Thursday 20 June 2013

போகப் போகத் தெரியும் – முடிவு!!





   உலகத்தில் புதுமைகளும் புரட்சிகளும் புதிது புதியதாக நடந்து கொண்டே இருக்கின்றன. அந்தப் புதுமைகளையும் புரட்சிகளையும் பெண்கள் செய்தால் அவர்களைச் சமுதாயம் புதிய கண்ணோட்டத்தில் பார்க்கிறது. ஒரு சிலருக்குக் குறுகிய பார்வை! ஒரு சிலருக்கு விசாலப் பார்வை.
   ஆனால் யாருக்குமே சந்தோசமாக எடுத்துக்கொள்ளும் தைரியம் தான் இன்னும் வரவில்லை. வரவேண்டும். வளர வேண்டும். பனை மரத்திற்குக் கீழே பாலைக் குடித்தாலும் அதைக் கள் என்று கூறும் சமுதாயத்திற்கு அது கள் அல்ல. பால் தான் என்பதை உடனே நிறுபிக்க வேண்டும். நிறுப்பித்து விட்டால் அவர்கள் நல்லவர்கள்! இல்லையென்றால் பாலைக் குடித்தவர்களாக இருந்தாலும் அவர்கள் சமுதாயப் பார்வைக்குக் கெட்டவர்களே..!
   சமுதாயம் என்பது ஆண்பெண்கள் சேர்ந்த கூட்டம் தானே.. அதில் ஒருத்தி தான் மீனாவும்! கண்மணி தன்னுடைய கணவன் வெற்றிவேல் என்றும் ஆனால் தனக்குப் பிறந்த குழந்தைக்குத் தந்தை சக்திவேல் என்றும் சொன்னதும் அவளும் சமுதாயப் பார்வையைத் தான் பார்த்தாள்.
   அதிர்ச்சி, குழப்பம், அருவருப்பு என்று ஏகமாகக் கண்களில் தெரிந்து மறைந்தது. இது என்ன புதுக் குழப்பம்? என்று குழம்பிய மனத்திற்குப் பதில் தெரியவில்லை. கண்மணியைக் குழப்பத்துடன் பார்த்தாள். கண்மணி தெளிவாக இருந்தாள்.
   என்ன மீனா.. கொழப்பமா இருக்குதா..? அது மட்டுமில்ல. கொஞ்சம் அருவருப்பாவும் இருக்குது இல்ல..? நெனச்சிப் பாரு. உன்னாலத் தான் நா இந்த அருவருப்பையும் அவமானத்தையும் யாருக்கும் தெரியாம சுமந்தேன். எவ்ளோ வேதன பட்டிருப்பேன்..? எல்லாம் ஒனக்காகத் தான்.. ஒனக்காகத்தான்.."
   முகத்தை இரு கைகளாலும் மூடி கொண்டு அழுதாள். மீனா ஒன்றும் புரியாதவளாக நின்றிருந்தாள். சற்று நேரம் அழுதவள் தானே சமாதானமாகிக் கண்களைத் துடைத்துக் கொண்டு கட்டிலில் வந்து அமர்ந்தாள். மீனாவையும் தன் அருகில் அமர வைத்தாள்.
   மீனா.. நீ சொன்னது மாதிரி எனக்கும் சக்திவேல் மாமாவுக்கும் கல்யாணம் ஏற்பாடாகிப் பத்திரிக்கை எல்லாம் அடிச்சாச்சி. ஆனா.. எனக்கும் சக்திவேல் மாமாவுக்கும் இதுல துளி கூட விருப்பமில்ல. சக்திவேல் மாமா வெற்றிவேல் கிட்ட போயி எனக்குக் கல்யாணத்துல விருப்பம் இல்லை. என்னைக் கட்டாயப் படுத்தினா நான் ஊரைவிட்டுப் போயிடுவேன்னு சொல்லி இருக்கார். ரெண்டு பேரும் பேசி முடிவெடுத்துட்டு என்னோட முடிவு என்னன்னு கேக்க கல்யாணத்துக்கு மொதோ நாள் ராத்திரி என்வீட்டுக்கு வந்து கேட்டாங்க.
   எனக்கு விருப்பம் இல்லாத கல்யாணம் என்றதால நா எப்டி இந்தக் கல்யாணத்த நிறுத்தறதுன்னு தெரியாம கொழம்பி போயிருந்தேன். அந்த நேரத்துல அவங்க ரெண்டு பேருமே வந்து என்னோட விருப்பத்தைக் கேட்டாங்க. நானும் எனக்கு வெற்றிவேலைக் கல்யாணம் பண்ணிக்கத் தான் விருப்பம்ன்னு சொல்லிட்டேன்.
   மறுநாள் எனக்கும் வெற்றிவேலுவுக்கும் கல்யாணம் நடந்துடுச்சி. மீனா.. நா அவர பாத்து எவ்வளவு பயந்தேனோ.. அவ்வளவும் வேஸ்ட். அவரோட பழகும் பொழுதுதான் அவர் மனசு ஒரு கொழந்த மனசுன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனா.. அந்த மனசுக்குள்ளேயும் ஒரு கவலை! அது முழுக்க முழுக்க உன்னைப் பத்தினது தான். தன்னாலத் தான் ஒனக்கு இப்படியாச்சின்னு சொல்லாத நாளே இல்லை. அவரு எதுக்காக உம்மேல இவ்வளவு அன்பு வச்சார்ன்னு எனக்குப் புரியவேயில்ல. ஒம்மேல அவருக்கு அப்படி ஒரு பாசம். அதனால எங்கிட் ஒரு சத்தியம் வாங்கினார்.  நமக்கு பொறக்கிற மொதோ கொழந்தைய மீனாவுக்கு குடுத்திடணும்“ ன்னு. நானும் சந்தோஷமா சத்தியம் செஞ்சேன். இது எங்க ஊருல எல்லாருக்கும் தெரியும்.
   ரெண்டு மாசம் கழிச்சி எனக்கு கொஞ்சம் பீரியட் ப்ராபளம் இருந்ததால.. நா டாக்டர் ஆனந்தியோட நர்சிங் ஷோமுக்கு அவரோட போனேன். அன்னைக்கின்னு பாத்து அந்த கிளீனிக்கல இருந்து சக்திவேல் மாமா வெளிய போனார். நாங்க அவர பாத்தோம். ஆனா.. அவர் எங்கள பாக்கல.
   செக்கப் முடிஞ்ச பெறகு வெற்றிவேல் தான் டாக்டர்கிட்ட கேட்டார். ஏற்கனவே மாடு முட்டினதால அவருக்கு அந்த டாக்டர் நல்ல அறிமுகம். சக்திவேல் இவருடைய நண்பர்ன்னு தெரிஞ்சதால உண்மையைச் சொன்னார். சக்திவேலுவுடைய அம்மா தன்னைக் கல்யாணம் செய்துக்க சொல்லி வருப்புறுத்துவதாகவும் தனக்கு வேற பெண்கள் மீது விருப்பம் இல்லைன்னும்.. அதே சமயம் மீனாவிற்கு குழந்தை பெத்து கொள்ள முடியாது என்பதாலும் தனக்குத் தன்னுடைய குழந்தைய பெத்துத்தர ஒரு வாடகை தாய் வேணும்ன்னு சொல்லியிருக்கிறார்ன்னு சொன்னாங்க.
   நானும் அப்படியான்னு கேட்டுட்டு வீட்டுக்கு வந்திட்டேன். நா அதோட  அந்த நிகழ்ச்சிய பெரிசு பண்ணிப் பாக்கல. ஆனா.. அவர் இதமட்டுமே மனசுல வச்சி யோசனை பண்ணியிருந்திருக்காரு. மறுநாள் எங்கிட்ட வந்து சக்திவேலுவுக்காக நீ வாடகை தாயா இரேன்னு சொன்னார்.
   மீனா.. நாம புதுமையான உலகத்துல தான் வாழ்ந்து வர்றோம். ஆனாலும் இத என்னால ஏத்துக்க முடியல. எனக்குக் கோவம். ஆத்திரம். முடியாதுன்னு அவர் கூட சண்டைப் போட்டேன். ஆனாலும் அவர் பிடிவாதமா இருந்தாரு.
   இந்த தியாகத்த எனக்காகவோ.. சக்திவேலுக்காகவோ.. செய்ய வேணாம். மீனாவுக்காக செய்ன்னு கெஞ்சினாரு. அப்புறமா நானும் யோசிச்சேன். இந்த ஒரு கொழந்தை மூனு பேரோட மனவருத்தத்தைப் போக்குமே என்ற எண்ணத்துல அரை மனசா சரின்னு சொல்லிட்டேன்.
   டெஸ்ட் ட்யுப் குழந்தைன்னதால நான் தான் வாடகை தாய்ன்னு சக்திவேலுவுக்குத் தெரியவே கூடாதுன்னு கண்டீஷனா சொல்லிட்டேன். எனக்கும் என்புருஷனுக்கும் டாக்டருக்கும் மட்டும் தான் தெரியும்.
   கொழந்த நல்லபடியா நேத்து பொறந்துடுச்சி. மாமாவுக்கு இந்த நாளுல தான் கொழந்த பொறக்கும்ன்னு டாக்டர் சொல்லி இருப்பாங்க. அதனால தான் சக்திவேலு மாமா உன்ன வரவழிச்சி இருக்காருன்னு நெனச்சேன். ஆனா.. காலையில தான் நீ கனடா போவப் போறேன்னு மாமா சொன்னார். எங்க நா பட்ட கஷ்டமெல்லாம் வீணாயிடுமோன்னு பயந்து போய் ஓடியாந்தேன். உங்கிட்ட டெஸ்ட் ட்யுப் பேபியைப் பத்தி சொல்லியிருப்பாரு.. அதனால தான் இது சக்திவேலோட கொழந்தன்னு சொன்னதும் நீ தப்பா நெனைக்காம கொஞ்சினேன்னு நெனச்சிட்டேன். இந்தா மீனா. இது ஒன்னோட புருஷனோட கொழந்த. இதுக்கு இனிமே நீதான் அம்மா. சக்திவேல் தான் அப்பா. ஒன்னோட கையிலேயே உன்னோட கொழந்தைய சேர்த்துவிட்டதுல எனக்குப் பரம திருப்தி. உனக்கு..?“

   மீனா மேகத்தில் சிம்மாசனம் அமைத்து அதில் அமர்ந்து கொண்டு இருந்தது போல் மிதந்தாள். தன் காதுகளையே தன்னால் நம்ப முடியாததாகத் தன் கண்களையே தன்னால் நம்ப முடியாததாக.. இன்னும் எதையுமே.. எல்லாவற்றையுமே.. நம்ப முடியாதவளாக மெய் மறந்து அமர்ந்திருந்தாள். குழந்தை இலேசாக சிணுங்கியது. பிறகு மெல்லியக் குரலெடுத்து பிறகு சத்தமாகக் கத்தத் துவங்கியது..
   மீனா சுயவுணர்வு வந்தவளாகக் குழந்தையைப் பார்த்தாள். அது கைகளையும் கால்களையும் கண்ட மேனிக்கு ஆட்டி முறுக்கி அழுது கொண்டு இருந்தது. சுற்றிலும் பார்த்தாள். கண்மணியைக் காணவில்லை. எங்கே அவள்..?
   குழந்தையைத் துணியுடன் தூக்கினாள். தனது அடிவயிற்றில் மெல்லியச் சிலிர்ப்பை உணர்ந்தாள். இந்தக் குழந்தை என்னுடையது. எனக்கு மட்டுமே சொந்தம். மார்போடு அணைத்தாள். மனசெல்லாம் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.
   குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழிறங்கினாள். கூடத்தில் சக்திவேல் வெற்றிவேல் கண்மணி இன்னும் நிறைய பேர்கள்! மீனா குழந்தையுடன் வந்தவள் சக்திவேலுவின் காலில் விழப்போனாள். அவன் தடுத்துநிறுத்தி என்ன இதெல்லாம்" என்றான்.
   என்ன மன்னிச்சிடுங்க. நான் உங்கள தப்பா புரிஞ்சிக்கினேன்." மெதுவாகச் சொன்னாள்.
   நீ என்னை எப்பத்தான் சரியா புரிஞ்சிக்கினே.. நான் தொடக்கத்துல இருந்தே சின்னதம்பியோட கொணத்துலேயே இருந்திருக்கணும். உன்னைக் கோவத்தாலேயே அடக்கி வச்சிறுப்பேன். ஆனா.. எனக்குச் சக்திவேல் தானே உண்மையான முகம்! அன்பால நான் உன்னைக் கட்டுப் படுத்திடலாம்ன்னு நெனச்சா.. அதே அன்பால நீ என்னைக் கட்டுப்படுத்திட்ட. ம்.. பரவாயில்ல. அன்புக்காக தோத்தவன் வெற்றிபெற்றவன் தான? என்ன வெற்றிவேல் சொல்லுறீங்க..?
   மீனா வெற்றிவேலுவைத் திரும்பிப் பார்த்தாள். அவன் மென்மையாகச் சிரித்தான். மீனா அவனருகில் வந்தாள்.
   ரொம்ப நன்றி வெற்றிவேல். யாருமே செய்ய முடியாத தியாகத்தை நீங்க சர்வ சாதாரனமா செஞ்சி இருக்கிறீங்க. உங்க நல்ல மனசை நான் காலமெல்லாம் மறக்காம நன்றியுள்ளவளா இருப்பேன் வெற்றிவேல்.." கண்கலங்கச் சொன்னாள்.
   என்ன மீனா.. நா இத செய்யலைன்னா நீ என்ன மறந்துடுவியா என்ன? இப்டி பேசுற..?
   இல்ல வெற்றிவேல். கஷ்ட காலத்துல தான் உண்மையான நண்பர்களைப் புரிஞ்சிக்க முடியும்ன்னு சொல்லுவாங்க. எனக்குக் கஷ்டங்கள் வரும்போதெல்லாம் புதுபுது உண்மையான நண்பர்கள் கிடைக்கிறாங்க. இந்த நட்பு எப்பவும் நீடிக்கணும் வெற்றிவேல்."
   நிச்சயமா நீடிக்கும் மீனா. எனக்கு ஆபத்துன்னு தெரிஞ்சதும் உன்னோட உயிரையே குடுக்க முன்வந்தியே.. அத விடவா..? விடுமா. மீனா.. இந்தக் கொழந்த நம்மோட நட்புக்கு மட்டுமில்ல நம்ம ரெண்டு ஊரோட உறவுக்குப் பாலமா இருக்கும். சந்தோஷமா இரு. வாம்மா போவலாம்.."
   கண்மணியை அழைத்தான். சக்திவேல் கண்மணியைப் பார்த்தான். அவள் குனிந்து கொண்டாள்.
   கண்மணி.. இப்போத்தான் டெலிபோனுல டாக்டர் எல்லா விசயத்தையும் சொன்னாங்க. வெற்றிவேலுவும் உண்மை தான்னு ஆமோதிச்சாரு. உனக்கு நன்றின்னு ஒரு வார்த்தையைச் சொல்லி உன்னோட தியாகத்துக்கு ஒரு அளவான மதிப்ப குடுக்க நான் விரும்பல. அதுக்கு மதிப்பே கெடையாது. இருந்தாலும் நா என்னோட உயிருள்ள வரைக்கும் மறக்கவே மாட்டேன் கண்மணி" என்றான் நா தழுதழுக்க.
   இல்ல மாமா. இது தப்பு. நீங்க இதை இன்னைக்கே இப்பவே மறந்திடணும். இது மீனாவுக்கு நான் செஞ்ச நன்றிக்கடன். என்னோட புருஷன் உயிர ரெண்டு முறை காப்பாத்தியவளுக்கு நான் செஞ்ச சின்ன உதவி. இவ்வளவு தான் இப்போதைய என்னுடைய எண்ணம். இனிமே இந்த கொழந்தைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கெடையாது. சில விசயங்கள் மறைக்கப்பட்டா தான் அதுக்கு அழகு! நான் சொல்லுறது உங்களுக்குப் புரியும்ன்னு நெனைக்கிறேன்." சற்ற அழுத்தமாகப் பற்களை கடித்துக் கொண்டு சொன்னாள்.
   சக்திவேல் தலையை மட்டும் ஆட்டினான். சில உதவிகளுக்கு வார்த்தையால் நன்றி சொல்ல முடியாது. அதற்கும் மேலே.. மேலே.. என்றால் மௌனம் தான் புதிய வார்த்தையாகிப் போகிறது!
   அவனுடைய மௌனம் அவளுக்கு புரிந்தது. நான் கௌம்புறேன் மாமா." கிளம்பினாள். வாசல் படியைத் தாண்டவில்லை. குழந்தை திடிரென்று வீல் வீலென்று கத்தியது. நின்றுவிட்டாள்!!
   எல்லோருடைய கண்களும் அவள் மீது பதிந்தன. திரும்பிக் குழந்தையுடன் நின்றிருந்த மீனாவிடம் வந்தாள். அவள் கண்மணி எங்கே குழந்தையை வாங்கிக் கொள்ள போகிறாளோ.. என்ற எண்ணத்தில் மிரண்டவளாக கண்மணியைப் பார்த்தாள்.
   மீனா.. கொழந்தைன்னா அழும் தான். அதுக்கு அம்மா யாரு? அப்பா யாரு? என்ற கவலையெல்லாம் கெடையாது. பசியெடுத்தா அழுவும். நான் கொண்டாந்த ஒயர் கூடையில புட்டிபால் இருக்குது. எடுத்து குடு. துணி நனைஞ்சியிருந்தா மாத்து. இப்டி திருதிருன்னு முழிக்காத. புரியுதா..?
   மீனா தலையை ஆட்டினாள்.
   நம்ம ஊருல முக்காவாசி பொம்பளைங்க வீட்டுல புள்ள பெத்தவங்க தான். எதுவாயிருந்தாலும் அவங்க கூட இருப்பாங்க. பயப்படாத.. வரட்டுமா..? வாங்கப் போலாம்.." கிளம்பினாள்.
   ஒரு காக்கி சட்டையணிந்த ஓர் இளைஞன் வந்தான். மீனாவைப் பார்க்க வேண்டும் என்றான். மீனா என்ன?என்றாள்.
   மேடாம். ஸ்டேஷனுக்கு போகணும்ன்னு கால்டாக்சி புக் பண்ணி இருந்தீங்களே.. நா வந்து ஒரு மணி நேரமா காத்துக்கினு இருக்கேன். போலாங்களா..?
   இப்பொழுது எல்லோருடையப் பார்வையும் மீனாவின் மீது பதிந்தது.
   டேய்.. உன்னை டாக்சி வேணாம்ன்னு சொல்லிதானே போவச் சொன்னேன். நீ இன்னம் போவலையா..?
   சேகர் கோபமாகக் கத்தினான். மீனா ஒரு நிமிடம் யோசித்தாள். தூணில் சாய்ந்து கொண்டிருந்த அறிவழகியின் மடியில் குழந்தையைக் கிடத்தி புட்டிப்பாலை எடுத்து அவளிடம் கொடுத்தாள்.
   அம்மா.. நம்ம ரெண்டு பேருக்குமே கொழந்தைய பெத்துக்கற பாக்கியம் இல்லாம போயிடுச்சி. வளக்கிற பாக்கியத்தையாவது கடவுள் குடுத்தாரே.. சந்தோஷப்பட்டுக்கலாம்."
   அறைக்குள் சென்றவள் ஒரு சிறு காகிதத்துண்டுடன் வெளியே வந்து சேகரிடம் நீட்டினாள்.
   சேகர்.. டாக்சிக்காரருக்கு போகவர கூலி குடுத்திடு. அப்படியே இந்த அட்ரசுக்கு  நான் வரல. இனிமேல எப்பவுமே வரமாட்டேன்”” ன்னு டெலகிராம் குடுத்துடு. இப்போ ஒனக்கு சந்தோஷம் தானே.. இனிமேலயாவது எங்கிட்ட பேசுவ இல்ல.."
   ம்.. நா பேசுறது இருக்கட்டும். கொழந்தைக்கி அவங்க எதுக்கு பால் குடுக்கணும்? நீயே வாங்கி குடு. அந்த அழகையும் நீ கொழந்தைய கொஞ்சிற தன்மையையும் நாங்களும் பாத்து ரசிக்கணும். அந்த காட்சிய பாத்து ரசிக்கிற ஏக்கம் எங்கக்கிட்டேயும் இருக்குது மீனா.." என்றான்.
   மீனா குழந்தையை வாங்கிக் கொண்டாள். கண்மணியையும் வெற்றிவேலுவையும் சக்திவேல் தெருவரை வந்து அவர்கள் டாடாசுமோ கிளம்பும் வரை நின்றிருந்து கையசைத்து வழியனுப்பி வைத்தான். மாதவனின் தம்பி கண்ணன் கையில் க்ரீஷ் கரையை யாருக்கும் தெரியாமல் துடைத்தான்!

  -----------------------------------------------------------

   மீனா துங்கிய குழந்தையைக் கட்டிலில் கிடத்திவிட்டு மாடிக்குத் தன் கணவனைத் தேடி வந்தாள். அவன் சுதந்திரக் காற்றை நிதானமாகச் சுவாசித்துக் கொண்டிருந்தான். மீனாவைப் பார்த்ததும்.. இப்போ உனக்குச் சந்தோஷம் தானம்மா.. நா கொழந்தை பொறந்த பிறகு உங்கிட்ட கொண்டுவந்து காட்டி உன்னைக் கையோட அழைச்சிக்கினு வந்திடலாம்ன்னு இருந்தேன். ஆனா.. நீ வந்த நேரம் எனக்கு நல்ல நேரமா ஆயிடுச்சி மீனா.." என்றான்.
   கஷ்டமான காலத்திலும் மத்தவங்க செய்ய முடியாத நல்ல செயல்களைச் செய்யிறவங்க தெய்வத்துக்கு நிகர்ன்னு சொல்லுவாங்க.  உங்களோட இந்த உயர்வான உள்ளத்துக்கு நா செய்ய வேண்டிய நன்றி கடன் என்னன்னு தான் தெரியலைங்க.." கண்கலங்கச் சொன்னாள்.
   என்னம்மா.. பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுற? இது எல்லாத்துக்கும் காரணம் எனக்கு உன்மேல இருக்கற அன்பு ஆசை தான். ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம் கூடுவோம் என்பது அவான்னு திருக்குரள்ல சொல்லியிருக்குதே.. அன்பும் ஆசையும் எதை வேண்டுமானாலும் செய்யச் சொல்லித் துணியும் மீனா.. உன்னோட அன்புக்கு இது ஒன்னும் பெரிய விசயம் இல்லம்மா.." என்றான்.
   மீனா பதில் பேசத்தெரியாமல் அவன் மார்பில் நிம்மதியுடன் சாய்ந்தாள்.


  --------------------------------------------------------------

   ஏங்க டர்ன்த் திரும்பும் போது பொறுமையா திரும்பணும்ன்னு தெரியாது..? ஏன் இவ்ளோ வேகமா ஓட்டுறீங்க..? கொஞ்சம் மெதுவா போங்க." கண்மணி வேகமாகக் காரை ஓட்டிக் கொண்டிருந்த வெற்றிவேலுவிடம் கத்தினாள்.
   இல்ல கண்மணி.. வண்டி ரொம்ப நேரமா ப்ரேக் புடிக்க மாட்டுது.. என்னன்னு தெரியல."
   என்ன..? பிரேக் புடிக்கிலயா..? அப்புறம் எப்படி இந்த வண்டியில வந்தீங்க..?" அதிர்ச்சியுடன் கேட்டாள்.
   வரும்போது நல்லா தான் இருந்துச்சி. ஆனா.. இப்பத்தான்.. ஆத்தூருல யாராவது இத செஞ்சியிருக்கணும். கண்மணி பயப்படாத. சீட்பெல்ட் போட்டுக்கோ. கால மடக்கி சீட்மேல வச்சிக்கினு நல்லா இருக்கிபுடிச்சிக்கோ. ."
   அவன் சொல்ல அவள் பயத்துடனும் கவலையுடனும் செய்தாள். அவன் தார் சாலையைவிட்டு சட்டென்று மண் சாலைக்கு வண்டியைத் திருப்பினான். நல்ல வேலை! வழியில் யாரும் இல்லை. ஆனால் சற்றுத் தொலைவில் ஒரு ட்ராக்டர் போய் கொண்டு இருந்தது.
   வேறு வழியில்லை. அதன் மீது தான் மோதியாக வேண்டும். கண்மணியைப் பார்த்து கொண்டே.. தானும் தன்னைக் காப்பாற்றி கொள்ள வேண்டியவைகளைச் செய்து கோண்டான்.
   அவன் நினைத்தது போலவே ஓடிக் கொண்டிருந்த ட்ராக்டரின் பின்னால் இடித்து அதே வேகத்தில் பின்னால் ஓடிப்போய் அங்கிருந்தப் புளியமரத்தில் இடித்து திரும்பவும் எதிரில் இருந்த கற்றாழைப் புதரில் இடிப்பட்டு அதில் சொறுகிக் கொண்டு நின்றது.
   வெற்றிவேல் கண்மணியைப் பார்த்தான். அவளும் அவனைப் பயத்துடன் பார்த்தாள். இருவரும் கதவைத் திறக்க முடியாமல் ஜன்னல் வழியாக இறங்கினார்கள்!
   கண்மணியை அவன் பயத்துடன் பார்த்தான். அவள் “எனக்கோன்னும் ஆகலைங்க. நான் நல்லாதான் இருக்கேன்“ என்றாள். அவனுக்கு மனது திருப்தி பட்டுக் கொண்டது.
   கண்மணி இங்கேயே உக்காந்து இரு. ட்ராக்டர்ல இருந்த ஆளுக்கு என்னாச்சின்னு பாத்துட்டு வர்றேன்.." ஓடினான்.
   அவன் வயலில் இருந்த சேற்றுடன் எழுந்து வந்தான். எனக்கொன்னும் ஆகலண்ணா.." என்றான். சரி. நீ ஊருக்குள்ள போயி வண்டி அனுப்பு. கண்மணியால நடக்க முடியாது.." என்றான்.  அவன் தோ.. போறேன்.." என்று சொல்லிக் கொண்டே ஒரு காலை நொண்டி நொண்டி ஓடினான்.
   கண்மணியிடம் வந்தான். அவள் கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்தாள். பதறிவிட்டான். என்னம்மா.. என்ன ஆச்சி? சரி. இரு. ஆம்புலன்ச கூப்பிடுறேன்.." கை போனில் எண்களை அவசரமாக அழுத்த  அவள் தடுத்தாள். அவன் கேள்வியாகப் பார்த்தான்.
   என்னோட ஒடம்புக்கு ஒன்னுமில்லைங்க. நல்லா தான் இருக்கேன். நா மீனாவ நெனச்சேன். பாவம் அவ. ஊரு ஒன்னா இருக்கணும். எந்த பிரச்சனையும் வர கூடாதுன்னு எவ்ளோ அளவுக்கு முயற்சி பண்ணிப் பாக்குறா.. அவளுக்கு இந்த விசயம் தெரிஞ்சா..? ஒடஞ்சி போயிடுவாங்க.." அவன் கையைப் பிடித்து கொண்டு அழுதாள்.
   வெற்றிவேல் பெருமூச்சு விட்டான்.
   கண்மணி.. என்னோட அப்பா அவரோட அப்பாவ கொன்னதுக்காக பல பேரோட உயிர வாங்கினாரு. ஆனா எல்லாருமே பெருந்தன்மையா எடுத்துக்கு வாங்கன்னு எதிர் பாக்கக் கூடாது. நாம தான் எச்சரிக்கையா இருந்திருக்கணும். இப்போ ஒனக்கு ஏதாவது ஆயிருந்துச்சின்னு வச்சிக்கோயன்.. நா நிச்சயமா அருவால துர்க்கியிருப்பேன். என்னால உன்னோட இழப்ப தாங்கிக்கவே முடியாது. இதே மாதிரி தானே மத்தவங்க மனசும்..? சரி. வுடு. இந்த விசயம் நம்மோட போவட்டும். இருந்தாலும் நாம எப்போதும் ஜாக்கரதையா தான் இருக்கணும்.." என்றான்.
   மனிதனுக்கு ஏதாவது ஒரு பயம் இருந்து கொண்டே தான் இருக்குமா..? இக்கேள்விக்கு விடை காண முடியாத பதில் தானோ மனித வாழ்க்கை!!
   சற்று நேரத்தில் வெற்றிவேலுவின் ஆட்கள் வண்டி கொண்டு வர ஏறிச் சென்றார்கள்.
   புதர் மறைவில் இங்கே நடந்த அனைத்தையும் ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பையன்கள் வெளியே வந்தார்கள். இருவருக்கும்  ரெண்டுங்கெட்டான் வயசு!
   ஒருவன் சொன்னான்..
   பாருடா அந்த ஆத்தூர் நாய்கள. எவ்ளோ திமுரு இருந்தா இந்த மாதிரி செஞ்சியிருப்பானுங்க..? இத சும்மா வுட கூடாது. வா.. போயி ஊருக்குள்ள சொல்லலாம்.."
   ஊரை நோக்கி ஓடினார்கள்!!
 
   உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
   உள்ள நிறைவாமோ? - நன்னெஞ்சே
   தள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
   சேர்த்தபின் தேனாமோ? - நன்னெஞ்சே
                   (பாரதியார்)


          முற்றும்

 அருணா செல்வம்
 27.03.2007

Wednesday 19 June 2013

தொடர்கதை முடிவுக்கு முன்!!





    “போகப் போகத் தெரியும்“ தொடர்கதையைத் தொடர்ந்து படித்துவரும் இரசிகர்களுக்கு வணக்கம்.  
    இந்தத் தொடர்கதை மணிமேகலை பிரசுரத்தில் 2008 ம் ஆண்டிலேயே நாவலாக வெளிவந்து விட்டது. நான் இக்கதையை ஒரு பிரபல வார பத்திரிக்கைக்குத் தான் எழுதிக் கொடுத்தேன். ஆனால் அவர்கள், தொடர் மிகவும் நீண்டு இருப்பதால் சற்று சுறுக்கிக் கொடுக்கச் சொன்னார்கள்.
   எழுதியதைச் சுறுக்குவதைவிட புதியதாகவே வேறு ஒன்றை எழுதிக் கொடுக்கலாம் என்று நான் நினைத்தால் அதனை நாவலாகவே வெளியிட்டு விட்டேன்.
   இந்த நாவல் பலராலும் பாராட்டப் பட்டாலும் என்னிடத்தில் இரண்டு பிரதிகளே இருந்தது. இதை இரண்டாம் பதிப்பாக வெளியிட நான் விரும்பினாலும் பல காரணங்களால் முடியவில்லை.
  அதனால் இந்த நாவலை என் கணிணியில் சேமித்து வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் இதைத் தொடராக பதித்தேன்.
   ஏற்கனவே எழுதப்பட்ட நாவல் என்பதால் படித்தவர்களின் கருத்துக்குப் பதில் கொடுக்கவில்லை. மன்னிக்கவும்.
   இந்தத் தொடர் வரும் 60 ம் பதிவுடன் நிறைவடைகிறது. இதுவரை வந்து படித்துக் கருத்திட்டு ஊக்கம் அளித்த அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
   தவிர, கவிமனத்தைத் தேடி அவ்வளவாக யாரும் வருவது கிடையாது. அதனால் என் அடுத்த தொடர்கதையான “மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து“ வை என் வலைப்பூ “அருணா செல்வம்“   http://arouna-selvame.blogspot.com -த்தில் தொடராக வெளியிட உள்ளேன்.
   இந்த நாவல் எனக்கு நிறைய இரசிகர்களையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்த நாவல். எனது முதல் நாவல்! இவ்வளவு நீண்ட கதை இல்லை. மிகவும் சுறுக்கமாகவும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்ததாக படித்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
    இது கிராம சூழலில் பின்னப்பட்ட ஒரு விதவை பெண்ணைப் பற்றிய கதை. நிச்சயம் தொடர்ந்து படிப்பவர்களுக்கு ஆவலைத் தூண்டும் வகையில் கதை இருக்கும்.
   இந்த நாவலையும் தொடர்ந்து படித்து என்னை ஊக்குவிக்க  வேண்டுகிறேன்.

அன்புடன்
அருணா செல்வம்.

Monday 10 June 2013

போகப் போகத் தெரியும் - 59





   மீனா அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தாள். தான் காண்பது கனவா..? நினைவா..? நினைவுதான்! குழந்தை தன் சின்ன உடலை முறுக்கி  ங்ஙே..“ என்று குரல் கொடுத்தது.
   நினைவு தான்! கண்மணி இவளைப் பார்த்து முறைத்தபடி நின்றிருந்தாள். கோபத்தில் மார்பு எழுந்து தாழ்ந்தது. அவளைப் பார்க்க மீனாவிற்குப் பயமாக இருந்தது.
   சக்திவேலுவின் படத்தைப் பார்த்து தான் அழுத்தை இவள் பார்த்திருப்பாளோ..? பார்த்திருந்தால் என்ன நினைத்திருப்பாள்? ஏற்கனவே அவர்களுக்குள் பிரச்சினை வேறு இருக்கிறது. இப்பொழுது இதையும் பார்த்திருந்தால்.. கடவுளே.. இப்பொழுது என்ன செய்யலாம்..? அவள் முடிவெடுப்பதற்கு முன்..
   வந்தவங்கள வா.. ன்னு கூப்ட மாட்டியா..? அந்த மரியாத கூட மறந்து போயிடுச்சா ஒனக்கு..?" கண்மணி கேட்டாள்.
   அதுக்கில்ல கண்மணி.. நா.. படத்த பாத்துக்கினு.. நீ என்ன நெனச்சிட்டியோன்னு.."
   வார்த்தைகள் கோர்வையாக வர மறுத்தது.
   நா என்ன நெனைக்கிறது? உம்புருஷனோட படத்த தானே பாத்த? அதுக்கெதுக்கு இவ்ளோ பதட்டம்?"
   மீனா குழப்பமாகப் பார்த்தாள். நெற்றியில் பயத்தில் விளைந்த நீர் முத்துக்கள் ஈரப்பசையை உண்டு பண்ணியது.
   மீனா.. நீ என்னை உட்கார சொல்ல்லைன்னாலும் பரவாயில்ல. என்னால இதுக்கு மேல நிக்கமுடியாது."
   சொல்லிவிட்டுக் கட்டிலில் அமர்ந்தாள். மீனாவிற்கு அப்பொழுது தான் உரைத்தது. கண்மணிக்கு நேற்று தான் பிரசவம் ஆனது. முழுசாக இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை.  ஐயோ.. குழந்தை பெற்ற பச்சை உடம்பாயிற்றே..!
   அருகில் வந்தாள். மன்னிச்சிடு கண்மணி. ஏதோ யோசனையில இருந்துட்டேன். என்ன அவசரம் ஒனக்கு? எதுக்காக இந்த ஒடம்போட நீ வரணுமா..?"
   காரணமாத்தான். நா இப்போ வரலைன்னா.. உன்னோட பொருள உங்கிட்ட சேக்கமுடியாம போயிடுமே.. அதனால தான் அவசர அவசரமா ஓடியாந்தேன். இங்க வந்து உக்காரு." தன்னருகில் அவளை அமர வைத்தாள்.
   மீனா.. இது சக்திவேல் மாமாவோட கொழந்த."
   குழந்தையைத் தூக்கிக் காட்டினாள். குழந்தை மைதா நிறத்தில் நிறைய முடியுடன் கண்களை மூடிக் கொண்டு பூச்செண்டு போல் இருந்தது. மீனா ஆசையாக அதன் கன்னத்தைத் தொட்டாள். அது காய்ச்சியப் பாலின் மேலிருக்கும் ஆடையைத் தொட்டது போல் மென்மையாகவும் மிருதுவாகவும் இருந்தது.
   சந்தோசத்துடன் கண்மணியைப் பார்த்தாள். கண்மணி யோசனையுடன் மீனாயைப் பார்த்துக் கொண்டே.. இந்தா புடி"  சட்டென்று மீனாவின் மடியில் கிடத்தினாள். மீனா பிடித்துக் கொண்டாள்.
   மீனா.. இனிமேல இந்த கொழந்தைக்கி நீ தான் அம்மா. இத நீ உங்கொழந்தையா வளக்கிறியோ.. இல்ல எனக்கு வேணாம்ன்னு விட்டுட்டு போறியோ.. அது உன்னோட இஷ்டம். நா அதுல தலையிட மாட்டேன். என்ன பொருத்த வரைக்கும் இத பெத்து குடுக்கிற கடமை பெத்ததோட முடிஞ்சிடுச்சி. இனிமே இந்தக் கொழந்தைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கெடையாது. இனி நீயாச்சி. ஒங்கொழந்தையாச்சி. நா கௌம்புறேன்." எழுந்தாள்.
   மீனா அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தாள். கடவுளே.. இது என்ன புதுக் குழப்பம்? இவள் பேசுவதைப் பார்த்தால் குழந்தையைப் பெத்து என்னோட கையிலக் கொடுக்கறதுக்காகத் தான் சக்திவேலுவைக் கல்யாணம் பண்ணிக் கொண்டது போல் அல்லவா இருக்கிறது?
   ஐயோ.. இது சரியில்லையே.. என்னோட மனசும் இதை எதிர் பார்க்கவில்லையே..
   கண்மணியின் கையைப்பிடித்து தன் அருகில் அமர வைத்தாள்.
   கண்மணி.. நீ என்னைத் தப்பா புரிஞ்சிக்கினு இருக்க. நீ சந்தோஷமா இருக்கணும்ன்னு தான் நா இப்பவும் நெனைக்கிறேன். உன்னோட சந்தோஷமான வாழ்க்கையில நா எப்பவும் குறுக்க நிக்க மாட்டேன். பயப்படாத. நா இப்ப கௌம்பிடுவேன். எனக்கு நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கணும். நான் இங்க இல்ல என்ற எண்ணம் ஒவ்வொருத்தர் மனசுலேயும் இருக்கணும். அப்போத்தான் நாம் ஒன்றை ஏற்கனவே இழந்து இருக்கிறோம். அதனால எந்த தவறும் நடக்காம இருக்கணும்ன்னு இந்த ஊர்க்காரங்க மனசுல இருக்கும்.
   அன்னைக்கி அந்த மாடு வெற்றிவேலை முட்டியிருந்தா எவ்வளவு கலவரம் நடந்திருக்கும்ன்னு நெனச்சி பாரு. அந்த தேனப்பன்.. ரெண்டு புள்ளைங்கள இழந்தவரு. அவரோட மனசு எவ்ளோ வேதன பட்டிருக்கும்?
   கண்மணி.. எனக்குக் குழந்தையே பொறக்காது என்ற உண்மையை விட அந்த அற்பமான மனங்களை உடைய மனிதர்களின் பழிக்கு பழி என்ற உணர்ச்சி.. இன்னும் மாறாமல் இருக்குதே.. அந்த வேதனை தான் அதிகமா இருந்துச்சி.
   அந்தக் குறுகிய மனம் உள்ளவர்களை மாத்தணும். என்னைக் காரணம் காட்டி இந்தப் பிரச்சினை துளுக்காமல் இருக்கணுன்னு தான் நா நெனைச்சேன். சக்திவேல வுட்டு பிரிஞ்சி போன காரணம் இது தான். நிச்சயமா அவரு என்ன புரிஞ்சிக்குவாரு. ஒரு நல்ல விசயத்துக்காக வேற ஒரு நல்ல சந்தோஷத்த விட்டுக் கொடுக்கறது நல்லது தானே.. இப்ப சொல்லு. நான் செய்தது தப்பா..?"
   கண்மணி அவளை ஆழ்ந்து பார்த்தாள். பிறகு சொன்னாள்.
   நீ செஞ்சது தப்பு தான் மீனா. என்னோட பார்வைக்கிப் பிரச்சனைகளைப் பாத்துப் பயந்து ஓடிப் போன கோழை நீ. தைரியமா எதையும் சந்திக்க முடியாம ஓடிப் போன நம்பிக்கை துரோகி நீ. உன்னோட பக்கத்தை மட்டுமே யோசிச்சியே.. உன்னால எவ்வளவு பேருக்கு மன வருத்தம்? மன உளைச்சல்..?
   நீ ஊரவிட்டு போனதை நெனச்சி ரொம்ப சந்தோஷப்பட்டவரு தேனப்பன் மட்டும் தான். உன்னத் தெரிஞ்ச மத்த எல்லாருக்குமே.. ஒம்மேல கோவம்! வெறுப்பு! கொழந்தைக்காகத் தான் நா போகிறேன்னு நீ எழுதியிருந்த லட்டர் ஓரளவுக்கு அவங்கள சமாதானப் படுத்தினாலும்.. உம்மேல ஆசையும் அன்பும் நம்பிக்கையும் வச்சியிருந்த எல்லாருக்கும் நீ துரோகம் தான் செஞ்சியிருக்க. அவங்களோட நிம்மதிய திருடியிருக்க.." வார்த்தைகள் உஷ்ணத்துடன் வந்ததால்.. அவளுக்கு மூச்சுவாங்கியது.
   போவட்டும். வுடு கண்மணி. அப்ப எல்லாரும் வருத்தப்பட்டாலும் இப்ப நிம்மதியா சந்தோஷமாத் தான இருக்காங்க. நா இதைத்தான் எதிர் பாத்தேன். எனக்குத் தெரியும் கண்மணி. இந்தப் பிரச்சனைங்க எல்லாம் வரும். எல்லாருக்கும் எம்மேல வெறுப்பு வரும்ன்னு தெரியும். எல்லாரும் என்னை வெறுக்கணும். அதனால தான நா உங்க எல்லாரையும் விட்டுட்டுப் போனேன். கண்மணி.. முழிச்சிக்கினே நடக்கப் போறத கனவு காணுறது தான் நம்பிக்கை. என்னோட நம்பிக்கை வீண் போவல. அதுக்குச் சாட்சி இந்த ஊரோட அமைதி. அப்புறம் இந்தக் கொழந்த. போதுமா..?"
   குழந்தையைக் கண்மணியின் கையில் கொடுத்து விட்டு மீனா எழுந்தாள்.
   அமைதியைத் தேடித் தேடித்தான் ஒவ்வொருத்தரும் அலையிறோம். ஆனா.. அந்த அமைதி கெடைக்க தொடக்கத்துல போராட வேண்டி தான் இருக்குது. தொடக்கத்துல போராடினாலும் இப்ப என்னோட மனசு சந்தோஷமா அமைதியா இருக்குது. என்னைச் சந்தோஷமா வழி அனுப்பு கண்மணி.." என்றாள்.
   நீ போயிட்டா இங்க யார் யாரெல்லாம் சந்தோஷமா இருப்பாங்கன்னு நெனைக்கிற..? " கண்மணி கோபத்துடன் கேட்டாள்.
   ஏன்..? ஒனக்கு தெரியாதா..? இந்த ஊரு. நீ.. ஒங்குடும்பம்.. எல்லாருக்குமே சந்தோஷமாத்தான் இருக்கும்."
   அப்போ.. உன்னையே நெனச்சிக்கினு வாழுற சக்திவேல் மாமா சந்தோஷமா இருக்கணும்ன்னு நெனைக்க மாட்டியா..?"
   என்ன இது கேள்வி? நீயெல்லாம் இருக்கும் போது அவரோட சந்தோஷத்துக்கு என்ன குறைவாரப் போவுது?"
   மீனா.. புரிஞ்சி தான் பேசுறியா..? புரியாம பேசுறியா..? என்னத்தான் நாங்க எல்லாரும் இருந்தாலும் அது ஒன்னோட தொணைக்கி ஈடாவுமா..? கொஞ்சம் பிராட்டிக்கலா யோசனை பண்ணிப் பாரு." கோபமாகப் பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டாள்.
   நா.. நல்லா யோசனை பண்ணிப் பாத்துட்டுத் தான் சொல்றேன். நா இல்லன்னாலும் அவர் சந்தோஷமாத்தான் இருப்பார். ஏன் இந்த ரெண்டு வருஷமா சந்தோஷமா இல்ல? ஒரு கொழந்தைய பெத்துக்கல?"
   கண்மணி அவளைக் கோபத்துடன் முறைத்தாள்.
   மீனா.. தூங்கறவங்கள எழுப்பிடலாம். ஆனால் தூங்கற மாதிரி நடிக்கறவங்கள எழுப்ப முடியாது. எனக்குப் புரிஞ்சி போச்சி. நீ ஒரு முடிவோட தான் இருக்கறன்ன தெரிஞ்சி போச்சி. சரி. எப்படியாவது போய் தொலை. ஆனா இது உன்னோட புருஷனோட கொழந்த. ஒனக்காக சொமந்து பெத்தேன். நீ வேணும்ன்னா வச்சிக்கோ. வேணாம்ன்னா தூக்கி யார் கையிலயாவது குடு. எங்கடமை முடிஞ்சிடுச்சி. நா கௌம்புறேன்." குழந்தையைக் கட்டிலில் கிடத்திவிட்டுக் கிளம்பினாள்.
   கண்மணி நில்லு. எங்க போற..?"
   ஏன்.. என்னோட வீட்டுக்கு. இனிமே எனக்கு இங்க என்ன இருக்குது.?"
   கண்மணி நீ இந்த மாதிரி பேசறது சரியில்ல. நீ மட்டும் சக்திவேல விட்டுப் பிரிஞ்சி போனா.. நா.. இந்த ஒலகத்தை விட்டே போயிடுவேன்."
   கண்மணி அதிர்ச்சியுடன் நின்று திரும்பினாள். சற்று நேரம் அவள் மீனாவையே உற்றுப் பார்த்தாள். மீனா கோபத்துடன் இருந்தாள்.
   ஆனால் கண்மணியைப் போகவிடாமல் நிறுத்திவிட்ட மகிழ்ச்சி திருப்தி அவள் முகத்தில் இருந்தது!
   மீனா.. எனக்கும் சக்திவேலு மாமாவுக்கும் என்ன உறவுன்னு நெனச்ச..? ஒனக்கு என்னோட புருஷன் யாருன்னு தெரியுமா..?" மெதுவாக அதே சமயம் அழுத்தமாகவும் கேட்டாள் கண்மணி.
   ஏன் தெரியாது? ஒனக்கும் சக்திவேலுக்கும் கல்யாணம் ஆன பத்திரிக்கை கூட எங்கிட்ட பத்திரமா இருக்குது." என்றாள் மீனா அலட்சியமாக.
   ஓ.. அதனால தான் நீ இப்படியெல்லாம் பேசுறியா..? இப்பத்தான் எனக்கு புரியுது. சக்திவேலு மாமாவோட கொழந்த இதுன்னு நா காட்டினதும் அதை நீ பாத்த விதத்தையும் நா பாத்ததும் ஒனக்கு உண்மை தெரிஞ்சிருக்கும்ன்னு நெனச்சேன். ஆனா ஒனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு புரியுது. மீனா.. இந்த கொழந்த சக்திவேலு மாமாவோடது தான். இத பெத்தது நான் தான். ஆனா என்னோட புருஷன் சக்திவேலு கெடையாது. வெற்றிவேல்!" என்றாள்.


                             (தொடரும்)