Wednesday 29 May 2013

போகப் போகத் தெரியும் – 56





   டிரிங்..  டிரிங்..
   தொலைபேசி சத்தமிட்டுக் கூப்பிட்டது. இரண்டு மனிதர்கள் முகங்களைப் பார்க்காமலேயே பேசிக் கொள்ள ஏற்படுத்தப் பட்ட சாதனம். வார்த்தைகளின் பரிசனம்!
   கணவனின் அரவணைப்பில் கிடந்த மீனா.. மெதுவாக விலகி எழுந்தாள். கருநீல வானம் சாயம் போகத் துவங்கியிருந்தது. விடிந்து விட்டதா..? தூங்கியது போலவே இல்லை. அதற்குள் விடிந்துவிட்டதா..?
   தொலைபேசி கூப்பிட்டு கொண்டே இருந்தது. அவசரமாக எழுந்து.. கீழே கிடந்த புடவை ஜாக்கெட்டை அணிய நேரம் இல்லாமல் அருகில் கிடந்த தன் கணவனின் சட்டையை உள்பாவாடைக்கு மேல் அணிந்து கொண்டு.. கூடத்தில் கத்திய தொலைபேசியை எடுத்தாள்.
   எதிர் முனையில் கண்மணியின் அப்பா!
   'மீனாவாம்மா.. நல்லாயிருக்கியா..?"
   'ம்.. இருக்கேங்க. என்ன விசயம் இவ்வளவு காலையிலேயே..?"
   'நம்ம கண்மணிக்கு இப்பத்தான் கொழந்த பொறந்துச்சி. ஆம்பள கொழந்த. தாயும் கொழந்தையும் நல்லா இருக்காங்கம்மா.. வீட்டுல சொல்லிடு." என்றவர் வைத்துவிட்டார்.
   மீனாவிற்கு உடம்பெல்லாம் சிலீர்த்தது. எதற்காகத் தன் கணவனை விட்டுப் பிரிந்தாளோ.. அதற்கான பலன் கிடைத்து விட்டது. அவள் பிரிந்து போயிருக்கவில்லை என்றால்.. இப்படியான மகிழ்ச்சியான நிகழ்ச்சியே நடந்திருக்காது.
   நேற்று இரவு அவள் கணவன் அவளிடம் நடந்து கொண்ட விதம்.. ஏதோ நேற்று தான் முதலிரவு போல.. எவ்வளவு ஆசையுடன்.. கொஞ்சளுடன்.. நினைக்கவே மனத்துடன் முகமும் சிவந்தது.
   அவள் மேல் இவ்வளவு ஆசையும் அன்பும் வைத்திருப்பவனால்.. நிச்சயமாகத் தான் இங்கே இருந்திருந்தால்.. கண்மணியையோ.. அல்லது வேறு ஒரு பெண்ணையோ.. கல்யாணம் செய்து கொண்டிருக்க மாட்டான்.
   இந்த உலகமே தான் செய்தது தவறு என்று சொன்னாலும்.. அவள் மனத்திற்கு அவள் செய்தது மிகச் சரியானதே..! சின்ன மீன் உயிரை விட்டால் தான் பெரிய மீன் தூண்டிலில் அகப்படும் தத்துவம் தான் இது!
   கணவனை எழுப்பினாள். இரவெல்லாம் இன்பக் கடலில் மூழ்கி நீந்தியவன்.. கண்கள் சிவக்க மீனாவைப் பார்த்து 'என்னம்மா" என்றான்.
   மீனா அவனருகில் அமர்ந்தாள். 'என்னங்க.. உங்களுக்கு காலையிலேயே ஒரு சந்தோஷமான விசயம் சொல்லப் போறேன்."
   குப்புறப் படுத்திருந்தவன் திரும்பிப் படுத்தான்.
   'நீ எம்பக்கத்துல இருக்கறது தான் எனக்கு மிகப் பெரிய சந்தோஷம். அதவிட வேற எதுவுமே எனக்குப் பெருசா சந்தோஷத்த தராது." அவள் இடையில் கையை நுழைத்து தன் பக்கமாகச் சாய்த்தான். மீனா அவன் கையை இலேசாக விலக்கினாள்.
   'கண்மணிக்குக் கோழந்தப் பொறந்திடுச்சாம்.." முகம் மலர சொன்னாள்.
   அவன் 'ஓ.. அப்படியா..?" என்ற படி திரும்பிப் படுத்தான். அவன் சொன்ன  ;ஓ.. அப்படியா ; வில் அவள் எதிர் பார்த்த எந்த சுரத்தையும் அதில் இல்லை.
   'என்ன குழந்தையாம்..?" அக்கரையில்லாத ஒரு கேள்வி! ஏதோ கேட்க வேண்டுமே என்பதற்காகக் கேட்கப் பட்டது போல் இருந்தது.
   'ஆம்பளப் புள்ளன்னு சொன்னாரு."
   'ஓஷோ.." அவன் திரும்பிப் படுத்து தூங்கினான்.
   மீனா அவன் செய்கையை அதிசயமாகப் பார்த்தாள். என்ன..? ஏன் இப்படி..? எதுவும் புரியவில்லை. யோசனையுடன் துணிகளை எடுத்துக் கொண்டு குளியளறைக்குள் நுழைந்தாள்.
   சரியான காரணம் தெரியவில்லை என்றால் குழப்பமாகத் தான் இருக்கும். காரணத்தை அறிவதற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைத் தானே குழப்பம் என்பது? அவள் குழப்பத்துடனே குளித்து முடித்தாள்.
   அவனிடம் இது குறித்துப் பேசிவிட வேண்டும். கண்மணியைப் பற்றி பேசினால் வேறு கோபப்படுகிறான். வேறு என்னவென்று பேசுவது..? ஆனால் எப்படியாவது பேசிவிட வேண்டும்.
   முடிவுடன் தனதறைக்குள் நுழைந்தாள். ஆனால் அவன் அங்கு இல்லை!
   தொலைபேசி அழைத்தது. போய் எடுத்தாள். எதிர் முனையில் 'ஐயேம் ஆனந்தி. சக்திவேல் இருக்காரா..?" வீணையின் ராகம் குரலில்!
   'அவர் இல்லைங்க வெளிய போய் இருக்காரு. என்ன விசயம்..?"
   'நீங்க யாரு..?"
   'நா.. மீனா.." அவர் மனைவி என்று வாய் வரை வந்ததைச் சொல்லவில்லை.
   'ஓ.. மீனாவா..? சக்திவேல் வந்ததும் டெலிபோன் பண்ணச் சொல்லுங்க. சியூ.." இணைப்பைத் துண்டித்து விட்டாள்.
   ;யார் இந்த ஆனந்தி..?  சரி. யாராக இருந்தால் நமக்கென்ன..? வந்தால் சொல்லிவிட வேண்டும். ; மனத்தில் பதிய வைத்துக் கொண்டு கையிலிருந்த புத்தகத்தில் மனத்தைச் செலுத்தினாள்.
   கண்கள் புத்தகத்தில் இருந்தாலும் சக்திவேல் கண்மணி குழந்தை என்று மாறிமாறிக் கண்முன் காட்சியாக வந்தது. சக்திவேலுவின் அலட்சியம் குழப்பத்தைத் தந்தது.
   அதிகக் குழப்பம் இருந்தால் முக்கியமானது மறந்து போய் விடும். மற்றக் குழப்பத்தில் இதை மறந்துவிட்டாள்.

   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   சக்திவேல் கொடுத்த ஊதாநிறக் காகிதத்தைத் திறந்து பார்த்தாள் மீனா. அதனுள் தங்கச் சங்கிலி சுருட்டி வைக்கப் பட்டிருந்தது. பெரிய ரோஜாவுக்குள் இருக்கும் மகரந்தம் போல் இருந்ததைக் கையில் எடுத்து பார்த்தாள். குழந்தைச் சங்கிலி! சின்ன தாம்பு கயிற்றைப் போல் இருந்தது.
   'புடிக்குதா..?"
   'ரொம்ப அழகாயிருக்குதுங்க."
   'சரி. சீக்கிரமா கௌம்பு. போய்ப் பாத்துட்டு இருட்டறதுக் குள்ள வந்துடலாம்." அவளுடைய சந்தோசத்தை ரசித்துக் கொண்டே சொன்னான்.
   'நா வரலைங்க. நீங்க போய்ப் பாத்துட்டு வாங்க." இதைச் சொல்லும் பொழுது முகம் சுருங்கியது.
   'ஏன்.. வந்ததுலேர்ந்து கண்மணி.. கண்மணின்னு இருந்த..? இப்ப என்ன ஆச்சி..?"
   'ஆமாங்க. கண்மணிய பாக்கனும்ன்னு தான் நா முக்கியமா வந்தேன். ஆனா இந்த நேரத்துல வேணாம்ன்னு நெனைக்கிறேன்."
   'ஏன்..? அவளுக்குக் கொழந்த பொறந்ததுல ஒனக்குச் சந்தோஷம் இல்லாத மாதிரி பேசுற?"
   'சேச்சே.. அப்படியெல்லாம் இல்ல. அவ நல்லா இருக்கணும். கொழந்த நல்லா இருக்கணும். நா அதிஷ்டமில்லாதவ. அந்தக் கொழந்தையத் தொடக் கூட எனக்குப் பயமா இருக்கும். நா பாக்கப் போயி அதுக்குச் சின்னதா ஏதாவது ஆனாக்கூட என்னால தாங்க முடியாது. அதனால தான் சொல்லுறேன். என்னைப் புரிஞ்சிக் கோங்க. ப்ளீஸ்.." என்றாள் கண்கலங்க.
   'மீனா.. நீ இந்த ஊருல இருக்கிறவங்களுக்கு ஒரு தேவதை மாதிரி. அதுவும் அதிஷ்ட தேவதை! உன்னப் போயி யாராவது அப்படி நெனைப்பாங்களா..? நீயே உன்ன தாழ்த்திக்காத."
   'தேவதை இல்லைங்க. எதுக்கும் ஒதவாத உயிருள்ள ஒரு பிணம். உணர்ச்சிகள் இருந்தாலும் அதற்கான அர்த்தத்தைத் தர முடியாத ஜடம். மலடின்னு என்னை யாரும் சொல்லல. ஆனால் என்னோட மனசுல கல்வெட்டா பதிஞ்சிடுச்சி. வேண்டாம். என்னை விட்டுடுங்க. என்னோட மனச சீண்டிப் பாத்தா நா செத்துடுவேன் சக்திவேல்.." அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்!
   அவன் அவள் தலையைத் தடவிக் கொடுத்தான். அவள் முகத்தைத் தூக்கிக் கண்ணீரைச் சுண்டிவிட்டு நெற்றியில் முத்தமிட்டான்.
   'மீனா.. உன்னோட மனசுல இருக்கிற காயம் இன்னும் ஆறல. ஆனா.. அதுக்கான மருந்து எங்கிட்ட இருக்குது. கூடியச் சீக்கரம் உனக்குத் தர்றேன். அது வரைக்கும் பொறுமையா இரு."
   அவள் கன்னத்தைத் தட்டிவிட்டுச் சென்றான்.

(தொடரும்)

Friday 24 May 2013

போகப் போகத் தெரியும் – 55




   இன்று மஞ்சவிரட்டு! ஆனால் இந்த விளையாட்டை இந்த ஊர் இரண்டு வருஷமாக நடத்தவில்லையாம். காலம் காலமாக நடந்து வந்த வீர விளையாட்டு! ஆனால் ஏதோ ஒரு காளை விதி வசத்தால் அவளைக் குத்திவிட அந்த நிகழ்ச்சியை நிறுத்தி விட்டது.. அவளுக்கு வேதனையாக இருந்தது.
   இது தவறான கண்ணோட்டமாக மீனாவிற்குத் தெரிந்தது. சாலையில் பேரூந்து விபத்து ஏற்பட்டது என்பதற்காகச் சாலையில் பேரூந்தே போகக்கூடாது என்று சொல்ல முடியுமா..?
   ஆனால் இங்கே பேரூந்தை ஓட்டுகிறவர் ஆறறிவு படைத்த மனிதர்! ஆனால் காளை விலங்கு  தானே..!
   விலங்கு செய்வது தவறு. மனிதன் செய்வது விபத்து. இப்படி தானே சமுதாயம் சொல்கிறது. மிருக குணம் படைத்தவன் தவறு செய்கிறான் என்கிறது. ஆனால் எங்கோ உண்மை ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது.
   வேறு ஏதோ சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள் இருக்கிறது என்று அறிவழகி சொன்னாள். ஆனால் மீனாவிற்குப் போக மனம் இல்லை. யாரையும் பார்க்க விரும்பவில்லை. அவள் யாரைப் பார்க்க இங்கே வந்தாளோ.. அவளைப் பார்க்க முடியாமலேயே போய் விட்டதே.. என்று ஆதங்கப்பட்டாள்.
   ஏமாற்றம் மனதை இருளச் செய்தது. சூன்யமான இருள். எங்கே..? எதைத் தேடுகிறோம்..? எதைக் காண்கிறோம்..? எதைக் காணப் போகிறோம்..? என்று அறிய முடியாத இருள்! புரியாத குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள். நேரம் போனதே தெரியவில்லை.
   இரவு உணவிற்கு அறிவழகி தோசையையும் பொடியை நல்லெண்ணையில் குழைத்தும் கொடுத்தாள். அகிலாண்டேசுவரி அம்மாளும் அறிவழகியும் சாப்பிட்டுப் படுத்துவிட்டார்கள்.
   மீனா தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு விளக்கை அணைத்து விட்டு தன் அறைக்குள் நுழையவும்.. கதவைத் தட்டும் ஓசை கேட்கவும் சரியாக இருந்தது. போய் கதவைத் திறந்தாள். அரங்கத்தில் நடக்கும் கலை நிகழ்ச்சி காதைக  கிழித்தது! சக்திவேல் இலேசான சிரிப்புடன் மீனாவைப் பார்த்தான்.
   என்ன மீனா.. அதுக்காட்டியும் எல்லாரும் படுத்துட்டாங்களா..? ப்ரோகிராம் நடக்குதே. யாரும் பாக்கலையா..?
   அவனிடமிருந்து இலேசான மதுவின் வாடை வீசியது. என்ன இது புதுப் பழக்கம்?  கேட்க நினைத்தாள். ஆனால் கேட்கவில்லை.
   இன்னைக்கி தேர் ஊர்வலம் வந்துச்சியில்ல.. அதனால ப்ரெண்ஸ்களோட ஒரு சின்ன பார்ட்டி." என்றான்.
   குடிப்பதற்கு ஏதாவது காரணம் வேண்டும்.
   மீனா.. நீ சாப்டியா..?
   ம்.." என்று நிறுத்தியவள் நீங்க சாப்டீங்களா..?கேட்டாள்.
   இல்ல. ஆனா பசியில்ல." என்றான்.
   நா போடுறேன். கொஞ்சம் சாப்பிட்டு படுங்க." என்றாள்.
   அவன் கையலம்பிவிட்டு நாற்காலியில் அமர்ந்தான். மீனா தட்டில் தோசையை வைத்தாள். மற்றக் கிண்ணங்களைத் திறந்து பார்த்தாள். தொட்டு கொள்ளப் பொடி மட்டும் தான் இருந்தது. அவனுக்குப் பொடிப் பிடிக்காது. இருந்தாலும் ஒரு கிண்ணத்தில் எண்ணையுடன் குழைத்து வைத்துவிட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
   அவன் ஒரு வாய் சாப்பிட்டான். மீனாவைப் பார்த்தான்.
   இப்ப சொல்லு மீனா.. நீ செஞ்சது சரியா..? அவன் கேட்க வேண்டும் என்று எதிர் பார்த்திருந்தாள்.
   நா செஞ்சது தப்புன்னு எனக்கு இன்னமும் தோனலைங்க."
   எனக்குப் புரியுது மீனா. உன்னோட நல்ல மனசுத்தான் நீ என்ன விட்டு போவக் காரணம்ன்னு எனக்கு நல்லா புரிஞ்சி தான் இருந்துச்சி. ஆனா.. அதை என் மனசால ஏத்துக்க முடியல. எவ்வளவு வேதனப் பட்டேன்னு தெரியுமா..? ஒடம்பு சரியா கூட ஆகாம.. காசு பணம் கையில இல்லாம.. எங்க போயி என்ன செய்யிறன்னே தெரியாம.. நா அலைஞ்ச அலைச்சல் இருக்கே.. வார்த்தையால சொல்ல முடியாத வேதனை.
   அப்புறம் ரெண்டு மாசம் கழிச்சி தான் தெரிஞ்சது. நீ கல்கத்தாவுல அன்னைத் தெரேசா ஊனமுற்றோருக்கான உதவி நிலையத்துல இருக்கிற விசயம். ஏதோ நீ உயிரோட நல்லா இருக்கிறியேன்னு நிம்மதி வந்துச்சி. நம்ப பசங்க சொன்னாங்க. நாங்க போயி பேசிச் சமாதானப்படுத்தி கூட்டிக்கினு வர்றோம்ன்னு சொன்னாங்க. நான் தான் வேணாம்ன்னுட்டன்."
   மீனா ஆச்சர்யமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
   ஆமா மீனா.. நா தான் வேணாம்ன்னுட்டேன். அவளே மனசு மாறி வந்தா வரட்டும். நாம கட்டாயப் படுத்திக் கூப்பிட வேணாம்ன்னு சொல்லிட்டேன். நீயும் இப்போ வந்திருக்க. ஆனா ரொம்ப காலம் கழிச்சி வந்திருக்க." என்றான்.
   அவன் சொன்னது அவளுக்குப் புரிந்தது.
   இப்போ சந்தோஷமா தானே இருக்கிறீங்க?
   ம்.. இருக்கேன். அம்மாவோட நச்சரிப்புத் தான் தாங்கல. கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினாங்க. ப்ச்சு.." பெருமூச்சுடன் எழுந்தான்.
   இன்னொரு தோசை வச்சிக்கங்க."
   வேணாம்மா. பசியில்ல. நீ போடுறேன்னதால தான். ஒங்கையால சாட்டு எத்தன நாளாச்சி.."
   கையைக் கழுவி விட்டுத் துண்டில் துடைத்தான். மீனா மீதியை மூடி வைத்துவிட்டு தன் அறையை நோக்கி நடந்தாள். அவன் மாடிப்படி ஏறப்போனவன் கோபமாகக் கேட்டான்.
   மீனா.. எங்க போற?
   ஏன்..? என்னோட ரூமுக்கு. படுக்க போறேன்."
   'ஏய்.. மாடிக்கி வா." அவன் கொஞ்சளாகக் கூப்பிட..
   மாடிக்கா..? எ.. எதுக்கு..?அவனின் குரல் அவளை உறுத்தச் சற்றுப் பயத்தடன் கேட்டாள். அவன் கோபமாக முறைத்தான்.
   ம்.. வா. கொஞ்சம் பேசணும்."
   எதுவாயிருந்தாலும் காலையில பேசிக்கலாம். நா மாடிக்கெல்லாம் வரமாட்டேன்." சொல்லிவிட்டுச் சட்டென்று தனதறையில் நுழைந்து கட்டிலில் அமர்ந்தாள். மார்பு படபடவென அடித்து கொண்டது.
   ஆனால் அவன் கூடத்து விளக்கை அணைத்துவிட்டு அவள் அறையில் நுழைந்து கதவைச் சாத்தித் தாழ்பாள் போட்டான்.
   ஒனக்கு மேல வரப்புடிக்கலன்னா  என்ன? நா ஒங்கூட இங்க இருந்துடுறேன். எனக்கொன்னும் இதுல அவமானம் கெடையாது." அவளருகில் அமர்ந்தான். அவள் சட்டென்று எழுந்து கொண்டாள்.
   என்ன மீனா..?அவன் அருகில் வந்தான்.
   வேண்டாங்க. இதெல்லாம் தப்பு. யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க..? குரல் மெதுவாக வந்தது.
   ஏய்.. நீ என்னோட பொண்டாட்டி. நீ இன்னும் பத்து வருஷம் கழிச்சி வந்தாலும் என்னோட பொண்டாட்டி தான். இதப் போயி யாரு தப்பா நெனைப்பங்க..?
   அதுக்கில்லைங்க.. கண்மணி.. கண்மணி.. எங்க..?
   கண்மணியா..? இப்ப எதுக்கு அவ? எப்பபாரு. கண்மணி.. கண்மணின்னுட்டு.. இங்க நா ஒருத்தன் ஒனக்காக தவியா தவிக்கிறேனே.. இது ஒனக்கு தெரியலையா..? ஒனக்கு என்னைவிட அவதான் முக்கியமா..? நானும் வந்ததிலேர்ந்து பாக்குறேன். எப்பப்பாரு அவள பத்தியே பேசிக்கினு இருக்கே.. எனக்குன்னு ஆச பாசம் இருக்காதா..?
   கத்தினான்!!
   மீனா மிரண்டு விட்டாள். அவன் கோபத்திற்கு என்ன பதில் பேசுவது என்றே அவளுக்குத் தெரியவில்லை. அவளின் மிரண்ட விழிகளைப் பார்த்ததும்.. அவன் தன்னை நிதானப் படுத்தினான்.
   மீனா.. கண்மணி அவ அம்மா வீட்டுல சந்தோஷமா நிம்மதியா இருக்கிறா. போதுமா..? இப்ப எனக்கு அவள பத்தின நெனப்பு எதுவும் கொஞ்சம் கூட  இல்ல. எனக்கு வேண்டியது எல்லாம் இப்ப நீதான். நீ மட்டும் தான். என்ன புரிஞ்சிக்கோம்மா.. நா ஒம்மேல எவ்வளவு ஆச வச்சிறுக்கேன் தெரியுமா..?
   அவளை இழுத்து மார்போடு அணைத்துத் தழுவினான். மீனா அவனை விட்டு விலக நினைத்தாள். நினைத்தாள். நினைத்துக் கொண்டே இருந்தாள்.
   ஆனால் அவளால் அவனைவிட்டு விலக முடியவில்லை! இப்பொழுது அவளுடைய உணர்வுகளுக்கும் அவன் தேவை.
   காமத்தீ எதில் துவங்கி எங்கே முடிவது என்று யாருக்கும் தெரியாமல் அணைந்து போவது தானே!!

                           (தொடரும்)

Tuesday 21 May 2013

போகப் போகத் தெரியும் – 54





   ஒரு கண்ணாடியை உடைக்கப் பயன்படுத்தும் சுத்தியைக் கொண்டே.. இரும்புக்கு உருவம் கொடுத்துவிட முடியும். ஆனால் சுத்திக் கடினமானதாக இருக்கவேண்டும்.
   மீனா தன் மனத்தைக் கடினமானதாக மாற்றிக் கொண்டு விட்டாள். அதனால் தான் அவளால் தன் கணவனைவிட்டுப் பிரிந்து போக முடிந்தது. அவள் போனதால் தான் அவளுடைய கணவனின் வாழ்க்கை சீர் படுத்தப்பட்டு அர்த்தம் கிடைத்தது.
   மீனா உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தாள். தான் இங்கே வராமலேயே கனடா போய் இருந்தால்.. இந்த வார்த்தைகள் அவள் மனத்தில் கேள்விக் குறியாகத் தான் இருந்திருக்கும். அவளுக்குக் கண்மணியிடம் பேச வேண்டும் என்று ஆவலாக இருந்தது.
   காபி கொண்டு வந்த அறிவழகி மீனாவைக் கண்டதும் முகம் சுருக்கினாள். மீனாவிற்கு அறிவழகியைப் பார்த்தது சந்தோஷம். ஆனால் அவள்.. எதுக்குடி இங்க வந்த..? நாங்க இருக்கோமா..? செத்துட்டோமான்னு பாத்துட்டுப் போவ வந்தியா..? கோபமாகக் கேட்டாள்.
   மீனா சிரித்துக் கொண்டாள். காரணம் தெரியாத கோபம். யாருக்கும் நன்மை பயக்காது. கொஞ்சம் தணியட்டும். காரணத்தை விளக்கி சொன்னால்.. புரிந்து கொள்வாள்.." எனறு நினைத்தபடி எழுந்து தன் அறைக்குச் சென்றாள்.
   அவள் போன பொழுது அந்த அறையை எப்படி விட்டுச் சென்றாளோ.. அதே போல் அந்தந்தப் பொருட்களும் அந்தந்த இடத்திலேயே இருந்தன. அறையைச் சுத்தப்படுத்திவிட்டு அந்தந்தப் பொருட்களை அப்படியே வைத்துவிடுவார்கள் என்பது நன்றாகப் புரிந்தது. குளித்துவிட்டு வேறு உடையை உடுத்திக் கொண்டாள்.
   இத்தனை நாட்களாக வெள்ளையில் நீல கரை வைத்த நூல் சேலையைத் தான் கட்ட வேண்டும். அது அங்கே அவளுக்குப் பிடித்தும் இருந்தது. அந்தச் சேலையுடன் தான் இங்கே வந்தாள். ஆனால்.. இங்கே ஏனோ அதைக் கட்டிக் கொள்ள விருப்பம் இல்லை.
   வெள்ளை மனத்தைச் சுத்தமாக வைத்திருந்ததைப் போல் இருந்தது. வண்ணப் புடவை இலேசான மகிழ்ச்சியைக் கொடுக்கத்தான் செய்கிறது. ஏதோ நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த மகிழ்ச்சி புடவையால் மட்டும் இல்லை என்பதையும் அவள் உணர்ந்து தான் இருந்தாள்.
   தொலைபேசியை எடுத்துக் கண்மணியின் அப்பா வீட்டிற்கு எண்களை அழுத்தினாள். எதிர் முனையில் கண்மணியின் அம்மா..
   யாரு மீனாவா..? ஆத்தூர் மீனா தான..? எப்படிமா இருக்க..?
   ம்.. கண்மணி இல்லையா..?
   இங்க தாம்மா இருந்தா. இப்பத்தான் அவ புருஷன் வந்து வெளிய கூட்டிக்கினு போனாரு. பேறு கால நேரம். இந்த மாதிரி நேரங்கெட்ட நேரத்துல வெளிய போவக் கூடாதுன்னா.. எங்க கேக்குதுங்க? ஒன்ன விட எம்புருஷன் நல்லா பாத்துக்குவாருன்னு சொல்லுறா. எங்க போனாங்கன்னு தெரியல. வந்தா சொல்லுறேன்." என்றாள்.
   மீனா தொலைபேசியை அதனிடத்தில் வைத்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தாள். எங்க கூட்டிக்கினு போய் இருப்பார்? ஒரு சமயம் கண்மணியைப் பத்தி கேட்டதால.. இங்க தான் அழைச்சிக்கினு வருவாரோ..? அப்படி தான் இருக்கும். அவளே பதிலைத் தேடிக் கொண்டாள்.
   விழாவிற்காகப் போடப்பட்ட பாடலில் இசை தான் அதிகமாக இருந்தது. அதில் பாடகியின் குரலோ.. பொருளோ.. விளங்கவில்லை. முந்திரி அல்வாவில் முந்திரியைத் தேடுவது போல் இருந்தது.
   மீனா கண்மணியின் வருகைக்காகக் காத்திருந்தாள். பெரிய பிள்ளையார் வயிற்றுடன் வரும் அழகை ரசிக்க வேண்டும். தன்னைப் பார்த்ததும் எப்படி வெட்கப்படுவாள்..? வெட்கப்படுவாளா..? கோபப் படுவாளா..? இல்லை.. பயப்படுவாளா..? எப்படி இருக்கும் அவள் நிலை?
   அக்கா.." யாரோ கூப்பிடத் திரும்பினாள். முகத்தில் ஆச்சர்யம்! மாதவனா..? அவனைப்போலவே.. ஆனால் அவனைவிட இவன் சிறியவன். முகத்தில் இலேசான முடி. மீசை சற்றுக் கருகருப்பாக.. ஆனால் உயரம் உடலமைப்பு எல்லாம் மாதவனைப் போலவே..
   அக்கா.. சக்திவேலு அண்ணன் இன்னைக்கி தோட்டத்து வீட்டுல தங்கிடுவாராம். சாப்பாடு குடுத்துவிட வேணாம்ன்னு அறிவழகி அம்மாகிட்ட சொல்லிட சொன்னாரு. நீங்க சொல்லிடுங்க."
   அவன் போய்விட்டான். மீனா ஏமாற்றத்துடன் நின்றிருந்தாள். கண்மணிய அழைச்சிக்கினு போய்த் தோட்டத்து வீட்டுலத் தங்குகிறார். எதுக்காக..? நான் பார்க்கக் கூடாது என்று நினைத்துவிட்டாரா..?  மீனா யோசித்தாள்.
   இருக்கலாம். நிறைமாதக் கர்ப்பிணி. என்னைப் பார்த்தால் நான் ஏதோ அவள் வாழ்க்கையைப் பறிக்க வந்துவிட்டேன்னு நினைத்துப் பயந்துவிடப் போகிறாள்.. என்று நினைத்து இருக்கலாம். அல்லது இவள் குழந்தையே பெத்துக்க முடியாத மலடி. இவள் கண்பட்டால் ஏதாவது ஆகிவிடுமோ என்று நினைத்தும் இருக்கலாம்.
   இதுவும் நல்லது தான். நாம் தான் அதையெல்லாம் யோசனை செய்து பார்க்கவில்லை. அவ நல்லா இருக்கட்டும். முடிந்த அளவுக்கு நாம் சீக்கிரமாக ஊருக்கு கிளம்பிவிட வேண்டும். தனக்குத் தானே முடிவெடுத்தாள்.
*************************************************************************

   தேர் ஆடி ஆடி அசைந்து வந்தது. அது வரும் பொழுது எங்கே விழுந்துவிடுமோ என்ற பயமும் வந்தது. தேருக்கு முன்பு பெரிய வாசுகி பாம்பைப் போன்ற கயிற்றை மக்கள் இழுத்துக் கொண்டு ஓடினார்கள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது கிடைத்த அமிர்தம் போல் தேரில் அகிலாண்டேசுவரி அம்மன் சிரித்தாள். உடலை மூடிய நகைகள். முகம் பொற்றாமரையாகப் பூத்து இருந்தது.
   தேர் தேரடியில் வந்து நிற்கவும்.. மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மீனா தேருக்கு முன் சென்று  சக்திவேல் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்  என்று பிராத்தித்துச் சூடத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
   வடம் பிடித்து இழுத்தவர்கள் ஆற்றை நோக்கி ஓடினார்கள். அவர்கள் குளித்துவிட்டு வந்து கடவுளை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்!
   மீனா நிழலான ஓர் இடத்தில் நின்று கொண்டாள். தம்பதியாகச் சாமி கும்பிட்டுவிட்டுக்  கணேசனும் கமலாவும் போனார்கள். கணேசன் மீனாவைப் பார்த்துவிட்டுக் கமலாவிடம் சொல்ல.. அவள் மீனாவிடம் ஓடி வந்தாள்.
   மீனா நல்லா இருக்கியா..? அன்னைக்கி நா தூங்கினு இருக்கும் போது போயிட்டியே.. எனக்கு எவ்ளோ திட்டுக் கெடைச்சது தெரியுமா..? ஆமா.. இப்ப எப்டி இருக்க..?
   நல்லா இருக்கேன். உங்க புருஷன் உங்கள நல்லா கவனிச்சிக்கிறாரா..? கணேசனைப் பார்த்தபடி கேட்டாள்.
   ம்.. அதெல்லாம் நல்லா கவனிச்சிக்கிறாரு. ஆனா முன் கோவம் ஜாஸ்த்தி. இருந்தாலும் நீ என்னைத் தான் கல்யாணம் செஞ்சிக்கணும்ன்னு சொன்னதால.. எனக்கு ஒரு நல்ல வாழ்க்க கெடைச்சிது. அவரோட தாத்தாவும் பாட்டியும் செத்துட்டாங்க. அம்மா மட்டும் தான். ரொம்ப நல்லவங்க. அவங்களும் என்ன முழுமனசா ஏத்துக்கனாங்க. ஒரு கொழந்த இருக்குது மீனா. ரெண்டு மாசமாவுது. வெயில்ல வேணான்னுட்டு வீட்டுல அத்தகிட்ட விட்டுட்டு வந்திருக்கேன். வாயேன். வந்து பாத்துட்டுப் போயேன்." என்றாள்.
   இவள் எதுவும் சொல்வதற்கு முன்.. கமலா.. அவங்களே அந்த வீட்டுக்கு விருந்தாளியா வந்திருக்காங்க. அவங்க ஒறவு நமக்கு வேணாம். நீ வா. நாம போலாம்." அவள் தோள்பட்டையைப் பிடித்து இழுத்தது போல் அழைத்துக் கொண்டு போனான்.
   சற்று நேரத்தில் ருக்மணி அவள் கணவர் குழந்தையுடனும்.. மாலதி அவள் இரண்டு குழந்தைகளுடனும்.. இவளைப் பார்த்துக் கொண்டே எதுவும் பேசாமல் சென்றார்கள்.
   வடம் பிடித்துவிட்டுச் சென்ற கும்பலில் சக்திவேல், ஜுவா, சிவா, சேகர், சசி ஒரு கூட்டமாகச் சென்றார்கள். சிவா தான் அவளருகில் வந்தான். ஏன் இங்க தனியா நிக்குற..? வெய்யிலா இருக்குது. வீட்டுக்கு போ." என்றான்.
   மீனாவிற்குத் திருப்தியாக இருந்தது. ஏதோ இவன் ஒருவனாவது அக்கரையாகச் சொன்னானே..
   சிவா.. நீ காலேஜுல படிக்கும் போது ஒரு பொண்ண லவ் பண்ணியே.. கல்யாணம் பண்ணிக்கிட்டியா..? கேட்டாள்.
   அவன் ஒரு பெருமூச்சு விட்டான். அவளுக்கு நல்ல பெரிய வரன் கெடைச்சது. என்னைக் கட்டிக்கிறதை விட அவனைக் கட்டிக்கிட்டா நல்லா இருப்பான்னு நானே விட்டுக் கொடுத்துட்டேன். இப்போ வீட்டுல வரன் தேடுறாங்க. எந்தப் பொண்ணைக் காட்டுறாங்களோ.. அவள கட்டிக்க வேண்டியது தான்." என்றான்.
   மீனா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள். அப்படீன்னா.. காதல் வாலிபத்தின் பசின்னு சொல்லுறியா..?
   இல்ல மீனா. இளமைக்கு மனவிருந்து. அவ்வளவு தான். நமக்குப் பிடிச்சவங்க நல்லா இருக்கணும்ன்னு தானே ஆசப்படவோம். அதனால தான். அவளோட நல்ல வாழ்க்கைக்குத் தடை கல்லா நா இருக்கவிரும்பல. என்ன..... துவக்கத்துல அழுதாள். அப்புறம் கல்யாணம் பண்ணிக்கினாள்."
   நீ செய்தால் சரி. அதையே நான் செய்தால் தப்பா..?
   நீ செய்தது தப்பு தான் மீனா. நாங்க ரெண்டு பேரும் சேந்து பேசி முடிவெடுத்தோம். ஆனா நீ..? ஏமாத்திட்ட."
   மீனா பேசாமல் தலை குனிந்தாள். மற்ற நால்வரும் அங்கே வந்தார்கள். சிவா நிலைமை சமாளிக்க.. மீனா.. நம்ம ஜுவாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சி." என்றான்.
   அப்படியா..? எங்க உன் வொய்ப்..?
   கன்சீவாயி இருக்கா. தேர் பாக்கக் கூடாது. வீட்டுல இருக்கா." ஜுவானந்தம் சொன்னான்.
   ஓ.. கங்கராஜுலேஷன். ஏய்.. எல்லாத்துக்கும் நீ தான காரணம். ஆனா.. நீ மட்டும் தேர் வடம் புடிக்க வரலாமா..?
   அவன் பதில் சொல்லத் தெரியாமல் சிரித்தான்.
   மீனா.. பாலுக்கும் தண்ணீக்கும் தோஷமில்லன்னு சொல்லுவாங்க. அதே மாதிரி ஆண்களுக்கும் எதிலும் தோஷமில்லை." என்றான் சக்திவேல். அவன் அவளிடம் பேசியது சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால் இது தவறோ..? பேசாமல் நின்றாள். அவன் அவளைப் பார்த்தான்.
   மீனா.. வெய்யிலா இருக்குது. வீட்டுக்கு போ. நாங்க குளிச்சிட்டு வந்து மத்த வேலைகள பாக்கணும்." அவளிடம் சொல்லிவிட்டு வாங்க போவலாம்" முன்னே நடந்தான்.
   மீனா அவன் போவதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவன் தன்னுடையக் கணவன்! இன்று வேறு யாரோ ஒருவர் போல் செல்கிறான்.
   ஒரு பொருள் நம் கையில் இருக்கும் வரை அந்தப் பொருளின் மதிப்புத் தெரியாது. ஆனால் இன்று அதை இழந்துவிட்டு நிற்கிறாள். இல்லையில்லை விற்றுவிட்டாள். வேறு ஒருவர் அன்பை விலையாகக் கொடுத்து அவனை வாங்கிவிட்டார்கள்! அன்பிற்காகவே அவனை விற்றவள். அதன் பிறகு அன்பிற்காக ஏங்கக் கூடாது.
   ஆனால் அன்பு வாங்கவும் விற்கவும் கூடிய பொருள் ஆகாதே.. உடலுடன் சேர்ந்தது தானே மனம்! உடல் யாருக்குச் சொந்தமோ.. மனமும் அவர்களுக்குத் தானே சொந்தம்.
   அப்படியில்லை என்றால்.. கண்மணியை அவளிடம் அழைத்து வந்திருக்கலாமே.. நாம் பார்த்தால் அவளுக்கு ஏதாவது உடம்புக்கு வந்துவிட போகிறது என்று அவளை மறைப்பாரா..? மனிதர்களின் மனம் எப்படியெல்லாம் மாறி விடுகிறது?
   கண்களில் வரத் துடித்த கண்ணீரை அடக்கினாள். நாம் இங்கே வந்திருக்கவே கூடாது. தவறு செய்து விட்டோம் என்று மனது அவளுக்கு உருத்தியது.
   மீனாவாம்மா.. எப்படி இருக்கிற..? யோகி ரத்தினம் கேட்டுக் கொண்டே வந்தார். மீனா அவரைப் பார்த்துச் சிரித்தாள். கண்கள் கலங்கியிருந்ததைக் கவனித்து விட்டார். கண்களால் கேள்வி கேட்டார்.
   ஐயா.. காய்ச்ச மரம் கல்லடி படும். காய்க்காத மரம் சொல்லடிப்படும். சொல்லால அடிச்சிட்டாலும் பரவாயில்ல. அதன் காற்றைச் சுவாசிப்பது கூடத் தோஷம்ன்னு விலகிப் போற சமுதாயத்துல என்னால சந்தோஷமா வாழ முடியும்ன்னா நெனைக்கிறீங்க?
   மீனா.. நீ யார சொல்லுறன்னு எனக்குத் தெரியாது. உன்னைக் கோபத்துலக் கூடத் திட்ட விரும்பாதவங்க நம்ம ஊர் ஜனங்க. அவங்களோட கோபத்தை எப்படிக் காட்டுறதுன்னு தெரியாம விலகிப் போய் இருக்கலாம். அத நீ தப்பா புரிஞ்சிக்கினு இருக்கிற. அது மட்டுமில்ல. நீ செஞ்சது சரியா..? தப்பான்னு முடிவுக்கு வரத்தெரியாம நடுநிலையில இருக்கிறதால உங்கிட்ட என்ன பேசறதுன்னு தெரியாம போய் இருப்பாங்க. நீ யாரையும் தப்பா நெனைக்காதம்மா. உன்னோட நெலம எல்லாருக்கும் தெரியும். புரியும். அதனால கவல படாத. போ. வெய்யிலுல நிக்காத."
   அவர் கிளம்பத் தானும் நகர்ந்தாள்.


                                                                    (தொடரும்)