Wednesday 28 March 2012

போகப் போகத் தெரியும் - 4



தொடர்கதை பாகம் -4

   
    அழுது கொண்டிருந்த சிறுவனைச் சமாதானப் படுத்தத் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த கணேசனைக் கை தட்டிக் கூப்பிட்டாள் மீனா.
    'அலோ... தத்துவஞானி....உங்களைத்தான்... இங்க கொஞ்சம் வாங்களேன்......’
    அந்த உயரமான ஒல்லியான தேகத்தை உடைய கணேசன் தனக்குப் பின்னால் யாராவது இருக்கிறார்களா என்று திரும்பிப் பார்த்தான். யாருமில்லை!
    'அலோ... உங்களைத் தான். " மீனா திரும்பவும் அவனைப் பார்த்துக் கூப்பிட்டதும் தன்னைத்தான் கூப்பிடுகிறாள் என்று தெரிந்ததும் அவளைப் பார்த்து முறைத்தவாறு அவளருகில் வந்தான்.
    'நீங்கத்தானே லா படிக்கிறவர்?"
    'அது இருக்கட்டும். நீ மொதல்ல என்னை என்னன்னு சொல்லிக்  கூப்பிட்ட?"
'ஏன்? தத்துவஞானின்னு."
'நான் சொன்னேனா......? என்னைத் தத்துவஞானின்னு?"
    'தத்துவஞானிகள் யாரும் தன்னைத் தத்துவஞானின்னு சொல்லிக்கிறதில்லை. மற்றவர்கள் சொன்னால் தான் உண்டு."
'அப்படி என்ன தத்துவம் சொன்னேன்?"
    'நேத்து அந்த ராமு கிட்ட என்ன சொன்னீங்க? சட்டங்கள் மக்களால உருவாக்கப்பட்டன. அதற்கு ஏழை எளியவர் என்ற பாகுபாடு கிடையாதுன்னு சொன்னீங்களா இல்லையா?"
'ஆமாம் சொன்னேன். இதுல என்ன தத்துவம் இருக்குது?"
    'சட்டம் ஒர் இருட்டரை. அதில் வக்கிலின் வாதம் ஒரு விளக்கு. அது ஏழைக்கு எட்டாத விளக்குன்னு அறிஞர் அண்ணா சொல்லி இருக்கிறார். அந்த தத்துவத்தையே நீங்க மாத்தி சொல்லிட்டீங்களே..... அதனாலத் தான் நான் உங்கள தத்துவஞானின்னு சொன்னேன்."
'உண்மையைச் சொன்னால் அது தத்துவமாகிடுமா.......?"
    'உண்மையைக் கூட சொல்லுறவங்க சொல்லுற விதமா சொன்னால் தான் அது மக்களைப் போய் அடைய முடியும். மக்களை யோசிக்கத் தூண்டச் செய்யும் ஒவ்வொரு வாரத்தைகளுமே தத்துவங்கள் தான்."
    அவன் அவள் வார்த்தைக்குப் பதில் பேச முடியாமல் சிரித்துக் கொண்டான். உண்மையை எதிர்த்து வாதாட முடியாது.
'சரிசரி. இப்போ எதுக்கு என்னை கூப்பிட்ட...?"
    'நீங்க சட்டம் படிக்கிறவர். நீங்களே சொல்லுங்க. ஒரு பத்து வயசு பையனை ஜெயில்ல போட முடியும்ன்னு எந்த சட்டமாவது சொல்லுதா..?"
    'அப்படி எந்த சட்டமும் சொல்லலை. ஆனால் தன்னுடையத் தந்தையின் பேச்சிக்கு கீழ் படிஞ்சி நடக்கணுமின்னு எல்லா வேத நூல்களும் சொல்லுதே!"
    'தவறான செயல்களுக்குப் பயத்தினால் வேண்டுமானால் கீழ் படியலாம். ஆனால் நல்லவர்கள் உண்மைக்கும் அன்புக்கும் நல்லவைகளுக்கும் மட்டும் தான் கீழ் படிவார்கள் இல்லையா....?"
'ஆமாம்"
    'அப்போ வேத நூல்கள் சிறுப்பிள்ளைகளைப் பயமுறுத்துகிறதா....?"
    நிதானமாகக் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டாள்.
அவன் அவள் கேள்வியைச் சிரித்துக் கொண்டே சிந்தித்தான்.
    'டேய் ரவி. நீ போய் விளையாடுடா. தப்பு செய்யிறவங்க தனியாவே செஞ்சிக்கட்டும். நீ தொனப் போவாத...."
ரவி தலையாட்டி விட்டு ஓடினான்.
    மீனா கையிலிருந்த புத்தகத்தை உயரே தூக்கிப்  போட்டுப் பிடித்துத் திரும்பவும் அதே போல் செய்து கொண்டே நடந்தாள். இது அவளுடைய வழக்கம். கையில் எந்தப்பொருள் இருந்தாலும் இப்படித்தான் தூக்கிப் போட்டு பிடித்தபடி நடப்பாள்.
'மீனா...." கணேசன் கூப்பிட்டான்.
    'என்ன தத்துவஞானி?" கேட்டுக் கொண்டே அங்கே இருந்த ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தாள். நேற்று காலில் பட்ட காயம் வலித்தது. அந்த வீட்டெதிரில் அன்று பார்த்த மோட்டார் பைக் நின்றிருந்தது.
    'மீனா யோசிச்சிப் பாத்தா நீ சொன்னது உண்மைத்தான். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்குது மீனா." என்றான் சினேகிதமாக.
    மீனா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள். எல்லா ஆண்களுமே இப்படித்தானா...? ஏதோ ஒன்றை எதிர்ப்பார்த்துத்தான் பெண்களிடம் பேசுவார்களா....? இலேசாகக் கோபம் வந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது.
    'இதோ பாருங்க.... இதோட நிறுத்திக்கோங்க. அதுக்கு மேலே எதையும் சொல்லிடாதீங்க....." சிரித்துக் கொண்டே சொன்னாள்.
'அதுக்கு மேலேயா....அப்படீன்னா...?" புரியாமல் கேட்டான்.
    'ஏதாவது காதல் கீதல்ன்னு....." அவள் இழுத்தாள். அவன் புரிந்துக் கொண்டு அவளை வேண்டுமென்றே வம்புக்கிழுத்தான்.
    'ஏன் சொல்லக் கூடாதா....? சொன்னா எதுவும் தப்பில்லையே.......?"
    'தப்பில்லைத் தான். ஆனால் நான் வேற ஒருத்தர காதலிக்கிறேனே......" மிகச் சாதாரணமாகச் சொன்னாள்.
    'என்ன.... நீ காதலிக்கிறியா.....? அப்படிப் பட்ட அதிஷ்டக்காரன் யார்?" கிசுகிசுப்பாகக் கேட்டான். காதல் ஒரு கிசுகிசுத்தானே!
'சக்திவேல்" அவள் சத்தமாகச் சொன்னாள்.
    'என்ன சக்திவேலா.....? நம்ம ஊர் சக்திவேலா....?" அவனின் கண்களிலும் குரலிலும் ஆச்சர்யம்!
'ஆமாம். நம்ம ஊர் சக்திவேலேத்தான்."
'அதுக்கு அவர் சம்மதிச்சிட்டாரா.....?"
'தெரியாது."
'தெரியாதா....? பிறகெப்படி....?"
'இனி மேலத்தான் என் காதலை அவர்கிட்ட சொல்லப் போறேன்."
    அவன் அவளை யோசனையுடன் பார்த்தான்.
'மீனா நீ அவரைப் பாத்து இருக்கியா...?"
    'பாத்ததுமில்ல. பேசினதுமில்ல. இனிமேலத் தான் பாத்துப் பேசணும்."
    'ரொம்ப நல்லதா போச்சி. மீனா எங்கிட்ட சொன்ன மாதிறி யார்கிட்டேயும் இப்படி ஒளறிடாத."
'ஏன்.....?"
'சக்திவேலப்பத்தி உனக்கு என்ன தெரியும்...?"
    'ரொம்ப நல்லவர். ஊரோட நல்லதுக்காக உண்மையான மனசோட உழைக்கிறவர். படிக்கிறார்ன்னு அம்மா சொன்னாங்க."
    'இவ்வளவு சொன்னாங்களே..... அவருக்கு வயசு என்னன்னு சொன்னாங்களா...?"
    'ஏன்.....? எம் ஏ கடைசி வருஷம். இருவத்தஞ்சிக் குள்ளத் தான் இருக்கும்."
'அதான் இல்ல. அவருக்கு வயசு முப்பத்திரெண்டு."
'என்ன.....? எப்படி.... பெயிலாயி பெயிலாயி படிச்சாறா.....?"
அவன் வந்த சிரிப்பை அடக்கினான்.
    'அப்படியில்ல. அவருக்கு நிறைய படிக்கணும்மின்னு ஆசை. ஆனா சின்ன வயசுல முடியல. தன் ஊருல எல்லாப் பிள்ளைகளையும் படிக்க வச்சார். அப்புறம் தான் நங்களெல்லாம் சொல்லி அவரை வறுப்புறுத்தினதால விட்ட படிப்பைத் தொடர்ந்தார். அதனாலத் தான் படிக்கும் போதே இவ்வளவு வயசாயிடுச்சி."
முகத்தைக் கவலையாக வைத்து கொண்டுக் சொன்னான்.
'ப்ச்சி.... ஆமா அவரோட கொணம் எப்படி?"
அவளின் குரல் கவலையுடம் வந்தது.
    'மகா முரட்டுக்குணம். முன்கோபி. தப்புன்னு யாராவது செஞ்சா உடனே அருவா அவர் கைக்கு வந்துடும். தைரியசாளி. ஆனாலும் அன்பானவர்."
'ம்.....பாக்க எப்படி இருப்பாரு?"
    'ஒரு சுத்த வீரனுக்கு உரிய எல்லா அம்சமும் அவர்கிட்ட இருக்குது. பாக்க அவ்வளவு வயசுன்னு யாரும் சொல்ல மாட்டாங்க. ஆனா ஒரே ஒரு விசயத்துல அவர் ரொம்ப பலகீனமானவர்."
'என்ன அது?"
'பெண்கள்."
'என்னது......பெண்கள் விசயத்துல பலகீனமா....?"
    'ஏய்....ஏய்.....தப்பா புரிஞ்சிக்காத. பொண்ணுங்களப் பாத்தால் ரொம்ப கூச்சப்படுவார். எந்தப் பொண்ணையும் நேருக்கு நேர் நின்னு பாத்து பேசமாட்டார். அதிலும் நம்ம ஊர் பொண்ணுகன்னா அவருக்கு தெய்வங்க மாதிரி! ஆமா.... நீ ஏன் இதையெல்லாம் கேக்கிற?"
எல்லாவற்றையும் சொல்லிவிட்டுக் கேள்வி கேட்டான்.
    'இன்னைக்குத்தான் என்னோட காதலை அவர் கிட்ட சொல்லப் போறேன். அதனுல தான் அவரைப் பத்தி தெரிஞ்சிக்கிலாமேன்னு....."
    'இவ்வளவும் தெரிஞ்சப் பிறகுமா உன் காதலைச் சொல்லப் போறே.....?"
'ஆமாம்."
'அறிவிருக்குதா உனக்கு?" கோபமாகக் கேட்டான்.
    'நிறைய இருக்குது. அதனாலத்தான் நான் அவரை காதலிக்கப் போறேன்."
'மீனா யோசிச்சிப் பாரு. உனக்கு அந்தத் தகுதி இருக்குதா....?"
இப்பொழுது அவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.
'தகுதின்னு நீங்க எதை சொல்லுறீங்க?"
    'எல்லாத்தையும் தான் சொல்லுறேன். நெனைச்சிப் பாரு. நீ இன்னைக்குப் படிக்கிறதே அவரோட தயவுலத்தான்."
    'இருக்கட்டும். நாளைக்குச் சம்பாதிச்சா திருப்பிக் கொடுத்திட போறேன்." கோபமாகச் சொன்னாள்.
    'பணத்தை உன்னால கொடுக்க  முடியும். ஆனால் நீ படித்த அந்த அறிவு அவர் போட்டப் பிச்சையில்லையா.......?"
கோபப்படாமல் சிரித்தாள்.
    'இந்த மாதிரி நீங்க யோசிக்கிறதாலத்தான் நான் உங்கள தத்துவஞானின்னு சொன்னேன். ஆனால்.....உங்களுக்கு ஒன்னுத் தெரியுமா....? என்னால என்னோட படிப்பையும் அவருக்கு திருப்பித் தர முடியும்."
'எப்படி....?"
    'அப்படி கேளுங்க. நீங்க சட்டம் படிக்கிறவர். படிச்சி முடிச்சதும் ஏதாவது ஒரு பெரிய ஊருக்குப் போய் அந்த மக்களுக்காக வாதாடுவீங்க. உழைப்பீங்க. காசு சம்பாதிப்பீங்க. ஆனா நான் கல்லூரியில சேர்ந்து விவசாயம் படிக்கப் போறேன். இன்றைய டெக்னாலேஜீயில நிறைய மாற்றங்கள் முன்னேற்றங்கள் வந்திருக்கு. படிப்பு முடிஞ்சதும் நம்ம ஊர் விவசாயத்திற்கு உதவப் போறேன். அதனுல என்னோட படிப்பு அறிவையும் அவருக்குத் திருப்பித் தர முடியும். அவ்வளவு தான்."
    தோள்களை உயர்த்திச் சிரித்துக் கொண்டே சொன்னாள். அவன் அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தான். தத்துவங்கள் எல்லோருடைய வார்த்தையிலும் ஓடி விளையாடுவது கிடையாது. ஆனால் ஒரு சிலர் சொல்லுவதே தத்துவமாகி விடுகிறது. அப்படிப் பார்த்தால் கணேசனின் பார்வைக்கு இதோ ஒரு தத்துவஞானி நின்று கொண்டு சிரிக்கின்றாள்;.
    'என்ன யோசிக்கிறீங்க? இவளை எப்படி தடுக்கலாம் என்றா....? வேண்டாம். வீண்யோசனை. ஆமாம்..... இன்னைக்குத் தானே பொது விசயமாக சக்திவேலை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்....? நான் போனால் பேசுவாரா....?"
சற்று தயக்கமாகக் கேட்டாள்.
'போய் பாரு."
    'ஆமா.... காதலைச் சொல்ல சிகப்பு ரோஜாவைத் தானே கொடுக்கணும்?"
    'அப்படித்தான் நெனைக்கிறேன். காலேஜில பேசிக்குவாங்க. ஆனா மீனா.... நீ ரோஜான்னு சொல்லி ஒரு இலைய பறிச்சி கொடுத்தா கூட நம்ம ஊர் பசங்க வாங்கிக்குவாங்க." அவன் சிரித்துக் கொண்டே சொன்னான்.
    மீனா சிரிக்கவில்லை. சிந்தித்தாள். இந்த ஊர் இளைஞர்களுமா இப்படி? ஆனால் இதுவரை யாரும் தன்னிடம் தவறாகப் பேசியதோ.... நடந்து கொண்டதோ...இல்லையே... யோசிக்கும் பொழுது நேற்று நடந்தது ஞாபகத்திற்கு வந்தது. ஒரு பெருமூச்சி விட்டாள்.
    'சரி தத்துவஞானி. நான் கிளம்புறேன். இன்னைக்கு எப்படியாவது சக்திவேலைப் பார்த்துப் பேசிடணும். அம்மா வேறத்தேடுவாங்க."
    சொல்;லிக் கொண்டே கையிலிருந்த புத்தகத்தைத் தூக்கிப் போட்டுப் பிடித்தபடி நடந்தாள். அவளையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த கணேசன் சொன்னான்.
'சக்திவேல் நீ ரொம்ப கொடுத்து வச்சவன்டா......" என்று.
    கணேசன் சொன்னதும் 'ரொம்ப தாங்ஸ்ண்ணா......" ஜன்னலில் இருந்து குரல் வந்தது.
கணேசன் சிரித்துக் கொண்டே கிளம்பினான்.

-தொடரும-

Thursday 22 March 2012

போகப் போகத் தெரியும் - 3


 

தோடர்கதை பாகம் – 3


'மீனா........" டாக்டர் அழைத்தார்.
    'என்ன டாக்டர்?"
    'மீனா..... நானும் உனக்கு நன்றி சொல்லனும்மா..... நான் செய்யாத தப்புக்காக ஜெயிலுக்குப் போனேன். என் மீது தப்பு இல்லைன்னு தெரிஞ்சதும் விடுதலையானேன். ஆனால் என் மனசு வெறுத்துடுச்சி. வெளியே வந்த நான் இனி மருத்துவம் என்ற பேரில் யாருக்கும் உதவி செய்யக்கூடாதுன்னு வைராக்கியமா இருந்தேன். ஆனால் என் மனசைமாற்றி நோயாளிகளுக்கு உதவி செய்வது கடவுளுக்கு நேரடியாகப் பாதப+ஜை செய்வதற்குச் சமம்ன்னு தெரியப்படுத்தி என் மனதைத் தெளிவுப்படுத்தி நீ எழுதின கடிதத்தைப் பார்த்த பிறகு தான் நான் இந்த ஊருக்கு மருத்துவம் செய்ய வந்தேன்.
    நோய் என்பது பணக்காரனுக்கு மட்டுமில்லை. ஏழைக்கும் அழையாத விருந்தாளி தானே..... இருப்பவனிடம் பணத்திற்காக உழைப்பதை விட இல்லாதவனிடம் அன்புக்காக உதவி செய்வது எவ்வளவு உயர்வான இன்பம்ன்னு புரிஞ்சிக்கினேன். இங்க வந்திலிருந்து உண்மையாகவே நான் சந்தோசமா இருக்கிறேன்.
    நான் ஜெயில்ல இருந்து வெளியே வந்த இந்த நான்கு வருஷத்துல இப்போதுத்தான் உண்மையா சந்தோசமா இருக்கிறேன். இதுக்கு முக்கியக் காரணம் நீ தான். அதனால உனக்கு ரொம்ப நன்றிம்மா....."
    கை கூப்பிக் கும்பிட்டார்.
    மீனாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இவளும் அவரைப் பார்த்து நன்றியுடன் கும்பிட்டாள். ஒருவருக்குச் செய்யும் உதவிக்கூட உண்மையான மனமகிழ்ச்சியுடன் செய்தால் தான் அந்த உதவியின் பலன் அவர்களைப் போய் அடையும். டாக்டர் மகேந்திரனைப் பார்த்தும் புரிந்து போனது.
    மீனா வீட்டை நோக்கி நடந்தாள். இருள் வெளிச்சத்தை விரட்டி விட்டிருந்தது. இருளில் அவளுக்குப் பயமில்லை. அவள்   மனம் டாக்டரை நினைத்து அசைபோட்டது.
    இந்த ஆத்தூரில் ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட நாளில் படித்த அனைவரையும் கூப்பிட்டு ஒரு கூட்டமாகக் கூடி தங்களின் கிராமவளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்று பேசுவது வழக்கம்! அந்தக் கூட்டத்தில் படித்த பெரியவர்கள் மட்டுமல்லாமல் படித்துக்கொண்டிருக்கும் மாணவ மாணவியரும் கலந்துகொள்ள வேண்டும். அப்படி கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்களுக்கு ஏதேனும் விருப்பமிருந்தால் அதை எழுதி அங்கே படித்துக் காட்ட கொடுத்துவிடலாம்.
    ஒன்னரை வருடத்திற்கு முன் இந்த ஊருக்கு வந்த மீனாவிற்கு இப்படியான ஒரு கூட்டம் கூட இருப்பது  அதிசயமாகப் பட்டது. ஆனால் எவ்வளவு முக்கியமான  செய்தி இதில் அடங்கி இருக்கிறது என்று நினைத்து வியப்படைந்தாள்! 
   
       
    அவள் அப்போழுது ஒரு முதியோர் இல்லத்தில் பள்ளி விடுமுறையில் வேலை செய்து கொண்டிருந்தாள். அதனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் தன்னுடைய விருப்பமான 'இந்த ஊருக்கு ஒரு டாக்டர் தேவை. அதிலும் உண்மையான சேவை மனப்பான்மை உள்ளவராக இருக்க வேண்டும். அது தற்பொழுது விலாசம் குறிப்பிட்டு அந்த விலாசத்தில் இருக்கும் டாக்டர் மகேந்திரனிடம் போய்க் கேட்டுப்பாருங்கள் ; என்று ஒரு பெரியக்கடிதமாக எழுதித் தன் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி வசிக்கும் சட்டக்கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் கணேசனிடம் கொடுத்துவிட்டுப் போனாள்.
    கடிதம் கூட்டத்தில் படிக்கப்பட்டது. அப்பொழுதே யார் இந்த மீனா? என்றக் கேள்வி எல்லோருடைய மனத்திலும் எழுந்தது. இருந்தாலும் ஊர் பெரிய மனிதர்கள் நிறையப் பேராகச்சென்று டாக்டர் மகேந்திரனிடம் பேசிப்பார்த்தும் அவர் வர மறுத்துவிட்டார்.
    திருவிழாவிற்கு ஊரக்கு வந்த மீனாவிற்கு டாக்டர் வர மறுத்தது தெரிந்ததும் அவளே அவருக்குத் தன் கைப்பட கடிதம் எழுதிப்போட்டாள்.
    கடிதம் யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதில் உள்ள வார்த்தைகளின் உண்மைச் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். உண்மையில் அவள் அப்படியான சக்திவாய்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியே கடிதம் எழுதினாள்.        இதோ...... எழுத்துக்களின் சக்தியை    விட எழுதியவரின் சேவை உள்ளம் புரிந்து தன்னுடைய வைராக்கியத்திலிருந்து விலகி உண்மை புரிந்து வந்துவிட்டார். தவறான சபதங்கள் வெறும் காற்று மட்டும் தான்.
    மீனாவும் இன்று தான் அவரைப்பார்த்தாள். ஒவ்வருக்கும் கடவுள் நேரடியாக வந்து உதவி செய்ய முடியாது என்பதற்காகத் தான் தாயைப்படைத்தார் என்பதைப் போல ஒவ்வொரு நோயாளிக்கும் உதவி என்ற பெயரில் ஆறுதல் அளிக்க கடவுள் மருத்துவர்களைக் கனிவுள்ளம் கொண்டவர்களாகப் படைத்துள்ளார் போலும்!
    இதோ டாக்டர் மகேந்திரன் ஓர் அத்தாட்சி.
    மீனா நன்றியுடன் டாக்டரை நினைத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தாள். சாலை விளக்குகள் திட்டுத்திட்டாக வெளிச்சப் ப+க்களைத் தூவி இருந்தது.



      0       0      0      0      0      0

    ஒரு பெண் கதறி அழும் ஓசை! மீனாவிற்குச் சட்டென்று விழிப்பு வந்து விட்டது. விளக்கைப் போட்டு மணியைப் பார்த்தாள். அதிகாலை ஐந்தடிக்க சில நிமிடங்கள்!
    'ஐயோ....... அம்மா......வலி தாங்க முடியலையே....."
    கதறிய சப்தம் தன் வீட்டிற்குப் பின் புறத்திலிருந்துத்தான் வந்தது. மாடியில் படுத்திருந்த அவள் பின் பக்க வீட்டைப் பார்த்தாள். அவள் வீட்டிற்கும் பக்கத்துத் தெரு வீட்டிற்கும் நடுவில் சிறு முள் வேலி. வேண்டுமானால் முள்வேலியை         நகர்த்திவிட்டு அந்த வீட்டிற்குப் போகலாம்.

    அந்த வீட்டில் தான் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஒரு சிலரின் பேச்சிக்குரலும் கேட்டது.
    என்னவாக இருக்கும்......?
    மாடியைவிட்டு இறங்கினாள். தன் தாய் அறிவழகி படுத்திருந்த பாய் வெறுமையாக இருந்தது. எங்கே போய் இருப்பாள்....? கதவு தாழ் போடாமல் மூடப்பட்டிருந்தது.
    நிச்சயமாகப் பின்புறம் உள்ள வீட்டிற்குத்தான் போய் இருப்பாள். சரி நாமும் போய்ப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் வீட்டை விட்டு இறங்கி நடந்தாள்.
    சற்றுத் தொலைவிலேயே தெரிந்து விட்டது. அந்த விட்டில் ஏதோ விபரீதம் என்று! நான்கு ஆண்கள் நின்றிருக்க அவள் தாய் அறிவழகி தெருவாசலில் அமர்ந்து கொண்டிருந்தாள்.
    மீனா தன் தாயிடம் சென்று கேட்டாள்.
    'என்னம்மா ஆச்சி.......?"
    'நம்ம மாலதிக்குப் பிரசவ நேரம். அதான் துடிக்கிறா பாவம்புள்ள..."
    கன்னத்தில் கை வைத்தபடி அறிவழகி கண்கலங்கிச் சொல்ல மீனா தன் வளர்ப்புத்தாயை நிமிர்ந்து பார்த்தாள்.
    மாலதியின் குரலைக் கேட்ட இன்னும் இரண்டு பெண்கள் வீட்டினுள் போனார்கள். அறிவழகி வெளியிலேயே அமர்ந்து இருந்தாள். மீனாவிற்குத் தெரியும். அறிவழகி திருமணம் செய்து கொள்ளாதவள். தனக்கு ஆற்றங்கரையில் கிடைத்த இந்த அனாதைக்காகவே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மகாமனுஷி என்று.
    வீட்டிலிருந்து ஒரு பெண் அவசரமாக வெளியே வந்தாள். வந்தவள் நான்கு ஆண்கள் நின்றிருந்த இடத்தில் போய்த்; 'தம்பி கொழந்த தலப்பொரண்ட மாதிறி இருக்குதாம். எதுக்கும் வண்டிய தயாரா வக்கச்சொல்லி நர்சம்மா சொல்ல சொன்னாங்க." என்றாள்.
    'ஜீவா சேகர் நீங்க ரெண்டுபேரும் போய் வண்டியக் கொண்டாங்க."
    அவன் உத்தரவு இட அந்த ஜீவாவும் சேகரும் ஓடினார்கள்!
    அப்பொழுது தான் மீனா அவனைக் கவனித்தாள். நேற்றுத் தன்னை மோட்டார் வண்டியில் இறக்கி விட்டுத் திரும்பிப் பார்க்காமல் போனவன்! கைலியின் மேல் சட்டை அணிந்திருந்தான்.
    இப்பொழுதாவது அவனுக்கு நன்றி சொல்லி விட வேண்டும். இல்லை என்றால் அவள் அவனுக்குக் கடன்காரித்தான் என்றது மனம். எழுந்து அவனருகில் வந்து நின்றாள்.
    அதற்குள் மாலதியின் அலறல் அங்கிருந்தவர்களை ஆட்டிப் படைத்தது. அந்தச் சத்தத்தின் அழுத்தம் வலியின் உச்சத்தை வெளிப்படுத்தியது. அந்த வேதனையின் ஒலி எப்படிப்பட்ட கடின மனம் படைத்தவரையும் கலங்கச் செய்து விடும்.
   

    மீனா கவலை தாங்காமல் தனக்கே அந்த வேதனை ஏற்பட்டது போல் அருகிலிருந்த மரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டாள்.
    பெண்களுக்கு மகிழ்ச்சியான தண்டனை பிள்ளை பெறுவது தான் என்று ஷேக்ஷ்பியர் சொல்லி இருந்தாலும் தண்டனையை அனுபவிக்கும் பொழுதுதான் அது எப்படிப்பட்ட வேதனை என்பது புலப்படும்.
    இதோ மாலதி வேதனையின் உச்சத்திலிருந்தாள். அவள் வலியின் வேகத்தில் கத்திய வார்த்தைகள் மீனாவின் இதயத்தைக் கிழித்தது.
    இப்படித்தானே தன்னைப் பெறுவதற்காகத் தன் தாயும் துடித்திருப்பாள். துன்பப்பட்டு அடைந்த பொருள்தானே மிகவும் உயர்ந்தது. அப்படியிருக்கத் துன்பப்பட்டுப் பெற்ற குழந்தையை எப்படி அனாதையாக ஆற்றங்கரையில் போட்டுவிட்டுப் போக மனம் வந்தது?
    மூளை தான் நிற்கும் இடம் தெரியாமல் யோசித்தாலும் காதுகளில் மாலதியின் கதறல் ஒலிதான் அதிகக் கவலையைக் கொடுத்தது. தான் பிடித்திருந்த மரத்தை மேலும் இறுக்கிப் பிடித்தாள்.
    ;க்குவா..... க்குவா...... க்குவா.....;
    புதிய குழந்தையின் அழுகுரல் அங்கே இருந்தவர்களின் மன இறுக்கத்தைத் தளர்த்தியது.
    மீனாவிற்கு மனது ;அப்பாடா ; என்றது. கருநீல வானம் இளநீலமாக மாறத்துவங்கியது. காலை வேலை கதிரவனைப்    பார்க்கத் தனது கறுப்பு நிற போர்வையைக் கொஞ்சம்     கொஞ்சமாக விலக்க ஆரம்பித்தது.
    அவள் கண்களில் தேங்கி வழியப் போன கண்ணீரைக் துடைத்து விட்டு பார்த்தாள். அப்பொழுது தான் தான் ஓர் ஆடவன் கையையும் மரத்துடன் சேர்த்துப் பிடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அவன் வேறு யாருமில்லை. மோட்டார் வண்டிக்காரன் தான். சட்டென்று கையை எடுத்து விட்டு அவன் முகத்தைக் பார்த்தாள். அவன் முகத்திலும் வியர்வைத் துளிகள். கண்கள் கலங்கிச் சிவந்து இருந்தன. ஆனால் அவன் இவளைப் பார்க்கவில்லை. வீட்டின் வாயற்படியையே நோக்கி இருந்தது அவனது பார்வை.
    ஒரு சமயம் இவன் தான் அந்தக் குழந்தையின் தந்தையோ.........இருக்கலாம்....... அவனை விட்டுச் சற்று விலகி நின்றாள். அவன் அப்பொழுது அவளைப் பார்த்தான். முகத்தில் எந்த ஓர் உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல்!
    வீட்டினுள் இருந்து ஒரு பெண் வந்தாள்.
    'பொம்பளக் கொழந்த பொறந்திருக்குத் தம்பீ" என்றாள்.
    'மாலதி எப்படி இருக்குது?"
    இவன் கேட்க 'மயக்கமாயிட்டாப்பா.... மயக்கம் தெளிய கொஞ்ச நேரமாகும்" என்றாள்.
    இன்னொரு பெண் சின்னஞ்சிறு குழந்தையைத் துணியில் சுற்றி வெளியே வந்து இவனிடம் நீட்டினாள்.
   
  
    'பாருப்பா.... நல்லா மகாலஷ்மியாட்டம் இருக்குது."
    குழந்தையைப் பார்த்தான். அவன் முகத்தில் இப்பொழுது மகிழ்ச்சி தெரிந்தது. தன் சட்டை பாக்கெட்டில் கையை விட்டு இருந்தப் பணத்தை அப்படியே எடுத்துக் துழந்தையின் கையில் திணித்தான்.
    அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை மீனாவும் பார்த்து ரசித்தாள். துன்பப்படாமல் இவ்வுலகத்தில் இன்பமில்லை தான்! இருந்;தாலும் குழந்தையைப் பெறுவது மிகப் பெரிய துன்பம். ஆனால் அதற்குப் பரிசாக மிகப் பெரி;ய இன்பம் அல்லவா கிடைத்து விட்டது!
    மீனா குழந்தையின் கன்னத்தை மெதுவாக தொட்டாள். அது மென்மையான இளவம்பஞ்சைத் தொடுவது போலிருந்தது.
    'பனி பெய்யுது. குழந்தையை உள்ள கொண்டு போங்க".
    இவன் சொல்ல அந்தப்பெண் உடனே குழந்தையுடன் உள்ளேப் போனாள்.

   0       0       0       0       0       0


    மீனா மாலதியின் குழந்தையைப் பார்த்து விட்டுத் தெருவில் விளையாடும் பிள்ளைகளின் விளையாட்டை ரசித்தபடி வந்து கொண்டிருந்தாள். சூரியன் சோர்வாக இருந்தான். அதனால் அவனை அலட்சியப்hடுத்தி விட்டு மண் தரையில் கட்டங்கள் வரைந்து கோட்டிப்புல்லும் பம்பரமும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
    நேற்று இதே நேரத்தில் ஊருக்குள் வந்த பொழுது நடந்த நிகழ்ச்சி மனத்தில் வந்து போனது. நேற்று இந்நேரம் எவ்வளவு அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தோம்! நேற்றைய தினங்கள் இன்று ஞாபகார்த்தங்களாகி விடுகின்றன! முடிந்து போனதை மறந்து விட்டு இன்று காலையில் பிறந்த குழந்தையைப் பார்த்தது மனத்திற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!
    நடுத்தெருவில் ஒருவர் தன் மகனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். மீனா அவசரஅவசரமாகப் போய்த் தடுத்தாள்.
    'நீ விடுமா...... இவன நாலு சாத்து சாத்தினாத் தான் திமிரு அடங்கும். என்னா பேச்சி பேசுறான். நல்ல வேலை. நம்ம ஊருல போலிஸ் ஸ்டேஷன் கெடையாது. இருந்தா இந்த மாதிரி புள்ளைங்கள ஜெயில்ல போடச் சொல்லி இருப்பேன்".
    அவள் கையைத் தடுத்துத் திரும்பவும் அடிக்கப்போனார்.
    ஆனால் மீனா தடுத்துக் கீழே விழுந்து அழுது கொண்டிருந்தவனைத் தூக்கிவிட்டாள். அவனுக்குப் பத்து இல்லை பதினொன்று வயது இருக்கும்.
    'டேய் நீ என்னடா பண்ணினே........?"
    'நியே கேளு மீனா. அந்தக்காலத்துல தந்தைக்கு மந்திரம் சொன்ன முருகனைக் கும்பிடுறீங்க. இந்தக் காலத்துல அப்பாவுக்கு புத்தி சொன்னா போட்டு அடிக்கிறாரு" என்றான் அவன் கண்களைத் துடைத்துக் கொண்டே.
    'நீ அப்பாவுக்குப் புத்தி சொன்னியா.....? அப்படி என்னடா சொன்னே.....?"
    'ம்.....பீடிப்புடிச்சா ஒடம்புக்கு கெடுதி. நுரையீரல் புத்து நோய் வந்திடும். வீணா காசைப்போட்டு நோயை வாங்காதேன்னு தான் சொன்னேன். இது தப்பா.....?"
    'சரியாத்தானேடா சொன்னே..... அதுக்காகவா அடிச்சாரு? சரி விடுடா.... அவரோட அப்பா அவர அடிச்சிருப்பாரு. இவர் இப்போ ஒனக்குத் திருப்பித் தந்தார்ன்னு நெனச்சிக்கோ."
    'அதுக்கில்ல மீனா.... என்ன ஜெயில்ல போட்டிடுவாராம்". அவன் அழுதான். 
    'டேய் அழுவாதடா..... அப்படியெல்லாம் ஜெயில்லுல போட முடியாதுடா..... நீ அழுவாத."
    கண்களைத் துடைத்து விட்டாள். அவன் அழுது கொண்டே இருந்தான். அதே சமயத்தில் அந்த வழியாகப் போன கணேசன் அவள் கண்களில் பட்டான்.
    'டேய் அழுவாத. அதோ போரார் பாரு. நம்ம தத்துவஞானி! அவர் தான் லா படிக்கிறார். அவர் கிட்ட கேட்டுப்பாக்கலாம்."
    இவனிடம் சொல்லி விட்டு 'அலோ... தத்துவஞானி;;;....." என்று கணேசனைக் கைதட்டிக் கூப்பிட்டாள்.
    அவன் திரும்பி இவளை முறைத்தான்.
   
                 
                                (தொடரும்)

Friday 16 March 2012

போகப் போகத் தெரியும் - 2


   
        'நான் சக்திவேலுவுக்கு வேண்டியப் பெண்"  என்று.
    இப்பொழுது அவன் முகத்தில் அதிர்ச்சி! போட்டிருந்த குளிர்க் கண்ணாடியைக் கழற்றிவிட்டு அவளை நோக்கினான்.
   
-    தொடரும் -


  

தொடர் கதை பாகம் - 2

   பதினெட்டு வயது பருவ மங்கை. வட்ட முகம். கண்கள் இரண்டும் கருவண்டுகள் போல் சுழன்று இரப்பையை ஒருமுறை அடித்தது. எடுப்பான நாசி. மெல்லிய உதடுகள். சுருண்ட கற்றையான முடியை இரண்டாக வகுத்து இரண்டு சடையாகப் பின்னி முன் பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்தது.
    தலையில் ஒற்றை ரோசா வாடிப்போய் இருந்தது. நெற்றியில் இருந்த சிகப்பு நிற சாந்துப்பொட்டு வியர்வையில் கலைந்து இருந்தது. பால் வண்ண நிறம் ஓடிவந்ததில் சிவந்த நிறமாக மாறி இருந்தது.
    உடல் செதுக்கி வைத்த செப்புச்சிலையை நினைவுப்படுத்தியது. ப+ப்போட்ட பச்சைப் பாவாடையும் அதே நிறத்தில் காலர் வைத்தச் சட்டை வியர்வையில் முக்கால் பாகம் நனைந்திருந்தது.
    அவன் அப்படித் தன்னை அளந்து பார்த்தது அவளுக்குச் சற்றுக் கூச்சமாக இருந்ததால் கையில் இருந்த புத்தகத்தை மார்புக்குக் குறுக்காகப்பிடித்து மறைத்தது போல் அணைத்தாள். அவன் அவளின் செய்கையைப் புரிந்துக்கொண்டான்.
    'யாரும்மா நீ.......? நான் இதுக்கு முன்னாடி இந்த ஊருல உன்னைப் பாத்ததில்லையே........" என்றான்.
    'நானும் தான் உன்னைப் பாத்ததில்லை. நான் உன்னைக் கேட்டேனா........?"
    ஒருமையில் பதிலளித்தாள்.
    அவனுக்குச் சற்று அதிர்ச்சி!
    'உனக்கு இந்த ஊரைப்பத்தி என்னத்தெரியும்? இப்படிப் பதில் பேசுறியே......."
    'என்னப் பெரிய ஊர்? ஊருக்கு முன்னாடி பெரிய அகிலாண்டேசுவரி கோயில். அது உள்ள ஒரு கொளம். பதினாறு தெரு. தெருவுக்கு முப்பது நாப்பது வீடுங்க. ஒரு வீட்டுக்கு ஆறுக்குக் குறைவான நபர். ஒரு மிடில் ஸ்கூல். ரெண்டு டீச்சர். ஊருல முக்கால் வாசிப்பேர் விவசாயிங்க. ஒரு தூர்வாராத சின்ன ஏரி. ஊரைத்தாண்டி ஒரு ஆறு. ஆத்தூர்ன்னு இந்த ஊருக்குப்பேரு."
    கடகடவென்று சொல்லிவிட்டு நிறுத்தினாள். அந்த ஆண் இவளை மென்மையாகப் பார்த்துப் புன்னகைத்தான்.
    'இவ்வளவு சொல்லுற......... இதை விட என்ன இருக்கனும்ன்னு எதிர்பார்க்கிற ஒரு நல்ல ஊருக்கு........?"
    'நிறைய இருக்குது. இந்த ஊருல எல்லாருமே நல்லவங்களா இருக்கிறாங்க. புத்திசாளிகளாகவும் இருக்கிறாங்க. அவங்க முன்னேற்றத்துக்குப் பணம் மட்டும் இருந்தால் இந்தக் கிராமத்தை எவ்வளவோ வழியில முன்னேத்தலாம்."
    அவள் சொல்லும் பொழுதே கண்களில் ஒளி தெரிந்தது. அந்த வாலிபன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
    மீனாவிற்கு அவன் அப்படிப் பார்ப்பது என்னவோ போல் இருந்தது.
    புதிய நடவடிக்கைகள் எடுக்கவும் புதிய வார்த்தைகள் சொல்லவும் பயப்படும் இந்த நாட்களில் அவள் சொன்ன புதிய வார்த்தைகள் அவனை யோசிக்கத் தூண்டியிருந்தது.
    ஆனால் மீனா வேறு மாதிரியாக நினைத்தாள்.
    எல்லா ஆண்களுமே பெண்களிடம் எதையோ எதிர்பார்த்துத்தான் பார்வையைச் செலுத்துகிறார்களோ......? ஆனால் இவனுடைய பார்வை எந்த வகை...... புரியவில்லை.
    'இதோபாரு.... நானு சக்திவேலுவைக் கட்டிக்கப்போறவ. எங்கிட்ட கண்ணியமா நடந்துக்கோ."
    சற்று அழுத்தமாகச் சொன்னாள்.
    இப்பொழுது அவன் கண்களில் மிகப் பெரிய அதிர்ச்சித்தெரிந்தது. இப்பொழுது இன்னும் அவளை அழுத்தமாகப் பார்த்தான்.
    மீனாவிற்கு அவனுடைய அதிர்ச்சிப்பார்வையின்; விளக்கம் புரியவில்லை. தவறாகச் சொல்லி விட்டோமோ....... யார் இவன்? இவனிடம் நாம் எதற்காக இப்படிச் சொன்னோம்? ஒரு சமயம் இவனுக்குச் சக்திவேலைத் தெரிந்திருக்குமோ......
    பேசியது பேசியாகி விட்டது. சொன்ன வார்த்தைகளை ஒருபொழுதும் திரும்ப விழுங்க முடியாது.
    என்ன செய்யலாம்.....? பேசாமல் நம் வழியில் நடப்போம். அதுவே சரியெனப்பட நடக்க ஆரம்பித்தாள். நடக்கும் பொழுது பாவாடை காயத்தில் பட்டு மேலும் எரிச்சலை அதிகமாக்கியதால் கையால் பாவாடையை இலேசாகத் தூக்கிக்கொண்டு தங்கித்தாங்கி நடக்க ஆரம்பித்தாள்.
    மோட்டார் வண்டிக்காரன் இதை பார்த்திருப்பான் போலும். வண்டியை அவள் அருகில் தள்ளிக்கொண்டு வந்து நின்று கேட்டான்.
    'காலில் என்ன காயம்? செருப்புப் போடுவது இல்லையா.....?"
    'கல்லுதடுக்கிடுச்சி. அதே நேரம் செருப்பும் அறுந்துடுச்சி".
    'சரிசரி வண்டியில ஏறு. ஊருக்குள்ள விடுறேன். நீ வேற சக்திவேலுவுக்கு வேண்டிய பொண்ணுன்னு சொல்லுறே....."
    சொல்லியபடியே தன் முதுகில் இருந்த தோள்பையை முன் பக்கம் எடுத்து வைத்துவிட்டு அவள் அமருவதற்கு ஏதுவாகச் சற்று முன் தள்ளி அமர்ந்தான்.
    மீனா உடனே ஏறிக்கொண்டாள். அவளுக்கே ஏன் என்று தெரியவில்லை. வண்டி புறப்பட்டது.
    அந்த ஊர் டாக்டர் வீட்டின் முன் வண்டியை நிறுத்தி விட்டு 'இது டாக்டர் வீடு. போயி காயத்தக் காட்டி முதல்ல மருந்து போட்டுக்கினு வீட்டுக்குப் போ." என்றான்.
    அவள் இறங்கிக்கொண்டாள்.
    இது டாக்டர் வீடு என்பது அவளுக்கு அப்பொழுதுத்தான் தெரியும். ஆனால் இவருக்குத் தெரிந்திருக்கிறதே..... அப்படியானால் இவர் இந்த ஊர்க்காரரா? யார் இவர்.......?
    யோசித்து விட்டுத் திரும்பி அவனைப் பார்ப்பதற்குள் அவன் மோட்டார் வண்டியில் கிளம்பிப்  போய்க் கொண்டிருந்தான்.
    'ஐயோ.......ஒரு நன்றி கூடச் சொல்லவில்லையே......." என்று ஏங்கியது மனம்.
    நன்றியை எதிர்பார்த்து நல்ல உள்ளங்கள் உதவி செய்வது இல்லையே........
    கவலையுடன் டாக்டர் வீட்டின் கதவைத் தட்டினாள்.                         

   டாக்டர் மகேந்திரன் மீனாவின் கால் கட்டை விரலைச்சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவருடைய முகத்தில் எந்த ஓர் அருவெருப்பும் இல்லை. கடமையே கண்ணாகச் செய்து கொண்டிருந்தார்.
   எவ்வளவு பெரிய மனிதர் இவர்! எவ்வளவு நோயாளிகளுக்கு வைத்தியம் செய்திருப்பார்! இவர் போய் நம் கால்களைத் தொடுவதா?
   பஞ்சியில் டின்சர் நனைத்துக் காயத்தில் வைக்கப்போன அவருடைய கையைத் தடுத்தாள் மீனா
   ‘ஏம்மா..... வலிக்காது. கொஞ்சம் பொறுத்துக்கோ. இல்லைன்னா காயம் சீழ் கோத்துப் புரையோடிப் போயிடும்."
அவர் அன்புடன் சொன்னார்.
   'இல்லை டாக்டர். அதுக்காக நான் தடுக்கலை. நீங்க எவ்வளவு பெரிய டாக்டர்! நீங்க போய் இந்தக் கிராமத்துல இப்படி சாதாரண நோய்களைப் பாத்துக்கினு..... எப்படி          முடியுது உங்களால? கஷ்டமா இல்லையா.....?"
   அவர் அவளைக் கனிவாகவும் அதே சமயம் சற்று உள்நோக்கியும் பார்த்தார்.
   'ஏன்மா மீனா...... நோய்களில் சாதாரணம் அசாதரணம் கூட உண்டா என்ன? நோய் சாதாரணமா இருக்கும் போதே அதுக்குத் தகுந்த மருத்துவம் செய்யலைன்னா அசாதரணமாகத்தான் போயிடும்."
   புன்னகையுடன் சொல்லிவிட்டு அவர் தன் வேலையைக் கவனித்தார். உதவி செய்வது எப்படி என்று தெரிந்தவர்களுக்கு அதை எப்படித் திட்டமாகச் செய்வது என்றும் தெரிந்திருக்குமாம். ஆனால்...... இவருக்குத் தன்னுடையப் பெயர் எப்படித்  தெரிந்திருக்கும். அவளுக்கு ஆச்சர்யம்! நேரடியாகவே கேட்டாள்.
   'டாக்டர் நான் தான் மீனான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?"
   'ரொம்ப சுலபம். நான் இங்க வந்த இத்தனை மாசத்துல இன்னைக்குத்தான் முதல் முறையா உன்னைப் பாக்குறேன். உன்னால தான் நான் இந்த ஊருக்கே வந்தேன்னு உன்னைப்பத்தியே இந்த ஊர் மக்கள் பெருமையாப் பேசுறாங்க. அது மட்டுமில்ல. என்னைப்பத்தி நீ சொன்ன வார்த்தைகள் எனக்கு நீ தான் மீனா என்பதைத் தெரியப்படுத்திடுச்சி. அவ்வளவு தான்."
   அவர் சொன்ன அவ்வளவு தான் என்பதில்        பேச்சும் முடிந்து விட்டது. காயத்திற்குக் கட்டும் போட்டாகிவிட்டது என்பதற்கும் பொதுப்படையாக இருந்தது. மீனா அவர் கொடுத்த மருந்தை வாங்கிக்கொண்டு நன்றி சொல்லி விட்டுக் கிளம்பும்போது
   'மீனா........" டாக்டர் அழைத்தார்.
   'என்ன டாக்டர்?"
   'மீனா..... நானும் உனக்கு நன்றி சொல்லனும்மா.....’ மீனா அவih நிமிர்ந்து பார்த்தாள்.
                        (தொடரும்)

Friday 9 March 2012

போகப் போகத் தெரியும் -1


     
            தொடர் கதை பாகம் 1

    அந்தி சாயும் நேரம்! ஆதவன் தன் களைப்பு நீங்க கண்ணயர மேற்கே போனான். அவன் முகம் மஞ்சள் பசிக்கொண்டதால் அந்த ஊரையும் மஞ்சள் குளிக்க வைத்திருந்தான்.
    பொன்னிற பமி! மாலை மயங்கும் நேரம்! இந்த அழகு சூழ்ந்த வேலையில் மீனாவின் மனம் மட்டும் மிரண்டு போய் இருந்தது.
    அந்த மண் சாலையில் அவளைத்தவிர யாருமில்லை. ஒரு காலைத் தாங்கித்தாங்கி நடந்து கொண்டிருந்தாள். ஓடி வந்த பொழுது காலில் கல் இடித்துவிட்டதினால் கட்டை விரல் நகம் பெயர்ந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது.
    காயம் பட்ட இடத்தில் வெறும் காலுடன் நடந்ததால் மண் அப்பிக்கொண்டு மேலும் எரிச்சலை அதிகமாக்கியது. ஆனால் அவள் அதை லட்சியப்படுத்த வில்லை மனத்தில் பயத்தின் அழுத்தம் இன்னும் முழுமையாக வெளியேறாததால் காயத்தின் வலி அதிகமாகத் தெரியவில்லை.
    தன்னை யாராவது தொடர்ந்து வருகிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தாள். யாரும் இல்லை!
    தன்னை யாரும் பின் தொடரவில்லை என்று நினைத்த பொழுது மனம் சற்று மகிழ்ந்தது. மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளிவிட்டுத் தன்னைச் சாதாரண நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தாள். இம்முயற்சி ஓரளவுக்கு வெற்றி பெற்றதும் தனக்குச் சற்று நேரத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை அசைபோட எண்ணியது மனம்.
    அதிலும் அந்தப்பெண் (?) 'அவளை விட்டுடு. அவள் சக்திவேல் கட்டிக்கப் போற முறைப்பெண்" என்று சொன்னதும் தன்னைப் பிடித்திருந்தவனின் கை நெருப்பைத் தொட்டது போலச் சட்டென்று விட்டதே.......!
    எப்படி இது சாத்தியம்........?
    சக்திவேல் என்ற பெயருக்கு அப்படி என்ன ஒரு பயம்? மறியாதை.....?
    யார் அந்தப் பெண்? யார் அந்த முரட்டு ஆண்? மனம் அங்கே நடந்ததை நினைத்து வட்டமிட்டடது.

            0         0        0        0

    பள்ளி இறுதியாண்டுப் படிக்கும் மீனா அரையாண்டுத் தேர்வு இன்றோடு முடிந்ததும் ஆசிரமத்தில் வைத்திருந்த தன்னுடைய உடமைகளை எடுத்து; கொண்டு தன் அம்மாவைப் பார்க்கக் கிராமத்திற்குக் கிளம்பினாள்.
    பேரூந்தில் ஏகக்கூட்டம்! புளி மூட்டையைப் போல் உள்ளே ஒன்றொடு ஒன்று இடித்து நசுக்கிக்கொண்டு........ நிற்கக்கூட முடியாததால் தன் ஊருக்கு முன் நிறுத்தத்திலேயே இறங்கி விட்டாள்.
    அவள் அப்படி இறங்கியிருக்கவில்லை என்றால் நிச்சயம் இப்படியானதொரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் சிக்கியிருக்க மாட்டாள். ஆனாலும் அவளுக்கு ஒரு சந்தோசம்! ஒரு பெண்ணின் மானத்தைக் காப்பாற்றினோமே என்று!
    அவள் பேரூந்திலிருந்து இறங்கி நெடுஞ்சாலை வழியாகப் போகாமல் சற்று விரைவாக ஊர் போய்ச் சேரலாம் என்ற எண்ணத்தில் குறுக்கு வழியில் தானாக ஒரு பாதையை ஏற்படுத்திக்கொண்டு நடக்க....
    ஓரிடத்திலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல்! யாரிடமோ கெஞ்சலாகக் கெஞ்சிக்கொண்டிருந்தாள்.
    மீனா குரல் வந்த திசையைக் கூர்ந்து கவனித்தாள். அங்கே ஊர்காக்கும் ஐயனார் சிலைக்குச் சற்றுத் தள்ளி ஒரு கிணறு. கிணற்றின் சுற்றுச்சுவர் மூன்றடிக்கு மேல் இருக்கும்.
    கிணற்றின் மறுபக்கத்தில் இருந்துதான் அந்தக்குரல் கேட்டது. மீனா யோசனையுடன் அந்த இடத்தை நோக்கிக் கிணற்றைச் சுற்றிக்கொண்டு நடந்தாள். சற்று அடர்வான செடிகள் வளர்ந்து மற்றவர்களின் பார்வையில் சட்டென்று கவனிக்க முடியாத ஒரு பகுதியில் ஒரு முரட்டு ஆண் ஒரு பெண்ணைப் பலவந்தப்படுத்த முரட்டுத்தனமாக முயற்சித்துக் கொண்டிருந்தான்.
    அவள் 'தொ பாருயா....என்னைய வுட்டுடு. எம்புருஷன் கிட்ட சொன்னாக்க உன்னைய உண்டு இல்லன்னு பண்ணிப்புடும். மறியாதையா என்னைய வுட்டுடு" என்றாள்.
    கெஞ்சலிலும் கொஞ்சம் அதிகாரம் கலந்திருந்தது அவள் குரலில்.
ஆனால் அவன் அவள் பேசியதைக் கேட்பவனாக இல்லை. அவனின் காம வெறியைத் தீர்த்துக் கொள்ள மிருகக்குணத்துடன் அவள் போட்டிருந்த முந்தானையை விலக்கி அவளைக் கட்டியணைக்க முயன்றான்.
    அந்தப் பெண் முரட்டுத்தனமாக இறுக்கியிருந்த அவனின் கைகளை விலக்க முயற்சித்து முடியாமல் தோற்றுக்கொண்டிருந்தாள்.
    இந்த நேரத்தில் தான் மீனா அவர்களைப் பார்த்தாள். என்ன செய்யலாம் என்று யோசித்தவளின் காலடியில் ஒரு பெரிய கல்!
    சட்டென்று குனிந்து எடுத்தவள்......அவன் தலையில் தன் பலம் கொண்டமட்டும் அடிக்க முயன்றாள்.
    ஆனால் முடியவில்லை!
    அவன் தலையை அந்தக்கல் இலேசாகத்தான் மோதியது. அவளுக்கு எப்படி மனம் வரும்? ஒருவனைத் துன்புறுத்த நிச்சயமாக அவள் மனம் சம்மதிக்காது.
    காரணம்....! அவள் மனம் முழுவதும் அன்பு இரக்கம் நிறைந்தது. தனக்குக்கிடைக்காத அந்த அன்பை அவள் மனம் முழுவதும் நிரப்பி வைத்திருந்தாள். அந்த அன்பு உள்ளம் அடுத்தவன் செய்யும் தவறுக்குக் கூடத் தண்டணை தர மறுத்தது.
    மனத்தில் எதை நினைத்துக் கொண்டு வளர்கிறார்களோ அதைக் கொண்டு தான் மனமும் வளர்கிறது. விரோதத்தைத் தன்னுள் அடக்கிய மனம் விரோதத்தன்மையுடன் வளர்கிறது. கவலைகளைச் சுமர்ந்த மனம் எதை நினைத்தும் கவகை கொள்கிறது.
    மீனாவின் மனம் முழுவதும் அன்புக்காகவே ஏங்கி வளர்ந்துள்ளது. அதனால் அவளும் அன்பு கனிவு பாசம் பண்பு என்பதை மனம் முழுவதும் நிரப்பி வைத்திருந்தாள். அந்தத் தங்க மனம் சட்டென்று துறுப்பிடிக்குமா.....?
    கை அவன் செய்கையை நினைத்து அழுத்தமாக ஓங்கினாலும் மனம் அதை மென்மையாக்கி விட்டது.
    தன் தலையில் அடிப்பட்டதும் அவன் திரும்பி இவளைப் பார்த்தான். அவன் கண்களில் ஆச்சர்யம்!! முயல் பிடிக்க வைத்த வலையில் புள்ளிமான் சிக்கிக்கொண்டால் வேடனுக்கு எவ்வளவு சந்தோசமோ..... அந்த அளவு சந்தோசம் அவனின்  சிறு சிறு கண்களில் தெரிந்தது.
    அந்தப்பெண்ணை விட்டுவிட்டு இவள் கையைச் சட்டென்று பற்றினான். ஆறடிக்குக் குறையாத நல்ல வாட்டசாட்டமான உடம்பு. தலைமுடி கழுத்துவரை நீண்டு வளர்ந்திருந்தது. முகத்தில் லேசான தாடி. அவன் அதைச் சொரிந்துக்கொண்டே மீனாவைப் பார்த்தான்.
    மீனா மிரட்சியாக அவனைப்பார்த்தாள். அவன் அழுத்தமாக இறுக்கிக் கையைப் பிடித்திருந்ததால் கை வலித்தது. அவனிடமிருந்து கையை விடுவிக்க முயன்றாள். முடியவில்லை.
    அப்பொழுது தான் அந்தப்பெண் சொன்னாள்.
    'அவளை விட்டுவிடு. அவள் சக்திவேல் கட்டிக்கப் போற முறைப்பெண்" என்று.
    அப்பா...... அந்த வார்த்தைக்குத்தான் எவ்வளவு சக்தி! ஏதோ மின்சாரத்தைத் தொட்டவன் போல் சட்டென்று அவள் கையை விட்டான்.
    அந்தப்பெண் நொடிப்பொழுதுக்குள் தரையில் இருந்த மண்ணை அள்ளி அவன் முகத்தை நோக்கி வீச...... அவன் கண்களில் மண்பட்ட அதிர்ச்சியால் கண்களை மூட......
    'இந்தாம்மா....... நீ ஓடிப்போயிடு......" என்று அவள் இவளிடம் சொல்லிக்கொண்டே ஒரு பக்கமாக ஓடினாள்.
    மீனாவும் தன்னைச் சுதாரித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடத்தொடங்கினாள். அவன் தன்னைப் பின்னால் தொடர்கிறானா என்று திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அதற்கு நேரமும் இல்லை. தலைத்தெறிக்க ஓடினாள்.
    அப்படி ஓடிய பொழுது தான் கால் ஒரு கல்லில் இடறி நகம் பெயர்ந்தது. செருப்பும் அறுந்துவிட்டது. அறுந்த செருப்பைக் கழற்றிப் போட்டுவிட்டு அவசரமாக எழுந்து மீண்டும் ஓடினாள்.
    இதோ தன் ஊருக்குள் போகும் பாதையைத் தொட்டதும் சற்று நிம்மதி பிறந்திருந்தது. மனம் நிம்மதியடைந்ததும் அடிப்பட்ட இடத்தின் வலி தெரிய ஆரம்பித்தது.
    மெதுவாகத் தாங்கித்தாங்கி நடந்தாள்.
    அவளைத்தாண்டி ஒரு மோட்டார் சைக்களில் ஒரு வாலிபன் மின்னல் வேகத்தில் போனான்.
    அவன் போன வேகத்தில் பாதை புழுதியை வாரி இறைத்தது. முகத்தில் அடித்த புழுதிக்காற்றைக் கையால் ஆட்டித் தடுத்துக் கொண்டே நடந்தாள்.
    சற்றுத் தூரத்தில் சென்ற வண்டி சட்டென்று நின்று அரை வட்டமடித்துத் திரும்பி அவளை நோக்கி வந்தது. மீனாவும் யோசனையுடன் அவனைப் பார்த்தாள்.
    வந்தவன் இவளருகில் வண்டியை நிறுத்தினான். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
    நல்ல அழகான வாலிபன். இருபத்தைந்து வயது இருக்கும். சிவந்த நிறம். தூக்கிவாரிய தலைமுடி. கண்களில் குளிர்க்கண்ணாடி. நல்ல உயரம். நீலத்தில் கோடுபோட்ட சட்டையை அழுத்தமான நீலக்கலர் பேண்டில் செறுகிப் பெல்ட் அணிந்திருந்தான். அவன் முதுகு பின்னால் ஒரு தோல் பை. அது அவனின் இரண்டு தோள்களிலும் மாட்டிப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்தது.
    'யாராக இருக்கும்?" மீனா சிந்திப்பதற்குள் அவன் கேட்டான்.
    'யாரம்மா நீ........? எங்கே போகனும்........?"
    குரலும் கம்பீரமாக இருந்தது.
    அவள் இப்பொழுது தான் ஒருவனிடமிருந்து தப்பித்து வந்து கொண்டிருக்கிறாள். திரும்பவும் ஒருவனா? ஆனால் இவனைப்பார்த்தால் தவறான எண்ணம் உடையவன் போல் தெரியவில்லையே.......
    இருந்தாலும் மனத்தில் சற்றுப்பயம். ஒருவன் தன் தெரிந்தவர்களி
டமிருந்து கற்றுக்கொள்வதை விட எதிரியிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறான் என்பதற்கு மீனா விதிவிளக்கா என்ன.......?
    சட்டென்று சொன்னாள்.
    'நான் சக்திவேலுவுக்கு வேண்டியப் பெண்"  என்று.
    இப்பொழுது அவன் முகத்தில் அதிர்ச்சி! போட்டிருந்த குளிர்க் கண்ணாடியைக் கழற்றிவிட்டு அவளை நோக்கினான்.
   
-    தொடரும் -

Thursday 8 March 2012

தொடர்கதை பிரியர்களுக்கு



தொடர்கதை விரும்பிப் படிப்பவர்கள் இந்த வலைப்புவைத் தொடருங்கள்.
    இதில் “போகப் போகத் தெரியும்“ என்ற நாவலைத் தொடர்கதையாக இட இருக்கிறேன்.  என் மனத்தைத் தொட்ட கதை! இதை இந்த வலைப்புவில் வெளியிடுகிறேன்.
   படிக்கத் துவங்குங்கள்.. நிச்சயம் நீங்கள் அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி!