Friday 20 April 2012

போகப் போகத் தெரியும் - 8


                                              

   அன்று ஞாயற்றுக்கிழமை. இந்த வாரம் மீனாவிற்கு ஓய்வு. அவள் விடுமுறை நாட்களில் அந்த ஊர் சிறுப்பிள்ளைகளோடு ஏதாவது விளையாடுவது வழக்கம். ஆனால் இன்று இளைஞர்கள் பன்னிரண்டு பேராகச் சேர்ந்து அணிக்கு ஆறு ஆறுபேராகப் பிரிந்து கபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
   ஆனால் அதில் அதிசயமாகச் சின்னதம்பி விளையாடவில்லை. அவர்களின் விளையாட்டை ஊர் மக்களுடன் அவனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மீனாவும் விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் சின்னதம்பியுடைய கைபோன் கதறவும்..... அதில் பேசிக் கொண்டே தன் வண்டியைக் கிளப்பிக் கொண்டு போனான்.
   அவன் போனதும் விளையாட்டை மும்முரமாகக் கவனித்தாள். ஒருவர் ஒரு அணியில் தோல்வியுற்றால் இன்னொரு அணியில் ஒருவர் தோற்றதும் இந்த அணியில் தோற்றவர் திரும்பவும் விளையாட வந்து விடுகிறார். இப்படி விளையாட்டு நீண்டு கொண்டே போனது.
   மீனா சேகர் இருந்த அணிக்குச் சென்றாள். சேகரிடம் 'சேகர் உன் குருப்புலயிருந்து ரெண்டு பேரை எடுத்திட்டு என்னை சேத்துக்கோ. நான் நிச்சயம் ஜெயிச்சிக் காட்டுறேன். என்றாள்.
   சேகர் சிரித்தான். 'என்ன மீனா வெளையாடுறீயா....? இங்க ஒவ்வொருத்தனும் நல்லா கடோர்கஜன் மாதிரி இருக்கானுங்க. நீ அவங்களுக்கு ஒரு தூசு மாதிரி." என்றான்.
   'நீ என்னை சேத்துப் பாரு. அப்புறம் எப்படி ஜெயிச்சிக் காட்டுறேன்னு ஒனக்கே தெரியும்." என்றாள் சவாலாக.
   ஒவ்வொருத்தருடைய சொந்த எண்ணத்தை வைத்துத் தான் வெற்றி எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று அளக்க முடியும். இங்கே மீனா தன்னை நன்றாக அளந்து வைத்திருந்தாள்.
   சேகர் யோசனையுடன் 'சரி" என்று சொல்ல அவன் அணியிலிருந்து இரண்டு பேர் விலகினார்கள். மீனா சேகர் அணியில் சேர்ந்தாள். எதிரணியில் இவளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். மீனா இப்பொழுது போக வேண்டிய முறை!
   அவள் நடுக்கோட்டின் அருகில் வந்து நின்று கொண்டாள். குரலைக் கணைத்துவிட்டுச் சொன்னாள்.
   'இதோ பாருங்க. இந்த ஊருல யாருக்கு சக்திவேலோட பொண்டாட்டிக் கையைப் புடிச்சி இழுக்கிற தைரியம் இருக்குது. அவங்களை நானும் பாக்குறேன்....." என்று சொல்லிவிட்டுக் கபடி கபடி என்று சொல்லிக் கொண்டே முன்னே நடந்தாள்.
   அங்கே அந்த அணியில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் கூடி இருந்தவர்களும் இவள் சொன்னதைக் கேட்டு வாயடைத்துப் போய் நின்றிருந்தார்கள்.


   புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிக் காண்பதில்லை. வெற்றிப்பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை...... என்ற கண்ணதாசனின் வார்த்தைகளைப் பொய்யாக்க முயற்சித்தாள் மீனா. முடியுமா....?
   மீனா சேகர் அணியில் சேர்ந்துவிட்டு ‘இந்த ஊரில் சக்திவேல் பொண்டாட்டிக் கையைப் பிடிச்சி இழுக்கிற தைரியம் யாருக்கு இருக்குது பாக்கலாம்’ என்று சொல்லிவிட்டு விளையாடத் துவங்கினாள்.
   முதல் சுற்றில் இரண்டு பேரைத் தொட்டுவிட்டு ஓடி வந்தாள். இரண்டாவது சுற்றிலும் அவளே போய் இன்னும் இரண்டு பேரைத் தோற்கடித்தாள். எதிரணியில் உள்ளவர்கள் அவளைப் பிடித்து இழுக்கவில்லை என்றாலும் அவள் கை தங்கள் மீது படாதவாறு நகர்ந்து ஓடினார்கள்.
   இன்னும் எதிரணியில் இரண்டு பேர் தான்!
   பலமானவர்களைக் கூடப் புத்திசாலித் தனத்தால் தோற்கடித்து விடலாம். ஆனால் அந்த பலமானவர்களின் பின்னால் ஒரு புத்திசாலி இருந்தால்.....
   மூன்றாவது சுற்றில் மீனா போவதற்கு முயற்சிப்பதற்குள் அந்த இருவரையும் விலக்கிவிட்டு ஒருவனாக வந்து நின்றான் சின்னதம்பி!!!
   மீனாவிற்கு அதிர்ச்சி! இவன் இருந்தால் ஏதாவது பிரட்சனைப் பண்ணுவான் என்று நினைத்தே..... அவன் வெளியே போய் விட்டான் என்று நன்கு தெரிந்து கொண்ட பிறகு தான் விளையாட முன் வந்தாள்! ஆனால்..... இவன் எப்படி இங்கே....?
   அவன் வந்ததும் கூட்டம் கை தட்டியது. அவளுக்கு என்னவோ போல் இருந்தது. போகலாமா....? வேண்டாமா....? ஆனால் போகாமல் இருக்க முடியாது.
   ‘ஏன் இவனும் இந்த ஊர்க்காரன் தானே? இவனுக்கு மட்டும் சக்திவேல் மீது மரியாதை இருக்காதா...?”
   பேசாமல் போய்விட்டு அவனைத் தொடாமலேயே வந்து விடலாம் என்ற எண்ணத்தில் கபடி கபடி என்று சொல்லிக் கொண்டே எதிரணியில் நுழைந்தாள். அவள் உள்ளே நுழைந்தது தான் தாமதம். அவன் சட்டென்று தாவி அவள் கையைப் பிடித்துக் கொண்டான்!
   அவள் தன் கையை அவனிடமிருந்து விடுவிக்க எவ்வளவோ முயற்சித்தாள். நடுக்கோட்டை எப்படியாவது தொட்டுவிட வேண்டும்.... ம்..... எந்த முயற்சியும் பலிக்கவில்லை. அவன் அவள் கையைப் பிடித்தது தான். அவனிடம் எந்த ஓர் அசைவுமில்லை. கை இரும்புப் பிடியாகப் பிடித்திருந்தது.
   அவளுக்கு ஓர் அளவுக்கு மேல் மூச்சுப் பிடிக்க முடியவில்லை. அவன் முன் தோற்று நின்றாள்! அதன் பிறகு தான் அவன் அவள் கையை விட்டான். அவன் பிடித்திருந்த கை மணிக்கட்டு சிவந்து வலித்தது. கையை உதறிக்கொண்டாள். அவன் எதுவும் பேசாமலேயே அவளைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். மீனாவிற்கு ஆத்திரமாக வந்தது.
   'ஏன்... உனக்கு மட்டும் சக்திவேல் மேல மறியாதை இல்லையா....?" கோபமாக அவனை முறைத்தபடி கேட்டாள்.
   'ஏனில்ல? நிறைய இருக்குது. ஆனால் அவரை மதிக்காதவங்களை நானும் மதிக்க மாட்டேன்." பொறுமையாகப் பதில் சொன்னான்.
   'நான் எப்போ அவரை மதிக்காம இருந்தேன்.....? "
   'சக்திவேலைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டு அன்னைக்கி நீ என்னைக் கட்டிப்புடிக்கல...? அவருக்கு நீ துரோகம் செய்யல.....?"
   அவன் அப்படிச் சொன்னதும் கூட்டத்திலிருந்தவர்கள் இவளை விசமமாகப் பார்த்தார்கள். சேகர் 'ஓ......" என்று ஆச்சர்யக் குரல் எழுப்பினான். மீனாவிற்கு முகமெல்லாம் சிவந்து போய் விட்டது. கோபத்தில்! என்ன மனுஷன் இவன்.....?
   'அது....அது.... பாம்பைப் பாத்ததால பயந்து.... அப்படி....."
   வார்த்தைகள் கோர்வையாக வரவில்லை. பயமா....? வெட்கமா....?
   'நீ பாம்பைப் பாத்து பயந்து அந்தக் கல்லுன்னு நெனச்சி என்னைக் கட்டிப்புடிச்சே... இன்னைக்கி என்னோட பிரண்சை தோக்கடிக்க வந்த எதிரின்னு நெனச்சி நான் உன் கையைப் புடிச்சி இழுத்தேன். அவ்வளவுத் தான்."
   அவன் சிரித்து கொண்டே சொன்னான். மீனா அவனை முறைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். கணேசனின் தாத்தா மீனாவைப் பார்த்து கேட்டார்.
   'ஏன் மீனா.... பாம்பை பாத்துத்தான் தம்பியக் கட்டிப்புடிச்சியா....? இதே நான் அங்க இருந்திருந்தா என்னை கட்டிப்புடிச்சி இருப்பியா....?"
   பல் இல்லாத கிழவருக்கு இன்னும் குசும்பு புத்தி போகவில்லை. அங்கே எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.
   'இந்த மீனா வீரனைத்தான் கட்டிப்புடிப்பா. உன்ன மாதிரி வெலவெலத்தவனை இல்ல."
   கோபத்தில் என்ன பேசுகின்றோம் என்று கூட யோசிக்காமல் மனத்தில் தோன்றியதை வார்த்தையால் கொட்டிவிட்டு நடந்தாள். பிறகு பலமுறை யோசித்தாள். எப்படி அப்படியானதொரு வார்த்தை வந்தது என்று.....
   ;இது தவறு இல்லையே..... ஒரு வீரனைத்தானே வீரன் என்று சொன்னோம். ஆனால் கட்டிப்பிடிப்பேன்னு சொல்லியிருக்கக்கூடாது...... ; மனத்தைத் தேற்றமுடியாமல் தவித்தாள்.
  
    ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

  
   இன்னும் சரியாக இருட்டவில்லை. பூமி பொன்வண்ண உடையைக் கலைந்து சாம்பல் நிற உடையை அணிந்து கொண்டாள்.
   ஆத்தூர்ப் பள்ளிக்கூட வகுப்பறை ஒன்றில் விளக்கு எறிந்து கொண்டிருந்தது. அப்படி இருந்தால் அவ்வூர் இளைஞர்கள் அங்கே தான் இருப்பார்கள் என்பதை மீனா முன்பே அறிந்திருந்தாள்.
   வகுப்பறையில் நுழைந்தாள். அங்கே அந்த ஆறு பேருடன் சின்னதம்பியும் இருந்தான். இவள் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
   'உங்கக் குருப்புல என்னையும் ஒரு சினேகிதியா சேத்துக்குவிங்களா....?" கேட்டுவிட்டுச் சினேகிதமாகச் சிரித்தாள்.
   'ஏன் ஒனக்குத்தான் ஊருல நெறைய சின்னப்பசங்க...... ஸ்கூல்ல நெறைய பாய்ஸ்ன்னு இருக்கிறாங்களே......" சின்னதம்பி தான் சொன்னான்.
   'அவங்கல்லாம் படிக்கவும் வெளையாடவும் மட்டும் தான். நான் இந்த ஊருலேயே இருக்கப்போறவ. இந்த ஊரு முன்னேத்தத்துக்கு நானும் உங்கக்கூடச் சேர்ந்து ஒதவுணும். அதனால தான் உங்க கூட என்னையும் ஒருத்தியா ஏத்துக்கோங்க." கெஞ்சலாகக் கேட்டாள். 
   சின்னதம்பி தலையாட்ட சேகர் 'சரி மீனா" என்றான். மீனா முகமலர்ந்தாள்.
   'என்னைப் பத்தி உங்க எல்லாருக்கும் தெரியும். அதே மாதிரி உங்க ஆறு பேரையும் எனக்கு ஓரளவு தெரியும். நீங்கல்லாம் காலேஜில வேறவேற கோர்ஸ் படிக்கிற ஸ்டூடண்டு. இதே ஊருல பொறந்து வளந்தவங்க. சக்திவேல் கூடச் சேர்ந்து ஊர் முன்னேத்தத்துக்கு ஒழைக்கிறவங்க. போதுமா.....?" கேட்டாள்.
   'ம்..... எங்கள பத்தி நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்கிறே.... ஆச்சர்யமா இருக்குது." சேகர் சொன்னான்.
   'இதுல ஆச்சர்யப் பட என்ன இருக்குது. உங்க ஆறு பேரையும் இந்த ஊரே பேசுதே... ஆனா.... இவரைப்பத்தித்தான் யாருமே எதுவுமே சொல்ல மாட்டேங்கிறாங்க....." சின்னதம்பியைப் பார்த்து சொன்னாள்.
   'என்ன தெரிஞ்சிக்கணும் ஒனக்கு....?"
   அவன் கோபமாகக் கேட்கவும் 'ஒன்னும் வேண்டாம்" என்று அவனிடம் முறைப்பாகச் சொல்லிவிட்டுச் சேகரிடம் திரும்பினாள்.
   'சேகர் இனிமே நாம எல்லோரும் ப்ரெண்ஸ். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. நல்ல நட்பு என்பது பாத்துப் பேசிப் பழகிய பின் வருவது மட்டும் கிடையாது. பாத்தவுடனே மனசால நல்ல அபிப்பிராயம் வந்தாலும் அதுவும் நல்ல நட்புத்தானே..... உங்கள நான் ப்ரெண்ஸா அடஞ்சதுல ரொம்ப சந்தோசம்." சொல்லிக் கொண்டே ஒவ்வொருவர் கையையும் பிடித்துக் குலுக்கினாள்.
   சின்னதம்பியிடம் வந்து புன்னகையுடன் கையை நீட்டினாள். அவன் இவளிடம் கையைக் கொடுப்பது போல் கொண்டு வந்து சட்டென்று  இழுத்து கொண்டான். மீனா முறைத்தாள். அதில் ஏமாற்றமும் கலந்திருந்தது.
   'மீனா.... உங்கூட எனக்கு ப்ரெண்ஷிப் வச்சிக்கப் பிடிக்கல. நீ ரொம்பக் கெட்டப்பொண்ணு. உன்கூட ப்ரெண்ஷிப் வச்சிக்கினா என்னோட அம்மா என்னை திட்டுவாங்க." முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்னான்.
   'என்ன... கெட்ட பொண்ணா....? எதை வச்சிச் சொல்லுற......?"
   'ம்..... இவ்வளவு பெரிய பொண்ணாயிருந்தாலும் பாவாடைச் சட்டைப் போடுறியே... அதுக்குத்தான்."
   அவன் அப்படிச் சொன்னதும் கோபமாக அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள்;;.
   'பாவாடை சட்டை போட்டா கெட்ட பொண்ணு கெடையாது. அதைக்கூடப் போடலைன்னாத்தான் கெட்ட பெண்" என்று.
   அவள் மிக மெதுவாகவும் அதே சமயம் சற்று அழுத்தமாகவும் சொன்னதும் அவன் தன்னை மறந்து சிரித்தான்.
   மீனா திரும்பி தன் நண்பர்களைப் பார்த்தாள்;.
   'தோ பாருங்க. நான் உங்க எல்லாருக்கும் ப்ரெண்டு. ஆனா இவருக்கு இல்ல. உங்கக் கூட ஏதாவது பேசணுமின்னா இவர் இல்லாத சமயமா வந்து பேசுறேன்."
   சின்னதம்பி சிரித்துக் கொண்டே அவ்விடத்தைவிட்டு வெளியேறினான். அவன் போனதும் சேகரிடம் 'சேகர் நம்ம ஊருல நாளைக்குக் கூட்டம் கூடப்போவுது இல்லையா....? அது எத்தனை மணிக்கி....?" கேட்டாள்.
   'சாய்ந்தரம் ஆறுமணிக்க மேல. ஏன்.....?"
   'அந்தக் கூட்டத்துக்குச் சக்திவேல் வருவாரா....?"
   'அவர் வரலைன்னாலும் நம்ம சின்னத்தம்பி அண்ணன் நிச்சயமா அவருக்குப் பதிலா வருவாரு."
   'நான் அந்தக் கூட்டத்துல கலந்துக்கணும். எனக்கு ஒரு உதவி செய்வியா....?"
   'என்ன?"
   'எனக்கு வேலை ஆறு மணிக்குத் தான் முடியும். அப்பறம் பஸ் புடிச்சி வர ஏழுக்கு மேல ஆயிடும். நீயாவது வேற யாராவது என்ன அழைச்சிக்கினுப் போவ வருவீங்களா....?"
   'சரி நானே வர்றேன். ஆனா மீனா... நீ எதுக்கு வேலைக்கு போவணும்? நீ வேலைக்கிப் போறது எங்க யாருக்குமே புடிக்கலை தெரியுமா...."
   'என்ன சேகர் பேசுற.....? நான் வேலைக்கு போவலன்னா என்னோட தேவைங்கள யார் வாங்கித் தருவாங்க....? உங்கள மாதிரி அப்பா அம்மா சொத்துன்னு இருக்கிறவளா நான்....? நான் ஒரு அனாத. எனக்கு நானேதான் ஒதவி செஞ்சிக்கணும்."
   'மீனா.... இனிமே நீ அனாதைன்னு சொல்லக்கூடாது. உன்னுடைய ப்ரெண்ஸ் நாங்க ஆறு பேருமே உன்னோட ஒறவுத்தான். அதனால இனிமே நீ அனாதைன்னு சொல்லவே கூடாது." என்றான் கனிவானக் குரலில்.
   'சரி சேகர்" கண்கள் கலங்கத் தலையாட்டினாள்.
   'மீனா இனிமே நீ வேலைக்குப் போவக்கூடாது. உனக்கு வேண்டியதை எல்லாத்தையும் நாங்க செய்யிறோம்." மாதவன் சொன்னான்.
   'ரொம்பத் தேங்ஸ் மாதவா.... ஆனா வேணாம்.... நீங்க ஒதவி செய்யிறத நிறுத்திட்டா நம்ம நட்பே கெட்டுப் போயிடும். நான் எப்போதும் போல வேலைக்குப் போறேன். இதை நான் வேலையா நெனச்சி செய்யல. முடியாதவங்களுக்கு நான் உதவி செய்யிறேன்னுத் தான் நெனைக்கிறேன். அதுல கொஞ்சம் வருமானமும் வருது. என்னோட கால்ல நிக்கிறதால நான் தைரியமா இருக்கேன். என்னை இப்படியே விட்டுடுங்க ப்ளீஸ்." என்றாள்.
   அவள் முடிவில் முடிவாக இருந்தாள்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   மீனாவும் சேகரும் அந்தக் கூட்டத்துக்கு வந்து சேர்ந்த பொழுது மணி ஏழடிக்க சில நிமிடங்கள்! மீனா இந்நேரம் எல்லாம் பேசி முடிவெடுத்து இருப்பார்கள் என்றே நினைத்தாள்.
   தான் காலம் தவறி வந்ததால் மௌனமாகவே அமர்ந்திருந்தாள். காலம் தவறி வருபவர்களும் ஒரு வகையில் குற்றவாளிகள் தான்!
   இருந்தாலும் அவள் மனம் உருத்தியது.  அவள் சொல்ல வந்த விசயம் நடக்காமல் போய்விடுமோ என்று! எப்பொழுதுமே...ஒரு காரியத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டால் அந்தக் காரியம் பிறகு கடினமாகிவிடும். ஆனால் ஒரு கடினமான காரியத்தைத் தள்ளிப் போட்டால்.....அது நிச்சயம் முடியாத காரியமாகிவிடும்..... என்ன செய்யலாம்;;;......? என்ற குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள்.
   ஆனால் அவளை அதிகம் குழப்பவிடவில்லை அங்கே தலைமை வரிசையில் அமர்ந்திருந்த சின்னதம்பி.
   முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்த கூட்டத்தில் சின்னதம்பி டாக்டர் கணேசன் இன்னும் ஊர்ப் பெரியவர்கள் இரண்டு பேர் தலைமையிடத்தில் அமர்ந்திருந்தார்கள். அங்கிருந்த சின்னதம்பி தான் சொன்னான
   'மீனா.... இந்த வருஷம் சக்திவேல் தர்ர பணத்தை வச்சி  ரொம்ப வருஷமா ஓடாத நம்ம ஊர் தேரைப் புதுப்பிச்சி ஓட்டலாம்ன்னு முடிவெடுத்து இருக்கிறோம். இதுல உன் கருத்து எதாவது இருந்த நீ சொல்லலாம்......"
   'இந்த முடிவுல எனக்கு உடன்பாடு இல்லைங்க."
   அழுத்தமாகச் சொன்ன மீனாவை எல்லோரும் பார்த்தார்கள்.
   'காரணம்....?"
   'போன வருஷம் தவிர  அதுக்கு முன் போன நாலு வருஷமும் சக்திவேல் கொடுத்த பணத்தைக் கோயிலுக்காகவே செலவழிச்சி இருக்கீங்க. இப்படியெல்லாம் செலவழுச்சி ஆடித் திருவிழாவ நல்லா சிறப்பா கொண்டாடி இருக்கிறீங்க. அதுல வந்த வருமானத்தை வச்சே கோயிலோட தேவைகளப் பூர்த்திக் செஞ்சிடலாம். கடவுள் நம்மையெல்லாம் காப்பவர் தான். ஆனா கடவுளுக்காகவே நம்முடைய தேவைங்க எல்லாத்தையும் நிகாரிச்சிட்டா.... நம்முடைய தேவைகளுக்குக் காணாத கடவுளிடம் கையேந்த வேண்டியது தான்."
   கூட்டம் சிந்தனையுடன் அவளைப் பார்த்தது.
   'நமக்கு இப்போ என்ன தேவையின்னு எதிர் பார்க்கிறே.....?" கணேசன் கேட்டான்.
   'ஒரு ஆம்புலன்ஸ்!"
   'ஆம்புலன்ஸா......?"
   'ஆமாம். நம்ம ஊருல ஒரு பெரிய டாக்கர் இருக்கார். அவர் நம்ம ஊர் மக்களோட வியாதியப் பாத்து மருந்துக்குடுத்துக் கவனிக்கிறார். ஆனா ஏதாவது அவசரமான பெரிய பிரச்சனைகளுக்கு நாம பக்கத்துல இருக்கிற பெரிய ஊர்களுக்குத் தான் போவவேண்டி இருக்குது. அன்னைக்குப் பாருங்க. மாடு முட்டின மாடசாமி. அதுக்கு முன்னால மாரடைப்பு வந்து செத்துப்போன வீராசாமி.  மாலதியோட பிரசவ வேதனை. அதுக்கு முன்னாடி கெணத்துல விழுந்த கொழந்தயை காப்பாத்த முடியாத வேதனை....
   இப்படிப் பெரிய பிரச்சனைகளும் இருக்குது. இப்படியான அவசரத் தேவைக்கு நமக்கு அவசியமா ஒரு வண்டி தேவை. அது முழுக்க முழுக்க மருத்துவத்துக்கு மட்டும் உதவுற வண்டியா இருக்கணும். ஆம்புலன்ஸ்ன்னா அதிக செலவு. அதனால நோயாளி படுத்துக்கினே போற மாதிரி நல்ல ஓட்டத்துல இருக்கிற வேன் போதும். இது தான் இப்போது நம்முடையத் தேவை." சொல்லிவிட்டு அமர்ந்தாள்.
   'இந்த கோரிக்கையை நான் ஆமோதிக்கிறேன்." டாக்டர் மகேந்திரன் கையை உயர்த்திச் சொன்னார்.
   'சரி. வேற யார்யாரெல்லாம் இந்தக் கோரிக்கையை ஆதரிக்கிறீங்க.....?" சின்னதம்பி கேட்டான்.
   கூட்டத்தில் இருந்த அனைவருமே கையை உயர்த்தினார்கள்.
   சின்னதம்பி அனைவரையும் பார்த்தான். சரியான தலைவர்கள் இல்லை எனறால் மனிதர்கள் தானாகவே சிந்திக்க மாட்டார்களா.....? அல்லது சிந்திப்பது தலைவனின் வேலை. அதைச் செயல் படுத்துவதே தங்களுடைய கடமை என்று நினைத்து விடுவார்களா....?
   மீனாவைப் பார்த்தான். அவள் வேறு ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தாள். சின்னதம்பி கூட்டத்தைப் பார்த்து சொன்னான்.
   'சரி. இந்த வருஷம் இந்தக் கோரிக்கையையும் நிறைவேத்திடலாம். கோயில் தேர் புதுப்பிக்க வேண்டிய செலவை கோயில் நிர்வாகமே ஏத்துக்கொள்ளட்டும். என்ன சாஸ்த்திரி சொல்லுறீங்க....?"
   சாஸ்த்திரி எழுந்து நின்றார். கோவில் பொறுப்பு முழுவதும் அவரிடம் தான் இருந்தது.
   'நல்லது தம்பி. ஆனா... இருக்கும் தொகை தேரைப் புதுப்பிக்க போதுமானதாக இருக்குமான்னுத் தான் தெரியல." என்றார்.
   'முதல்ல இருக்கிறதைக்கொண்டு தொடங்குங்க. மேற்கொண்டு தேவைப்பட்டால் ஊருல கலேக்ஷன் பண்ணிக்கலாம்." கணேசன் சொன்னான்.
   'தேவையில்லை."
   குரல் வந்த திசையை நோக்கி எல்லோரும் பார்த்தார்கள். அப்படி அழுத்தமாகச் சொன்னது மீனா தான்!
   அவளின் முகம் சிந்தனையால் சிவந்து போய் இருந்தது. ஏதோ ஆழமான யோசனைக்கு நடுவில் வந்து விழுந்திருக்க வேண்டும் அந்த வார்த்தை!
   'ஏன் தேவையில்லை......?" சின்னதம்பி கேட்டான்.
   'தேவைப்படாது." கண்களை விரித்துக் குரலை அழுத்திச் சொன்னாள் மீனா.
                          

                              (தொடரும்)

  

Thursday 12 April 2012

போகப் போகத் தெரியும் 7


தொடரகதை பாகம் - 7

     பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் என்பார்கள். ஆனால் பயம் வந்துவிட்டால்......!
    பாம்பிற்குப் பயந்து என்ன செய்வது என்று அறியாமல் அருகில் இருந்த அவனைக் கட்டிப்பிடித்தாள் மீனா....! ஆனால் அவனோ.... ‘சக்திவேலைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டு.... என்னை இப்படி கட்டிப்புடிச்சியே.... இது உனக்கே அசிங்கமா இல்லையா’  என்று கேட்டான்.
    உண்மையில் அவளுடைய செயல் அவளுக்கே வெட்கமாகவும் அசிங்கமாகவும் இருந்தாலும் அதை முகம் வெளியே காட்டிக் கொள்ள மறுத்தது.
    'தோ.. பாருங்க நான் ஒன்னும் உங்கள ஆசையா கட்டிப்புடிக்கல. பாம்புக்குப் பயந்துத்தான் அப்படி நடந்துக்கினேன். அதுவும் அதோ தெரியுதே....கொடிமரம்! அதே மாதிரியான கல்லுன்னு நெனச்சித் தான் கட்டிப்புடிச்சேன்." சற்றுக் கோபமான குரலாகச் சொன்னள்.
    'ஓ.....கோயில் கொடிமரம்ன்னு நெனச்சியா....?" அவன் அவளைப் பார்த்து ஏளனமாகச் சொல்லிச் சிரித்தான்.
    'ஏன்.... அதுக்கென்ன...?"
    'இல்ல.... எங்க ஊரு பொண்ணுங்க கொடிமரத்தைக் கட்டிப் புடிச்சி விளையாடினா..... அவளுக்குக் கல்யாண ஆச வந்துடுச்சின்னு சொல்லுவாங்க." அவன் மேலும் சிரித்தான்.
    'ஏன்..... இந்த ஊருல பொண்ணுங்க கட்டிப் புடிக்க ஆம்பளைங்களே இல்லியா....?"
    அவள் சொன்னதைக் கேட்டதும் அவன் சட்டென்று சிரிப்பதை நிறுத்திவிட்டு முறைத்தான். மீனா அவனை அலட்சியமாகப் பார்த்தாள்.
    'இன்னைக்கு நீ நடந்துக்கின மொறைக்கு நானும் என்னோட ஆம்பளத்தன்மைய காட்டியிருக்க வேணும். உன் திமிரு அடங்கியிருக்கும். என்ன செய்யிறது? இந்த ஊரு ஆம்பளைங்க எல்லாருமே பொண்ணுங்கள மதிச்சி நடக்கிறதால ஒரு சில நேரத்துல இப்படி அவமானப் படுறதும் நேருது." கோபமாகப் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான்.
    மீனா அவன் வார்த்தைக்குப் பதில் பேசாமல் நின்றிருந்தாள். அவனே சற்றுப் பொறுத்துச் சொன்னான்.
    'மீனா நீ வேணுமின்னா என்னோட உடம்ப அந்தக் கல்லுக்குச் சமமா நெனச்சியிருக்கலாம். ஆனா நா கல்லு கெடையாது. உணர்ச்சி உள்ள மனுஷன். உன்னையும் நான் ஜடப்போருலா நெனைக்கல. சக்திவேல் சொன்னது போல ;மாறுவது தானே மனம்; ;உன் மனசு மாறுச்சின்னா அதுல இருக்கிற மொதோ ஆண் நானாத்தான் இருக்க முடியும். என்னை நீ மறக்கவே முடியாது."
    சொல்லிவிட்டு வண்டியை வேகமாகக் கிளப்பிக் கொண்டு போனான். மீனா அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனம் சஞ்சலம் அடையும் பொழுது அதை அடக்கி ஆள்பவனை ஞானின்னு சொல்லலாம். ஆனால் அதையேச் சவாலாகக் கூறுபவனை... என்ன என்று சொல்வது?
    இருந்தாலும் அவன்மீது மதிப்புச் சற்று அதிகமாகியது. எந்த ஒரு மனிதனும் பெரிய பெரிய காரியங்கள் செய்து மதிப்பைப் பெற்றுவிடுவது இல்லை. ரொம்ப சிறிய காரியத்தை மிகச் சரியாக நல்ல முறையில் செய்து விட்டாலே மிகச் சிறந்த மதிப்பைப் பெற்றுவிடுகிறார்கள்.
    மீனா இப்பொழுது அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள்.
    அவளால் அந்த இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. கண்களை மூடினால் அவன் தான் வந்து நின்று சிரித்தான். அவன் பேசிய வார்த்தைகள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.
    மீனா யோசித்தாள்! தனது பருவ வயது தன்னுடைய லட்சியங்களை அடிமை படுத்திவிடுமோ...... என்ற பயம் மனத்தில் ஒட்டிக் கொண்டது.
    மனத்தில் பயம் என்று வந்தாலே ஏதோ தவறு நடந்திருக்கிறது  அதற்குக் காரணம் தான்தான் என்ற எண்ணம் பயத்தை மேலும் பயமுறுத்தியது.
    இனி இங்கிருக்க வேண்டாம். விடுமுறையில் ஒரு வாரமாவது உன் அம்மாவுடன் சந்தோசமாக இருந்து விட்டு வேலைக்கு வந்தால் போதும் என்று டாக்டர் பார்த்தசாரதி சொல்லி இருந்தார் தான். ஆனால் அது முடியாது. உடனே கிளம்பி விட வேண்டும்.
    முடிவெடுத்ததும் மறுநாள் காலையிலேயே கிளம்பத் தயாரானாள்.


           0      0      0      0      0      0      0


    அன்று காலையிலேயே ஊர் ஒரே பரபரப்பாக இருந்தது. இரண்டு மாட்டு வண்டியில் மாலை பழங்கள் பாக்கு வெற்றிலை என்று சக்திவேல் வீட்டு வாசலில் நின்றிருந்தது. மீனா இதைப் பார்த்ததும் மனம் உருத்தத் தன் தாயிடம் கேட்டாள்.
    'சக்திவேலோட மொறப் பொண்ணு கண்மணி. பக்கத்து ஊருத்தான். அவ பெரிய மனுஷியாயி அஞ்சி வருஷமாகுதாம். இன்னைக்குத்தான் அவ அப்பா சடங்கு வச்சிருக்காரு. அந்த சடங்குக்குப் போவத்தான் எல்லாப் பொருளும் வந்திருக்குது." என்றாள் அறிவழகி.
    'ஏம்மா.... சக்திவேல் அந்தப் பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிக்குவாரா......?"
    அவள் குரலில் இலேசான கவலையின் சாயல் தெரிந்தது.
    'அப்படித்தான் ஊருல எல்லாரும் பேசிக்கிறாங்க. இந்தச் சடங்கு அனேகமா நிச்சயத்தார்தத்துல தான் முடியும்ன்னு நெனைக்கிறேன். சக்திவேலுவுக்கும் இன்னும் மூனு நாலு மாசத்துல படிப்பு முடியுதாம். அதான் இப்பவே இந்த ஏற்பாடுன்னு நெனைக்கிறேன்."
    புடவையை அலசிக் கொண்டே சொன்னாள். மீனா கலங்கின விழிகளை மறைத்தபடி வேலைக்குக் கிளம்பினாள்.

      0      0      0      0      0      0
   

    'சிஸ்டர்.... அந்த மாடு முட்டினவருக்கு வலி என்னன்னு கெட்டு குறிச்சிட்டுக் கிளம்புங்க."என்றார் டாக்டர்.
    'எஸ் டாக்டர்".
    என்று சொல்லிவிட்டு கையில் வலிப் பட்டையை வைத்து கொண்டு வெள்ளையில் நீல பார்டர் போட்ட நூல்சேலையில் தேவதையாக வந்த மீனாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் சேகர். அவனை அங்கே பார்த்ததும் அவளுக்கும் ஆச்சர்யம்!
    'சேகர்.... நீயா....? நீ.... நீங்க எங்க இங்க....?"
    அவனுடன் இன்னும் மூன்று பேர்!
    'யாருக்கு என்னவாச்சி.....? " யோசனையுடன் கேட்டாள்.
    'நம்ம ஊரு பால்காரர் இல்ல.... பாலமுருகன். அவரோட புள்ளைய மாடு முட்டிடுச்சி. அதான் கொண்டாந்து சேத்திருக்கோம்."
    'ஓ.... அந்த மாடு முட்டின கேசு நம்ம ஊரு கேசுத்தானா.....? டாக்டர் சொன்னார் எதுவும் பயமில்லைன்னு. ஆனா நிறைய ரத்தம் போயிருக்காம். ஆமா... மாடுமுட்டினதும் கொண்டு வந்திருக்கலாம் இல்ல. ஏன்... இவ்ளோ ரத்தம் வீணாவுற வரைக்கும் என்ன செஞ்சிக்கினு இருந்தீங்க.....?"
    'ஆம்புலன்சுக்குப் போன் செஞ்சோம். ரொம்ப நேரமா வரல. அப்புறம் நாங்களே வண்டியில கொண்டாந்தோம்....." என்றான் கவலையாக.
    அவள் நோயாளியின் அறைக்குள் நுழைந்தாள். அவருக்கு வயிற்றில் பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது. கையில் குளுக்கோஸ் இறங்கிக் கொண்டிருந்தது.
    குளுக்கோசும் அதன் குழாயும் பிறந்த பின்னும் உணவு ஊட்டும் தொப்புள் கொடியோ.....!
    அவருக்கு அருகில் இரண்டு ஆண்கள். அதில் ஒருவன் மோட்டார் வண்டிக்காரன். அவன் இவளைப் பார்த்ததும் கண்களைச் சுருக்கினான். அவனுடைய பார்வை அவளுக்குப் புரிந்தது.
    'நான் இங்கத்தான் இந்த லீவுக்கு வேலைச் செய்யுறன். காலை ஒன்பதிலிருந்து சாய்ந்தரம ;ஆறு வரைக்கும்....."
    அவள் சொல்லிவிட்டு நோயாளியை எழுப்பினாள்.
    'ஐயா..... ஐயா.... இங்க பாருங்க...... ஐயா.... தோ பாருங்க. கண்ணத்தொறங்க.....ஐயா....மாடு;;;...."
    'ஏய். மரியாதையா கூப்பிடு...." அவன் கோபமாகச் சொன்னான்.
    அவனை இவள் முறைத்து விட்டுத் திரும்பவும் அவரை எழுப்பினாள்.
    'ஐயா... இதோ பாருங்க....."
    அவர் மிகவும் சிரமமாகக் கண்விழித்தார்.
    'இந்தாங்க. இந்தப் பட்டையில வலி எவ்வளவு இருக்குதுன்னு காட்டுங்க..."
    அவர் நடுவாக ஐம்பதைத் தொட்டார். மீனா கட்டிலில் மாட்டியிருந்த காகிதத்தில் குறித்தாள்.
    சேகரிடம் வந்தாள். 'சேகர் நீங்கலெல்லாம் எப்போ கௌம்புவீங்க?"
    'அவருக்கு ஆபத்தில்லைன்னு டாக்டர் சொல்லிட்டார். இனிமே கௌம்ப வேண்டியது தான்."
    'கொஞ்சம் எனக்காகக் காத்துக்கினு இருக்கியா....? நா இந்த டிரஸ்சை மாத்திக்கினு உங்கக்கூடவே வந்துடறேன்....."
    அவன் 'சரி" என்றதும் ஓடினாள். பத்து நிமிடத்தில் திரும்பி வந்தாள்.
    அங்கிருந்த மூன்று பைக்குகளில் இரண்டில் இரண்டிரண்டு பேர் ஏறிக்கொள்ள அவன் வண்டியில் மட்டும் ஒரு இடம்! திரும்பவும் இவன் வண்டியிலேயா........? வேற வழி......? என்ன செய்வது? கையில் இருந்த குச்சி மிட்டாயை வாயில் வைத்துக் கொண்டு அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள்.
    நெடுஞ்சாலையில் போகும் போது ஒரு போக்குவரத்து கண்காணிப்பாளர் கையைக் காட்டி வண்டியை நிறுத்தினார். இவன் தான் அணிந்திருந்த குளிர்க் கண்ணாடியைக் கழற்றியதும்.....
    'தம்பீ.... நீயாப்பா.... கௌம்புப்பா....." என்றார் பவ்வியமாக. அவன் பின்னால் இருந்த மீனாவையையும் ஆச்சர்யமாகப் பார்த்தார்.
    'என்ன சார்.... நானும் இவரோட ஊர்க்காரித்தான். சக்திவேலைக் கட்டிக்கப் போற பொண்ணாக்கும் நான்....."என்றாள்.
    'அப்படியாம்மா... ரொம்ப சந்தோசம்." என்றார்.
    வண்டி கிளம்பியது. கொஞ்சம் தூரம் போனதும் அவன் கேட்டான்.
    'நீ சக்திவேலைக் கட்டிக்கப் போறேன்னு அவர்கிட்ட சொன்னது அவசியம் தானா....?"
    'ஆமா. இனிமேல என்னை எதுக்கும் மடக்க மாட்டார் இல்லையா....?"
    'எதை வச்சி சொல்லுற?"
    'போன வாரம் என்னோட பிரண்டோடக் காரை நான் ஓட்டிப் பாத்தப்போ புடிச்சிட்டாரரு. எங்கிட்ட லைசன்சு இல்ல. ரொம்ப வாட்டிட்டார். அப்புறம் பிரண்டோட அப்பா போன் பண்ணப்பிறகு தான்விட்டார். இனிமே நிச்சயமா என்ன கண்டுக்கவே மாட்டார்."
    'நீ செய்யிற தப்புக்குச் சக்திவேலோட பேரை யூஸ் பண்ணுறியா?"
    அவன் கேட்க அவள் பேசாமலிருந்தாள். ஒருவர் ஏதாவது தப்புச் செய்துவிட்டால் அந்தத் தவற்றால் புதியதாக ஒன்றை கற்றுக் கொள்ளலாம். ஆனால் தவறு என்று தெரிந்தே ஒரு தவறைச் செய்தால் பழைய தவறையே புதுப்பித்துக் கொள்வது போல் தானே......!
    முதலில் தவறு செய்தாயிற்று. பிறகு அதை திருத்திக் கொள்வது தானே முறை?
    'மீனா....." அவன் இவள் சிந்தனையைக் கலைத்தான்.
    'ம்....."
    'இனி மேல நான் சக்திவேலைக் கட்டிக்கப் போறேன்னு யார்கிட்டேயும் சொல்லாத."
    'ஏன்.....?"
    'ஏன்னா.... கடவுள் பக்தனுக்குக் கருணையைத்தான் கொடுக்கும். காதலைக் கொடுக்காது."
    'ஏன்...? கடவுள் பணமிருக்கும் பக்தை கண்மணிக்குத்தான் தன் காதலைக் கொடுக்குமா...?"
    அவள் அப்படி சொன்னதும் அவன் சட்டென்று வண்டியைப் பிரேக் பிடித்து நிறுத்தினான். மற்ற இரண்டு வண்டியும் நின்றது. அவன் மீனாவை யோசனையுடன் பார்த்தான்.
    சேகர் 'என்ன" என்று கேட்க இவன் எதையோ அவளிடம் சொல்ல வந்ததைச் சொல்லாமல் ஒன்றுமில்லை என்று தலையை மட்டும் ஆட்டி விட்டுக் கிளம்பினான்.


    0      0      0      0      0      0      0


    ஊருக்குள் வந்ததும் கோவிலுக்கு எதிரில் இருந்த பெரிய ஆலமரத்தின் அடியில் இருந்தவர்கள் அனைவரும் இவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள்.
    'டாக்டர் எந்தப் பயமுமில்லைன்னு சொல்லிட்டார். தையல் போட்டிருக்குது. காயம் ஆறினதும் இன்னும் ஒரு வாரத்துல வீட்டுக்குப் போயிடலாம்ன்னு சொன்னார்." சேகர் சொன்னான்.
    'ஓ...... இதுக்காகத் தான் இங்க எல்லாரும் கூடி இருக்கிறீங்களா....? ஏன் சேகர் ஒரு டெலிபோன் பண்ணிச் சொல்லியிருக்கக் கூடாது? உங்க யார்கிட்டேயும் செல்போன் இல்லையா......?" மீனா கேட்டாள்.
    'அண்ணன்கிட்ட இருக்குது. ஆனா ஆஸ்பத்திரியில டவர் கெடைக்கல." என்றான்.
    அப்போது மீனா மோட்டார் வண்டிக்காரனை யோசனையுடன் பார்த்தாள். சேகர் இவரைத்தான் அண்ணன் என்றான். எப்படி? யார் இவர்? எந்த வீட்டுல இருக்கிறார்? இந்த ஊர் தானா....? விளங்கவில்லை. கேட்டுவிடலாமா....? மெதுவாகக் கேட்டாள்.
    'சேகர் யாரு இவர்? இவரோட பேரு என்ன....?"
    அவள் இப்படிக் கேட்க அங்கே எல்லோருடையப் பார்வையும் இவள் மேல் படிந்தன. ஆனால் யாருமே பதில் சொல்லவில்லை.
    'என்ன மீனா... என்னைப்பத்தி தெரிஞ்சிக்கணுமா...?"
    அவனே கேட்டான். இவள் 'ஆமாம்" என்று தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.
    'என் பேரு சின்னதம்பி. எல்லாரும் என்னை தம்பீன்னு செல்லமா கூப்பிடுவாங்க. நான் சக்திவேலோட வீட்டுலத்தான் தங்கி அவரோட தயவுலத்தான் படிக்கிறேன். அவரோட வலது கையே நான்தான். என்னைக் கேக்காம அவர் எதையும் தனியா செய்ய மாட்டார். போதுமா?"
    பார்வையிலும் வார்த்தையிலும் அலட்சியம் இருந்தது. அப்படின்னா இந்தக் கல்யாண ஏற்பாடும் இவரோடதுத்தானா...?
    மனம் அவளுடைய கவலையைச் சுட்டிக்காட்டியது. அவன் மீது இலேசாகக் கோபம் வந்தது.
    'ம்.... சரி. இனிமே நீங்க என்னை அக்கான்னுத்தான் கூப்படணும்." வேண்டுமென்றே அவனை வம்புக்கிழுத்தாள்.
    'என்ன......?"
    'ஆமா. நா உங்கள தம்பீன்னுக் கூப்பிட்டா.... நீங்க என்னை அக்கான்னுத்தானே கூப்பிடணும்?"
    'நான் மரியாதை கொடுப்பவர்களுக்குத் தான் மரியாதைக் குடுப்பேன். மரியாதைத் தெரியாதவங்களோட எனக்குப் பேசக்கூட விருப்பம் கெடையாது." என்றான் கோபமாக.
    'ஏன் நா எப்போ அப்படி நடந்துக்கினேன்......?"
    'ம்..... உன்னை விட எத்தன வயசு பெரியவர் அவர்? அவர் பேரைச் சொல்லி மாடசாமின்னு கூப்பிட்டு இருந்தா கூடப் பரவாயில்ல. மாடுன்னு கூப்பிடுறே.... இது மரியாதையா...?"
    மருத்துவமனையில் நடந்தது. நினைத்ததும் அவளுக்குச் சிரிப்பு!
    'ஐயோ.... எனக்கு அவர் பேர் மாடசாமின்னுத் தெரியாது. ஐயா..... மாடுமுட்டினவரேன்னுத் தான் கூப்பிட வந்தேன். நீங்க அதட்டினதும் மாடு என்ற வார்த்தையோட நிறுத்திட்டேன்." என்றாள்.
    இதைக் கேட்டதம் அங்கிருந்த எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் அவன் சிரிக்கவில்லை. அவனின் இறுகிய முகத்தைப் பார்த்தாள்.
    'டேய் தம்பீ......."
    இவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அங்கே நின்றிருந்த ஒரு பையனை அழைத்தாள். இவன் முறைத்தான்.
    'என்னக்கா......" பையன் கேட்டான்.
    'டேய் தம்பீ..... உன்னோட தம்பியில்ல..... சின்னத்தம்பி. அவன் காலையில ஒன்னோட அம்மாக்கிட்ட குச்சிமிட்டாய் வாங்கித்தரச் சொல்லி அழுதான். இந்தா.... இந்தக் குச்சிமிட்டாயை உன்னோட சின்னத்தம்பி கிட்ட குடுத்துடு." மிட்டாயைக் கொடுத்தாள். வார்த்தையில் சின்னத்தம்பியை அழுத்தி உச்சரித்ததால் அவனைப் பார்த்தாள். அவன் இவளை முறைத்துக் கொண்டிருந்தான்;.
    'தோ... பாருங்க. அந்தப் பையனோட சின்னத்தம்பி காலையில முட்டாய் கேட்டு அழுதான். நான் சாய்ந்தரம் வாங்கியாறேன்னு சொன்னேன். அதத்தான் அந்தச் சின்னத்தம்பிகிட்ட குடுக்கச் சொன்னேன். நான் என்னவோ உங்கள மரியாதை கொறைவா பேசிட்டதா நெனச்சிடாதீங்க."
    சொல்லிவிட்டுக் கையிலிருந்த சில்வர் டிபன் பாக்ஸை தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொண்டே நடந்தாள்.
    அவள் போவதையே அந்த ஊர் மக்கள் அனைவரும் சிரிப்புக் கலந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த சின்னதம்பியும் தான்!

(தொடரும்)

Friday 6 April 2012

போகப் போகத் தெரியும் - 6



தொடர்கதை பாகம் - 6

    வானம் மையைத் தன் உடல் முழுவதும் பூசி கொண்டது போல் இருந்தது. அதில் லேசான கீறல்களாக மின்னல்கள். இடி எங்கோ இடித்தது. மழைத்துளி அங்கொன்றும் இங்கொன்றுமாக நச் நச்நென்று விழுந்தது.
    மழை பலமாக வருவதற்குள் வீடுபோய்ச் சேர்ந்து விட வேண்டும். இவ்வளவு நேரமாக மற்றப் பெண்களுடன் ஆற்றில் குதித்து விளையாடிய மீனாவும் அவசர அவசரமாக வரப்பின் மீது நடந்தாள். பின்னாலிருந்து ஒரு குரல்!
    'மீனா.... உன்ன சக்திவேல் அண்ணன் கூப்பிடுறார்....."
    சேகர் அவளைக் கத்திக் கூப்பிட்டான்.
    'என்னையா....? சக்திவேலா......? எங்க இருக்கிறார்......?"
    'அதோ.... அந்த குடோனுல......."
    மற்றப் பெண்களைப் பிரிந்து மீனா சேகர் காட்டிய குடோனை நோக்கி நடந்தாள். சேகர் மற்றப் பெண்களுடன் சென்று விட்டான்.  மழை இலேசாகத் தூவத் துவங்கியது.
    குடோன் ஓட்டு வீடு போலத்தான் இருந்தது. பழைய வீட்டை மூட்டைகள் அடுக்கிவைக்கும் குடோனாக்கப் பட்டிருந்தது. கதவு திறந்திருந்தது. மீனா உள்ளே எட்டிப்  பார்த்தாள். ஒரே இருட்டாக இருந்தது. நிறைய நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
    தலையை மட்டும் உள்ளே நுழைத்து 'சக்திவேல்.... சக்திவேல்...." என்று கூப்பிட்டாள். குடோன் அவள் சொன்னதை எதிரொலித்தது. பதில் எதுவும் வரவில்லை. உள்ளே செல்ல முயன்றவளின் பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள்.
    மோட்டார் வண்டிக்காரன் கையில் ட்டார்ச் லைட்டுடன் நின்று கொண்டிருந்தான்.
    'ஓ...... நீங்களா....? சக்திவேல் எங்க? என்ன அவரு கூட்டதாக சேகர் சொன்னான்."
    'சக்திவேலா......." சற்று யோசித்தவன் 'அவர் போய்ட்டார். நீ கௌம்பு" சொல்லிவிட்டு அவளைத் தாண்டி கிடங்கினுள் நுழைந்து டார்ச் லைட் உதவியுடன் எதையோ தேடினான்.
    அவனையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் மீனா. ;என்னத் தேடுகிறான் இவன்.......?; ; புரியவில்லை. அவன் மூட்டைகளின் இண்டு இடுக்கெல்லாம் தேடினான்.
    மழை பலமாகப் பெய்யத் துவங்கியது. மீனாவின் மீது சில்லென்று சாரல் படவும் அவள் குடோனில் நுழைந்து வெளியே பார்த்தாள். மழை சடசடவெனப் பெய்தது. பூமி ஷவர் பாத் எடுக்கிறதோ என நினைத்துச் சிரித்துக் கொண்டாள். இடி இடித்தது. மின்னல் கண்களைக் கூசியது.
    மழை உலகத்தைச் சட்டென்று இருள வைத்து விட்டது.
    'மீனா கதவை சாத்து. சாரலடிச்சா மூட்டையெல்லாம் பாழாயிடும்."
    அவன் சொல்லிக் கொண்டே தேடிக் கொண்டிருந்தான். ;நல்ல வேலை நாம் அவர்களுடன் போகவில்லை. போயிருந்தால் இந்நேரம் நல்லா மழையில நனைஞ்சிருப்போம். ; யோசித்துக் கொண்டே கதவை இலேசாக சாத்தி விட்டு அவனைப் பார்த்தாள்.
    அவன் இன்னமும் தேடிக்கொண்டே தான் இருந்தான். ஒரே ஒரு பல்ப் மட்டும் எரிந்தாலும் அந்த வெளிச்சம் போதாமல்  டார்ச் லைட்டை அடித்து வெளிச்சத்தை வீசியபடி இன்னொறு கையில் ஒருதடியை வைத்து கொண்டு அதை மூட்டைகளின் மேல் தட்டித்தட்டிச் சந்துகளில் குத்தித் தேடினான்.
    மீனா ஆர்வம் பொறுக்காமல் கேட்டாள்.
    'என்னத்தை தான் இப்படித்; தேடுறீங்க? சொன்னா நானும் உங்களுக்கு உதவுவேன் இல்லையா.....?"
    'ஒன்னுமில்ல. ஒரு பாம்பு. சாரை மாதிரி இருந்துச்சி. இடிக்கு பயந்து இங்க வந்து பூந்திடுச்சி. அதத்தான் தேடுறேன்."
    சொல்லிக் கொண்டே தேடினான். மீனாவிற்கு அவன் பேச்சை ஜீரணிக்க கொஞ்சம் நேரம் பிடித்தது. புரிந்ததும் என்ன செய்வதென்று அறியாமல் சட்டென்று பாய்ந்து அவனை முதுகு பக்கமாகக் கட்டிப் பிடித்து கொண்டாள்.
    அவன் ஒரு வினாடி அதிர்ச்சியானான்.
    'மீனா.... என்னை விடு." அவள் கையை விலக்க முயன்றான். அவள் உடும்பாகப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
    'நா மாட்டேன். எனக்கு பாம்புன்னா பயம். நா மாட்டேன்."
    கண்களை இறுக்கி மூடிக் கொண்டு அவனை மேலும் இறுக்கினாள்.
    'பயமாயிருந்தா வெளியப் போ.... என்ன தொந்தரவு பண்ணாத."
    அவள் விடவில்லை.
    'மீனா...." அவன் சற்றுக் கோபமாகக் கத்த.... மீனா கையை எடுத்து விட்டு மிரட்சியாக அவனைப் பார்த்தாள். அவளைப் பார்க்க அவனுக்கே பாவமாக இருந்திருக்க வேண்டும்.
    'மீனா.... ஒனக்கு பயமாயிருந்தா... நீ அந்த மேச மேல ஏறிக்கோ." என்றான்.
    மீனா அவசர அவசரமாக ஓடிப் போய் ஏறிக் கொண்டாள். அவன் மீண்டும் தன் பாம்பு வேட்டையைக் துவங்கினான். அவள் அவனையே பார்த்தபடி கால்களைக் கட்டிக் கொண்டு மேசையின் மேல் அமர்ந்திருந்தாள். பயத்தில் வியர்வை ஆறாக ஓடியது. கைகள் இலேசாக நடுங்கின.
    பதினைந்து நிமிடங்கள் தேடியிருப்பான். கிடைக்கவில்லை.
    'ப்ச்சு......எங்க போச்சின்னுத் தெரியல. வயிறு வேற பெருசா இருந்துச்சி. இங்க நமக்குத் தான் ஆபத்து. நெல்லு மூட்டைய எடுக்க வர்ரவங்கள போட்டுத் தள்ளிடும். எங்க போயிருக்கும்.....?"
    அவன் சொல்லிக் கொண்டே பார்வையை எல்லா இடங்களிலும் சுழலவிட்டான். மீனா எச்சிலைக கூட்டி விழுங்கினாள். பாம்பு குட்டி போடப் போவுதா.....? அது எத்தனையோ.......? பயத்தில் உடல் இலேசாக நடுங்கியது. இவன் எப்படித்தான் இவ்வளவு தைரியமாக இருக்கிறானோ.... பாம்பென்றால் படையே நடுங்கும் என்று சொல்வது இவன் விசயத்தில் பொய்யாகி விட்டதே.....
    அவன் தேடியது கிடைக்காத ஏமாற்றத்துடன் வந்து அங்கே ஆணியில் மாட்டியிருந்தச் சட்டையை எடுத்து தன் முண்டா பனியனின் மேல் போட்டு கொண்டான். அவன் பார்வை மீனாயிருந்த இடத்திற்குப் பின்புறம் யோசனையுடன் நிலைத்திருந்தது.
    மெதுவாக மீனாவின் அருகில் வந்தான். கையை நீட்டி அவளை அழைத்தான். அவன் பார்வையைப் புரிந்து கொண்டவளாக மீனாவும் திரும்பி அந்த இடத்தைப் பார்த்தாள். ஏதேதோ தாள்கள் அடுக்காக வைத்துக் கட்டப்பட்டதர்க்கு மேல் மீனாவின் மிக அருகில் அது சுருண்டு படுத்திருந்தது.
    மீனா பாம்பை தன் அருகில் பார்த்தது தான் தாமதம். சட்டென்று மேசையிலிருந்து குதித்து அவனை இறுக்கக் கட்டிப்பிடித்துக்  கொண்டாள்.
    அவன் அருகில் இருந்த கழியை எடுத்து அதன் மீது பாம்பை ஏற்றி வெளியே எறிந்தான். பாம்பு போய் மறைந்தது.
    மீனா இன்னமும் அவனைக் கட்டிப் பிடித்தபடியே இருந்தாள். அவன் அவளை விளக்கினான். ஏற்கனவே மயக்கமாகி விட்டவள் தரையில் சரிந்தாள்.
    அவன் மழைநீரைக் கொண்டு வந்து அவள் முகத்தில் தெளித்தான். விழித்தவள் திருத்திருவென முழித்தாள்.
    'மீனா.... பயப்படாத. பாம்பு போயிடுச்சி. வா.. நாம போகலாம்."
    கதவைப் பூட்டிக் கொண்டு வந்தவனைப் பின் தொடர்ந்தாள்.
    'மீனா... மழையால ஒரே சேறா இருக்குது. வண்டி சிக்கும். சுத்துப் பாதையிலத் தான் ஊருக்கு போவ முடியும். வா...." என்றான்.
    மீனாவிற்குத் தரையில் கால் வைக்கக்கூடப் பயமாக இருந்தது. எங்கேயாவது பாம்பு படுத்திருக்குமோ....... பயம்.
    அவளுக்குத் தெரியாது. யாரும் துன்புறுத்தாமல் இருந்தால் பாம்பு அதன் வழியிலேயே போகும் என்பது.
    அச்சம் அறியாமையிலிருந்து தானே வருகிறது.
    அவன் வண்டியைக் கிளப்பியதும் சட்டென்று ஏறி அவனை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அவ்வளவு பயம். அவளுடைய இதயத்துடிப்பு அவளுக்கே கேட்பது போல் இருந்தது.
    வண்டி தேங்கியிருந்த மழை நீரை வாரி இறைத்தபடி சீறிப்பாய்ந்தது.


0      0      0      0       0      0      0      0


    ஊர் கோவில் அருகில் வண்டியை நிறுத்தினான். கோவில் கோபுரக் கலசத்துக்கருகில் இருந்த விளக்கு மஞ்சள் நட்சத்திரமாக மின்னியது. கோவில் வாசல்படியில் பலகைக்கு மேல் இருந்த ட்டியூப் லைட் இரவில் நான் தான் சூரியன் என்று கர்வப்பட்டுக் கொண்டது.
    'மீனா.... இறங்கி நடந்து போ...." என்றான்.
    அவள் இறங்கிக் கொண்டாள். தன் ஊருக்குள் வந்து விட்டோம் என்று நினைத்ததும் சற்று நிம்மதியான மூச்சு வெளிவந்தது. அவள் 'தேங்ஸ்ங்க" என்றுச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
    'மீனா........" அவனழைத்தான்.
    'என்ன....?"
    அவன் அவளை ஊடுருவிப் பார்த்தான்.
    'சக்திவேலுவத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டு என்னை இப்படி கட்டிப்புடிச்சியே.....இது உனக்கே அசிங்கமாயில்ல.....?"
    அழுத்தமான பார்வையுடன் அவளைப் பார்த்துக் கேட்டான்.
                               
                  
                                (தொடரும்)
   

Thursday 5 April 2012

போகப் போகத் தெரியும் - 5



தொடர்கதை பாகம் -5


    மீனா சக்திவேல் வீட்டு வாசல் படியிலேயே நின்றிருந்தாள். சேகர் தான் அவளை அங்கேயே நிற்கச் சொல்லி இருந்தான். இருள் கறுப்பு வண்ணத்தை ஊரெங்கும் பூசிவிட்டிருந்தது. வீட்டினுள் இருந்து ஓர் அம்மாவும் பையனும் வெளியேறியதும் மீனாவை உள்ளே அனுப்பினான்.
    மீனா உள்ளே நுழைந்ததும் அந்த இடத்தை நோட்டமிட்டாள். வீட்டின் பெரிய நடைப்பகுதி அலுவலகம் போல் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய பழங்கால மேசை. அதன் மேல் நிறைய காகிதக் கட்டுகள் ஓர் ஓரத்தில். இரண்டு பேப்பர் வெய்ட்டு அப்புறம் பென்சில் பேனா என்ற தேவையான பொருட்கள்..... மேசைக்கு முன்புறம் இரண்டு நாற்காலிகளும் அதற்கு எதிர்புறம் ஒரு சுழல் நாற்காலியும் இருந்தன.
    சுழல் நாற்காலியில் தான் சக்திவேல் அமர்ந்திருந்தார். ஆனால் இவளைப் பார்த்த விதமாக இல்லாமல் அவளுக்கு முதுகுப்புறத்தைக் காட்டிக் கொண்டு அங்கே இருந்த கணிணியில் ஏதோ வேலையாக இருந்தார்.
    அங்கே இவர்களைத் தவிர ஜீவா சரண் மாதவன் சேகர் என்று நால்வர் இருந்தார்கள். சசி சிவம் என்ற இருவரைக் காணவில்லை! இவர்கள் ஆறு பேரும் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்கள். சக்திவேலுவுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்று ஊருக்குள் பேசிக்கொள்வது இவளுக்கும் தெரிந்திருந்தது.
    கணேசன் சொன்ன நம்ம ஊர் பசங்க என்றது இந்த ஆறு பேரையும் தான். இவர்கள் இங்கே இப்பொழுது இருப்பது நல்லதுக்குத்தான் என்று நினைத்தாள்.
    'அண்ணே.... மீனா வந்திருக்குது." மாதவன் சொன்னான்.
'உட்கார் மீனா......"சக்திவேலின் குரல் மட்டும் வந்தது.
மீனா உட்கார்ந்தாள். 'சக்திவேல்...." கூப்பிட்டாள்.
'மீனா மரியாதையா கூப்பிடு." சேகர் அதட்டினான்.
    'ஏன்..... அவர் பேரைச் சொல்லித்தானே கூப்பிட்டேன்? இதில் என்ன மரியாதை குறைச்சல். அவர் சொல்லட்டும் அப்படிக் கூப்பிடக் கூடாதுன்னு........" சொல்லிவிட்டுத் திரும்பவும்
    'சக்திவேல்..... நான் உங்கள பேர் சொல்லிக் கூப்பிடலாமா....? " கேட்டாள்.
    'கூப்பிடு மீனா. நீயாவது என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடு. என்னோட பேர் எனக்கு மறந்து போகாம இருக்கும். சரி... என்ன விசயமா என்னை நீ பாக்க வந்தே....?"
    குரல் சற்றுக் கரகரப்பாகச் சற்று அழுத்தமாக இருந்தது. மீனா இப்பொழுது சற்றுத் தயங்கினாள்.
    'சொல்லுமா.... தயங்காம சொல்லு."
    'வந்த.....நா...நான்.....உங்கள விரும்புறேன். உங்களையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். ஐ லவ் யூ."
    ஏற்கனவே பேசிப்பேசிப் பார்த்து விட்டு வந்த வார்த்தைகள் தான் என்றாலும் இங்கே திக்கித்திக்கி மெதுவாகத்தான் வெளியே வந்து விழுந்தது. அங்கே அமைதி நிலவியது. எல்லோருக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்!
    மீனா யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. மனம் கூசியது. தான் செய்வது தவறு என்று தெரிந்தும் தவறு செய்வது மற்றவர்களை விட தனக்குத்தானே மனம் வேதனை அடையும்! இங்கே அவள் மனம் வெட்கப்பட்டது. இருந்தாலும் தனக்குத் தேவையென்று ஒன்றை நினைத்துச் செய்யும் தவறு தவறேயானாலும் தேவையை அடைந்தால் போதும் என்று சொல்லியது.
'மீனா...." சக்திவேல் அழைத்தார்.
    அவள் எச்சிலைக் கூட்டி விழுங்கி விட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
    'மீனா... நீ படிக்கிற பெண். உன் மனசுல இப்படியான எண்ணங்கள் வந்திருக்கக்கூடாது. ஆனால் வந்து விட்டது. காரணம் தெரியலை. இருந்தாலும் உன் மனசை மாத்திக்கோ. உன் படிப்புல கவனம் செலுத்து. இப்பொழுது இருக்கிற இதே மனசு எப்பவுமே இருக்காது. மாறுவது தானே மனம்! நான் மற்றவர்களுக்குச் செய்யிற உதவிகளைப் பார்த்து உனக்கு என் மேல் விருப்பம் வந்திருக்கலாம். ஆனால் இதெல்லாம் காதலாகாது. இன்னும் காலம் இருக்குது. அதில் நீ இன்னும் நிறைய ஆண்களைச் சந்திக்க வேண்டி வரும். அப்பொழுது நீ இன்று என்னிடம் பேசின வார்த்தைகளை நினைத்து வருத்தப்படவும் நேரலாம். மனசை நிதானமாக வச்சிக்கோ. நீ போகலாம்."
    சொல்லிவிட்டுத் திரும்பவும் கணிணியில் எதையோ தேடினார். முகம் கொடுத்துப் பேசாத அந்த மனிதனின் வார்த்தைகள் அவர் மேல் அவள் வைத்திருந்த மதிப்பை மேலும் அதிகமாக்கியது. அவள் நினைத்தது போல் எல்லா ஆண்களும் ஒரே மாதிரியானவர்கள் கிடையாது.
    ஆனால் தான் எதற்காக இங்கே வந்தாளோ.... எதைஎதையெல்லாம் சொல்ல வேண்டுமென்று நினைத்து வந்தாளோ..... அந்தத் தன்னுடைய விருப்பத்தை அவரிடம் சொல்லமலேயே கிளம்ப மனம் வராமல் அங்கேயே அமர்ந்திருந்தாள்.
    தான் பேசியதை வைத்துத் தன்னைத் தாழ்வான குணம் உள்ள பெண்ணாக நினைத்து விட்டாரோ.....? என்று நினைத்த பொழுது தான் பேசியதை நினைத்துத் தானே வருந்தினாள். ஆனால் காதலிப்பது தவறில்லையே என்றது அவளது பேதை மனம்!                       

    மீனா தன் காதலைச் சக்திவேலிடம் சொன்னதும் அதற்குப் பதிலாகச் சக்திவேல் அவளுக்கு அறிவுரை சொன்னதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
    எத்தனையோ இளம் வாலிபர்கள் அவள் கடைக்கண் பார்வை கிடைக்காதா என்று ஏக்கத்துடன் சுற்றிக்கொண்டிருக்க தனக்குப் பாதுகாவலாகச் சக்திவேல் இருப்பார் என்ற நம்பிக்கையில் தான் மீனா அவரிடம் தன் காதலைச் சொன்னாள்! ஆனால் அவரை இன்னும் ஒரு முறைக்கூட பார்த்தது கிடையாது! இருந்தாலும் மற்றவர்கள் அவர் பெயரில் வைத்திருந்த நம்பிக்கை மரியாதை அன்பையும் அறிந்த போது இவளுக்கு அவர் மேல் அந்தப் பெயரின் மேல் ஒரு வித  ஈடுபாட்டை ஏற்படுத்தி விட்டது.
    அந்த ஈடுபாடு தான் காதலா.....?
    ஆமாம். அவள் அப்படித்தான் புரிந்து கொண்டாள்! ஆனால் அவன் அவளை இப்படி நிகாரிப்பான் என்று அவளுக்குத் தெரியாது. இருந்தாலும் அவளுக்கு அவனிடம் பேச வேண்டிய செய்திகள் நிறைய இருந்தன. அதைப் பேசி விட வேண்டும்.... தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள். தைரியம் தானாக வருவது கிடையாது. நாமே வரவழைத்துக் கொள்வது தான்!
    'சக்திவேல்.... நான் உங்ககிட்ட தனியாக பேச வேண்டும்." என்றாள். அவர் மெல்லச் சிரித்தார்.
    'தனியா பேச வேண்டியதையே நீ எல்லாருடைய முன்னாலேயும் சொல்லிட்டியே....." என்றார்.
    அவர் சொன்னதின் பொருள் புரிந்தது. ஆனால் அவள் தான் சக்திவேலுவை விரும்புவது அந்த ஊர் இளைஞர்களுக்கு அவசியம் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவள் எல்லோர் முன்னிலையிலும் சொன்னாள்.
    ஆனால் 'இது வேற விசயம்" என்றாள்.
    'சரி" என்று அவர் சொன்னது தான் தாமதம். அங்கே இருந்த நான்கு ஆண்கள் ஜன்னலை ஒட்டி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்..... யாரையும் காணேம்!
    அவர் சொல்லுக்குத்தான் எவ்வளவு மதிப்பு! சக்திவேல் மீதிருந்த மரியாதை இன்னும் அவளுக்கு அதிகமானது.
    'இப்போ சொல்லு மீனா. என்ன விசயம்...?"
    'சக்திவேல் என் பெயர் மீனாட்சி. மீனான்னு கூப்பிடுவாங்க. அ.மீனாட்சி. இதிலிருக்கிற அ என்ற இனிசியலுக்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னை எல்லாருமே அனாதை மீனான்னுத்தான் எங்க ஊருல சொல்லுவாங்க. என்னை வளர்த்த அம்மா பேர் அறிவழகி. நான் அவங்களுக்கு அனாதையா ஆத்தோரத்துல கெடைச்சதும் எனக்காகவே அவங்க கல்யாணமே பண்ணிக்கலை. அவங்க அண்ணன் இதைக் காரணம் காட்டியே என்னைத் திட்டுவாரு. அடிப்பாரு. ஆனா இது என்னோட தப்பான்னு எனக்குத்தெரியல.
    அவருக்கு மூனு ஆம்பளப்புள்ளைங்க. சின்னப் புள்ளையா இருந்தப்போ அண்ணன் தங்கையா பழகினவங்க..... நான் பெரிய பொண்ணானதும் என்னை அசிங்கமான பார்வையில பாக்க ஆரமிச்சிட்டாங்க. அந்த மூனுப் பேருமே என்ன அடையனுமின்னு ஆசப்பட்டாங்க. அவங்களால் என்னால நிம்மதியாவே இருக்க முடியல. அம்மாவிடம் சொல்லி அழுதேன்.
    பாவம் அவங்க. எனக்காகத் தன்னோட அண்ணனப் பிரிஞ்சி இந்த ஊருக்கு என்னை அழைச்சிக்கினு வந்தாங்க. அவங்களுக்கும் இந்த ஊருக்கும் என்ன சம்மந்தம்மின்னு எனக்குத் தெரியாது. ஆனால் இந்த ஊருல இருக்கிறவங்க எல்லாருமே நல்லவங்க. இந்த ஊருல எனக்கு பாதுகாப்பு இருக்கும் தான். இருந்தாலும் ஒரு பயம்."
    சொல்லிவிட்டு நிறுத்தினாள்.
    'என்ன பயம்......?"
    'சக்திவேல் எனக்கு நிறைய படிக்கணுமின்னு ஆசை. இப்போ ப்ளஸ் டூ. இந்த வருஷம் ஒரு ஆசிரமத்துல தங்கி வேலை செய்துக்கினே வர்ர வருமானத்துல படிக்கிறேன். ஆனால் அடுத்த வருஷம் இது முடியாதுன்னு நெனைக்கிறேன். அதனால என் படிப்புக்கு நீங்கத்தான் உதவி செய்யணும்."
    'நிச்சயம் செய்யுறேன். இந்த வருஷமே உன் படிப்புச் செலவை நானே ஏத்துக்கறேன்னுத் தான் சொன்னேன். நீ வேண்டாம்ன்னு சொல்லிட்டதா உன் அம்மா சொன்னாங்க. ஆமா.... இது தான் உன் பயத்துக்குக் காரணமா....?"
    'இல்லயில்ல. நீங்க படிப்புக்காக நிச்சயம் உதவி செய்வீங்கன்னு எனக்குத் தெரியும். நான் கேக்கவந்தது இது மட்டுமில்ல. நான் படிக்கணும். படிச்சி முடிச்சதும் பொது சேவை செய்யணும். இதுக்கெல்லாம் என் மனசுக்கு ஒரு தைரியம் தேவை. என் கற்புக்கு ஒரு பாதுகாப்புத் தேவை. அதுக்காகத் தான் நான் உங்க பேரை யூஸ் பண்ணிக்கப் போறேன். மற்ற ஆண்களோட விசமமானப் பார்வையிலிருந்து நான் தப்பிக்க வேணுமின்னா உங்க பேர் எனக்கு ஒரு பாதுகாப்பா இருக்கும். அதனால.... நீங்கத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறவர்ன்னு எல்லாரிடமும் சொல்லிக் கொள்ளப் போறேன். இதுக்கு நீங்க அனுமதி தரணும்." என்றாள் சற்றுக் கெஞ்சளாக.
    'அதுக்கு என் பேரைத்தான் சொல்ல வேணும்மின்னு இல்ல. ஆத்தூர் பொண்ணுன்னாலே உன்னை யாரும் விசமமாகப் பாக்க மாட்டார்கள்." என்றார்.
    'இல்ல. இந்த ஊர் பேரைவிட எனக்கு உங்கப் பேருத்தான் பாதுகாப்புன்னு தோனுது." அழுத்தமாகச் சொன்னாள்.
    'சரி. அப்புறம் உன்னிஷ்டம். ஆனா எனக்குன்னு வேற விருப்பங்கள் இருக்குது. அதை நீ மறந்திடாதே." என்றார்.
    மீனா சற்று நேரம் யோசித்தாள். அப்படீன்னா...... இவர் வேறயாரையாவது விரும்புகிறாரா.....? இருக்கலாம். இருந்தால் என்ன.....?
    'என்ன மீனா பேச்சையே காணோம்....?"
    'ம்.... என்னைப் பொருத்தவரைக்கும் நீங்க கடவுள். கடவுளுக்குப் பக்தையிடம் கருணையிருந்தால் போதுமே.... அதுக்காக நான் கடவுளோட உருவத்தைத் தூக்கிக்கினே நடக்க வேணாம் இல்லையா....?"
    'உண்மை தான். ஆனால் நான் உண்மையில் கடவுளாக இருந்தால் உன்னோட வாதத்தை ஏத்துக் கொள்ளலாம். நான் சாதாரண மனுஷன் தானே. உன் நல்லதுக்காக ஒரு பொய்யைச் சொல்லப்போய் நாளைக்கு அதே வார்த்தையே உன் வாழ்க்கைக்கு இடையூறு தந்தால் என்ன செய்யிறது?"
    'அப்படி எந்த இடையூறும் வராது. ஏன்னா நான் உண்மையிலேயே உங்களை விரும்புறேன். ஆனால் நீங்க வேற யாரைக் காதலிச்சாலும் எனக்கு கவலயில்ல." என்றாள்.
    அவர் பதிலெதுவும் சொல்லவில்லை.
    மீனா யோசித்தாள். தன் கதலை ஏற்றுக் கொள்ள எதையாவது இவர் எதிர்பார்க்கிறாரா....? கேட்டுவிடலாமா....? கேட்டாள்.
    'சக்திவேல்.... ஒரு ஆண் ஒருபெண்ணை கல்யாணம் பண்ணிக்க என்னன்ன எதிர்பாப்பாங்க?"
    'ஒரு பெண் பெண்ணாக இருந்தாலே போதும். வேற எந்தத் தகுதியும் ஒரு ஆண்பிள்ளையை திருப்திபடுத்தாது." என்றார்.
    அவர் சொன்ன பதில் அவளுக்குப் பிடித்திருந்தது. ஆனால் இவ்வளவு தெளிவாகப் பேசுகிறவர் ஒரு பெண்ணிடம் நேருக்கு நேராக பேசக் கூச்சப்படுகிறாரே........
    எழுந்து கொண்டாள். அவனைச் சீண்டிப்பார்க்க வேண்டும் போல் இருந்தது.
    'இருந்தாலும் ஒரு சிங்கம் மானைப் பார்க்க இப்படி கூச்சப்படக் கூடாது." என்றாள் பொதுவாக சொல்வது போல். நிச்சயம் இப்படி சொன்னதற்காக அவர் கோபப்படுவார் என்று நினைத்தாள். ஆனால் அவர் அமைதியாகவே சொன்னார்.
    'சிங்கம் மானைப் பாக்கக் கூச்சப்படலை. சிங்கத்தைப் பாத்து மான் மருண்டு விடக்கூடாது இல்லையா......?"
    தன்னுடைய கூச்ச சுபாவத்தைக் கூட எப்படி மாற்றிச் சொல்கிறார். இவர் அன்பானவர் மட்டுமல்ல. அறிவாளியும் கூடத்தான். மனம் அவர் முகத்தைக்கான ஆவல் கொண்டது. சற்று நகர்ந்து நின்று பார்த்தாள். அவர் சாய்ந்திருந்த நாற்காலியின் பின்புறம் மட்டும் மிக நன்றாகத் தெரிந்தது. தோற்ற மனம் துவண்டது.
    'சரி. நான் கிளம்புறேன் சக்திவேல்."
    'சரி." குரல் மட்டும் வந்தது.

(தொடரும்)