கொண்டாந்து சேத்திருக்கோம்."
    'ஓ.... அந்த மாடு முட்டின கேசு நம்ம ஊரு கேசுத்தானா.....? டாக்டர் சொன்னார் எதுவும் பயமில்லைன்னு. ஆனா நிறைய ரத்தம் போயிருக்காம். ஆமா... மாடுமுட்டினதும் கொண்டு வந்திருக்கலாம் இல்ல. ஏன்... இவ்ளோ ரத்தம் வீணாவுற வரைக்கும் என்ன செஞ்சிக்கினு இருந்தீங்க.....?"
    'ஆம்புலன்சுக்குப் போன் செஞ்சோம். ரொம்ப நேரமா வரல. அப்புறம் நாங்களே வண்டியில கொண்டாந்தோம்....." என்றான் கவலையாக.
    அவள் நோயாளியின் அறைக்குள் நுழைந்தாள். அவருக்கு வயிற்றில் பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது. கையில் குளுக்கோஸ் இறங்கிக் கொண்டிருந்தது.
    குளுக்கோசும் அதன் குழாயும் பிறந்த பின்னும் உணவு ஊட்டும் தொப்புள் கொடியோ.....!
    அவருக்கு அருகில் இரண்டு ஆண்கள். அதில் ஒருவன் மோட்டார் வண்டிக்காரன். அவன் இவளைப் பார்த்ததும் கண்களைச் சுருக்கினான். அவனுடைய பார்வை அவளுக்குப் புரிந்தது.
    'நான் இங்கத்தான் இந்த லீவுக்கு வேலைச் செய்யுறன். காலை ஒன்பதிலிருந்து சாய்ந்தரம ;ஆறு வரைக்கும்....."
    அவள் சொல்லிவிட்டு நோயாளியை எழுப்பினாள்.
    'ஐயா..... ஐயா.... இங்க பாருங்க...... ஐயா.... தோ பாருங்க. கண்ணத்தொறங்க.....ஐயா....மாடு;;;...."
    'ஏய். மரியாதையா கூப்பிடு...." அவன் கோபமாகச் சொன்னான்.
    அவனை இவள் முறைத்து விட்டுத் திரும்பவும் அவரை எழுப்பினாள்.
    'ஐயா... இதோ பாருங்க....."
    அவர் மிகவும் சிரமமாகக் கண்விழித்தார்.
    'இந்தாங்க. இந்தப் பட்டையில வலி எவ்வளவு இருக்குதுன்னு காட்டுங்க..."
    அவர் நடுவாக ஐம்பதைத் தொட்டார். மீனா கட்டிலில் மாட்டியிருந்த காகிதத்தில் குறித்தாள்.
    சேகரிடம் வந்தாள். 'சேகர் நீங்கலெல்லாம் எப்போ கௌம்புவீங்க?"
    'அவருக்கு ஆபத்தில்லைன்னு டாக்டர் சொல்லிட்டார். இனிமே கௌம்ப வேண்டியது தான்."
    'கொஞ்சம் எனக்காகக் காத்துக்கினு இருக்கியா....? நா இந்த டிரஸ்சை மாத்திக்கினு உங்கக்கூடவே வந்துடறேன்....."
    அவன் 'சரி" என்றதும் ஓடினாள். பத்து நிமிடத்தில் திரும்பி வந்தாள்.
    அங்கிருந்த மூன்று பைக்குகளில் இரண்டில் இரண்டிரண்டு பேர் ஏறிக்கொள்ள அவன் வண்டியில் மட்டும் ஒரு இடம்! திரும்பவும் இவன் வண்டியிலேயா........? வேற வழி......? என்ன செய்வது? கையில் இருந்த குச்சி மிட்டாயை வாயில் வைத்துக் கொண்டு அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள்.
    நெடுஞ்சாலையில் போகும் போது ஒரு போக்குவரத்து கண்காணிப்பாளர் கையைக் காட்டி வண்டியை நிறுத்தினார். இவன் தான் அணிந்திருந்த குளிர்க் கண்ணாடியைக் கழற்றியதும்.....
    'தம்பீ.... நீயாப்பா.... கௌம்புப்பா....." என்றார் பவ்வியமாக. அவன் பின்னால் இருந்த மீனாவையையும் ஆச்சர்யமாகப் பார்த்தார்.
    'என்ன சார்.... நானும் இவரோட ஊர்க்காரித்தான். சக்திவேலைக் கட்டிக்கப் போற பொண்ணாக்கும் நான்....."என்றாள்.
    'அப்படியாம்மா... ரொம்ப சந்தோசம்." என்றார்.
    வண்டி கிளம்பியது. கொஞ்சம் தூரம் போனதும் அவன் கேட்டான்.
    'நீ சக்திவேலைக் கட்டிக்கப் போறேன்னு அவர்கிட்ட சொன்னது அவசியம் தானா....?"
    'ஆமா. இனிமேல என்னை எதுக்கும் மடக்க மாட்டார் இல்லையா....?"
    'எதை வச்சி சொல்லுற?"
    'போன வாரம் என்னோட பிரண்டோடக் காரை நான் ஓட்டிப் பாத்தப்போ புடிச்சிட்டாரரு. எங்கிட்ட லைசன்சு இல்ல. ரொம்ப வாட்டிட்டார். அப்புறம் பிரண்டோட அப்பா போன் பண்ணப்பிறகு தான்விட்டார். இனிமே நிச்சயமா என்ன கண்டுக்கவே மாட்டார்."
    'நீ செய்யிற தப்புக்குச் சக்திவேலோட பேரை யூஸ் பண்ணுறியா?"
    அவன் கேட்க அவள் பேசாமலிருந்தாள். ஒருவர் ஏதாவது தப்புச் செய்துவிட்டால் அந்தத் தவற்றால் புதியதாக ஒன்றை கற்றுக் கொள்ளலாம். ஆனால் தவறு என்று தெரிந்தே ஒரு தவறைச் செய்தால் பழைய தவறையே புதுப்பித்துக் கொள்வது போல் தானே......!
    முதலில் தவறு செய்தாயிற்று. பிறகு அதை திருத்திக் கொள்வது தானே முறை?
    'மீனா....." அவன் இவள் சிந்தனையைக் கலைத்தான்.
    'ம்....."
    'இனி மேல நான் சக்திவேலைக் கட்டிக்கப் போறேன்னு யார்கிட்டேயும் சொல்லாத."
    'ஏன்.....?"
    'ஏன்னா.... கடவுள் பக்தனுக்குக் கருணையைத்தான் கொடுக்கும். காதலைக் கொடுக்காது."
    'ஏன்...? கடவுள் பணமிருக்கும் பக்தை கண்மணிக்குத்தான் தன் காதலைக் கொடுக்குமா...?"
    அவள் அப்படி சொன்னதும் அவன் சட்டென்று வண்டியைப் பிரேக் பிடித்து நிறுத்தினான். மற்ற இரண்டு வண்டியும் நின்றது. அவன் மீனாவை யோசனையுடன் பார்த்தான்.
    சேகர் 'என்ன" என்று கேட்க இவன் எதையோ அவளிடம் சொல்ல வந்ததைச் சொல்லாமல் ஒன்றுமில்லை என்று தலையை மட்டும் ஆட்டி விட்டுக் கிளம்பினான்.


    0      0      0      0      0      0      0


    ஊருக்குள் வந்ததும் கோவிலுக்கு எதிரில் இருந்த பெரிய ஆலமரத்தின் அடியில் இருந்தவர்கள் அனைவரும் இவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள்.
    'டாக்டர் எந்தப் பயமுமில்லைன்னு சொல்லிட்டார். தையல் போட்டிருக்குது. காயம் ஆறினதும் இன்னும் ஒரு வாரத்துல வீட்டுக்குப் போயிடலாம்ன்னு சொன்னார்." சேகர் சொன்னான்.
    'ஓ...... இதுக்காகத் தான் இங்க எல்லாரும் கூடி இருக்கிறீங்களா....? ஏன் சேகர் ஒரு டெலிபோன் பண்ணிச் சொல்லியிருக்கக் கூடாது? உங்க யார்கிட்டேயும் செல்போன் இல்லையா......?" மீனா கேட்டாள்.
    'அண்ணன்கிட்ட இருக்குது. ஆனா ஆஸ்பத்திரியில டவர் கெடைக்கல." என்றான்.
    அப்போது மீனா மோட்டார் வண்டிக்காரனை யோசனையுடன் பார்த்தாள். சேகர் இவரைத்தான் அண்ணன் என்றான். எப்படி? யார் இவர்? எந்த வீட்டுல இருக்கிறார்? இந்த ஊர் தானா....? விளங்கவில்லை. கேட்டுவிடலாமா....? மெதுவாகக் கேட்டாள்.
    'சேகர் யாரு இவர்? இவரோட பேரு என்ன....?"
    அவள் இப்படிக் கேட்க அங்கே எல்லோருடையப் பார்வையும் இவள் மேல் படிந்தன. ஆனால் யாருமே பதில் சொல்லவில்லை.
    'என்ன மீனா... என்னைப்பத்தி தெரிஞ்சிக்கணுமா...?"
    அவனே கேட்டான். இவள் 'ஆமாம்" என்று தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.
    'என் பேரு சின்னதம்பி. எல்லாரும் என்னை தம்பீன்னு செல்லமா கூப்பிடுவாங்க. நான் சக்திவேலோட வீட்டுலத்தான் தங்கி அவரோட தயவுலத்தான் படிக்கிறேன். அவரோட வலது கையே நான்தான். என்னைக் கேக்காம அவர் எதையும் தனியா செய்ய மாட்டார். போதுமா?"
    பார்வையிலும் வார்த்தையிலும் அலட்சியம் இருந்தது. அப்படின்னா இந்தக் கல்யாண ஏற்பாடும் இவரோடதுத்தானா...?
    மனம் அவளுடைய கவலையைச் சுட்டிக்காட்டியது. அவன் மீது இலேசாகக் கோபம் வந்தது.
    'ம்.... சரி. இனிமே நீங்க என்னை அக்கான்னுத்தான் கூப்படணும்." வேண்டுமென்றே அவனை வம்புக்கிழுத்தாள்.
    'என்ன......?"
    'ஆமா. நா உங்கள தம்பீன்னுக் கூப்பிட்டா.... நீங்க என்னை அக்கான்னுத்தானே கூப்பிடணும்?"
    'நான் மரியாதை கொடுப்பவர்களுக்குத் தான் மரியாதைக் குடுப்பேன். மரியாதைத் தெரியாதவங்களோட எனக்குப் பேசக்கூட விருப்பம் கெடையாது." என்றான் கோபமாக.
    'ஏன் நா எப்போ அப்படி நடந்துக்கினேன்......?"
    'ம்..... உன்னை விட எத்தன வயசு பெரியவர் அவர்? அவர் பேரைச் சொல்லி மாடசாமின்னு கூப்பிட்டு இருந்தா கூடப் பரவாயில்ல. மாடுன்னு கூப்பிடுறே.... இது மரியாதையா...?"
    மருத்துவமனையில் நடந்தது. நினைத்ததும் அவளுக்குச் சிரிப்பு!
    'ஐயோ.... எனக்கு அவர் பேர் மாடசாமின்னுத் தெரியாது. ஐயா..... மாடுமுட்டினவரேன்னுத் தான் கூப்பிட வந்தேன். நீங்க அதட்டினதும் மாடு என்ற வார்த்தையோட நிறுத்திட்டேன்." என்றாள்.
    இதைக் கேட்டதம் அங்கிருந்த எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் அவன் சிரிக்கவில்லை. அவனின் இறுகிய முகத்தைப் பார்த்தாள்.
    'டேய் தம்பீ......."
    இவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அங்கே நின்றிருந்த ஒரு பையனை அழைத்தாள். இவன் முறைத்தான்.
    'என்னக்கா......" பையன் கேட்டான்.
    'டேய் தம்பீ..... உன்னோட தம்பியில்ல..... சின்னத்தம்பி. அவன் காலையில ஒன்னோட அம்மாக்கிட்ட குச்சிமிட்டாய் வாங்கித்தரச் சொல்லி அழுதான். இந்தா.... இந்தக் குச்சிமிட்டாயை உன்னோட சின்னத்தம்பி கிட்ட குடுத்துடு." மிட்டாயைக் கொடுத்தாள். வார்த்தையில் சின்னத்தம்பியை அழுத்தி உச்சரித்ததால் அவனைப் பார்த்தாள். அவன் இவளை முறைத்துக் கொண்டிருந்தான்;.
    'தோ... பாருங்க. அந்தப் பையனோட சின்னத்தம்பி காலையில முட்டாய் கேட்டு அழுதான். நான் சாய்ந்தரம் வாங்கியாறேன்னு சொன்னேன். அதத்தான் அந்தச் சின்னத்தம்பிகிட்ட குடுக்கச் சொன்னேன். நான் என்னவோ உங்கள மரியாதை கொறைவா பேசிட்டதா நெனச்சிடாதீங்க."
    சொல்லிவிட்டுக் கையிலிருந்த சில்வர் டிபன் பாக்ஸை தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொண்டே நடந்தாள்.
    அவள் போவதையே அந்த ஊர் மக்கள் அனைவரும் சிரிப்புக் கலந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த சின்னதம்பியும் தான்!

(தொடரும்)

Friday, 6 April 2012

போகப் போகத் தெரியும் - 6



தொடர்கதை பாகம் - 6

    வானம் மையைத் தன் உடல் முழுவதும் பூசி கொண்டது போல் இருந்தது. அதில் லேசான கீறல்களாக மின்னல்கள். இடி எங்கோ இடித்தது. மழைத்துளி அங்கொன்றும் இங்கொன்றுமாக நச் நச்நென்று விழுந்தது.
    மழை பலமாக வருவதற்குள் வீடுபோய்ச் சேர்ந்து விட வேண்டும். இவ்வளவு நேரமாக மற்றப் பெண்களுடன் ஆற்றில் குதித்து விளையாடிய மீனாவும் அவசர அவசரமாக வரப்பின் மீது நடந்தாள். பின்னாலிருந்து ஒரு குரல்!
    'மீனா.... உன்ன சக்திவேல் அண்ணன் கூப்பிடுறார்....."
    சேகர் அவளைக் கத்திக் கூப்பிட்டான்.
    'என்னையா....? சக்திவேலா......? எங்க இருக்கிறார்......?"
    'அதோ.... அந்த குடோனுல......."
    மற்றப் பெண்களைப் பிரிந்து மீனா சேகர் காட்டிய குடோனை நோக்கி நடந்தாள். சேகர் மற்றப் பெண்களுடன் சென்று விட்டான்.  மழை இலேசாகத் தூவத் துவங்கியது.
    குடோன் ஓட்டு வீடு போலத்தான் இருந்தது. பழைய வீட்டை மூட்டைகள் அடுக்கிவைக்கும் குடோனாக்கப் பட்டிருந்தது. கதவு திறந்திருந்தது. மீனா உள்ளே எட்டிப்  பார்த்தாள். ஒரே இருட்டாக இருந்தது. நிறைய நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
    தலையை மட்டும் உள்ளே நுழைத்து 'சக்திவேல்.... சக்திவேல்...." என்று கூப்பிட்டாள். குடோன் அவள் சொன்னதை எதிரொலித்தது. பதில் எதுவும் வரவில்லை. உள்ளே செல்ல முயன்றவளின் பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள்.
    மோட்டார் வண்டிக்காரன் கையில் ட்டார்ச் லைட்டுடன் நின்று கொண்டிருந்தான்.
    'ஓ...... நீங்களா....? சக்திவேல் எங்க? என்ன அவரு கூட்டதாக சேகர் சொன்னான்."
    'சக்திவேலா......." சற்று யோசித்தவன் 'அவர் போய்ட்டார். நீ கௌம்பு" சொல்லிவிட்டு அவளைத் தாண்டி கிடங்கினுள் நுழைந்து டார்ச் லைட் உதவியுடன் எதையோ தேடினான்.
    அவனையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் மீனா. ;என்னத் தேடுகிறான் இவன்.......?; ; புரியவில்லை. அவன் மூட்டைகளின் இண்டு இடுக்கெல்லாம் தேடினான்.
    மழை பலமாகப் பெய்யத் துவங்கியது. மீனாவின் மீது சில்லென்று சாரல் படவும் அவள் குடோனில் நுழைந்து வெளியே பார்த்தாள். மழை சடசடவெனப் பெய்தது. பூமி ஷவர் பாத் எடுக்கிறதோ என நினைத்துச் சிரித்துக் கொண்டாள். இடி இடித்தது. மின்னல் கண்களைக் கூசியது.
    மழை உலகத்தைச் சட்டென்று இருள வைத்து விட்டது.
    'மீனா கதவை சாத்து. சாரலடிச்சா மூட்டையெல்லாம் பாழாயிடும்."
    அவன் சொல்லிக் கொண்டே தேடிக் கொண்டிருந்தான். ;நல்ல வேலை நாம் அவர்களுடன் போகவில்லை. போயிருந்தால் இந்நேரம் நல்லா மழையில நனைஞ்சிருப்போம். ; யோசித்துக் கொண்டே கதவை இலேசாக சாத்தி விட்டு அவனைப் பார்த்தாள்.
    அவன் இன்னமும் தேடிக்கொண்டே தான் இருந்தான். ஒரே ஒரு பல்ப் மட்டும் எரிந்தாலும் அந்த வெளிச்சம் போதாமல்  டார்ச் லைட்டை அடித்து வெளிச்சத்தை வீசியபடி இன்னொறு கையில் ஒருதடியை வைத்து கொண்டு அதை மூட்டைகளின் மேல் தட்டித்தட்டிச் சந்துகளில் குத்தித் தேடினான்.
    மீனா ஆர்வம் பொறுக்காமல் கேட்டாள்.
    'என்னத்தை தான் இப்படித்; தேடுறீங்க? சொன்னா நானும் உங்களுக்கு உதவுவேன் இல்லையா.....?"
    'ஒன்னுமில்ல. ஒரு பாம்பு. சாரை மாதிரி இருந்துச்சி. இடிக்கு பயந்து இங்க வந்து பூந்திடுச்சி. அதத்தான் தேடுறேன்."
    சொல்லிக் கொண்டே தேடினான். மீனாவிற்கு அவன் பேச்சை ஜீரணிக்க கொஞ்சம் நேரம் பிடித்தது. புரிந்ததும் என்ன செய்வதென்று அறியாமல் சட்டென்று பாய்ந்து அவனை முதுகு பக்கமாகக் கட்டிப் பிடித்து கொண்டாள்.
    அவன் ஒரு வினாடி அதிர்ச்சியானான்.
    'மீனா.... என்னை விடு." அவள் கையை விலக்க முயன்றான். அவள் உடும்பாகப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
    'நா மாட்டேன். எனக்கு பாம்புன்னா பயம். நா மாட்டேன்."
    கண்களை இறுக்கி மூடிக் கொண்டு அவனை மேலும் இறுக்கினாள்.
    'பயமாயிருந்தா வெளியப் போ.... என்ன தொந்தரவு பண்ணாத."
    அவள் விடவில்லை.
    'மீனா...." அவன் சற்றுக் கோபமாகக் கத்த.... மீனா கையை எடுத்து விட்டு மிரட்சியாக அவனைப் பார்த்தாள். அவளைப் பார்க்க அவனுக்கே பாவமாக இருந்திருக்க வேண்டும்.
    'மீனா.... ஒனக்கு பயமாயிருந்தா... நீ அந்த மேச மேல ஏறிக்கோ." என்றான்.
    மீனா அவசர அவசரமாக ஓடிப் போய் ஏறிக் கொண்டாள். அவன் மீண்டும் தன் பாம்பு வேட்டையைக் துவங்கினான். அவள் அவனையே பார்த்தபடி கால்களைக் கட்டிக் கொண்டு மேசையின் மேல் அமர்ந்திருந்தாள். பயத்தில் வியர்வை ஆறாக ஓடியது. கைகள் இலேசாக நடுங்கின.
    பதினைந்து நிமிடங்கள் தேடியிருப்பான். கிடைக்கவில்லை.
    'ப்ச்சு......எங்க போச்சின்னுத் தெரியல. வயிறு வேற பெருசா இருந்துச்சி. இங்க நமக்குத் தான் ஆபத்து. நெல்லு மூட்டைய எடுக்க வர்ரவங்கள போட்டுத் தள்ளிடும். எங்க போயிருக்கும்.....?"
    அவன் சொல்லிக் கொண்டே பார்வையை எல்லா இடங்களிலும் சுழலவிட்டான். மீனா எச்சிலைக கூட்டி விழுங்கினாள். பாம்பு குட்டி போடப் போவுதா.....? அது எத்தனையோ.......? பயத்தில் உடல் இலேசாக நடுங்கியது. இவன் எப்படித்தான் இவ்வளவு தைரியமாக இருக்கிறானோ.... பாம்பென்றால் படையே நடுங்கும் என்று சொல்வது இவன் விசயத்தில் பொய்யாகி விட்டதே.....
    அவன் தேடியது கிடைக்காத ஏமாற்றத்துடன் வந்து அங்கே ஆணியில் மாட்டியிருந்தச் சட்டையை எடுத்து தன் முண்டா பனியனின் மேல் போட்டு கொண்டான். அவன் பார்வை மீனாயிருந்த இடத்திற்குப் பின்புறம் யோசனையுடன் நிலைத்திருந்தது.
    மெதுவாக மீனாவின் அருகில் வந்தான். கையை நீட்டி அவளை அழைத்தான். அவன் பார்வையைப் புரிந்து கொண்டவளாக மீனாவும் திரும்பி அந்த இடத்தைப் பார்த்தாள். ஏதேதோ தாள்கள் அடுக்காக வைத்துக் கட்டப்பட்டதர்க்கு மேல் மீனாவின் மிக அருகில் அது சுருண்டு படுத்திருந்தது.
    மீனா பாம்பை தன் அருகில் பார்த்தது தான் தாமதம். சட்டென்று மேசையிலிருந்து குதித்து அவனை இறுக்கக் கட்டிப்பிடித்துக்  கொண்டாள்.
    அவன் அருகில் இருந்த கழியை எடுத்து அதன் மீது பாம்பை ஏற்றி வெளியே எறிந்தான். பாம்பு போய் மறைந்தது.
    மீனா இன்னமும் அவனைக் கட்டிப் பிடித்தபடியே இருந்தாள். அவன் அவளை விளக்கினான். ஏற்கனவே மயக்கமாகி விட்டவள் தரையில் சரிந்தாள்.
    அவன் மழைநீரைக் கொண்டு வந்து அவள் முகத்தில் தெளித்தான். விழித்தவள் திருத்திருவென முழித்தாள்.
    'மீனா.... பயப்படாத. பாம்பு போயிடுச்சி. வா.. நாம போகலாம்."
    கதவைப் பூட்டிக் கொண்டு வந்தவனைப் பின் தொடர்ந்தாள்.
    'மீனா... மழையால ஒரே சேறா இருக்குது. வண்டி சிக்கும். சுத்துப் பாதையிலத் தான் ஊருக்கு போவ முடியும். வா...." என்றான்.
    மீனாவிற்குத் தரையில் கால் வைக்கக்கூடப் பயமாக இருந்தது. எங்கேயாவது பாம்பு படுத்திருக்குமோ....... பயம்.
    அவளுக்குத் தெரியாது. யாரும் துன்புறுத்தாமல் இருந்தால் பாம்பு அதன் வழியிலேயே போகும் என்பது.
    அச்சம் அறியாமையிலிருந்து தானே வருகிறது.
    அவன் வண்டியைக் கிளப்பியதும் சட்டென்று ஏறி அவனை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அவ்வளவு பயம். அவளுடைய இதயத்துடிப்பு அவளுக்கே கேட்பது போல் இருந்தது.
    வண்டி தேங்கியிருந்த மழை நீரை வாரி இறைத்தபடி சீறிப்பாய்ந்தது.


0      0      0      0       0      0      0      0


    ஊர் கோவில் அருகில் வண்டியை நிறுத்தினான். கோவில் கோபுரக் கலசத்துக்கருகில் இருந்த விளக்கு மஞ்சள் நட்சத்திரமாக மின்னியது. கோவில் வாசல்படியில் பலகைக்கு மேல் இருந்த ட்டியூப் லைட் இரவில் நான் தான் சூரியன் என்று கர்வப்பட்டுக் கொண்டது.
    'மீனா.... இறங்கி நடந்து போ...." என்றான்.
    அவள் இறங்கிக் கொண்டாள். தன் ஊருக்குள் வந்து விட்டோம் என்று நினைத்ததும் சற்று நிம்மதியான மூச்சு வெளிவந்தது. அவள் 'தேங்ஸ்ங்க" என்றுச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
    'மீனா........" அவனழைத்தான்.
    'என்ன....?"
    அவன் அவளை ஊடுருவிப் பார்த்தான்.
    'சக்திவேலுவத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டு என்னை இப்படி கட்டிப்புடிச்சியே.....இது உனக்கே அசிங்கமாயில்ல.....?"
    அழுத்தமான பார்வையுடன் அவளைப் பார்த்துக் கேட்டான்.
                               
                  
                                (தொடரும்)