Tuesday, 18 September 2012

போகப் போகத் தெரியும் - 25


    பிற்பகல் மணி இரண்டு.
   சூரியனின் கதிரைக் கருமேக தேவதை தனது காதலால் ஒலியிழுக்கச் செய்துவிடலாம் என நினைத்து வானத்தில் தடுமாறி அலைந்து கொண்டிருந்தது.
   கறுப்பு தேவதையை அணைக்க முடியாத காதல் கொண்ட சூரியன் ஏக்கப் பெருமூச்சி விட்டதினால் பூமி பகல் பொழுதிலும் குளிர்ந்த காற்றுடன் இதமாக நனைந்தது.
   'மீனா.. ஏதோ காலேஜுல நிகழ்ச்சி இருக்குன்னியே.. போவலையா..?" கமலா கேட்டாள்.
   'இல்ல. ஒடம்பு சரியில்லன்னு நாளைக்கி சொல்லிக்கிறேன்." மீனா கவலையுடன் சொன்னாள்.
   இயலாமை பொய் சொல்லத் தூண்டுகிறது.
   'மீனா.. உன்னைய நம்பி இருக்கவங்கள நீ நம்பிக்க துரோகம் பண்ணலாமா..?"
   'கூடாது தான். ஆனாக்கா எனக்கு வேற வழி தெரியலையே.. என்ன செய்யறதாம்..? நீங்களே சொல்லுங்க பாக்கலாம்?"
   'இந்தா வழி." கையில் இருந்த பிளாஸ்ட்டிக் பையை நீட்டினாள். 'இது சத்திவேல் தம்பி வாங்கினு வந்து தந்துச்சி. போட்டுக்கினு சீக்கிறமா கௌம்பு! அதுவே கூட்டிக்கினு போய் காலேஜுல உடுறேன்னு சொன்னுச்சி." என்றாள்.
   மீனா சட்டென்று வாங்கிக் கொண்டாள். மனம் மலர்ந்ததை முகம் காட்டிக் கொடுத்தது. தனது அறையினுள் சென்றவள் பதினைந்து நிமிடத்தில் வெளியே வந்தாள்.
   அவள் அணிந்திருந்த இரத்தச் சிகப்பு நிறத்தில் முத்துக்களும் வெள்ளி சரிகைகளும் மினுக்குகளும் வைத்துப் பதித்துதைத்த ஆடை அவளைத் தேவலோகப் பெண்ணே கண்முன் தோன்றியது போல் இருந்தது. அதிலும் அதனுடன் அவள் அணிந்திருந்த அணிகளங்கள்; சேர்ந்து அவள் அழகுக்கு மேலும் அழகூட்டியது.
   கமலா அவள் அழகை ரசித்துப் பார்த்தாள்.
   ஆனால் சக்திவேல்..!
   அவன் தன் கண்களைச் சற்று நேரம் இமைக்கவே மறந்துவிட்டான். சீதையைக் கண்ட இராமனைப் போல் அவளைக் கண்களாலேயே விழுங்கிவிட்டான்! அவ்வளவு ஆர்வம் கலந்த பார்வை அவன் கண்களில்!
   அகிலாண்டேசுவரி மீனாவைப் பார்த்ததைவிட தன் மகனைத்தான் முறைத்தாள். சக்திவேல் தன் தாயைப் பார்த்தால் தானே..? அவன் தான் மீனாவின் அழகில் மெய்மறந்து போய் இருக்கிறானே..
   அவன் இந்த உடையை வாங்கிய பொழுது  அது இவ்வளவு அழகாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை போலும்..
   எப்பொழுது தன்னுடைவைகள் அழகானது என்று ஒருவன் மற்றவர்கள் சொல்லாமல் உணருகிறானோ.. அவன் அப்பொழுது தான் அதன் மதிப்பை அறிந்து பெருமிதம் கொள்கிறான்.
   'சக்திவேல்.. மணியாவுது. சீக்கிரமா போயி உட்டுட்டு வா.." அதிகாரம் கலந்த அகிலாண்டேசுவரியின் குரல்!
   சக்திவேல் சுயநினைவுக்கு வந்து தலையாட்டினான்.

  ²²²   ²²²    ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   இரவு. பெண்ணின் புருவம் போன்ற வளைந்த பிறை மழைநீர் தேங்கிய குட்டையில் விழுந்து கிடந்தது.
   கல்லூரி நிகழ்ச்சி முடிந்து தானே வந்துவிடுவதாகச் சொன்ன மீனா இன்னும் வரவில்லை.
   பள்ளிக்கூட வாசலில் தன் நண்பர்களுடன் இருந்த சக்திவேல் சந்தேகத்துடன் வழியை நோக்கி இருந்தான். அன்றைய நிகழ்ச்சிக்கு வெற்றிவேல் வந்திருந்தான். ஆனால் வேந்தனோ லட்சுமணனையோ அங்கே பார்க்கவில்லை.  அதனால் சந்தேகம் வலுக்கப் போய் பார்த்துவிட்டு வருவது என்று கிளம்பினான்.
   அப்பொழுது தான் கவனித்தான்! சற்று தூரத்தில் ஓர் உருவம்.. வெளிச்சத்தை விட்டுவிட்டு இருட்டைத் தேடித்தேடிச் சற்று ஒளிந்து ஒளிந்து சென்றது.
   அது மீனா தான்! சக்திவேல் கன்டுபிடித்துவிட்டான். அவனைத் தாண்டிப் போக இருந்தவளை  'மீனா.." கூப்பிட்டான்.
   அவள் நின்றாள். ஆனால் அருகில் வரவில்லை.
   'மீனா இங்க வா.." திரும்பவும் கூப்பிட்டான்.
   'என்ன விசயம்?" குரல் உடைந்த மீனா அருகில் வராமலேயே கேட்டாள்.
   'கொஞ்சம் பேசணும்.." சொல்லிக் கொண்டே சந்தேகத்துடன் அருகே போனான்.
   'இல்ல.. நாளைக்கி பேசலாம்.. எனக்கு எனக்கு.." அதற்கு மேல் அழுகையை அடக்க முடியாதவள் கையால் வாயைப் பொத்திக் கொண்டு ஓடினாள்.
   அவளின் சராரா உடையில் பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்திருந்தாலும் கிழிந்து தொங்கிய ஜாக்கெட் முழு முதுகையும் விளக்கு வெளிச்சத்தில் காட்டி மறைந்தது. சக்திவேல் யோசனையுடன் தன் நண்பர்களைப் பார்த்தான்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   அழுது கொண்டே ஓடிவந்தவள் தனக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் புகுந்து கதவைத் தாளிட்டு கொண்டாள்.
   அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து வெளிவந்தது. சற்று நேரம் அழுதவள் ஓய்ந்தாள்.
   அழுகையும் சில சமயங்களில் ஆறுதல் அளிக்கிறது. பொழிந்துவிட்ட மேகம் வெறுமையாக இருக்கும்! அழுது விட்ட மனமும் வெறுமையாகி வேதாந்தம் போதிக்கிறது.
   அவளை இப்படி அழவைத்த வேந்தனை நினைத்தாள். என்ன மனிதன் இவன்? அவனால் எப்படி இன்று இப்படி மிருகத்தனமாக நடந்து கொள்ள முடிந்தது.;..?
   பேரூந்தைவிட்டு இறங்கி நடந்தவளை வாய் பொத்தி தூக்கிக் கொண்டு போய்.. எப்படியான தகாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டினான்! மீனா கோபத்தில் திருப்பித் திட்ட எத்தனை முறை கன்னங்களில் அறைந்தான்? அடித்தாலும் பரவாயில்லை!
   உடம்பில் ஒரு ஒட்டுதுணியையும் விட்டு வைக்காமல் அவிழ்த்து எறிந்துவிட்டு சொன்னான்.  'ஒன்ஒடம்ப முழுசா துணியே இல்லாம பாத்துட்டன். இப்போ நீ பாதி கற்பு எழந்தவ. நாளைக்கி யவனையும் உன்னால கட்டிக்க முடியாது. இப்ப நா நெனச்சாக்கூட ஒன்ன சின்னா பின்னமாக்கிட முடியும்;;. ஆனா அப்டி செய்ய மாட்டேன். ஏன்னா.. நீ இன்னா சொன்ன..? தாலிகட்டுன பொண்டாட்டிய தொடறவன் தான் ஆம்பளன்னு சொன்ன இல்ல? தாலிய கட்டிட்டு தொடறன். இப்ப நீ எனக்குப் பாதிப் பொண்டாட்டி.. போடி போ. போயி யாருகிட்டவேணா சொல்லிக்கோ. எனக்குக் கவலையே இல்ல. எவன் வர்றான்னு நானும் பாக்கறன். அந்தச் சத்திவேலு அந்த ஆறு பையனுங்க தான.. வரட்டும். அவனுங்கள வெட்டி சாகடிகாம என் உசிறு போவாதுடி. வக்கிறன் அவனுங்களுக்கு வேட்டு. மோதரம் போடுறானா அவன்? அவன் கைய வெட்றன் மொதல்ல. போ. போயி எல்லாத்தையும் சொல்லு."
   வெறியுடன் கத்தினான். மீனா கையில் கிடைத்த துணியை சுற்றிகொண்டு இறக்கை இழந்த பறவையாக நடந்தாள்.
  


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   'நேத்து என்ன நடந்துச்சி..?"
   கல்லூரிக்குக் கிளம்பினவளை நிறுத்திக் கேட்டான் சக்திவேல். கையில் சிவப்பு நிற துப்பட்டா இருந்தது.
   'அது ஒன்னுமில்ல. நேத்து வர்ற வழியில காத்துல துப்பட்டா பறந்துடுச்சி. தேடிப்பாத்தன். கெடைக்கில. துப்பட்டா இல்லாம எப்படி வர்றதுன்னு தெரியாம அசிங்க பட்டுக்கினு இருட்டுல பதுங்கி பதுங்கி வந்தேன்."
    கூசாமல் பொய் சொன்னாள். ஏற்கனவே யோசித்து வைத்தது தான்;! ஆனால் இவன் கையில் எப்படி வந்தது இந்தத் துப்பட்டா..?
   'அப்படீன்னா.. நீ உண்மைய எப்பவுமே சொல்ல மாட்டேயில்ல..?"
   கோபம் வார்த்தையில் தெரிந்தது.
   'இது தாங்க உண்ம."
   அவன் பெருமூச்சி விட்டான். 'மீனா.. பிரச்சனைங்க வரக்கூடாதுன்னு நீ பிரச்சனைகள மூடி மறைக்கப் பாக்குற. ஆனா முடியாது. அது ஒரு நாளைக்கி வெடிச்சிக்கினு வெளிய வரும் போது ரொம்ப ஆபத்துல கொண்டு போய்விட்டுடும். ஞாபகம் வச்சிக்கோ. எங்கிட்ட சொல்லலன்னாலும் பரவாயில்ல. ஆனா ஜாக்கறதையா இருந்துக்கோ. இனிமே வெளிச்சத்தோட வீட்டுக்கு வந்துடு. இல்லன்னா நாங்க யாராவது வர்றோம்." என்றான்.

    அவளும் சனிக்கிழமை பகல் பொழுதிலேயே வந்துவிட்டாள். இவளுக்காக அறிவழகி வந்து காத்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அன்று முழுவதும் அன்னையின் மடியிலேயே படுத்திருந்தாள். சக்திவேல் வெளியூர் போயிருந்தான்.
   மீனாவிற்கு மறுநாள் தான் தெரியும். அறிவழகி தன் மகளைப் பார்க்கமட்டும் வரவில்லை. அவளுக்கு ஒரு வரன் தேடிக் கல்யாணமும் பேசி இன்று நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு தான் வந்திருக்கிறாள் என்று!
   மீனா தன் தாயிடம் கெஞ்சினாள். தனக்கு இப்பொழுது கல்யாணம் வேண்டாம் என்று! அறிவழகி எதையும் காதில் வாங்கவில்லை.
   மூன்று மணியளவில் மாப்பிள்ளை வீட்டார் காரில் வந்து சக்திவேல் வீட்டு கூடத்தில் கூடி அமர்ந்து இருந்தார்கள். மீனா அப்ஸரசாக அலங்கரிக்கப் பட்டாள். அழுது சிவந்த கண்களுடன்.                             

                                  (தொடரும்)

முன் கதைச் சுறுக்கம்.




போகப் போகத் தெரியும் தொடர்கதையின் முன் கதைச் சுறுக்கம்.

    மீனா.... இந்தக் கதையின் நாயகி! ஓர் அனாதைபெண். அவளைக் குழந்தையாக இருக்கும் பொழுது அறிவழகி என்பவள் ஆற்றங்கரையில் கண்டெடுத்து வளர்க்கிறாள்.
    மீனா ஆத்தூர் என்ற ஊரை வழிநடத்திச் செல்லும் சக்திவேல் என்பவனை விரும்புகிறாள். சக்திவேலின் தாய் தன் மகனுக்கு இரத்த சொந்தத்தில் தான் பெண் அமையும் என்று ஜோசியன் சொன்னதால் சொந்தத்தில் பெண் தேடிக் கொண்டிருக்கிறாள். இதற்கு நடுவில் வெற்றிவேல் என்பவனும், அவன் தம்பி வேந்தன் என்பவனும் மீனாவை விரும்புகிறார்கள். வெற்றிவேல் ஊருக்கும் சக்திவேல் ஊருக்கும் தொடக்கத்திலிருந்தே பிரட்சனை இருந்தாலும் புதியதாக வந்து மீனாவால் மேலும் பிரட்சனைத் தொடர்கிறது.

    தற்போது மீனாவைச் சக்திவேல் வீட்டில் அடைக்கலமாக இருக்கிறாள். சக்திவேலின் தாய் அகிலாண்டேசுவரி இவளை வெறுக்கும் காரணம் தெரியாமலும் சக்திவேலின் புத்தகத்திலிருந்து எடுத்த வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் கண்டும் மீனா குழம்பிப் போய் இருக்கிறாள்.

தொடருங்கள்...

Thursday, 6 September 2012

போகப் போகத் தெரியும் - 24






   மீனா வந்ததிலிருந்து சக்திவேல் மீனா என்றொரு பெண் தன் வீட்டில் இருக்கிறாள் என்ற நினைவே இல்லாதவன் போல் நடந்து கொண்டதால் மீனா யோசித்தாள்.
   அவள் சனிக்கிழமைகளில் கல்லூரியிலிருந்து வரும் பொழுதும் திங்கள் கிழமைகளில் காலையில் கல்லூரிக்குத் திரும்பிப் போகும் பொழுதும் அவன் தன் நண்பர்களுடன் ஊர் பள்ளிக்கூடத்தின் திண்ணையில் இருந்து கொண்டு இவளைப் பார்ப்பான். இவளும் அவனை ஓரக்கண்களால் பார்த்துச் சிரித்துக் கொள்வாள். அவ்வளவு தான்.
    வீட்டில் அது கூடக் கிடையாது. சில நாட்களில் அவன் வீட்டிலேயே இருக்க மாட்டான்.
    யாரிடமாவது விசாரித்தால் அவன் பெங்களுர் போய் இருப்பதாய் பதில் கிடைக்கும்.
    வீட்டில் இருக்கும் பொழுது நிறைய தொலைபேசி அழைப்பு வரும். அதில் ஒரு பெண் குரல் தான் சக்திவேலைக் கேட்க்கும். அவன் அந்தக் குரலுடன் பேச ஆரம்பித்து விட்டால் பொழுது கரைந்து விடும். சிரித்துப் பேசுவான். இவளுக்குப் புரியாது. காரணம்... அவன் கன்னடத்தில் அல்லவா பேசுகிறான்...!
    இதையெல்லாம் பார்க்கும் பொழுது அவளுக்குத் தொடக்கத்தில் கோபமாகத் தான் இருந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்? உண்மையில் அவன் அவளுக்கு என்ன உறவு? காதலி என்று சொல்லலாமா...?
    எந்த உறவும் இல்லாமலேயே உறவைக் கொண்டாட வருவது தானே காதல்!!
    ஆனால் இது காதல்தான் என்று சொல்லிக்கொள்ள எந்த பதிலும் அவனிடமிருந்து வரவில்லையே! அன்று சின்னத்தம்பியாக இருந்த பொழுது தன்னைக் காதலிப்பதாகச் சொன்னவன்... அவனே பின்பு சக்திவேலாகி என் மனத்தில் வேறோரு பெண் இருக்கிறாள் என்று சொன்னவனும் இவன் தானே...!
    அன்று வெற்றி பெற்றதின் பரிசாகத் தன் நண்பர்களின் எதிரிலேயே முத்தம் கேட்டு பேச்சால் அவளைச் சீண்டியவன்... அதன் பிறகு தனிமையில் எதையும் பேசினதில்லையே...!!
      ஒரு சமயம் முறையுள்ளவர்களைக் கேலி கிண்டல் செய்து விளையாடுவது போல் விளையாடினானோ...! அதைத் தான் நாம் காதல் என்று தவறாக நினைத்துக் கொண்டோமா...? இருக்கலாம்...
    அப்படியென்றால் அவன் தன்னைக் காதலிக்கவில்லை என்பது உண்மை தான்! அவனுக்கு எப்படி தன் மீது காதல் வரும்? சொந்தத்தில் தான் பெண் அமையும் என்று ஜாதகம் சொல்கிறது. பணக்காரன். படித்தவன். பண்பாளன். இவனுக்குப் பெண் கொடுக்க பணக்காரர்கள் நான் நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டிருக்க... அனாதையான தனக்கா அவன் தாலி கட்டுவான்...
    சரி தனக்குக் கிடைக்கவில்லை என்றாலும் அவன் காதலிக்கும் பெண்ணுடனாவது நன்றாக வாழட்டும். மனதார வாழ்த்தினாள்.
    இது தானே உண்மையான காதல்!
    அப்படியானால் தனக்குப் பிடித்தவனை அடுத்தவருக்கு விட்டுக் கொடுப்பது தான் காதலா...?
    ஆமாம். இதுவும் ஒருவகை காதல் தான். தனக்கு எட்டாத பழம் சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும் என்று நினைக்காமல் நம்மைவிட வலிமையானவர்கள் ருசிக்கட்டுமே என்று தகுதி உள்ளவர்களுக்குத் தன் ஏமாற்றத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவர்களை விட்டு நகர்ந்து விடுவதும் ஒரு வகையில் காதல் தான்...
    ஏமாற்றம் அடைந்தவன் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளமல் அடுத்தவனால் தான் வந்தது என்று தன்னைச் சமாதானம் செய்து கொள்வது இல்லையா...?
    அதிலும் இங்கே வெற்றிவேலும் வேந்தனும் இவளுடைய தகுதி என்னவென்று அவளிடமே சொல்லித் தானே இருந்தார்கள்?
    ஒரு புத்திசாளி தன்னுடைய எதிரிகளிடமிருந்து நிறைய விசயங்கள் கற்றுக் கொள்கிறான். இதோ மீனாவும் தன்னுடைய தகுதியை எடைபோட்டுக் கொண்டாள். தனக்குச் சக்திவேலை அடைய எந்தத் தகுதியும் இல்லை என்று.
    ஆனால் தகுதியைப் பார்த்து வருவதா காதல்?
    இருந்தாலும் அவனுக்கு எல்லாவித்த்திலும் பொருந்திய அந்தப் பெங்களுர்ப் பெண் நிருஜாவைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது.
    எப்படிப் பார்ப்பது? சக்திவேல் ஏதாவது புகைப்படம் வைத்திருப்பானா...? அப்படி வைத்திருந்தாலும் மாடியில் அவன் அறையில் தான் வைத்திருப்பான்!
    இதுவரை அவள் மாடிக்குப் போனது கிடையாது. அவள் மட்டுமல்ல. கமலாவைத் தவிர யாருமே மாடிக்குப் போகக்கூடாது. கமலா கூட அறையைச் சுத்தம் செய்ய, அழுக்கு உடைகளைக் கொண்டுவர என்று மட்டும் தான் போவாள்.
    கமலாவிடம் நிருஜா விசயத்தைக் கேட்கலாமா என்று நினைத்தாலும் எந்த அளவிற்கு இவர்களுக்கு அவளைப் பற்றித் தெரியும் என்பது தெரியாது. அவள் நிச்சயமாக நெருங்கின சொந்தமாக இருக்க முடியாது!
    கிணறு தோண்டப் பூதம் கிளம்பின கதையாக மாறி விட்டால்...? வேண்டாம். பேசாமல் இருந்து விட்டாள்.
    ஒரு நாள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கமலாவே மாடி அறையைச் சுத்தம் செய்ய மீனாவை அனுப்பினாள். அன்று சக்திவேல் ஊரில் இல்லை.
    அறை நாகரிகப் பாணியில் குளிர் சாதனவசதி செய்யப்பட்டு பெரியதாக இருந்தன. அவளின் கைகள் வேலை செய்து கொண்டே இருந்தாலும் கண்கள் ஏதேனும் புகைப்படம் கிடைக்குமா என்று தேடிய வண்ணமாகவே இருந்தது. ஏமாற்றம் தான் கண்களுக்கு!
    கட்டிலைச் சரிசெய்து போர்வையை உதறிய பொழுது கீழே விழுந்த புத்தகத்தை எடுத்துப் பிரித்தாள். அது ஒரு கன்னட புத்தகம்!
    முதல் பக்கத்தைத் திறந்தவளுக்கு அதிர்ச்சி! அதில் அவளுடைய புகைப்படம் இருந்தது! எப்பொழுது எடுத்தது? அதுவும் பாவாடை சட்டையில்! மனத்தில் இலேசான சந்தோசம் ஒட்டிக்கொண்டது.
    மேலும் மேலும் சில பக்கங்களைத் திருப்ப மேலும் சிலபடங்கள்!
    ஆனால் இப்பொழுது மனம் சந்தோஷம் கொள்ளவில்லை. சஞ்சலம் தான் அடைந்தது. காரணம் அதில் ஒரு படம் தான் அவளுடையது. மற்ற நான்கும் வேறு ஒரு பெண்ணுடையது. படத்தில் இருந்த பெண் மிக அழகாக இருந்தாள். அனேகமாக இவள் தான் நிருஜாவாக இருக்கும். அவளே முடிவுக்கு வந்து விட்டாள்.
    அவளைப் பார்க்க இவளுக்குப் பொறாமை கூட வந்தது. பெருமூச்சு விட்டுவிட்டு அப்புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டுத் தன்னுடைய படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கீழிறங்கினாள்.
    ஒன்றைவிட நான்குக்குத் தானே மதிப்பதிகம்! நான்கு படத்தில் இருக்கும் மதிப்புத் தன்னுடைய ஒரு படத்திற்கு இருக்காது என்பது அவளது எண்ணம்.
    ஆனால் சக்திவேல் எதற்காகத் தன்னுடைய ஒரு புகைப்படத்தை வைத்திருக்கிறான் என்பதை அவள் யோசிக்கவில்லை.
    சில நேரங்களில் கவலைகள் சிந்தனை செய்ய விடுவதில்லை! தான் கண்டது தான் காட்சி என்றாகி விடுகிறது. காரணம்... தான் கண்ட காட்சியைத் தன்னுள்ளே நினைத்துப்பார்க்க வெளிச்சம் தேவையில்லை என்கிறதே மனம்!!
    இந்த விசயத்தை அவளால் எளிதாக ஜீரணிக்க முடியவில்லை. யாரிடம் தன் வேதனையைப் பங்கு போட்டுக்கொள்ள முடியும்?
    ஊமை கண்ட கனவுதான் தனது காதல்! முடிவு எடுத்தாள். தன் காதலை மனத்திலேயே விழுங்கி இதயத்தில் நினைவுசின்னமாக்கி விடுவது என்று!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
    
    கவலைகள் வந்தால் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். காரணம் முதல் கவலை இன்னும் ஜீரணம் ஆகாமல் இருந்ததால் அடுத்தது வரும் சாதாரண விசயம் கூட மிகப் பெரிய கவலையாகத் தெரியும். பெரிய கோட்டின் பக்கத்தில் சிறிய கொடு தத்துவம் தான்.
    ஒருநாள் காலையில் அகிலாண்டேசுவரியும் சேகரின் அம்மாவும் எங்கோ சென்றுவிட்டுப் பொழுது சாய்ந்தபிறகு தான் வந்தார்கள்.
    மீனாவிற்கு இது அதிசயமாக இருந்தது. அதைவிட அதிசயம் என்னவென்றால்... அன்றைய நாளில் இருந்து அந்த அம்மாள் மீனாவைப் பார்க்கும் பார்வையில் வெறுப்பு கலந்திருந்தது தான்!
    காரணம் தெரியவில்லை என்றாலும் மீனா எப்பொழுதும் போலத்தான் நடந்து கொண்டாள். ஆனால் அவர் அதை விரும்பாதது அவளுக்கு மிக நன்றாகப் புரிந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமே...
    அவள் மனத்தில் வெறுப்பு கலந்த சிரிப்பு தான் வந்தது... எந்த உறவுமே உலகத்தில் நிரந்தரம் இல்லையா...? உலகமே நிரந்தரம் அற்றது என்னும் பொழுது உறவுக்குள் நிரந்தரமா...
    மீனா தன்னை நினைத்தாள். அவளுக்கு எந்த உரிமையான உறவும் நீடித்ததில்லை. அறிவழகியின் அன்பைத் தவிர! அதுவும் அறுந்து விட்டால்...?
    அன்பு அறுந்து போகுமா...? வெறுப்பு வந்தால் அறுந்து விடுவது தான் அன்பு. அப்படியானால் உண்மையான தூய்மையான அன்பு என்று எதுவும் இல்லையா...?
    இல்லை தான். தேனோ, பாலோ, மலர்களோ ஏன் நீரும் கூட தூய்மையானது இல்லை என்னும் பொழுது அழுக்கடைந்த மனித மனம் மட்டும் தூய்மையானதாக இருக்கும் என்றா எதிர்பார்க்க முடியும்...?
    காய்ந்த மனத்தில் மலர்ந்த சிரிப்பு வெறுப்பு கலந்து உதிர்ந்தது அவளின் முகத்தில். மனத்திற்கு நீர்வார்க்க எந்த மனிதனால் முடியும்? யார் தனக்காக இருக்கிறார்கள்?
    தன்னைவிட்டு ஒதுங்க நினைப்பவர்களை விட்டு நாமே ஒதுங்கி இருந்துவிட்டால்... அதனால் அவள் நாசுக்காக ஒதுங்கியே இருந்தாள்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

   மறுநாள் கல்லூரியில் கலைநிகழ்ச்சி. அதில் மீனாவும் கண்மணியும் நடனம் ஆட ஒத்திகைப் பார்த்துத் தயாராக இருந்தார்கள்.
    ஒரு விசயத்தில் தயாராக இருப்பது என்பது பாதிக்கிணறு தாண்டியதைப் போன்றது என்பார்கள்...
    மீனா அதற்காகத்தான் அன்று மஞ்சள் சாயம் ஏறிப்போன தன் சராரா உடையைத் துவைத்துக் கொண்டிருந்தாள். என்ன போட்டும் என்ன கசக்கியும் அதில் இருந்த கரை போகவில்லை. எல்லாம் வாழைமட்டை சாற்றுடன் கலந்த மஞ்சள் நீர் சாயம் என்பதால் அந்த உடையில் பட்டைப் பட்டையாகவும் சில இடங்களில் திட்டுத் திட்டாகவும் கரை அழுத்தமாகத் தெரிந்தது.
   அவள் அதிக முயற்சி எடுத்துக் கசக்கினாள். ஊஹீம்... கரை போகவில்லை...! அங்கே வந்த கமலாவிடம் விசயத்தைச் சொன்னாள்.
    அவள் “மீனா... இந்த இடத்தில் நானா இருந்தா... நேரா அவருகிட்ட போயி உன்னால தான் என் டிரஸ் இப்படி ஆச்சி. எனக்கு இதே மாதிரி ஒரு டிரஸ் வாங்கிக் குடுன்னு கேட்டிருப்பேன்என்றாள்.
    இவள் உசுப்பிவிட்ட வேகம்... ஏற்கனவே எவ்வளவு துவைத்தும் கரை போகவில்லை என்ற ஆத்திரம்... மீனா சக்திவேலிடம் வந்தாள். அவன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான்.
    “சக்திவேல்...“ அதிகாரமாகக் கூப்பிட்டாள்!
    அவன் அதிர்ச்சியுடன் இவளை நிமிர்ந்து பார்க்க அவள் கோபமெல்லாம் கரைந்து விட்டது!
    “என்ன...?“ அவன் குரலும் சற்றுக் கடுமையாக வந்தது.
    “வந்து... வந்து... நாளைக்கி சாய்ந்தரம் காலேஜில ஒரு புரோகிராம்! நானும் கண்மணியும் சேர்ந்து ஒரு டான்சு ஆடப் போறோம். என்னோட டிரஸ்சை நீங்க மஞ்ச தண்ணி ஊத்தி சாயமாக்கிட்டீங்க. அதனால எனக்கு அதே மாதிரி ஒரு டிரெஸ் வேணும்...மென்று விழுங்கிச் சொன்னாள்.
    “டிரெஸ்சா...? அதெல்லாம் என்னால வாங்கித்தர முடியாது. படிக்க பணம் கட்டுறேன். சாப்பாடு, துணிமணி இவ்வளவு தான் என்னால முடியும். நீ கேக்கிற காஸ்ட்லி ஐட்டமெல்லாம் என்னால வாங்கித் தர முடியாது.“
    தொலைக்காட்சியில் இருந்து கண்களை எடுக்காமல் சொன்னான்.
    மீனா சற்று நேரம் நின்றிருந்தவள் நகர்ந்தாள். மனம் வலித்தது.
    தன் நிலையறிந்து தானம் கேட்பது முறையில்லை தானே... என்றது மனம்.
    வலிக்கும் மனத்திற்கு ஆறுதல் மொழிதான் மருந்து. ஆனால் அந்த மருந்தை அவளுக்குப் போட்டுவிடத்தான் யாருமில்லை. மீன் போல் அழுதாள்.

                 (தொடரும்)
   

  

Friday, 31 August 2012

போகப் போகத் தெரியும் – 23





    மீனாவும் அறிவழகியும் சக்திவேல் வீட்டில் நுழையும் பொழுது அவன் காலை சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
    சூரியன் உச்சி சிம்மாசனத்தை நோக்கி உறுதியுடன் நகர்வதால் அதன் கோபக்கனல் உயிர்களின் உடலை வியர்வையாக்கி நனைத்தது. காலையிலேயே அதற்கு இத்தனை கோபமா...?
    நெற்றியில் வழிந்த வியர்வையைத் தாவணி முந்தானையால் துடைத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் முகம் மலர “வா மீனா... வந்து கொஞ்சம் சாப்பிடு...என்றான்.
    “இல்லை. நான் சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க.“
    மீனா சொல்ல... அவன் அறிவழகியைப் பார்த்தான். “என்ன அத்தை.. காரணம் இல்லாம வரமாட்டீங்களே...!
    ஆமாப்பா... எங்கண்ணனுக்கு ஒடம்பு சரியில்லையாம். காலையில ஆள் வந்து சொன்னான். நான் ஒடனே கௌம்பலாம்னு இருக்கேன். இவ வரமாட்டேங்கிறா. அதுவும் நல்லதாத்தான் படுது. அதனால ஒங்கிட்ட சொல்லிவிட்டு ஒன்னோட பாதுகாப்புல வுட்டுட்டு போலாமேன்னு தான் வந்தேன். நீ என்னப்பா சொல்லுற?“
    அறிவழகி அடக்கமாகக் கேட்டாள்.
    “எனக்கு ஒன்னும் ஆட்சேபண இல்ல, அம்மாகிட்ட விசயத்த சொல்லிடுங்க!என்றான் மீனாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி.
    “மீனா.. நீ இங்கேயே இரு. நான் போயி அவங்க்கிட்ட பேசிட்டு வந்துடறேன்  சொல்லிவிட்டு அறிவழகி அந்த அம்மாள் இருந்த அரையை நோக்கி நடந்தாள். மீனா அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள். அதே நேரம் சக்திவேலின் கைபோன் பாட அதை எடுத்துப் பேசிக்கொண்டே சாப்பிட்டான்.
    மீனா அவனை நிமிர்ந்து பார்த்தாள். கல்லூரி தொடங்கி இந்த மூன்று மாதத்தில் அவள் அவனை இன்று தான் சற்று அருகில் பார்க்கிறாள்! மனம் எதையாவது பேசிடத் துடித்தாலும்... அவளுக்கு எதையும் பேச வார்த்தை வரவில்லை. அவனும் இவளை எதிரில் பார்த்தாலும் இலேசான புன்முறுவலுடன் சென்று விடுகிறான்.
    ஏன் அப்படி...? தன் மீது காதல் என்பதால் வெட்கமா...? அப்படி இருக்க முடியாது! எதையும் தைரியமாகப் பேசக்கூடிய ஆளாயிற்றே இவர்! பிறகு ஏன் நம்மிடம் பேசுவது கிடையாது? ஒரு சமயம் உண்மையில் அவருக்குத் தன் மீது விருப்பம் இல்லையோ...! வெற்றிவேல் அன்று சொன்னது போல யாரோ ஒரு பெங்களுர்ப் பெண்ணை விரும்புகிறாரா...?
    இருக்கலாம். அதனால் தான் இவர் படிப்பு முடிந்த பிறகும் அடிக்கடி பெங்களுர் போகிறார்.! அன்றொருநாள் “நீங்கள் ஏன் கண்மணியைக் கைவிட்டீங்க?“ என்று கேட்டதற்கு “என் மனசுல வேற ஒரு பெண் இருக்கிறாள்“ என்று தன்னிடமே சொல்லி இருக்கிறார் தானே... அப்படியானால் அவர் மனத்தில் இருக்கும் பெண்.. அந்தப் பெங்களுர் பெண்ணாகத்தான் இருக்கும்!
    இப்படி நினைக்கும் பொழுது அவளுக்கு இலேசான கவலை கலந்த பெருமூச்சு வந்தது. தன் விரலில் இருந்த மோதிரத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டாள்.
    காரணத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் கவலைப்படுவது தானே மனித மனம்!
    “தம்பி... சாப்டியாப்பா...? அம்மா ஒன்னையும் மீனாவையும் கூட்டியார சொன்னாங்கப்பா...அங்கே வந்த அறிவழகி சொன்னாள்.

    மீனாவும் சக்திவேலும் அந்த அறையில் நுழையும் பொழுது அந்த அம்மாள் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். மீனாவைப் பார்த்ததும் அவர் கண்கள் இலேசாக்க் கலங்க... அன்புடன் அவளைக் கைநீட்டி அழைத்தார்.
    அவள் அவர்ருகில் சென்றதும் அவள் கையைப் பிடித்து தன் அருகில் அமர வைத்தார். சற்று நேரம் பேசாமல் அவளை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டே இருந்தார்.
    அவளுக்கு வயது ஐம்பதுக்குள் தான் இருக்கும். பருமனான தேகம். திடமாகத் தெரிந்தாலும் நோயாளியைப் போல் படுக்கையில் இருந்தார்!
    மீனா கேட்டாள், “சக்தியம்மா... உங்களுக்கு உடம்பு சரியில்லையா...?“
    மீனா அவளைச் “சத்தியம்மா“ என்று கூப்பிட்டதை நினைத்து தன்னையும் அறியாமல் சிரித்துக் கொண்டாள்.
    “உடம்பு நல்லா தான் இருக்கும்மா... கால் முட்டிதான் தேஞ்சி போச்சாம்... கொஞ்ச நேரம் கூட நிக்க முடியாது. கால் வீங்கிப் போயிடும் என்றாள்.
   “அச்சோ... ஏன் சக்திவேல், இப்போல்லாம் கால் முட்டியில ஆபரேஷன் செஞ்சி பிளாஸ்டிக் மூட்டு கோப்பைன்னு பொருத்துறாங்களே... நீங்க ஏன் உங்க அம்மாவுக்குச் செய்யலை...? சக்திவேலிடம் கேட்டாள்.
    “அவங்க ஆஸ்பிட்டல், ஆப்ரேஷன்னா ரொம்ப பயப்படுறாங்க மீனா...
    “பயந்தா அப்படியே விட்டுடுறதா? நீங்க தான் தைரியம் சொல்லி இதையெல்லாம் செய்திருக்கணும். இப்போல்லாம் இது ரொம்ப சாதாரண விசயமா போயிடுச்சி தானே...?“
    “சாதாரண விசயம் தான். இவ்வளவு நாள் நான் சொல்லி அவங்க கேக்கலை. இப்போத்தான் நீ வந்திட்டியே... நீயாவது சொல்லு. பயம் போகுதான்னு பாக்கலாம்என்றான்.
    மீனா அந்த அம்மாவைப் பார்த்தாள். “சக்தியம்மா... நீங்க பயப்படாதீங்க. இந்த லீவுல உங்கக் காலைச் சரிப்பண்ணிடலாம். நான் உங்கக்கூடவே இருக்கிறேன். எதுக்கும் கவலைப் படாதீங்க.என்றாள்.
    பயம் என்பது சில நேரங்களில் தானாகப் போகும். சில நேரங்களில் வேறு யாராவது பயத்தைப் போக்க தைரியம் சொல்ல வேண்டும். ஆனால் ஒருவன் எதற்காகப் பயப்படுகிறானோ அதனுள் சென்று பார்த்தால் தான் உண்மையில் அந்தப் பயம் தெளியும்!
    அந்த அகிலாண்டேசுவரி அம்மாளுக்குப் பயத்தைப் போக்க மீனா தைரியமூட்டி பேசினதும் முகம் சந்திரனைக் கண்ட அல்லி போல் மலர்ந்தது.
    குழந்தையின் சிரிப்பையும் நோயாளியின் சிரிப்பையும் அபூர்வமாகத்தான் பார்க்க முடியும்.
    அந்த அம்மாள் “என் ராசாத்தி“ என்று சொல்லிவிட்டு மீனாவின் முகத்தை வழித்து நெட்டி முறித்தாள்.
    சக்திவேலுக்கு உள்ளம் இன்பத்தால் நிறைந்ததை முகம் காட்டிக் கொடுத்தது.
    ஆனால் மீனாவிற்கு ஒன்று தான் புரியவில்லை. கோவில் பூசை முடிந்து காரில் இந்த அம்மாளுடன் இருந்த பொழுது அந்த இக்கட்டான சூழ்நிலையில் தன்னை ஓர் அனுதாபத்துடன் கூடப் பார்க்காமல் முகத்தை வேறுபக்கமாகத் திருப்பிக் கொண்ட இவருக்கு இன்று மட்டும் எப்படி வந்தது இந்தக் கரிசனம்?
    யோசித்தாள். முடிவு தெரியவில்லை! முடிவு என்பது ஏதாவது ஒன்றின் தொடக்கம் தான் என்பதை அவள் புரிந்து கொள்ளவில்லை.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

    மீனா சொன்னது போலவே செய்து முடித்துவிட்டாள். அகிலாண்டேசுவரி இப்பொழுது சற்று நடக்கத் தொடங்கி இருந்தாள். இரண்டு கால்களிலும் அடுத்தடுத்து அறுவை சிகிட்சை முடிந்து விட்டதால் தனியாகவே எழுந்து அவளால் நடக்க முடிந்த்து. மீனா அவளுக்கு எல்லா உதவிகளையும் செய்தாள்.
    அறிவழகி போய் மூன்று மாதங்கள் கரைந்து விட்டு இருந்தாலும்... மீனாவிற்கு அறிவழகியின் ஞாபகமே வரவில்லை! அந்த அளவிற்கு அகிலாண்டேசுவரி அம்மாள் இவளிடம் அன்பு காட்டினாள். அவள் மட்டுமா...? அந்த ஊர் மக்கள் அனைவரும் அவளிடம் அன்பாகவும் அந்நியோன்யமாகவும் பழகினார்கள்!
   ஆனால் சக்திவேல்...!!!
    அவன் மீனா என்றொரு பெண் வீட்டில் இருக்கிறாள் என்ற நினைவே இல்லாதவன் போல் தான் நடந்து கொண்டான்.!

             (தொடரும்)