Wednesday 23 January 2013

போகப் போகத் தெரியும் -35



                                    
  

   நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக நினைத்து கொண்டிருக்கும் நோயாளியை எந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியாது. அவர்களின் நம்பிக்கையே அவர்களைக் குணப்படுத்திவிடும். அல்லது மரண பாதாளத்தில் தள்ளி விடும்.
   இதில் எது தேனப்பனுக்குப் பொருந்தும் என்று மீனாவிற்குத் விளங்கவில்லை. அவருடைய மன வலிமையைப் பார்த்து பல நேரங்களில் அதிசயப்பட்டிருக்கிறாள்.
   வலது காலையும் இடது கையையும் இழந்த ஒருவர்.. எப்படி இப்படியான உணர்ச்சி வேகத்துடன் பேசி நடந்து கொள்ள முடியும்? கொஞ்சம் கூடத் தனக்கு கையோ.. காலோ.. இல்லையே என்ற வருத்தம்.. தாழ்வு மனப்பான்மை.. எதுவும் கொஞ்சம் கூடக் கிடையாது.
   ஆனால் கோபம் மட்டும் உச்சி முதல் உள்ளங்கால் வரை வந்து இரத்தத்தை அழுத்தியது. அதனால் தான் இரத்த அழுத்தம் வேகத்தில் எகிறியது. மீனா எப்பொழுது பல்ஸ் பார்த்தாலும் கண்கள் அகலப் பயத்துடன் அவரைப் பார்ப்பாள்! அவர் என்ன.. ஏது.. என்று எதையும் கேட்க மாட்டார். அவள் கொடுக்கும் மாத்திரைகளை எந்தக் கேள்வியையும் கேட்காமல் விழுங்கி விடுவார்.
   இவை அனைத்தும் உள்; குமறல்கள்! இதயத்திலேயே கழன்று கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலைக் குழம்பு! என்றாவது உண்மை விளங்க வரும்பொழுது வெடித்து அழித்து விடும் ஆபத்து அதில் இருக்கிறது என்பதை மீனா அறியாமல் இல்லை!
   அவளுக்கு இப்பொழுது பயம் இல்லை! எதுவோ ஒன்று நடக்க இருக்கிறது. ஆனால் அது எப்பொழுது என்பது தான் தெரியவில்லை.
   நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து கொண்டதால் பயம் இல்லாமல் அதை எதிர் கொல்லும் தைரியம் நிதானம் மனத்தில் புகுந்து கொண்டது.
   சில நேரங்களில் அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும். தன்னுடைய எதிரியை எதிரில் வைத்துக் கொண்டே மற்ற இடங்களில் தேடுகிறாரே..!
   ஆனால் அவர் எந்த விசயத்தையும் அவளெதிரில் யாருடனும் பேசியதில்லை. அவள் கல்லூரிக்குப் போனபிறகு பேசுவார்களோ..? இருக்கலாம்.
   தேனப்பனின் மனைவி பெயர் இவளுக்குச் சரியாகத் தெரியவில்லை என்றாலும்.. அவர் அவளைச்  ;சுகுமா ; என்றழைப்பதைக் கேட்டிருக்கிறாள். மற்றவர்கள்  ;ஆத்தா ; என்பார்கள்.
   சுகுமா.. பின் கொசுவ புடைவை கட்டிக் கொண்டு சந்தன நிற முகத்தை மஞ்சளால்  மஞ்சள் நிறமாக்கிக் கொண்டு பெரிய குங்குமப் பொட்டு நெற்றியில் பளிச்சிட.. சற்று ஓரமாக வகிடெடுத்து வழித்து வாரிய தலையில் பெரிய கொண்டை! அதைச் சுற்றி எப்பொழுதுமே வாடாத பூக்கள்!
   சுகுமா.. இளவயதில் மிகமிக அழகானவளாக இருந்திருப்பாள். பேச்சில் இன்னமும் இலங்கைத் தமிழர்களின் ராகம் ஒட்டியிருக்கும். அவர்களுக்கே உரிய பாணி! கேட்கச் சுகமாக இருக்கும். ஆனால்.. சில வார்த்தைகள் சட்டென்று விளங்கிவிடாது.
   மீனாவை அவள்  ;பாப்பா ; என்றழைத்ததாலும் மற்றவர்கள்  ;சிஸ்டர் ; என்று அழைத்ததாலும் பெயரால் பிரச்சனை இல்லாமல் போனது.
   மூன்று மாதங்கள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை! இதன் நடுவில் வெற்றிவேல் வந்து போனதாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால் அவள் அவனைப் பார்க்கவில்லை. வேந்தனின் ஆட்களும் வந்து போனார்கள். அவர்கள் கண்களில் தெரிவது ஆத்திரமா..? அனுதாபமா..?  புரிந்து கொள்ள முடியாத பார்வையாக இருக்கும்.
   இவர்களை நல்லவர்கள் என்றோ.. கெட்டவர்கள் என்றோ.. முத்திரை குத்திவிட முடியாது. படிக்காதவர்கள். கூடுமிடமாக மாறும் மழைநீரைப் போன்றவர்கள். இவர்களை எந்த விதத்திலும் குற்றம் சொல்ல முடியாது.
   ஆனால்.. ஏன்.. இவள் தான் மீனா என்பதைத் தேனப்பனிடம் மறைத்தார்கள்? என்பதைத்தான் அடிக்கடி நினைத்துக் குழம்புவாள்.
   அவர்களைப் பார்த்துக் கொண்டே படிப்பாள். படிப்பதை மட்டும் அவள் எந்த விதத்திலேயும் நிறுத்திவிட வில்லை. இதன் நடுவில் சக்திவேலின் ஞாபகம் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கும். நண்பர்கள் அறிவழகி அகிலாண்டேசுவரி.. என மனத்தில் தோன்றினாலும் அவர்களைப் பிரிந்திருப்பது.. அவர்களை முழுவதுமாகப் பிரிந்து விடாமல் இருக்கத்தானே!! என்று அவளுக்கே அவள் சமாதானம் செய்து கொள்வாள்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   கதவை பூட்டிவிட்டு எங்கே போய் இருப்பார்கள்? யோசனையுடன் நின்றிருந்தவளிடம் எதிர் வீட்டுக்காரர் வந்தார்!
   'சிஸ்டர்.. இங்க குடியிருந்தவங்க அவங்க சொந்த ஊருக்கு போயிட்டாங்க. இந்த வீட்டுக்கு ஓனர் நான் தான். இந்த மாச வாடகையை கொடுத்துட்டாங்க. உங்கள வேணுமின்னா இந்த மாசம் தங்கிக்க சொன்னாங்க. மாசக் கடைசில காலி பண்ணிட்டா கூட எனக்குப் பரவாயில்ல. இந்தாம்மா சாவி.." நீட்டினார்.
   வாங்கி வீட்டைத் திறந்தாள். அவள் மனம் போலவே வீடும் இருண்டிருந்தது. விளக்கைப் போட இருள் ஓடி மறைந்தது. ஆனால் அவள் மனத்தில் இருந்த இருள் மறையவில்லை.
   என்ன காரணமாக இருக்கும்? எதுக்காக இவ்வளவு அவசரம்? செயற்கை கை பொருத்தினாலும் அது சற்றுப் பொருந்தாமல் போனதால்.. அதனுடைய பட்டை வார் பிளாஸ்டிக்கில் செய்ய ஆர்டர் கொடுத்திருந்தார்களே.. அது கையில் கிடைத்ததும் கிளம்பிவிடுவதாக சுகுமா அம்மாள் சொல்லியிருந்தாள்.
   ஒரு சமயம் அந்தப் பட்டை வார் கிடைத்துவிட்டதா..? அதனால் தான் கிளம்பி விட்டார்களா..? இருந்தாலும் இத்தனை நாள் பழகிய தன்னிடம் ஒரு வார்த்தைக் கூடச் சொல்லாமல் போய் விட்டது ஏமாற்றமாக இருந்தது.
   எதில் தான் தனக்கு ஏமாற்றமில்லை? இதைப் பெரியதாக எடுத்துக் கொள்வதற்கு? பெரு மூச்சு விட்டுவிட்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.
  ஆனால் அவளுக்குத் தெரியாது! கூடிய சீக்கிரத்தில் அவர்கள் அனைவரையும் இக்கட்டான நிலைமையில் சந்திப்பாள் என்று!!

     பேரூந்து ஆற்றைத் தாண்டும் பொழுது அவளையும் அறியாமல் கண்கள் தேடியது யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா..? என்று! யாருமில்லாததால் கண்கள் வழியாக மனத்திக்கு ஏமாற்றம்!
   மூடிய மனத்தைத் திறக்கக் கண்கள் தான் காரணமாக இருக்கிறது. இன்று இந்த ஊரை அவளுடைய கண்கள் பார்க்காமல் இருந்திருந்தால்.. அவளுடைய மூடிய மனம் மூடியதாகவே இருந்திருக்கும்!
   எதற்காகப் பார்த்தோம் என்று யோசிக்க ஆரம்பித்தால்.. நிச்சயம் பதில் கிடைக்காது. பார்க்கவே கூடாது என்ற மனத்திற்குக் கட்டளையிட்டு கண் இமைகளை மூடிக் கொண்டாலும்.. நாம் கூடாது என்று நினைக்கும் உருவம் அல்லது காட்சி தான் வந்து கண்களைத் துளைக்கும்!
   மனம் தனக்கு அடிமையாக இருக்கும்.. அடிமையாகத் தான் இருக்கிறது.. என்று நினைத்தாலே அந்த வினாடியே அவர்கள் அவர்களின் மனத்தை இழந்து விட்டவர்கள் என்று ஆகி விடுகிறார்கள். மீனாவும் தன் மனத்தை அடக்கப் பார்த்து அடக்க முடியாமல் போக.. இழுந்து பெருமூச்சு விட்டாள்! காற்றில் கலந்து வந்த மண்வாசனை அவளது நாசிக்கு மட்டும் விருந்தளித்தது.
   ஓடத்தூர் வந்ததும் இறங்கினாள். பேரூந்து புகையைக் கக்கிவிட்டுச் சென்றதும் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இல்லாதது நல்லதுக்குத்தான் என்று நினைத்து மகிழ்ந்தது மனம். தூரத்தில் ஓடிய பேரூந்து கானல் நீரில் கப்பல் போல் மிதந்து சென்றது.
   ஓடத்தூர் என்று எழுதியிருந்த சிமென்டு கல் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் வழியைக் காட்டியது. இக்கல் படித்தவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. படிக்காதவர்களுக்கு..? சில நேரங்களில் படித்தவர்கள் கூடப் படிக்காதவர்களிடம் வழி கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறதே..!
   மீனாவிற்கு ஊருக்குள் போக மனம் வரவில்லை. எப்படி மனம் வரும்? எந்த முகத்தை வைத்துக் கொண்டு போவது? இது வெற்றிவேல் இராஜ்ஜுயம் நடக்கும் ஊர்! தனக்குத் தாலி கட்டிவிட்டு அன்றே இறந்து போன வேந்தனுக்கு சொந்த ஊர்! தன்னைக் கொல்வதற்காக வெறியுடன் இருக்கும் தேனப்பன் வாழும் ஊர்!
   இங்கே வந்தது தப்போ..? தப்பு தான். ஆனால் இங்கே வந்துவிட்ட பிறகுதான் அதில் இருக்கும் ஆபத்து விளங்கியது. இனி என்ன என்ன பிரச்சனைகள் வருமோ..? நாம் வந்திருக்கவே கூடாது. ஆனால் இதெல்லாம் அந்த டாக்டர் பார்த்தசாரதிக்கு எப்படித் தெரியும்? தேனப்பனுக்கே அவளை இன்றுவரை யார் என்று தெரியாத பொழுது அவருக்கு எப்படித் தெரியும்?
   தேனப்பனுக்குச் செயற்கை கை பொறுத்தினதில்.. சற்றுப் பொருந்தாமல் போகவும் அதை இறுக்கக் கட்டும் பட்டை வார் பிளாஷ்டிக்கில் செய்யத் திரும்பவும் ஆர்டர் கொடுக்கப் பட்டது. அது இன்று காலையில் தான் டாக்டரிடம் கிடைத்தது. ஆனால் அதற்குள் தேனப்பனின் மகன் லட்சுமணன் சிறையில் இருந்து விடுதலையாகி வருவதால்.. தேனப்பனும் அவன் மனைவி மற்றவர்களும் நேற்றே டவுனில் இருந்த வீட்டைக் காலிப் பண்ணிக் கொண்டு கிராமத்துக்கு வந்து விட்டார்கள்! அதனால் இந்த அவசியமான பட்டைவாரை தேனப்பனிடம் கொடுத்துவிட்டு வருமாறு மீனாவை அனுப்பி வைத்தார் டாக்டர் பார்த்தசாரதி!
   இவளும் தைரியமாகத்தான் வந்தாள்! ஆனால் இங்கே வந்ததும் ஏதோ இனம் புரியாதப் பயம்!!
   திரும்பிப் போய் வடலாமா..? அதுவே சரியெனப் பட்டது. வழி தெரியவில்லை என்று சொல்லிவிடலாம். வேறு யாரையாவது அனுப்பிக் கொள்ளட்டும். அவளுக்குத் தெரியும்! யாரும் போகமாட்டோம் என்று சொன்னதால் தான் டாக்டர் அவளை அனுப்பினார். அவர் எது சொன்னாலும் தட்டாமல் செய்பவள் தான் மீனா!
   அவள் படிப்பதற்குப் பல விதங்களில் உதவிகள் செய்திருக்கிறார். பல இடங்களில் இவளுக்காக வேலைக்குப் பரிந்துரை செய்திருக்கிறார். ஆதலால் இவளுக்கு அவர் மீது ஏகமரியாதை உண்டு!
   அப்படிப் பட்டவரை ஏமாற்றுவதா..? யோசனையுடன் நின்றிருந்தவளின் கண்களில் அவர்கள் தென்பட்டார்கள்! ஒரு பெண். இரண்டு ஆண்கள்! அவர்கள் அவளை மிரட்டிக் கொண்டு போக.. அவள் பயந்து நடுங்கிக் கொண்டே போனாள்.
   அந்த பெண்..? ஆத்தூர்காரப் பெண்ணாயிற்றே..!! அதிலும் விதவை. மற்ற இருவரையும் அவள் வேந்தனுடன் பார்த்திருக்கிறாள்.
   ஏன்.. எதற்காக..? என்று பதில் தேடுவதற்கு முன்.. அவர்கள் வழியைவிட்டு மரஞ்செடி புதர்களுக்கு நடுவில் புகுந்து நடக்கவும்.. மீனாவும் அவர்கள் அறியாமல் பின் தொடர்ந்தாள்.
   அவர்கள் மரங்கள் நிறைந்திருந்த ஒரு தனியாக இருந்த ஓட்டு வீட்டிற்குள் நுழைந்தனர். மீனாவும் அவர்களுக்குத் தெரியாமல் நுழைந்து ஒரு மறைவான இடத்தில் நின்று கொண்டு எட்டிப் பார்த்தாள்.
   அங்கே லட்சுமணன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க.. அவனருகில் இரண்டு அடியாள் கை கட்டி நின்றிருந்தனர். இவர்கள் வந்ததும் அந்தப் பெண்ணைவிட்டுவிட்டு நால்வராக வெளியேறினர்.
   'வா ராதிகா.. வந்து ஒக்காரு." லட்சுமணன் அவளை ஆசையுடன் அழைத்தான்.
   'என்னைய எதுக்கு கூட்டியாற சொன்னீக? ஊருல எவ்ளோ கலாட்டா நடந்திருக்கு. இப்போ போய் இன்னாத்துக்கு இப்டி..?" கோபமாகக் கத்தினாள்.
   'ஊருல கலட்டான்னா எனக்கென்னவாம்? எனக்கு இப்போ நீ வேணும். ஜெயில்ல இருந்து வந்து நா இன்னும் என்னோட ஆயிஅப்பனக் கூட பாக்கப் போவல தெரியுமா..? ஆனா.. உன்னைய பாக்காம என்னால இருக்க முடியாது. வாடியிங்க.." அவள் கையைப் பிடித்து இழுத்துத் தன் மடியில் அமரவைத்தான்.
   'வேண்டாய்யா. எனக்கு இது கொஞ்சம் கூடப் புடிக்கல. எங்க ஊர்க்காரங்களுக்குத் தெரிஞ்சா.. அவ்ளோ தான். என்னைய அப்டியே வெட்டி போட்டுடுவாங்க. நா போயிடுறேன்." அவள் எழுந்தாள்.
   'என்னடி ஊர்காரங்க. நீயம் நானும் மனசார விரும்புனோம். ஆனா ரெண்டூரூக்கும் இருந்த பிரச்சனையால ஒன்னப்பன் உன்ன வேற ஒரு வக்கத்த பையனுக்கு கட்டிவச்சான். ஒரு சண்டையில ஓம்புருஷன் செத்துடான். அப்பறம் என்னா..? ஏங்கூட இருக்கலாம் தான.. ஊருஊருன்னு ஊருக்காக ஆசகள பொதச்சிட வேண்டியதா போச்சி. தோ பாரு புள்ள. நீ எனக்கு வேணும். நா இருக்கறேன் பயப்படாத.. "
   அவன் ஆசையுடன் அவள் கையைப் பிடித்து இழுத்தான். அவள் அவன் கையை உதறினாள்.
   'பயப்படாம.. ஒன்னைய ஆசையாவா கொஞ்ச முடியும்? ஏதோ ஏம்மனசும் வயசும் தறிகெட்டு போயிட்டதால ஒன்னாசக்கெல்லாம் சம்மதிச்சேன். ஆனா இனிமே இது வேணா. என்னைய கூட்டு ஆள் அனுப்பாத. நா போறேன்."
   அவள் சொல்லிவிட்டுக் கதவை நோக்கி நடக்கவுவும்.. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மீனா அவள் எதிரில் வந்து நின்றாள். ராதிகா இவளைப் பார்த்தும் அதிர்ச்சியுடன் நின்றுவிட்டாள். அவளைத் தொடர்ந்துவந்த லட்சுமணனும் தான்!!
   மூவருமே எதையும் பேசுவதற்குள்.. சில பெண்கள் கதவைத் திறந்து கொண்டு நுழைய.. மீனா சட்டென்று ராதிகா கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே தப்பிக்க வேறு வழி ஏதாவது இருக்கிறதா என்று தேட.. தோட்டத்து வாசல் திறந்திருக்க.. அதைப் பார்த்ததும்.. இருவரும் ஓட நினைக்க.. அதற்குள் அதில் ஒரு பெண் கிட்டேவந்து மீனாவின் கூந்தலை கெட்டியாகப் பிடித்து இழுக்கவும்.. ராதிகாவைத் தப்பி ஓட விட்டுவிட்டு அந்தப் பெண்களிடம் மீனா மட்டும் மாட்டிக் கொண்டாள்!!

                           (தொடரும்)                               

4 comments :

  1. புதன் தோறும் விறுவிறுப்பாக சென்ற தொடர் தொடராததேனோ..


    முழுத்தொடரையும் ஒரே மூச்சில் படித்தேன்.. அருமையான எழுத்து நடை.

    தொடர்ந்து செல்லுங்கள்..

    ReplyDelete
  2. புதன் தோறும் விறுவிறுப்பாக சென்ற தொடர் தொடராததேனோ..


    முழுத்தொடரையும் ஒரே மூச்சில் படித்தேன்.. அருமையான எழுத்து நடை.

    தொடர்ந்து செல்லுங்கள்..

    ReplyDelete
  3. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
    மிக்க நன்றி.
    தொடர்கதையை யாரும் அவ்வளவாக விரும்பிப் படிக்காதால்
    நான் கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்டேன்.
    உங்களைப் போன்று யாராவது ஒருவர் ஊக்கம் கொடுத்தாலும்
    எனக்கு எழுதுவதற்கான டானிக் கிடைத்த்து போல் தான்.

    நிச்சயம் தொடர்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  4. தொடர்கதையை விரும்பிப்படிப்பதில்லை என சொல்ல முடியாது. படிப்பவர்களுக்கு பின்னூட்டமிடும் படி நேரம் இருந்திருக்காது அல்லது தட்டச்சிடுவதில் தயக்கமிருக்கலாம்.

    நீங்கள் தொடருங்கள்.

    ReplyDelete